அதிகாரம் 78 - படைச்செருக்கு

திருக்குறள்
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு

771. யாத்திரிகர் சொன்ன செய்தி 

பல நாடுகளுக்கும் சென்று வந்த யாத்திரிகர் அறிவானந்தத்தைத் தன் அரசவைக்கு அழைத்து கௌரவித்தார் நகுல நாட்டு அரசர் சிம்மவர்மர்.

"உங்களைப் போன்ற யாத்திரிகர்களிடமிருந்து பல தகவல்களை அறிந்து கொள்வதில் எனக்கு மிகவும் ஆர்வம் உண்டு. பல்வேறு நாடுகளிலும் நீங்கள் கண்டு வியந்தவற்றை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!" என்றார் சிம்மவர்மர்.

யாத்திரிகர் தான் சென்று வந்த சில இடங்களைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, "அரசே! இப்போது நான் சில நடுகற்களைப் பற்றிக் கூற விரும்புகிறேன்!" என்றார்.

"நடுகல் என்பது போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்காக நடப்படும் ஒரு நினைவுச் சின்னம். அத்தகைய இடங்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?" என்றார் சிம்மவர்மர், புருவத்தை உயர்த்தி.

"நான் சொல்லப் போவதன் முக்கியத்துவம் குறித்து நான் சொல்லி முடித்ததும் தாங்கள் புரிந்து கொள்வீர்கள்."

"சரி, சொல்லுங்கள்.

"பவளமணி நாட்டில் அந்த நாட்டு அரசன் மணிவர்மனுக்கு நடுகல் அமைத்திருக்கிறார்கள். குந்துமணி நாட்டில் போரில் மரணமடைந்த அந்த நாட்டு மன்னன் விக்கிரமசிங்கனுக்கு நடுகல் அமைத்திருக்கிறார்கள். காரக நாட்டில் அந்த நாட்டு மன்னன் சீவகனுக்கு நடுகல் அமைத்திருக்கிறார்கள். செந்தூர நாட்டில்..."

"யாத்திரிகரே! சற்று நிறுத்துங்கள். போரில் இறந்து நடுகல் அமைக்கப்பட்டுள்ள மன்னர்களின் பட்டியலை என்னிடம் சொல்வதில் என்ன பயன்?" என்றார் சிம்மவர்மர், சற்று எரிச்சலுடன்.

"இருக்கிறது மன்னரே! நடுகல்லாய் நிற்கும் இந்த மன்னர்கள் அனைவரும் குவலய நாட்டு மன்னருடன் போர் செய்து போரில் தோல்வியுற்றுத் தங்கள் உயிரையும் இழந்தவர்கள். குவலய நாட்டின் படை அவ்வளவு வலிமை வாய்ந்தது. இந்தப் படையை வெல்லக் கூடிய வேறு படை இல்லை. தாங்கள் குவலய நாட்டின் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதனால்தான் குவலய நாட்டைச் சேர்ந்த யாத்திரிகனான நான் உங்கள் நாட்டில் யாத்திரை செய்து கொண்டிருக்கும்போது இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு உங்கள் நலன் கருதி இந்த உண்மையை உங்களிடம் தெரிவிக்க வந்தேன்!" என்றார் யாத்திரிகர்.

யாத்திரிகரின் கூற்றின் உண்மையை உணர்ந்து தன் திட்டத்தை மாற்றிக் கொள்வதா, அல்லது குவலய நாட்டுப் படையின் சிறப்பைப் பற்றித் தன்னிடமே பேசிய அந்த நாட்டு யாத்திரிகரைத் தண்டிப்பதா என்று தீர்மானிக்க முடியாமல் கோபத்திலும், குழப்பத்திலும் ஆழ்ந்தார் சிம்மவர்மர்.

குறள் 771:
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.

பொருள்: 
பகைவர்களே! என் தலைவன் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு எதிர்த்து நின்ற பலர் மறைந்து இப்போது நடுகல்லாக நிற்கிறார்கள்.

772. வெற்றியை விஞ்சிய தோல்வி!

போர்க்களத்திலிருந்து வெற்றியுடன் திரும்பிய இளவரசன் பரகாலனை வரவேற்க தலைநகரமே கூடி இருந்தது.

மக்களின் ஆரவாரமான வரவேற்பைப் பெற்றபடி அரண்மனைக்குள் நுழைந்த இளவரசன் தன் தந்தையை வணங்கி வாழ்த்துப் பெற்றான்.

ஆயினும் மன்னரான அவன் தந்தை அவனை வாழ்த்தியதில் அவ்வளவு உற்சாகம் இல்லை. 

போரில் தான் வெற்றி பெற்றதைத் தன் தந்தைப் பெரிதும் பாராட்டுவார் என்று நினைத்த பரகாலனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது.

ரண்டு நாட்களுக்குப் பிறகு தன் தந்தையுடன் தனியாகப் பேச சந்தர்ப்பம் கிடைத்தபோது பரகாலன் அவரிடம் கேட்டான். 

"தந்தையே! இந்தப் போரில் நான் வெற்றி பெற்றதில் தங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா?"

"மகிழ்ச்சி இல்லாமல் எப்படி இருக்கும்?"

"ஆனால் போர்க்களத்திலிருந்து நான் திரும்பி வந்து தங்களை வணங்கியபோது தங்களிடம் அதிக உற்சாகம் காணப்படவில்லையே!" என்றான் பரகாலன்.

"பரகாலா! போரில் வெற்றி பெறுவது நல்ல விஷயம்தான். ஆனால் நீ போரில் வென்றது ஒரு சிறிய நாட்டை. நம் பெரும் படையைப் பார்த்ததுமே அவர்கள் சரணடைந்து விட்டனர். அதனால்தான் நான் இந்த வெற்றியைப் பெரிதாக நினைக்கவில்லை!" என்றார் அரசர்.

பரகாலன் மௌனமாக இருந்தான்.

"பரகாலா! நாம் நமக்குக் கிடைத்த பாராட்டுக்களை மறந்து விடுகிறோம். பாராட்டுக் கிடைக்காத சந்தர்ப்பங்களை மட்டும் குறைகளாக எப்போதும் மனதில் வைத்துக் கொண்டிருப்போம். இது மனித இயல்பு" என்றார் மன்னர், சிரித்தபடியே.

"தந்தையே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"இதற்கு முன் நீ ஒரு போருக்குத் தலைமை தாங்கினாய். அந்தப் போரில் நாம் வெற்றி பெறவில்லை. ஆயினும் நீ போர்க்களத்திலிருந்து திரும்பி வந்ததும் உன்னை வெகுவாகப் பாராட்டினேன். அரசவையில் பலர் முன்னிலையில் உன்னைப் புகழ்ந்து பரிசு கூட அளித்தேன்!"

"நான் அதை மறக்கவில்லை தந்தையே! அது நான் முதல் முறையாகப் பங்கேற்ற போர். அதனால் என்னை ஊக்குவிப்பதற்காக என்னைப் பாராட்டினீர்கள் என்று நினைத்தேன். அரசவையில் நீங்கள் என்னைப் பாராட்டியது எனக்குச் சங்கடமாகக் கூட இருந்தது!"

"இல்லை பரகாலா! அன்று நான் உன்னைப் பாராட்டியது என் மனமாரத்தான். நீ அந்தப் போரில் தோற்றது ஒரு பொருட்டே இல்லை. ஏனெனில் நீ போர் செய்தது ஒரு பெரிய நாட்டின் பெரும் படையுடன். அத்தகைய பெரும் படையை நம்மால் வெற்றி கொள்ள முடியுமா என்ற சிந்தனை கூட இல்லாமல் நீ அந்தப் போரில் உன் வீரத்தையும் துணிவையும் காட்டிப் போர் செய்தாய். அனால்தான் உன்னை நான் வெகுவாகப் பாராட்டினேன், உன் முதல் போர் என்பதால் அல்ல. இன்று ஒரு சிறிய நாட்டின் சிறு படையுடன் போர் செய்து நீ பெற்றிருக்கும் வெற்றியை விட, அன்று ஒரு பெரிய நாட்டின் பெரும் படையுடன் போரிட்டு நீ அடைந்த தோல்வியையே நான் பெருமைக்குரியதாகக் கருதுவேன்!" என்றார் அரசர்.

குறள் 772:
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

பொருள்: 
காட்டில் ஓடும் முயலை நோக்கி குறி தவறாமல் எய்த அம்பைக் கையில்  ஏந்துவதை விட, எதிரில் நின்ற யானை மேல் எறிந்து குறி தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

773. எதிரியிடமிருந்து வந்த ஓலை!


"கைசிகம் என்ற ஒரு சிறிய நாட்டின் மன்னனாக இருந்து கொண்டு நம்மை எதிர்க்கிறான் கதிர்வேலன். அவனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்!" என்றார் கேது நாட்டு மன்னர் கீர்த்திவளவன்.

"நாம் இரண்டு முறை அவருடன் போரிட்டு விட்டோம். இரண்டு போர்களுமே யாருக்குமே வெற்றி இல்லாமல் முடிந்து விட்டன. ஆயினும் கதிர்வேலர் நமக்குப் பணிய மறுக்கிறார்!" என்றார் அமைச்சர்.

"முதல் போரின்போது நம் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நாம் போரை நிறுத்த வேண்டி இருந்தது. இரண்டாவது முறை போர் நடந்தபோது என்னைக் கவிழ்த்து விட்டு அரியணை ஏறத் தருணம் பார்த்திருந்த என் ஒன்று விட்ட சகோதரன் வேலவரையனின் சூழ்ச்சியை முறியடிப்பதற்காக நாம் போரைக் கைவிட வேண்டி இருந்தது. அடுத்த முறை போர் நடக்கும்போது கதிர்வேலனை நாம் முழுமையாகத் தோற்கடித்து அவனை நமக்கு அடிபணிய வைக்க வேண்டும்!"

"வேலவரையர் நம் நாட்டுக்குள் தலைமறைவாக இருந்து கொண்டு இன்னும் நமக்குத் தொல்லை கொடுத்து வருகிறார். அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்த பிறகுதான் நாம் மீண்டும் கதிர்வேலரின் மீது போர் தொடுக்க முடியும்!"

"அது உண்மைதான். ஆயினும் ஒரு குறுநில மன்னனான கதிர்வேலன் நம்மைப் போன்ற பேரரசை எதிர்ப்பதையும், அவனை நம்மால் பணிய வைக்க முடியவில்லை என்பதையும் நினைக்கும்போது என் நெஞ்சு கொதிக்கிறது!" என்றார் அரசர்.

அப்போது வெளியே ஏதோ அரவம் கேட்டது.

ஒரு வீரன் உள்ளே வந்து அரசரை வணங்கிய பின், "அரசே! வேலவரையரைக் கைது செய்து சில வீரர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள்!" என்றான்.

"சில வீரர்கள் என்றால் நம் வீரர்கள்தானே?"

"நம் வீரர்கள்தான். ஆனால் கைசிக நாட்டு வீரர்கள் சிலர் அவரை எல்லையிலிருந்த நம் வீரர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கைசிக நாட்டு மன்னரிடமிருந்து ஒரு ஓலையையும் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள்" என்றபடி தன் கையிலிருந்த ஓலையை அரசரிடம் பணிந்து கொடுத்தான் அந்த வீரன்.

ஓலையைப் படித்துப் பார்த்த அரசர் வியப்படைந்தவராக, அதை அமைச்சரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

"கீர்த்திவளவரே! உங்கள் ஆதிகத்தை ஏற்க மறுத்து உங்களுடன் போரிடுபவன்தான் நான். ஆனால் உங்களுக்கு எதிராகச் சிலர் சூழ்ச்சி செய்வதாக அறிந்ததும், அந்தச் சூழ்ச்சியை முறியடிக்க உங்களுக்கு உதவுவதுதான் முறையாக இருக்கும் என்று நினைத்தேன். உங்கள் ஒன்றுவிட்ட சகோதரர் வேலவரையர் என்னைச் சந்தித்து உங்கள் படையில் சிலர் அவருக்கு விசுவாசமக இருப்பதாகவும் அவர்கள் உதவியுடன் உங்களைத் தோற்கடிக்க எனக்கு உதவுவதாகவும், பதிலுக்கு அவர் அரியணை ஏற நான் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இது போன்ற வஞ்சகச் செயல்களில் ஈடுபடுவது வீரர்களுக்கு அழகல்லவே! எனவே அவரைக் கைது செய்து எல்லையில் உள்ள உங்கள் வீரர்களிடம் ஒப்படைக்கும்படி என் வீரர்களிடம் கூறி இருக்கிறேன். அவரை விசாரித்து உங்கள் படையில் உள்ள காளான்களைக் களையிடுங்கள். வாய்ப்பு அமையுமானால், மீண்டும் ஒரு போரில் சந்திப்போம்! - கதிர்வேலன்."

ஓலையைப் படித்து விட்டு அரசரின் முகத்தைப் பார்த்தார் அமைச்சர்.

"கதிர்வேலன் ஒரு சிறந்த வீரன்தான். ஐயமே இல்லை!" என்றார் அரசர்.

குறள் 773:
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

பொருள்: 
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவுதல் ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.

774. வீரனின் சிலை

குவளை நாட்டு அரண்மனைக்கு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த யாத்திரிகர் பொற்பாதர் அரண்மனை வாசலில் நிறுவப்பட்டிருந்த அந்தச் சிலையைப் பார்த்தார்.

கையில் வேலை உயர்த்திப் பிடித்தபடி வேலை யார் மீதோ எறிவது போன்ற தோற்றத்தில் நின்றிருந்த ஒரு வீரனின் சிலை அது. வேலின் நுனியில் ரத்தக்கறை படிந்திருந்தது. ஒரு கையால் வீரன் தன் மார்பை அழுத்திக் கொண்டிருந்தான். அவன் மார்பிலிருந்து பெருகிய ரத்தம் மார்பில் வழிந்தோடிக் கொண்டிருந்தது. மார்பைப் பிடித்திருந்த கையிலும் ரத்தம் படிந்திருந்தது.

"மிக அற்புதமான சிற்பம். சிற்பியன் திறமை வியப்புக்குரியது. தன் மார்பில் காயம் பட்ட நிலையிலும் எதிரியின் மீது ஈட்டியை வீசித் தாக்குதல் நடத்தும் வீரனைக் கற்பனை செய்து அற்புதமாக இந்தச் சிலையை வடித்திருக்கிறார் சிற்பி. ஆனால் இந்தக் கலைப் படைப்பை அரண்மனை முகப்பில் வைத்திருப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?" என்றார் பொற்பாதர், தன்னை அழைத்து வந்த அரசு அதிகாரியிடம்.

"பொற்பாதரே! தாங்கள் சிற்பியின் கலைத்திறனைப் பாராட்டியது சரிதான். ஆனால் இது அந்தச் சிற்பியின் கற்பனைப் படைப்பல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் போர்க்களத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வைத்தான் சிற்பி சிலையாக வடித்திருக்கிறார்!" என்றார் அரசு அதிகாரி.

"அப்படியா? போர்க்களத்தில் ஒரு வீரரின் செயலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதை ஒரு சிலையாக வடிக்கச் செய்து அதை அரண்மனை முகப்பில் வைக்கச் செய்த உங்கள் மன்னரின் செயல் பாராட்டத்தக்கதுதான்!" என்றார் பொற்பாதர்

பொற்பாதர் ஒப்புக்காகப் பாராட்டுகிறார் என்று புரிந்து கொண்ட அரசு அதிகாரி, "யாத்திரிகரே! வீரர் கையில் வைத்திருக்கும் வேல் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா?"

"ஏன், வீரர் கையில் வேல் இருக்குமே!"

"அதில் ரத்தக் கறை படிந்திருப்பது ஏன்?"

"அந்த ஐயம் எனக்கும் ஏற்பட்டது. அவர் மார்பிலும் ரத்தம். அப்படியானால்..."

"நீங்கள் நினைப்பது சரிதான் பொற்பாதரே! அந்த வீரர் தன் மார்பில் பாய்ந்திருந்த வேலைப் பிடுங்கித்தான் தனக்கு எதிரே நிற்கும் யானை மீது எறிந்தார். அந்தக் காட்சியைத்தான் சிலையாக வடித்திருக்கிறார் சிற்பி!"

"என்ன ஒரு வீரம்!" என்று வியந்த பொற்பாதர், "அப்படியானால், துவக்கத்தில் அவர் கையில் இருந்த வேல்...?" என்றார்.

"அதை அவர் முன்பே ஒரு யானையின் மீது எறிந்து விட்டார். அதற்குள் ஒரு எதிரி வீரன் எரிந்த வேல் அவர் மார்பில் பாய்ந்து விட்டது. இன்னொரு யானை அவரைத் தாக்க வர, தன் மார்பிலிருந்த வேலைப் பிடுங்கி அந்த யானை மேல் எறிந்தார். அவருடைய வீரச் செயலை இந்த உலகம் அறிய வேண்டும் என்பதால்தான் அதைச் சிலையாக வடிக்கச் செய்து அரண்மனை முகப்பில் வைத்திருக்கிறார் எங்கள் அரசர். இந்த மொத்தக் காட்சியும் இந்த நகரத்தில் உள்ள கலைக்கூடத்தில் ஓவியமாகவும் தீட்டப்பட்டிருக்கிறது. உங்களை அங்கே அழைத்துச் செல்லும்போது அதைக் காட்டுகிறேன்!" என்றார் அரசு அதிகாரி, பெருமிதத்துடன்.

பொற்பாதர் அந்த வீரனின் சிலையை ஒரு புது மரியாதையுடன் பார்த்தார்.

குறள் 774:
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

பொருள்: 
தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்து மகிழ்வான்.

775. பாயாத வேல்!

கமுதி நாட்டுக்கும், மகர நாட்டுக்கும் இடையிலான போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் கமுதி நாட்டு மன்னன் வீரகேசரியும், மகர நாட்டு மன்னன் இளமாறனும் நேருக்கு நேர் போர் செய்தனர்.

முதலில் குதிரை மீது இருந்தபடி வாட்போரில் ஈடுபட்டவர்கள் பிறகு குதிரையிலிருந்து இறங்கி தரையில் நின்று போரிட்டனர்.

இருவரின் வாட்களும் முறிந்ததும் இருவரும் அருகிலிருந்த தங்கள் நாட்டு வீரரிடமிருந்து வேலை வாங்கிக் கொண்டனர்.

வேல்கள் மோதிக் கொண்டன. சில நிமிடங்களில் இளமாறன் சற்றுப் பின் வாங்கினான்.

வீரகேசரி தன் கையிலிருந்த வேலை இளமாறன் மீது வீசுவதற்காக ஓங்கினான்.

வேல் தன் மீது பாயப் போவது உறுதி என்பதை உணர்ந்த இளமாறன் தன் கண்களை மூடிக் கொண்டான்.

சில விநாடிகள் கழித்து, வேல் தன் மீது விழாததால் வியப்படைந்தவனாகக் கண்களைத் திறந்து பார்த்தான் இளமாறன்.

எதிரே கையில் வேலைப் பிடித்தபடி சிரித்துக் கொண்டே நின்றான் வீரகேசரி.

"இளமாறா! நீ ஒரு கோழை. நான் வேல் வீசப் போவது தெரிந்ததும் அச்சத்தில் கண்களை மூடிக் கொண்டாய். சுத்தமான வீரனாக இருந்தால் வேல் தன்னை நோக்கி வரும்போது கண்ணை இமைக்கக் கூட மாட்டான். உன்னைப் போன்ற கோழையைப் போர்க்களத்தில் கொன்று என் வீரத்துக்கு இழுக்கு ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. நீ போய் உன் கூடாரத்தில் ஓய்வெடுத்துக் கொள். உன் படைவீரர்கள் மட்டும் போரிடட்டும்!" என்றான் வீரகேசரி, இளமாறனைப் பார்த்து இகழ்ச்சியுடன்.

குறள் 775:
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

பொருள்: 
பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலை எறியும்போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ?

776. வீணான நாட்கள்!

நாட்டின் படைத்தளபதி மறைந்து விட்ட செய்தியைக் கேட்டு மன்னர் மிகவும் வருத்தம் அடைந்தார்.

"இப்படிப்பட்ட ஒரு வீரரை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. எத்தனை போர்களைக் கண்டவர் அவர்! போருக்குப் போவது என்றாலே ஏதோ விழாவுக்குப் போவது போல் உற்சாகமாகக் கிளம்பி விடுவார்!" என்றார் மன்னர் அமைச்சரிடம்.

"ஆமாம் மன்னரே! படைத்தளபதி என்றாலும் போரில் முன்னணியில் நின்று ஒரு சாதாரண வீரர் போல் போரிடுவார். அவர் உடலில் எத்தனை விழுப்புண்கள்! இப்படிப்பட்ட ஒரு வீரரைக் காண்பது அரிது!" என்று ஆமோதித்தார் அமைச்சர்.

டைத்தளபதியின் இறுதிச் சடங்கு முடிந்ததும் அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றார் மன்னர்.

படைத்தளபதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி  விட்டு, அவர்களுக்குப் பொற்காசுகள் வழங்கிய பிறகு, அங்கிருந்து திரும்பும்போது வீட்டுச் சுவற்றில் ஒரு பெரிய கட்டம் வரையப்பட்டிருப்பதைப் பார்த்து அருகில் சென்றார் மன்னர்.

ஒரு பெரிய கட்டம் வரையப்பட்டு அது சதுரங்கப் பலகை போல் பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது முதல் கட்டத்தில் தமிழ் வருடங்களின் பெயர்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதப்பட்டு அவற்றுக்கு நேராக இருந்த கட்டங்களில் தமிழ் மாதங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.

சில வருடங்களில் சில மாதங்களுக்கான கட்டங்களுக்குள் சில எண்கள் எழுதப்பட்டிருந்தன.

"இவை என்ன?" என்றார் மன்னர் தளபதியின் மகனிடம்.

"அவை என் தந்தை போரில் கலந்து கொண்ட நாட்களின் தேதிகள்!" என்றான் தளபதியின் மகன்.

"இவ்வளவு நாட்கள் அவர் போரில் ஈடுபட்டிருந்திருக்கிறாரா? எனக்கே வியப்பாக இருக்கிறதே!" என்றார் மன்னர் வியப்புடன்.

"தாங்கள் இவ்வளவு நாட்களா என்கிறீர்கள்! அப்பா இதைப் பார்த்து அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டே, 'இவ்வளவு நாட்கள்தானா நான் போர் செய்திருக்கிறேன்? என் வாழ்நாளின் மற்ற நாட்களையெல்லாம் வீணாக்கி இருக்கிறேனே!' என்று புலம்புவார்" என்றான் தளபதியின் மகன். 

அதைச் சொல்லும்போதே அவன் குரல் தழுதழுத்தது. தந்தை மறைந்த சோகத்தினாலா, அல்லது தந்தையை நினைத்துப் பெருமைப்பட்டதாலா என்று தெரியவில்லை!

குறள் 776:
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

பொருள்: 
ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து, அவற்றுள் தன் உடலில் விழுப்புண் படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.

777. காலிலே கழல் எதற்கு?

"வேறு மொழி பேசும் பெண்ணை எப்படிக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்ட?" என்றான் இளந்திரையன், தன் நண்பன் நன்மாறனிடம்.

"காதலுக்குக் கண் இல்லேம்பாங்க. அப்ப மொழி மட்டும் எதுக்கு?" என்றான் நன்மாறன்.

சில மாதங்கள் கழித்து இளந்திரையன் நன்மாறனைச் சந்தித்தபோது நன்மாறன் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.

"என்ன, மனைவியோட சண்டையா?" என்றான் இளந்திரையன்.

"கிட்டத்தட்ட அப்படித்தான். மொழிப் பிரச்னைதான் காரணம்" என்ற நன்மாறன், தன் பிரச்னையை நண்பனிடம் விளக்கினான்.

"அவ மொழி தெரிஞ்சவங்க யார்கிட்டேயாவது சொல்லி விளக்கச் சொல்ல வேண்டியதுதானே!"

"அவ மொழி தெரிஞ்சவங்க யாருமே இந்த ஊர்ல இல்ல. வெளியூர்ல அவளைப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அந்த ஊர்ல அவ மொழி பேசறவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா இந்த ஊர்ல யாரும் இல்ல!" என்றான் நன்மாறன்.

"ஒருவர் இருக்கிறார்!" என்றான் இளந்திரையன்.

டைத்தலைர் தங்களை விருந்துக்கு அழைத்திருப்பதாக மனைவி யசோதாவிடம் சைகையில் கூறி அவளுக்குப் புரிய வைத்து அவளுடன் படைத்தலைவர் வீட்டுக்குச் சென்றான் நன்மாறன்.

விருந்து முடிந்ததும், திடீரென்று யசோதாவிடம் அவள் மொழியில் பேச ஆரம்பித்தார் படைத்தலைவர்.

இன்ப அதிர்ச்சி அடைந்த யசோதா, "உங்களுக்கு இந்த மொழி தெரியுமா?" என்றாள் வியப்புடன்.

"உன் கணவன் கால்ல போட்டிருக்கற கழலைக் கழற்றச் சொல்றியாமே!" என்றார் படைத்தலைவர்.

"ஆமாங்க! பெண்கள் கால்ல கொலுசு போட்டுக்கற மாதிரி இவரு ஒரு வளையத்தை மாட்டிக்கிட்டுத் திரியறாரு. அதைக் கழற்றுங்கன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். கேக்க மாட்டேங்கறாரு. மொழிப் பிரச்னையால என்னால அவர்கிட்ட விளக்க முடியல!"

"உங்கிட்டதாம்மா விளக்கணும். உன் கணவன் கால்ல போட்டிருக்கறது வீரக்கழல். தங்களோட உயிரைக் கூட மதிக்காம போர்க்களத்தில வீரத்தைக் காட்டி நிலையான புகழை சம்பாதிக்கிற சில வீரர்களுக்குத்தான் அரசர் இந்த வீரக்கழலைப் பரிசாக் கொடுப்பாரு. அது மாதிரி கொடுக்கப்பட்ட ஒரு சில பேர்ல உன் கணவனும் ஒருத்தன். இது அவனுக்கு எவ்வளவு பெருமை தெரியுமா? அவன் இதை உனக்கு விளக்கிச் சொல்ல முடியாம, உன் மொழி பேசறவங்க யாருன்னு தேடி என்னைக் கண்டு பிடிச்சான். 'என் மனைவியை உங்ககிட்ட அழைச்சுக்கிட்டு வரேன். நீங்க சொல்லிப் புரிய வையுங்க'ன்னு கேட்டான். அதனால, அவனை கௌரவிக்கற மாதிரி ஒரு விருந்து கொடுத்து உன்னை இங்கே வரவழைச்சு உங்கிட்ட விளக்கமா சொல்லலாம்னு தீர்மானிச்சேன்.

படைத்தலைவர் தன் மனைவியிடம் என்ன சொல்கிறார் என்று புரியாமல் நன்மாறன் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, யசோதா அவன் காலில் போட்டிருந்த கழலைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

குறள் 777:
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

பொருள்: 
பூமியில் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.

778. அரசரின் கோபத்துக்கு ஆளானவன்!

பிரதீபன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த ஒருவர் அவனை நிறுத்தி, "பிதீபா!" என்றார்.

"வணக்கம் நீலகண்டரே! எப்படி இருக்கிறீர்கள்?" என்றான் பிரதீபன்.

"நலம்தான். உன்னைத்தான் சிறிது காலமாகத் தலைநகருக்குப் பக்கத்திலேயே காண முடியவில்லை."

"காரணம் உங்களுக்குத் தெரியுமே!" என்றான் பிரதீபன் சிரித்தபடி

"ஆமாம். எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. சிறிது காலத்தில் எல்லாம் சரியாகி விடும்!" என்ற நீலகண்டர், சட்டென்று அருகில் நடந்து சென்ற சிலரைப் பார்த்து, "இவர் யார் தெரியுமா? கருங்குழிப் போரில் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் எதிரிப் படைகளுடன் வீரமாகப் போரிட்டுப் பல சாகசங்கள் புரிந்த பிரதீபர் இவர்தான்!" என்றார், பிரதீபனைக் காட்டி.

"பிரதீபரா? அந்த வீரரரை நேரில் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு பேறு!" என்றார் ஒருவர்.

"பிரதீபரே! உங்கள் வீரச் செயல் பற்றி நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன். உங்களைச் சந்திப்பேன் என்று தெரிந்திருந்தால் அதை எடுத்து வந்திருப்பேன். உங்கள் முன் அதைப் படித்துக் காட்டி இருக்கலாம்!" என்றார் இன்னொருவர்.

மற்றொருவர் கைதட்டி, "எல்லோரும் வாருங்கள். போர்க்களத்தில் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் எதிரிகளின் படைகளுக்குள் புகுந்து தாக்கி வீரச் செயல்கள் புரிந்த பிரதீபன் வந்திருக்கிறார். அவரைக் காண அனைவரும் வாருங்கள்!" என்று தெருவில் சென்று கொண்டிருந்த அனைவரையும் கூவி அழைத்தார்.

சில நிமிடங்களுக்குள் அங்கே பலர் கூடி விட்டனர்.

நீலகண்டர் பிரதீபனை அருகிலிருந்த ஒரு வீட்டின் உயரமான திண்ணையில் எல்லோரும் பார்க்கும் வகையில் நிற்க வைத்தார். 

அனைவரும் உற்சாகத்துடன் பல்வேறு கோஷங்களை எழுப்பி பிரதீபனைப் போற்றினர்.

பிரதீபன் நீலகண்டரை சைகை செய்து அருகில் அழைத்தான்.

"என்ன நீலகண்டரே இது? அரசர் என் மீது கோபமாக இருக்கிறார். அதனால் நான் தலைநகரத்துக்கு வருவதைக் கூடத் தவிர்த்து வருகிறேன். இங்கே இருக்கும் என் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரைப் பார்ப்பதற்காக இங்கே வந்து விட்டுத் திரும்பப் போய்க் கொண்டிருக்கிறேன். என்னை எல்லோருக்கும் அடையாளம் காட்டி விட்டீர்களே! அவர்களும் என்னைச் சூழ்ந்து கொண்டு என்மீது தங்கள் அபிமானத்தைக் காட்டுகிறார்கள். இது அரசருக்குத் தெரிந்தால் அவர் கோபம் இன்னும் அதிகமாக அல்லவா ஆகும்?" என்றான் கவலையுடன். 

"அரசருக்கு உன் மேல் கோபம் இருந்தால் என்ன? அதனால் உன் வீரச் செயல் மங்கி விடுமா என்ன? உன் வீரத்தை மக்கள் எவ்வாறு போற்றுகிறார்கள் என்பதை அரசர் அறிந்து கொண்டால், அவருக்கு உன் மீது இருக்கும் கோபம் நீங்கி விடும் - அந்தக் கோபம் எந்தக் காரணத்தினால் ஏற்பட்டிருந்தாலும்!" என்றார் நீலகண்டர் உற்சாகத்துடன்.

குறள் 778:
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.

பொருள்: 
போர் வந்தால் உயிர் பற்றி அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவார்.

779. காவல் தலைவருக்கு என்ன தண்டனை?

"காவல் தலைவரே! நீங்கள் செய்த குற்றத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?!" என்றார் அமைச்சர்.

காவல் தலைவர் அமைதியாக இருந்தார்.

"திருட்டுக் குற்றம் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது அரசரின் கட்டளை. ஆனால் திருட்டுக் குற்றம் செய்து பிடிபட்ட குற்றவாளிகளில் சிலரை நீங்களே விசாரணை செய்து விட்டு அவர்களை விடுதலை செய்திருக்கிறீர்கள்!" 

"கடுமையான எச்சரிக்கை கொடுத்த பிறகுதான் அவர்களை விடுதலை செய்தேன்!" என்றார் காவல் தலைவர்.

"ஏன் அப்படிச் செய்தீர்கள் என்றுதான் கேட்கிறேன். குற்றவாளிகளைப் பிடிப்பதுதான் உங்கள் பணி. அவரகளை விசாரித்து தண்டனை வழங்குவதோ, விடுதலை செய்வதோ நீதிபதிகளின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை, அந்த அதிகாரத்தை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ளலாம்?" என்றார் அமைச்சர் கடுமையாக.

"கைது செய்யப்பட்ட நபரிடம் ஆரம்ப கட்ட விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. அப்படி விசாரித்தபோது ஒரு சிலர் வறுமையினால் திருடி இருக்கிறார்கள், அதுவும் முதல் முறையாகத் திருடி இருக்கிறார்கள் என்று தெரிந்தது. நீதிபதியிடம் அவர்களை அனுப்பினால் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி. அதனால்தான் நான் அவர்களைக் கடுமையாக எச்சரித்து விட்டு விடுதலை செய்தேன்!" என்றார் காவல் தலைவர்.

"அரசே! காவல் தலைவரே தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார். அவருக்கு உரிய தண்டனையைத் தாங்கள்தான் அளிக்க வேண்டும்!" என்றார் அமைச்சர்.

"காவல் தலைவரே! நீங்கள் செய்தது குற்றம்தான். ஆயினும் உங்களை என்னால் தண்டிக்க முடியாது!" என்றார் அரசர், காவல் தலைவரைப் பார்த்து.

"ஏன் அரசே?" என்றார் அமைச்சர் வியப்புடன்.

"அமைச்சரே! இவர் எப்படிக் காவல் தலைவர் ஆனார் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா?"

"தெரியும். சாதாரணப் படைவீரராக இருந்த இவர் போரில் எதிர்த்தரப்பு வீரர்கள் நூறு பேரையாவது கொல்வேன் என்று தன் நண்பர்களிடம் சூளுரைத்து, அதன்படி தன் உயிரைத் துச்சமாக மதித்துப் போர்க்களத்தில் அசாத்தியமான வீரத்துடன் போரிட்டார். இந்தச் செய்தியைப் படைத்தலைவர் மூலம் அறிந்து கொண்ட தாங்கள் இவருக்குக் காவல் தலைவர் என்ற உயர்ந்த பதவியைக் கொடுத்து இவரை கௌரவித்தீர்கள். ஆனால் இவர் தவறு இழைத்திருக்கும்போது..."

"இத்தகைய வீரச் செயல் புரிந்தவரை, அவர் தவறு செய்திருக்கிறார் என்றாலும், என்னால் தண்டிக்க முடியாது!" என்றார் அரசர்.

"அப்படியானால்...?"

"அவர் வழியையே பின்பற்றி அவரைக் கடுமையாக எச்சரித்து விட்டு விடுகிறேன். என்ன காவல் தலைவரே?" என்றார் அரசர் காவல் தலைவரைப் பார்த்து.

காவல் தலைவர் மௌனமாக அரசருக்குத் தலை வணங்கினார். 

குறள் 779:
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

பொருள்: 
தாம் உரைத்த சூள் தவறாதபடி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்த பிழைக்காகத் தண்டிக்க வல்லவர் யார்?

780. வல்லபனைக் காண வந்தவர்

வல்லபன் கண்விழித்தபோது, தான் போர்க்க்களத்தில் அடிபட்டு விழுந்து கிடக்கிறோம் என்பதை உணர்ந்தான். 

எதிரியின் வாள் தன் மார்பில் பாய்ந்ததும், கீழே சாய்ந்தபோதே தனக்கு நினைவு தப்பி விட்டதும், சற்று நேரம் கழித்து இப்போது மீண்டும் நினைவு வந்திருப்பதும் அவனுக்குப் புரிந்தது.

மார்பில் எதிரியின் வாள் பாய்ந்த இடத்தில் வலி அதிகமாக இருப்பதை அவன் உணர்ந்தான். 

'எவ்வளவு ரத்தம் கீழே போயிருக்குமோ தெரியவில்லை, ஆனால் ஏன் இன்னும் உயிர் போகவில்லை?'

தன்னைச் சுற்றிலும் பார்த்தான். பார்வை மங்கலாக இருந்தது. அரை மயக்கத்தில் இருந்தது ஒரு காரணம் என்றாலும், பொழுது சாய்ந்து விட்டதும் இன்னொரு காரணம் என்று அவனுக்குப் புரிந்தது.

பொழுது சாய்ந்து விட்டதால் போர் நிறுத்தப்பட்டிருந்தது. ஆங்காங்கே ஒரு சிலர் நடமாடிக் கொண்டிருந்தனர்.

அவனுக்கு அருகில் சிலர் நடந்து வரும் காலடிச் சத்தம் கேட்டது. அவன் தலைமாட்டுக்கருகில் வந்ததும் காலடிச் சத்தம் நின்று விட்டது.

ஒருவர் அவன் அருகில் அமர்ந்து அவன் தலையை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டார்.

"வல்லபரே!" என்றார் அவர், மெல்லிய குரலில்

கொஞ்சம் கொஞ்சமாக நினைவு தப்பிக் கொண்டிருந்த நிலையிலும், வல்லபனுக்கு அந்தக் குரல் பரிச்சயமானதாகத் தோன்றியது.

மிகவும் சிரமப்பட்டுக் கண்களைத் திறந்து பார்த்தான் வல்லபன். 

மங்கலான மாலை வெளிச்சத்தில் பார்வை மங்கிய அவன் கண்களுக்குத் தெரிந்த அந்த முகம்! அது உண்மைதானா, இல்லை தான் ஏதாவது கனவு காண்கிறோமா என்று ஒரு கணம் குழம்பிய வல்லபன், "அரசே! நீங்களா?" என்றான், மிகவும் மெலிந்த குரலில்.

"நான்தான்!"

"அரசே! என்ன ஒரு பாக்கியம்! நான் யாருக்காகப் போர் செய்தேனோ அந்த அரசர் முன்னிலையில், அதுவும் அவர் மடியில் தலை வைத்து உயிரை விடுவது எத்தகைய பேறு!" என்றான் வல்லபன், உணர்ச்சிப் பெருக்குடன்.

"இல்லை, வல்லபரே! அரண்மனை வைத்தியர் வந்திருக்கிறார். அவர் உங்களைப் பிழைக்க வைத்து விடுவார்!" என்றார் அரசர்.

அப்போதுதான் தன் மார்பில் ரத்தம் வழிந்த இடம் துடைக்கப்பட்டு மருந்துச் சாறு பிழியப்படுவதை வல்லபன் உணர்ந்தான். அரண்மனை வைத்தியர் தான் இருப்பதே தெரியாமல் தன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்!

"இல்லை அரசே! நான் பிழைக்க மாட்டேன். தங்கள் கண் முன்பே, தங்கள் அன்பும், கனிவும் நிரம்பி வழியும் இந்தச் சூழ்நிலையில் மரணம் அடைவதையே நான் விரும்புகிறேன்! தங்கள் கருணையே கருணை!" என்றான் வல்லபன், மனநிறைவுடன்.

"இல்லை, வல்லபரே! நாட்டுக்காக உங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போரில் ஈடுபட்டு காயம் பட்டு விழுந்திருக்கும் உங்களைப் போன்ற வீரர்களை நேரில் பார்த்து என் நன்றியையும், மரியாதையையும் தெரிவிப்பது எனக்குத்தான் பெருமை!" என்று அரசர் கூறிக் கொண்டிருந்தபோதே வல்லபனின் தலை சாய்ந்தது.

குறள் 780:
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

பொருள்: 
தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீர மரணம் அடைய முடியுமானால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.

அதிகாரம் 79 - நட்பு
அதிகாரம் 77 - படைமாட்சி

 அறத்துப்பால்                                               காமத்துப்பால்  

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...