Sunday, January 23, 2022

546. வேலை வென்ற கோல்!

"படைபலம் இல்லாத ஒரு சிறிய நாட்டை நம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை. மூன்று மாதம் முற்றுகைக்குப் பிறகும் கோட்டைக்குள் நுழையாமல் திரும்பி வந்திருக்கிறோம். இப்படி ஒரு அவமானத்தை நாம் இதுவரை சந்தித்ததில்லை!"

மன்னன் விரகேசரியின் கோபமான பேச்சைக் கேட்டு அரசவையில் அனைவரும் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தனர்.

"சொல்லுங்கள் அமைச்சரே! எப்படி ஒரு சிறிய நாடான கமுதி நாட்டிடம் நாம் தோற்றோம்? நாம் சரியாகத் திட்டமிடவில்லையா?"

"மன்னிக்க வேண்டும் அரசே! இந்தப் படையெடுப்பு வேண்டாம், கமுதி நாட்டுடன் நமக்குள்ள பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று நான் துவக்கத்திலேயே சொன்னது தங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"எந்தப் போரைத்தான் நீங்கள் ஆதரித்திருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு அஹிம்சைவாதி என்பதால் அப்படிச் சொன்னீர்களே தவிர, கமுதி நாட்டின் மீது நாம் போர் தொடுத்தால் நாம் தோற்று விடுவோம் என்ற கருத்திலா அப்படிச் சொன்னீர்கள்?" என்றான் அரசன் கோபம் குறையாமல்.

"அதுவும் ஒரு காரணம்தான்!" என்று அமைச்சர் மெல்லிய குரலில் கூறியது அரசன் காதில் விழவில்லை.

வீரகேசரி இப்போது ஒற்றர்படைத் தலைவரிடம் திரும்பினான். "கமுதி நாட்டின் படைபலம் மிகக் குறைவு. அவர்களிடம் ஆயுதங்கள் கூட அதிகம் இல்லை என்று ஒற்றர்கள் கூறியதாகச் சொன்னீர்களே?"

"அது உண்மைதான் அரசே! போர் நடந்திருந்தால் அவர்கள் தோற்றிருப்பார்கள். ஆனால் நம்மால் கோட்டைக்குள்ளேயே நுழைய முடியவில்லையே!"  என்றார் ஒற்றர்படைத் தலைவர் தயக்கத்துடன்.

"அது உண்மைதான். மூன்று மாத முற்றுகைக்குப் பிறகும் அவர்கள் கோட்டைக் கதவைத் திறக்கவில்லை. கோட்டைக்குள் இருந்த தலைநகரத்தில் வசித்த மக்களுக்குப் போதுமான உணவு கூட இருந்திருக்காது. அது போல் கோட்டைக்கு வெளியில் இருந்த நாட்டு மக்களும் நம் படைகளுக்கு அஞ்சாமல் நமக்கு எந்த உதவியும் செய்ய மறுத்தார்கள். அவர்களுடைய ராஜ விசுவாசம் என்னை வியக்க வைக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அமைச்சரே!" என்றான் வீரகேசரி அமைச்சரைப் பார்த்து.

அரசனின் குரலில் கடுமை குறைந்திருந்ததைக் கண்ட அமைச்சர், "ஒரு உண்மையை நாம் உணர வேண்டும் அரசே! கமுதி நாட்டு மன்னர் செங்கோல் வழுவாமல் தன் நாட்டு மக்களின் நலனைப் பாதுகாத்து வருகிறார். இது எல்லோரும் அறிந்த உண்மை. தாங்களே பலமுறை இது பற்றி வியந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட அரசரிடம் குடிமக்களுக்கு அளவில்லாத விசுவாசம் இருப்பது இயல்புதான். அதனால்தான் படைபலமோ, ஆயுதபலமோ இல்லாத அவரை வலிமை மிகுந்த நம் படைகளால் வெல்ல முடியவில்லை. படைகளிடம் இருக்கும் வேலை விட அரசனின் செங்கோல் வலியது என்று நம் ஆன்றோர்கள் கூறி இருக்கிறார்கள். அதனால்தான் இந்தப் படையெடுப்பைத் தவிர்க்க வேண்டும் என்று நான் தங்களிடம் கேட்டுக் கொண்டேன்" என்று சொல்லி விட்டு அரசனின் முகத்தைத் தயக்கத்துடன் பார்த்தார். 

வீரகேசரியின் மௌனம் அமைச்சரின் பேச்சில் இருந்த உண்மையை அவன் உணர்ந்து கொண்டதைக் காட்டியது.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 546:
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

பொருள்:
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

Thursday, January 20, 2022

545. நகர்வலம்

"மன்னர் சில நாட்களாக இரவில் எங்கோ சென்று வருகிறாராமே!"

"ஆமாம்! நானும் கேள்விப்பட்டேன். அவருடைய  பாதுகாப்புப் படையினருக்குக் கூடத் தெரியாமல் எங்கோ போய் விடுகிறாராம். அவர் திரும்பி வந்த பிறகுதான் அவர் வெளியே சென்ற விஷயமே அவருடைய பாதுகாப்புப் படையினருக்குத் தெரிகிறதாம். மன்னர் எப்போது போவார், எப்படிப் போவார் என்று கண்டறிய முடியாமல் பாதுகாப்புப் படை விரர்கள் திணறுகிறார்களாம்! மன்னரிடம் இது பற்றிக் கேட்கவும் முடியாமல் தவிக்கிறார்களாம்!"

"சரி, சரி. இது பற்றி நாம் அதிகம் பேசுவது ஆபத்து. யார் காதிலாவது விழுந்து விடப் போகிறது. நம் வேலையைப் பார்ப்போம்!"

வழியில் சந்தித்தபோது ஓரிரு நிமிடங்கள் உரையாடிய இரண்டு அரண்மனைக் காவலர்களும் பிரிந்து தங்கள் வழிகளில் சென்றனர்.

"ஒரு முக்கியமான காரணத்துக்காக இந்த ஆலோசனை அவையைக் கூட்டி இருக்கிறேன். நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் அனைவரும் உண்மையான பதிலைக் கூற வேண்டும். என்னைக் குறை கூறுவதாக இருந்தாலும்  சரி, உங்கள் உண்மையான பதில் வேண்டும்" என்றார் அரசர்.

"கேளுங்கள் அரசே!" என்ற அமைச்சர், "அதற்கு முன் நான் தங்களை ஒரு கேள்வி கேட்கலாமா?" என்றார்.

"நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும் அமைச்சரே! நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கும், நான் கேட்க நினக்கும் கேள்விகளுக்கும் தொடர்பு இருக்கிறது. என் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும்போதே உங்கள் கேள்விக்கான பதிலும் உங்களுக்குத் தானே கிடைத்து விடும்!" என்று சிரித்துக் கொண்டே கூறிய அரசர், தொடர்ந்து, "என் ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?" என்றார்.

"தங்கள் ஆட்சியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் இருக்கிறார்கள். இது அனைவரும் அறிந்ததுதானே?" என்றார் அமைச்சர்.

"இது என் கேள்விக்கான பதில் இல்லையே அமைச்சரே!" என்று சிரித்தபடியே கூறிய அரசர், "இந்தக் கேள்விக்கு ஒற்றர்படைத் தலைவர் பதிலளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" என்றார் ஒற்றர்படைத் தலைவரைப் பார்த்து.,

அரசர் குறிப்பாகத் தன்னைப் பார்த்துக் கேட்பார் என்பதை எதிர்பார்க்காத ஒற்றர்படைத் தலைவர் சற்றே திடுக்கிட்டவராகத் தன் இருக்கையிலிருந்து எழுந்து, "ஒரு சிலரைத் தவிர எல்லோரும் தங்கள் ஆட்சியைப் புகழ்ந்துதான் பேசுகிறார்கள்" என்றார்.

"அந்த ஒரு சிலர் என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்."

"அரசே! குறை கூறிக் கொண்டிருக்கும் பழக்கம் உள்ள சிலர் எப்போதும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். ராமபிரானைக் கூடச் சிலர் குறை கூறிப் பேசவில்லையா?" என்றார் அமைச்சர்.

"ஆனால்  ராமபிரான் அதைப் புறக்கணிக்கவில்லையே! அந்தக் குறையைப் போக்கும் வகையில்தானே நடந்து கொண்டார்?" என்று அமைச்சருக்கு பதிலளித்த அரசர், ஒற்றர்படைத் தலைவரிடம் திரும்பி, "சொல்லுங்கள்! என்னென்ன குறைகளைக் கூறுகிறார்கள்?" என்றார்.

"குறிப்பாக ஏதுமில்லை அரசே! உங்கள் ஆட்சியில் அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் தவறு செய்பவர்கள் மீது சரியானபடி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை, அதனால் தீயவர்கள் சிலர் அச்சமின்றிக் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று சிலர் பேசிக் கொள்வதாக ஒற்றர்கள் என்னிடம் கூறினர். ஆனால் அமைச்சர் சொன்னது போல், இது போல் சிலர் எப்போதும்..."

"இதைச் சொல்ல நீங்கள் தயங்க வேண்டியதில்லை. உங்கள் ஒற்றர்கள் உங்களிடம் தெரிவத்ததைப் போல் ஆங்காங்கே சிலர் பேசிக் கொள்வதை நானே கேட்டேன்" என்றார் அரசர் அவரை இடைமறித்து. 

"தாங்களே கேட்டீர்களா?" என்றார் அமைச்சர் அதிர்ச்சியுடன்.

"ஆமாம். அமைச்சரே. சில நாட்களாக நான் இரவு வேளைகளில் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றபோதுதான் கேட்டேன்" என்ற அரசர், அமைச்சரைப் பார்த்துப் புன்னகைத்து, "நான் இரவில் வெளியே சென்று வருவதைப் பற்றித்தானே நீங்கள் கேட்க விரும்பினீர்கள்? உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விட்டதல்லவா?" என்றார்.

"மன்னிக்க வேண்டும் அரசே! இது ஒரு சிலர் கூறும் குறைதான். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்றார் அமைச்சர்.

"இல்லை அமைச்சரே! நான் அப்படி நினைக்கவில்லை. அரசன் ஆட்சி சிறப்பாக இருந்தால் நாட்டில் மழை பெய்து, பயிர்கள் செழிக்கும் என்பதுதானே நம்பிக்கை? கடந்த ஆண்டில் நம் நாட்டில் மழை பொய்த்து விட்டது. அதன் காரணமாக விளைச்சல் குறைந்து விட்டது. அதனால் என் ஆட்சியில் குறை ஏதும் இருக்கலாம் என்று நினைத்து அதை அறிந்து கொள்ளத்தான் நகர்வலம் செல்லத் தீர்மானித்தேன்."

"அரசே! தாங்கள் அறியாததல்ல. அரசர் நல்லாட்சி செய்தால் நாட்டில் மழை பெய்யும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் சில சமயம் அப்படி நடப்பதில்லை. அதனால் ஆட்சியின் மீது குறை என்று பொருளல்ல, விஸ்வாமித்திரர் மன்னராக இருந்தபோது அவர் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. ஆனால் அவர் ஒரு சிறந்த அரசராகத்தானே இருந்தார்?"

"நீங்கள் சொல்வது உண்மைதான். ஆயினும், சில குறைகள் இருப்பதாக நமக்குத் தெரிய வரும்போது அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியது நமது கடமை இல்லையா? தவறுகள் எங்கே நடந்தாலும் தவறு செய்தவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எல்லா அதிகாரிகளுக்கும் கடுமையாக உத்தரவிடுங்கள். மக்கள் நம் ஆட்சியின் மீது சொல்லும் எல்லாக் குறைகளையும், அவை சிறு குறைகளாக இருந்தாலும் ஒற்றர்படைத் தலைவர் அவற்றை அமைச்சருக்குத் தெரிவிக்க வேண்டும். அமைச்சர் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது என் கண்டிப்பான உத்தரவு" என்றார் அரசர்.

அமைச்சரும், ஒற்றர்படைத் தலைவரும் மௌனமாகத் தலையாட்டினார்கள்.

அப்போது காற்று பெரிதாக வீச, அரண்மனையில் பல சாளரங்கள் அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்டது.

"அரசே! பெருமழை பொழியப் போகிறது என்று நினைக்கிறேன்" என்றார் அமைச்சர் மகிழ்ச்சியுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 545:
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

பொருள்:
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

Tuesday, January 18, 2022

544. முனிவர்களின் செயல்!

"இந்த ஆவணி விசாகத்தன்று நான் முடிசூடிப் பத்து ஆண்டுகள் நிறைவானதற்காக என்னை வாழ்த்தப் பல நாடுகளிலிருந்தும்  தங்களைப் போன்ற முனிவர்களும், அறிஞர்களும் இங்கே வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளித்தாலும் எனக்குச் சிறிது சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது. 

"என் வாழ்வில் இது ஒரு முக்கியமான நாளாக இருக்கலாம். ஆனால் உங்களைப் போன்ற சான்றோர்களும், அறிஞர்களும், முனிவர்களும், ஏன் பல்வேறு நாடுகளின் ராஜகுருக்களும் கூட இங்கே வந்திருப்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. என்னிடம் கூறாமல் என் அமைச்சர் ஆமருவியார் இந்த ஏற்பாட்டைச் செய்து விட்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அநேகமாக அவரைப் பதவி நீக்கம் செய்து விடுவேன்!" என்றான் அரசன் திரிலோகசந்திரன், அமைச்சரைப் பார்த்துச் சிரித்தபடியே.

"மன்னா! இது உங்கள் அமைச்சரின் ஏற்பாடு அல்ல. உன் குடிமக்களை அரவணைத்துச் சென்று ஒரு தாயைப் போல் அவர்களிடம் அன்பு காட்டி, ஒரு தந்தையைப் போல் அவர்களைக் காக்கும் உன் மாண்பை இந்த உலகமே போற்றுகிறது. ஏன், பிற நாட்டு மன்னர்களே உன்னை வியந்து உன்னைப் பாராட்டி வாழ்த்தத் தங்கள் குருமார்களை அனுப்பி இருக்கிறார்கள். எங்கள் விருப்பத்தின் பெயரில்தான் உங்கள் அமைச்சர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்" என்றார் அங்கே வந்திருந்த முனிவர்களில் மூத்தவரான புங்கவர்.

"என்னைப் பெருமைப்படுத்த வந்திருக்கும் பெருமக்களாகிய உங்கள் திருவடிகளில் விழுந்து வணங்க விரும்புகிறேன். அன்பு கூர்ந்து அனைவரும் சேர்ந்து நின்று தங்கள் திருவடிகளில் நான் பணிந்து வணங்குவதை ஏற்று என்னை வாழ்த்த வேண்டுமென்று வேண்டுகிறேன்" என்று அவர்களை வணங்க முன்வந்தான் அரசன்.

"இருக்கட்டும் மன்னா! அதற்கு முன் நாங்கள் செய்ய வேண்டிய பணி ஒன்று இருக்கிறது. எங்கள் அனைவரின் சார்பாக,  இங்கே வந்திருக்கும் முனிவர்களில் வயதில் மூத்த பன்னிருவர் உனக்கு அளிக்கப் போகும் ஒரு காணிக்கையை நீ ஏற்க வேண்டும். அதற்குப் பிறகு நீ எங்களை வணங்கலாம்" என்றார் புங்கவர்.

புங்கவர் உட்படப் பன்னிரண்டு முனிவர்கள் அரசன் முன் வந்து நின்றனர். சட்டென்று அனைவரும் ஒரு சேர அரசனின் காலில் விழுந்து வணங்கினர்.

"இதென்ன அபசாரம்!" என்று கூவியபடியே பின்வாங்கினான் அரசன். "அறிவிலும், வயதிலும் மூத்தவர்களான, அனைவராலும் வணங்கப்பட வேண்டிய முனிவர்கள் என் காலில் விழுகிறீர்களே!"

"அரசே! உன்னைப் போல் செங்கோல் வழுவாத மன்னனை உலகமே வணங்க வேண்டும். இந்த உலகத்தின் சார்பாக நாங்கள் பன்னிருவர் உங்களை வணங்கினோம். அவ்வளவுதான்!" என்றார் புங்கவர்.

"அரசே! உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பது தொல்காப்பிய வாக்கியம். இந்த உயர்ந்த முனிவர்கள் தங்களை வணங்கியது இந்த உலகமே தங்கள் செங்கோலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உங்களை வணங்கியதாகத்தான் ஆகும்!" என்றார் அமைச்சர் ஆமருவியார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 544:
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

பொருள்:
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப் பொருந்தி உலகம் நிலை பெறும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

543. நாடு விட்டு நாடு சென்று...

"குருவே, ஏன் நாம் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வேறு நாட்டில் சென்று குடியேறுகிறோம்?" என்று வினவினான் வினயன்

"என் குருவின் சித்தாந்தத்தை இந்த வையம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதுதான் என் லட்சியம் என்பதை நீ அறிவாய். அதனால்தான் ஒவ்வொரு நாடாகச் சென்று அங்கு என் குருவின் சித்தாந்தத்தைப் பரப்பி, இந்தப் பணி தொடர்ந்து நடைபெற ஒவ்வொரு நாட்டிலும் சில மடங்களை உருவாக்கி, நம் சித்தாந்தத்தை ஏற்று அதை நன்கு கற்றறிந்த ஞானிகளிடம்  மடங்களை நிர்வகித்து நம் சித்தாந்தத்தைத் தொடர்ந்து பரப்பும் பொறுப்பை ஒப்படைத்த பிறகு, இன்னொரு நாட்டுக்கு உன்னுடன் செல்கிறேன். என் ஆயுள் முடிந்த பிறகு, இந்தப் பணியை நீ தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதால்தான் உன்னை என்னுடனேயே எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் குரு.

"அதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது என்று நம்புகிறேன் குருவே!" என்றான் வினயன்.

"இருக்கட்டும். இப்போது இந்த மாளவி நாட்டுக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். நான் இந்த மரத்தடியில் அமர்ந்திருக்கிறேன். நீ ஊருக்குள் சென்று இங்கு வேதபாடசாலைகள் எத்தனை இருக்கின்றன, அவற்றுள் ஒன்றில் நாம் தங்க முடியுமா என்று பார். அதுபோல் கல்விக் கூடங்கள் எத்தனை இருக்கின்றன, அன்னசத்திரங்கள் எத்தனை இருக்கின்றன என்று பார்த்து வா. நம் இருவருக்கும் கொஞ்சம் உணவும் சேகரித்துக் கொண்டு வா."

"கல்விக் கூடங்கள், அன்னசத்திரங்கள் எதற்கு குருவே? அங்கெல்லாம் கூடவா நாம் பிரசாரம் செய்யப் போகிறோம்?"

"நீ பார்த்து விட்டு வா. அப்புறம் சொல்கிறேன்" என்றார் குரு.

ற்று நேரம் கழித்துத் திரும்பி வந்த வினயன், "குருவே! இந்த ஊரில் ஒரு சில வேதபாடசாலைகள் இருக்கின்றன. ஆனால் அவை வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஆங்காங்கே ஓரிரு மாணவர்கள் மட்டும்  அமர்ந்து குருவிடம் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் விசாரித்தபோது வேதங்களைக் கற்கவோ, கற்பிக்கவோ ஆர்வம் உள்ளவர்கள் அதிகம் இல்லை என்று சொன்னார்கள். ஒரே ஒரு கல்விச்சாலை இருக்கிறது. அதுவும் இப்போது இயங்கவில்லையாம். கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. அது போல் அன்னசத்திரங்களும் இந்த ஊரில் இல்லையாம். யாரோ ஒருவர் மட்டும் தன்னால் இயன்ற அளவுக்கு வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு உணவு வழங்குவதாகச் சொன்னார்கள். அவரிடம் போய்தான் நம் இருவருக்கும் சிறிது உணவு வாங்கி வந்தேன்" என்றான்.

"நல்லது. அப்படியானால், உணவருந்தி விட்டு, சற்று நேரம் இந்த மர நிழலிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு விட்டு வேறு ஊருக்குச் சென்று பார்க்கலாம்" என்றார் குரு.

மூன்று நாட்களுக்குப் பிறகு, "இந்த நாடு நமக்கு ஏற்றதல்ல. இங்குள்ள மக்கள் எவரும் ஆன்மீகத்தைப் பற்றிச் சிந்திக்கும் மனநிலையில் இல்லை என்று நினைக்கிறேன். நாம் வேறொரு நாட்டுக்குச் சென்று நம் பணியைத் தொடரலாம்" என்றார் குரு.

"எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் அரசரைச் சந்திப்பீர்களே! இந்த நாட்டு அரசரைச் சந்திக்காமலேயே போகிறோமே!"

"இந்த நாட்டில் செங்கோல் ஆட்சி நடக்கவில்லை. எனவே அரசரைப் பார்ப்பதில் பயனில்லை."

"செங்கோல் ஆட்சி நடக்கவில்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள் குருவே? அரசரைப் பற்றி நம்மிடம் யாரும் குறை கூறவில்லையே!"

"இந்த மூன்று நாட்களில் நாம் சென்ற எல்லா ஊர்களிலும் நாம் பார்த்தது என்ன? வேதநூல்கள் ஓதப்படுவதோ, கற்பிக்கப்படுவதோ இல்லை, கல்வி அளித்தல், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், பயணிகளுக்கும் உணவளித்தல் போன்ற அறச் செயல்கள் எதுவும் நடக்கவில்லை. அரசனின் செங்கோல் வளையாமல் இருந்தால்தான் அறிவு நூல்கள் கற்கப்படுவதும், அறச் செயல்கள் செய்யப்படுவதும் நடக்கும். ஆட்சி பற்றி மக்கள் யாரும் குறை கூறாததில் வியப்பில்லை.கொடுங்கோல் ஆட்சி பற்றிக் குறை கூற மக்கள் அஞ்சுவது இயல்புதானே?" என்றார் குரு.

"அதனால்தான் வழக்கமாக ஒரு நாட்டில் மூன்று ஆண்டுகள் தங்கும் நாம் இந்த நாட்டை விட்டு மூன்று நாட்களில் வெளியேற வேண்டி இருக்கிறது!" என்றான் வினயன்.

 பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 543:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

பொருள்:
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

Sunday, January 16, 2022

542. வளைந்த நிழல்!

"வாருங்கள் புலவரே! நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். என் தந்தை ஆண்டபோது அடிக்கடி வந்த தாங்கள் நான் முடிசூட்டிக் கொண்டு ஒரு ஆண்டு கழித்துத்தான் வந்திருக்கிறீர்கள்" என்றான் அரசன் மகிழ்மாறன்.

"ஆம் மன்னரே! தாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது தங்களை வாழ்த்த வந்தேன். அப்புறம் வர சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை" என்றார் புலவர் செவ்வந்தி.

"சரி. நீங்கள் புனைந்த பாடலைக் கூறுங்கள். நாட்டின் தலைசிறந்த புலவர்களுள் ஒருவராக விளங்கிப் பெண் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் உங்கள் பாடலைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்."

புலவர் செவ்வந்தி தன் பாடலைக் கூறியதும் அவையில் அனைவரும் கைதட்டிப் பாராட்டினர்.

"சிறப்பான பாடல் புலவரே! ஆனால் நான் என் தந்தையைப் போல் அவ்வளவு தமிழறிவு கொண்டவனல்ல. எனவே பாடலின் பொருளை என் சிற்றறிவுக்குப் புரியும்படி விளக்கி விடுங்களேன்!" என்றான்மகிழ்மாறன் சிரித்தபடியே.

"பாடலின் பொருளை நான் விளக்குவதை விடத் தங்கள் அமைச்சர் விளக்கினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று அமைச்சரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறிய செவ்வந்தி, "தாங்கள் தனிமையில் ஓய்வாக இருக்கும்போது அமைச்சர் தங்களுக்கு இதை விளக்கினால் சிறப்பாக இருக்கும். இப்போது நான் விடைபெறுகிறேன்" என்றார்.

"இருங்கள். பரிசு வாங்காமல் போகிறீர்களே!"

"இருக்கட்டும் மன்னரே! அடுத்த முறை வாங்கிக் கொள்கிறேன்" என்றபடியே கைகூப்பி விடைபெற்றார் செவ்வந்தி.

மகிழ்மாறன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

"சொல்லுங்கள் அமைச்சரே! புலவர் பாடிய பாடலின் பொருள் என்ன?" என்றான் மகிழ்மாறன், அமைச்சருடன் தனியே இருந்தபோது.

"மழை பெய்யாததால் வாடிக் கொண்டிருக்கும் பயிர்கள் மழை எப்போது வரும் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் வானில் தெரிபவை வெண்மேகங்கள்தான், மழை கொடுக்கும் கருமேகங்கள் அல்ல. மக்களோ, அரசரின் செங்கோலைப் பார்க்கிறார்கள். செங்கோல் நிமிர்ந்து நின்றாலும் செங்கோலின் கரிய நிழல் வளைந்து தரையில் தவழும் கருமேகம் போல் காணப்படுகிறது. இதுதான் பாடலின் பொருள்" என்றார் அமைச்சர்.

"அது எனக்குப் புரிகிறது. ஆனால் பாடலின் உட்பொருள் என்ன? நாட்டில் மழை இல்லை. பயிர்கள் மட்டுமல்ல, மக்களும் வானத்தைப் பார்த்தபடிதான் இருக்கிறார்கள். அது நான் அறிந்ததுதான். ஆனால் அரசனின் செங்கோல் இங்கே ஏன் வந்தது? செங்கோல் நேராக இருந்தாலும் அதன் நிழல் வளைந்திருக்கிறது என்றால் என்ன பொருள்? வெயிலின் கொடுமையைச் சொல்கிறாரா? செங்கோலின் நிழல் கார்மேகம் போல் இருக்கிறது என்றால் செங்கோலின் கருணையைக் குறிப்பிடுகிறாரா, அல்லது இதில் வஞ்சப் புகழ்ச்சி ஏதேனும் இருக்கிறதா? இந்தப் பொருளை உங்களிடம் நான் தனிமையில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னதன் பொருள் என்ன?"

"அரசே! நான் கூறப் போவதை மற்றவர்கள் கேட்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அதனால்தான் தனிமையில் கேட்கும்படி கூறி இருக்கிறார் புலவர். நாட்டில் மழை இல்லை. பயிர்கள் வானத்தைப் பார்க்கின்றன. ஆனால் நாட்டு மக்கள் எப்போதுமே பார்த்துக் கொண்டிருப்பது அரசரின் செங்கோலைத்தான். ஏனென்றால் அதுதான் தங்களை எப்போதும் காக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அப்படி  நடக்கவில்லை என்று கூறுகிறார் புலவர்!" என்று சொல்லி நிறுத்தினார் அமைச்சர்.

"என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே?" என்றான் மகிழ்மாறன் சற்றே அதிர்ச்சியுடன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! நான் ஏற்கெனவே சில முறை இதை உங்களிடம் தெரிவிக்க முயன்றிருக்கிறேன். ஆனால் தங்கள் மனம் புண்படக் கூடாது என்று நான் மறைமுகமாகச் சொன்னதாலோ என்னவோ நான் சொல்ல நினைத்ததை என்னால் தங்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை."

"நேரடியாகவே சொல்லுங்கள், எதுவாக இருந்தாலும். கேட்டுக் கொள்கிறேன்."

"அரசே! நீங்கள் நல்ல உள்ளம் படைத்தவர். ஆனால் தங்களைச் சுற்றியுள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அரசு அதிகாரிகளைத் தங்கள் கையில் போட்டுக் கொண்டு சில தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். நாட்டில் பஞ்சம் நிலவும் இந்தச் சமயத்தில் அரசு அதிகாரிகள் கடுமையான வரி வசூலில் ஈடுபடுகிறார்கள். அரசு கஜானாவில் உள்ள செல்வத்தை அரண்மனையில் சிலர் ஆடம்பரச் செலவுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்..."

"இதையெல்லாம் நீங்கள் ஏன் தடுக்கவில்லை?" என்றான் அரசன் கோபத்துடன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! தங்கள் பெயரால் செயல்கள் நடைபெறும்போது அவற்றை நான் எப்படித் தடுக்க முடியும்? தனாதிகாரியே தங்கள் உத்தரவுப்படிதான் தான் வரி வசூலிப்பதாகவும், செலவு செய்வதாகவும் என்னிடம் சொல்கிறார். தாங்கள் அப்படிச் சொல்லி இருக்க மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் தங்களுக்கு நெருக்கமானவர்கள் இப்படிச் செய்வதாக நான் தங்களிடம் சொன்னால் தாங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வீர்களோ!"

"ஓ! அதுதான் புலவர் செங்கோல் நேராக இருக்கிறது, அதன் நிழல் வளைந்திருக்கிறது என்று சொன்னாரோ? நிழலைக் கார்மேகத்துடன் ஒப்பிட்டது கூட நான் கருணை உள்ளவன் என்பதைக் காட்டத்தானா?"

"அப்படித்தான் நான் புரிந்து கொள்கிறேன் அரசே!"

"நல்லது. அரண்மனையில் உள்ளவர்களைக் கண்டித்துக் கட்டுப்படுத்தி வைக்கிறேன். தனாதிகாரியிடம் சொல்லி வரி வசூலிப்பதை நிறுத்தச் சொல்கிறேன். அத்துடன் அரண்மனை தானியக் கிடங்கில் உள்ள தானியங்களை ஏழை மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுங்கள். நீங்களோ நானோ உத்தரவிட்டலொழிய அரசு அதிகாரிகள் எதையும் செய்யக் கூடாது என்று கடுமையாக எல்லா அதிகாரிகளையும் எச்சரித்து விடுகிறேன். விரைவிலேயே அரசவைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகள் பற்றிக் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்" என்றான் மகிழ்மாறன்.

"நன்றி அரசே! தங்கள் செங்கோல் சற்றும் வளையாதது என்பதை நிருபித்து விட்டீர்கள். தங்கள் தந்தையைப் போல் தாங்களும் மக்களால் நேசிக்கப்படும் மன்னராக விளங்குவீர்கள்!" என்றார் அமைச்சர் பெருமிதத்துடன்.

"ஆனால் எனக்கொரு ஐயம் அமைச்சரே!"

"என்ன அரசே?"

"புலவர் பாடலைத் தானே எழுதினாரா, அல்லது பாடலின் கருப்பொருள் பற்றி அவருக்கு யாராவது யோசனை கூறினார்களா?" என்றான் மகிழ்மாறன் குறும்பாகச் சிரித்தபடி.

"தாங்கள் இட்ட பணிகளை நிறைவேற்ற வேண்டும். விடை பெறுகிறேன் அரசே!" என்று பதில் சொல்லாமல் நழுவினார் அமைச்சர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 542:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.

பொருள்:
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

Saturday, January 15, 2022

541. மாறிய தீர்ப்பு!

"அரசே! இது மிகச் சாதாரண வழக்கு. திருடியவன் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறான். வழக்கை விசாரித்து நீதிபதி தண்டனை அளித்திருக்கிறர். திருட்டுப் போன பொருளும் கிடைத்து விட்டது. இதைத் தாங்கள் மறுவிசாரணை செய்யத்தான் வேண்டுமா?" என்றார் அமைச்சர்.

"பாண்டிய மன்னர் நெடுஞ்செழியனின் அவசரத் தீர்ப்பால் அப்பாவி கோவலன் கொல்லப்பட்டு, நியாயம் கேட்ட கண்ணகியின் கோபத்தால் மதுரை நகரமே பற்றி எரிந்த வரலாறு உங்களுக்குத் தெரியாதது அல்லவே! அது போன்ற தவறு நாம் நாட்டில் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மேல்முறையீடு முறையை வைத்திருக்கிறேன். பெரும்பலோர் நீதிபதி கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு சிலர்தான் மேல்முறையீடு செய்கிறார்கள். அவர்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுப்பதில் தவறில்லையே?" என்ற அரசர், "சரி. வழக்கை விசாரித்த நீதிபதி வந்திருக்கிறார் அல்லவா?" என்றார்.

"வந்திருக்கிறார் மன்னவா!" என்ற அமைச்சர் ஒரு காவலனை அழைத்து நீதிபதியை வரச் சொன்னார்.

நீதிபதி வந்ததும் அவரை அமரச் சொன்ன அரசர், "நீங்கள் ஒரு கல்வி கற்ற அனுபவமுள்ள நீதிபதி. எனவே நன்கு விசாரித்து, நன்கு சிந்தித்துத்தான் இந்தத் தீர்ப்பை வழங்கி இருப்பீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆயினும் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டிருப்பவர் மேல்முறையீடு செய்திருப்பதால், நீங்கள், அமைச்சர், நான் மூவரும் சேர்ந்து இந்த வழக்கின் விவரங்களை மீண்டும் ஒரு முறை பார்க்கப் போகிறோம்" என்றார்

"அப்படியே ஆகட்டும் அரசே!" என்றார் நீதிபதி.

"சரி. வழக்கின் விவரங்களைச் சொல்லுங்கள்."

"காந்தாமணி என்ற பெண்மணி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தெரு ஓரத்தில் எங்கோ மறைந்திருந்த ஒருவன் திடீரென்று குறுக்கே வந்து தன் கையிலிருந்த கத்தியால் அவள் கழுத்தில் அணிந்திருந்த அட்டிகையை அறுத்து எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். அந்தப் பெண்மணி கூச்சல் போட்டதும் அக்கம்பக்கத்திலிருந்து சிலர் அந்தத் திருடனைத் துரத்தினார்கள். அதில் ஒருவர் திருடனைப் பிடித்து அவனிடமிருந்து சங்கிலியைப் பிடுங்கி விட்டார். அதற்குள் மற்றவர்களும் அங்கே வந்து எல்லோருமாகச் சேர்ந்து திருடனைக் காவலர்களிடம் ஓப்படைத்தார்கள்" என்றார் நீதிபதி.

"ஓ! அவ்வளவு எளிமையான வழக்கா?" என்ற அரசர் ஓரிரு நிமிடங்கள் யோசித்து விட்டு, "பிடிபட்டவன் என்ன சொல்கிறான்?" என்றார்.

"பிடிபட்டவனின் பெயர் நீலவன். அவன் தெருவோரம் வசிப்பவன். சத்தம் கேட்டு என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகத் தான் ஓடி வந்ததாகவும், சிலர் தன்னைத் திருடன் என்று தவறாக நினைத்துப் பிடித்து விட்டாகவும்சொல்கிறான்."

"அப்படியானல், அட்டிகை அவனிடம் எப்படி வந்ததாம்?" என்றார் அ மைச்சர் எகத்தாளமாக.

"தன்னிடம் அட்டிகை இருந்ததையோ, அதைத் தன்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டார்கள் என்பதையோ அவன் ஒப்புக் கொள்ளவே இல்லை."

"அவனைப் பிடித்தவர் அவனிடமிருந்து அட்டிகையைப் பிடுங்கியதை யாராவது பார்த்தார்களா?" என்றார் அரசர்.

"இல்லை. அவனைப் பிடித்ததைத்தான் பார்த்தார்கள். பின்னால் சற்றுத் தொலைவில் ஓடி வந்து கொண்டிருந்தவர்களால் திருடனிடமிருந்து அட்டிகை பிடுங்கப்பட்டதைப் பார்த்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்" என்றார் நீதிபதி சற்று தயக்கத்துடன்.

"சரி. திருடனைப் பிடித்தவரின் பின்னணி என்ன?" என்றார் அரசர்.

"அவர் பெயர் சோமன். அவர் சமூகத்தில் ஒரு கண்ணியமான மனிதர். ஒரு சிறிய வியாபாரி."

"சரி. நான் ஒன்று கேட்கிறேன். ஒருவேளை பிடிபட்டவர் கண்ணியமானவராக இருந்து, பிடித்தவர் தெருவோரம் வசிப்பவராக இருந்து, பிடிபட்டவர் தான் திருடவில்லை என்று சொல்லி இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?" என்றார் மன்னர்.

"அவர் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று யோசித்திருப்பேன்!" என்றார் நீதிபதி தயக்கத்துடன்.

"பிடிபட்டவன் தெருவோரம் வசிப்பவன் என்பதால் அவன் திருடி இருப்பான் என்பதை நாம் சுலபமாக நம்பி விடுகிறோம். காவலர்களிடம் சொல்லி திருடனைப் பிடித்ததாகச் சொன்ன சோமனின் பின்னணியை விசாரிக்கச் சொல்லுங்கள், விசாரணை முடிந்ததும் என்னை வந்து பாருங்கள்" என்றார் அரசர்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு அரசரைச் சந்தித்த நீதிபதி, "மன்னித்து விடுங்கள் அரசே! என் தீர்ப்பு தவறுதான். தங்கள் அறிவுரைப்படி சோமனின்பின்னணியை விசாரித்ததில் அவருக்குக் கடன் தொல்லைகள் இருப்பதாகத் தெரிய வந்தது. காவலர்கள் அவரை விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார். ஏதோ ஒரு உந்துதலில் அவர்தான் அந்தப் பெண்ணின் சங்கிலியை அறுத்ததாகவும், பின்னால் பலர் துரத்திக் கொண்டு வந்ததும், தான் அகப்பட்டுக் கொள்வோம் என்ற பயத்தில் தெருவில் குறுக்கே வந்த ஒரு நபரைப் பிடித்து அவரிடமிருந்து சங்கிலியைப் பிடுங்கியதாகச் சொல்லித் தான் தப்பிக்க முயன்றதாகவும் ஒப்புக் கொண்டு விட்டார். தாங்கள் அனுமதி அளித்தால், நீலவனை விடுவித்து சோமனுக்கு தண்டனை அளித்து என் தீர்ப்பை மாற்றி எழுதி விடுகிறேன்" என்றார் பதைபதைப்புடன்.

"நல்லது. அப்படியே செய்து விடுங்கள். தவறு நேர்வது இயல்புதான். அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எந்த ஒரு நபரையும் அவருடைய பின்னணியைப் பொருட்படுத்தாமல் தீர ஆராய்ந்து உண்மையைக் கண்டறிவதில் கவனம் செலுத்துங்கள்!" என்றார் அரசர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 541:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

பொருள்:
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, விருப்பு வெறுப்பு இல்லாமல், நடு நிலைமையில் நின்று, செய்யத் தக்கதை ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்
 அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

Friday, January 14, 2022

540. தேவை: புதிய உதவியாளர்

"சார்! இன்னிக்கு 11 மணிக்கு சேம்பர் ஆஃப் காமர்ஸ் மீட்டிங்ல பேசறீங்க, சாயந்திரம் 6 மணிக்கு இலக்கிய மன்ற விழாவில தலைமை ஏற்றுப் பேசறீங்க" என்று கோவிந்தராஜனின் அன்றைய முக்கிய நிகழ்ச்சிகளை அவருக்கு நினைவு படுத்தினான் அவருடைய உதவியாளன் சபாபதி.

"சரி" என்று தலையாட்டிய கோவிந்தராஜன், தன் மேஜை இழுப்பறையிலிருந்த நோட்டை வெளியே எடுத்தார்.

"சார்! ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே!" 

"கேளு!" என்றார் கோவிந்தராஜன் சிரித்தபடி.

"நீங்க ஒரு சிறந்த பேச்சாளர். எத்தனையோ கூட்டங்கள்ள தயார் பண்ணிக்காமயே நீண்ட நேரம் சுவாரசியமாப் பேசறீங்க. ஆனா, சில கூட்டங்களுக்கு மட்டும் தயார் பண்ணி வச்சுக்கிட்டு அதையும் பல தடவை பாத்துக்கறீங்களே, அது ஏன்?"

"அது பேச வேண்டிய விஷயத்தைப் பொருத்தது. பொதுவான விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம் பத்தி என்ன வேணும்னா சொல்லலாம், எவ்வளவு வேணும்னா சொல்லலாம். அந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ள தயார் பண்ணிக்காம, அப்ப எனக்குத் தோணற சில விஷயங்களைப் பேசுவேன். நான் அதிகம் கூட்டங்கள்ள பேசிக் கிடைச்ச அனுபவத்தால சில பேச்சுகள் நல்லா அமைஞ்சிருக்கலாம். குறிப்பான விஷயங்களைப் பத்திப் பேசணும்னா நிச்சயமா தயார் பண்ணிக்கிட்டுத்தான் பேசணும்."

"ஆனா இன்னிக்கு சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல நீங்க பேசப் போற சப்ஜெக்ட் உங்களுக்கு நல்லா தெரிஞ்சதாச்சே!"

"இருக்கலாம். ஆனா நான் சொல்ல வேண்டிய விஷயங்கள் எதுவும் விட்டுப் போகக் கூடாது இல்லியா? அதுதான் முன்கூட்டியே யோசிச்சு, பேச வேண்டிய பாயின்ட்களைக் குறிச்சு வச்சுக்கறேன். எதுவும் விட்டுப் போயிடக் கூடாதுங்கறதுக்காக எத்தனை பாயின்ட்னு கணக்கு வச்சுப்பேன். அப்படியும் விட்டுப் போச்சுன்னா பாத்துக்கறதுக்காக பாயின்ட்களை சுருக்கமா ஒண்ணு ரெண்டு வார்த்தையில நம்பர் வாரியா ஒரு துண்டுக் காகிதத்தில எழுதி சட்டைப் பையில வச்சுப்பேன். ஆனா பொதுவா அதைப் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு வரதில்ல" என்றார் கோவிந்தராஜன்.

"இலக்கிய மன்றக் கூட்டத்தில பேசவும் தயார் பண்ணியிருக்கீங்களா?"

"ஆமாம். அது எனக்கு அதிகம் தெரியாத சப்ஜெக்ட் ஆச்சே! என்னை மதிச்சுக் கூப்பிட்டிருக்காங்க. அதுக்காக உருப்படியா ஒண்ணு ரெண்டு விஷயம் சொல்லணும் இல்லையா?"

"சார்! எனக்கு ஒண்ணு தோணுது. இது மாதிரி கூட்டங்கள்ள பேசறதுக்கே இந்த அளவுக்குத் தயார் பண்றீங்களே, உங்க வாழ்க்கைக்கு எந்த அளவுக்குத் திட்டமிட்டிருப்பீங்க?" என்ற சபாபதி, சற்று அதிக உரிமை எடுத்துக் கொண்டு பேசி விட்டோமா என்று நினைத்து, "சாரி சார்! ஏதோ ஒரு ஆர்வத்தில கேட்டுட்டேன்!" என்றான்.

"நீ கேட்டதில தப்பு எதுவம் இல்ல. சொல்றேன். அதுக்கு முன்னால உங்கிட்ட ஒண்ணு கேக்கறேன். சில விஷயங்களைச் செய்யணும்னு நினைச்சு, அப்புறம் மறதியாலேயோ, சோம்பேறித்தனத்தாலேயோ அதைச் செய்யாம விட்டு அப்புறம் அதுக்காக வருத்தப்பட்டிருக்கியா?" என்றார்.

"எத்தனையோ தடவை!"

"இது மாதிரி செய்ய வேண்டியவைகளச் செய்யாம விட்டதனால  வாழ்க்கையில எவ்வளவு இழக்கறோம்கறதை சின்ன வயசிலேயே நான் புரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்பறம் ஒண்ணு செஞ்சேன்" என்ற கோவிந்தராஜன் தன் மேஜை இழுப்பறையிலிருந்து இன்னொரு நோட்டை எடுத்து அவனிடம் காட்டினார்.

அதில், செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் பல பணிகள் வரிசையாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை அடிக்கப்பட்டிருந்தன.

"ஒரு விஷயத்தைச் செய்யணும்னு எனக்குத் தோணின உடனேயே அதை ஒரு துண்டுச் சீட்டில குறிச்சுப்பேன். இதுக்காகவே சட்டைப்பையில ஒரு துண்டுக் காகிதம் வச்சிருப்பேன். பல எண்ணங்கள் நம் மனசில தோணி உடனே எவாபரேட் ஆயிடும். அந்த எண்ணம் திரும்ப வரும்னு கூடச் சொல்ல முடியாது அதனாலதான் அதை உடனே பிடிச்சு வச்சுக்கற மாதிரி எழுதி வச்சுக்கறது முக்கியம்.

"ராத்திரி தூங்கறத்துக்கு முன்னால, துண்டுச் சீட்டில குறிச்ச விஷயங்களை இந்த நோட்டில எழுதி வைப்பேன். தினமும் இந்த நோட்டைப் பார்த்து நான் செய்ய நினைச்ச சில விஷயங்களை அன்னிக்கு செய்ய முடியுமான்னு பார்த்து அன்றைய திட்டங்கள்ள எழுதிப்பேன். 

"சில விஷயங்களை வேண்டாம்னு பின்னால கைவிடலாம். சில விஷயங்களை செய்ய முடியாம போகலாம். ஆனா முக்கியமான பல விஷயங்களை செஞ்சு முடிக்க முடியும். செஞ்சு முடிச்சதையெல்லாம் அடிச்சுடுவேன். 

"தினமும் இந்த நோட்டுப் புத்தகத்தைப் பாக்கறப்ப இவ்வளவு விஷயங்களை செஞ்சிருக்கமேன்னு நினைச்சு சந்தோஷமாகவும் உற்சாகமாவும் இருக்கும். இன்னும் பல விஷயங்களைச் செய்யவும் உந்துதலா இருக்கும். வாழ்க்கையில என்னால பல விஷயங்களை சாதிக்க முடிஞ்சதுக்கு நான் இந்த முறையைப் பின்பற்றினது ஒரு முக்கியக் காரணம்னு நினைக்கறேன். நீயும் இதை முயற்சி செஞ்சு பாக்கலாமே!" என்றார் கோவிந்தராஜன்

"நிச்சயமா சார்!" என்றான் சபாபதி உற்சாகத்துடன்.

"அப்ப, நான் சீக்கிரமே வேற உதவியாளரைத் தேட வேண்டி இருக்கும்னு சொல்லு!" 

"ஏன் சார்?" என்றான் சபாபதி அதிர்ச்சியுடன்.

"இது மாதிரி செய்ய ஆரம்பிச்சா கொஞ்ச காலத்திலேயே நீ முன்னேறி மேல போயிடுவியே! அப்ப நான் புதுசா வேற ஒத்தரைத்தானே உதவியாளரா வச்சுக்கணும்?" என்றார் கோவிந்தராஜன் சிரித்தபடியே.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 540:
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.

பொருள்:
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

Sunday, January 2, 2022

539. கதையும் காரணமும்

"சார்! முராட் நாட்டைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!" என்றார் தேர்தல் ஆலோசகர் பூஷன்.

"தெரியும். சிறிய நாடு என்றாலும் ஜனநாயக முறையைப் பின்பற்றும் நாடு. இங்கே நாடாளுமன்ற முறை என்றால் அங்கே அதிபர் முறை. ஏன் கேட்கிறீர்கள்?" என்றார் பிரதமர் காளிசரண்.

"சில வருடங்களுக்கு முன்பு அங்கே காட்ஸே என்று ஒருவர் அதிபராக இருந்தார்,"

"பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போது சர்வதேச அரசியலில் நான் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. சொல்லுங்கள்!"

"காட்ஸே மிகப் பெரும் மக்கள் ஆதரவுடன் தேர்தலில் வென்று அதிபர் ஆனார். அவருக்குக் கிடைத்த பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம் அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகள். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை வெளிக் கொணர்ந்து அதை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவேன், எல்லா நிலைகளிலும் ஊழலை ஒழிப்பேன், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன், வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்பேன் என்றெல்லாம் அவர் அளித்த வாக்குறுதிகள் மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆனால் பதவிக்கு வந்ததும் அவர் பதவி சுகத்தை அனுபவிப்பதில்தான் அதிகம் ஆர்வம் காட்டினார். உலகம் முழுக்கச் சுற்றி வந்தார்."

"நம் நாட்டுக்கு அவர் வந்தது எனக்கு நினைவுக்கு இருக்கிறது."

"ஆமாம். பதவியில் இருக்கும்போதே உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் சென்று வர வேண்டும் என்பது போல் இருந்தன அவருடைய பயணங்கள். ஏராளமான செலவில் தனக்கென்று ஒரு தனி விமானம் வாங்கினார். விலை உயர்ந்த உடைகளை வாங்கி உடுத்திக் கொண்டார்..."

"அது சரி. அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா இல்லையா?" என்றார் காளிசரண் குறுக்கிட்டு.

"அதற்குத்தான் வருகிறேன். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதுடன் தன் வாக்குறுதிகளுக்கு விரோதமாகச் செயல்பட்டார்."

"எப்படி?"

"பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைகளை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக அவர் எடுத்த சில நடவடிக்கைகளால் பொருளாதரம் வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக அவர் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக கோடிக்கணக்கானோர் வேலை இழந்தனர்.  அவருக்கு நெருக்கமான சில தொழிலதிபர்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்து வந்தனர்.  வெளிப்படையான நிர்வாகம் என்று அவர் அறிவித்ததற்கு மாறாக, கேள்வி கேட்டவர்கள் அனைவரையும் தேசநலனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் என்று குற்றம் சாட்டி அவர்கள் மீது கடுமையான சட்டங்களைப் பயன்படுத்திச் சிறையில் அடைத்தார். இதனால் பெரும்பாலானோர் பணிந்தனர். பணியாத சிலர் சிறைகளில் வாடினர்."

"இப்படியெல்லாம் செய்தால் மக்களிடையே அதிருப்தி ஏற்படாதா?" என்றார் பிரதமர் காளிசரண்.

"காட்ஸே அடிக்கடி ஒன்று சொல்லுவார். என் கண்ணுக்கு எட்டியவரை எனக்கு எதிரிகளே இல்லை. மக்கள் என் பின்னால் இருக்கிறார்கள்' என்று! எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருந்ததால் அவர் கூறியது உண்மை என்பதுபோல்தான் தோன்றியது. அடுத்த தேர்தலில் முன்பு பெற்ற வெற்றியை விடப் பெரிய வெற்றியைப் பெறுவார் என்று அவருக்கு அடிபணிந்து நடந்த ஊடகங்கள் கூறி வந்தன. அவரை எதிர்த்தவர்கள் கூட அவர் மீண்டும் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்து மனச்சோர்வுடன் இருந்தனர். ஆனால் யாரும் எதிரிபாராத விதமாக அடுத்த தேர்தலில் அவர் தோற்று விட்டார்."

"எப்படி?" என்றார் காளிசரண் வியப்புடன்.

"அவரை எதிர்த்துப் போட்டியிடக் கூடிய வலிமை பெற்ற தலைவர் யாருமே இல்லை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, அரசியலுக்குப் புதிதாக வந்த ஒரு இளைஞர் அவரை எதிர்த்துப் போட்டி இட்டார். பலம் இல்லாமல் இருந்த எல்லா எதிர்க்கட்சிகளும் வேறு வழி இல்லாமல் அந்த இளைஞரை ஆதரிப்பதாஈக அறிவித்தன. ஆனால் அந்த இளைஞர் வெற்றி பெறுவார் என்று யாரும் நினைக்கவில்லை. ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டதும் எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி. அந்த இளைஞர் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் காட்ஸேயை வீழ்த்தி இருந்தார்!"

"ஓ, இப்போது ஞாபகம் வருகிறது. அவர் பெயர் காருண்தானே? அவர் ஆட்சி சிறப்பாக இருந்தது என்று படித்திருக்கிறேன். ஆனால் இது எப்படி நடந்தது?"

"வெற்றியின் மமதையால் தன் கடமையைச் செய்யாமல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியமாக இருந்த காட்ஸே மீது மக்களுக்கு இருந்த கோபத்தின் வெளிப்பாடுதான் இது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட மக்களின் கோபத்தைப் புரிந்து கொள்ளாமல் காட்ஸே உருவாக்கிய மாயையில் மயங்கி இருந்தார்கள். ஆனால் காட்ஸேக்கு எதிராக யார் நின்றாலும் அவருக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருந்தார்கள் என்பதுதான் உண்மை" என்று முடித்தார் பூஷன்.

சில விநாடிகள் மௌனமாக இருந்த காளிசரண், "நீங்கள் இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது!" என்றார் இலேசாகச் சிரித்தபடி.

"நான் உங்கள் அரசியல் ஆலோசகன். உங்களுக்குச் சரியான விதத்தில் வழி காட்டி உங்களைத் தொடர்ந்து வெற்றி அடையச் செய்ய வேண்டியது என் பணி. ஆனால் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களைப் புகழ்ந்து கொண்டு, உங்கள் எதிரிகள் பலம் இழந்து விட்டதாகச் சொல்லி உங்களை மயக்கத்தில் ஆழ்த்தும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகி விட்டது. உங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை நீங்கள் இன்னும் எடுக்கவில்லை. நீங்கள் விரைந்து செயல்பட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியை உடனே துவங்க வேண்டும். மக்களுக்கான உங்கள் கடமைகளைச் செய்தால்தான் அரசியலில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற முடியும்" என்றபடியே பிரதமரின் முகத்தைப் பார்த்தார் பூஷன்.

காளிசரண் மௌனமாகத் தலையை ஆட்டினார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 539:
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

பொருள்:
மமதையால் பூரித்துப் போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்து போய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்..
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...