அதிகாரம் 96 - குடிமை

திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை

951. அரசரின் தேர்வு

"அரசே! காவல் துறைத் தலைவராக நியமிக்க இரண்டு பேரை நான் தேர்வு செய்திருக்கிறேன். இருவரில் ஒருவரைத் தாங்கள் நியமிக்க வேண்டும்" என்றார் அமைச்சர்.

"இருவர் பற்றிய விவரங்களை என்னிடம் கொடுங்கள். நான் பார்த்து விட்டுச் சொல்கிறேன்" என்றார் அரசர்.

"அவர்களைத் தாங்கள் நேரில் பார்த்து விசாரிக்க வேண்டாமா?"

"தேவைப்பட்டால் பார்க்கிறேன்" என்றார் அரசர்.

ரு வாரம் கழித்து, அரசர் அமைச்சரிடம், "நீங்கள் தேர்ந்தெடுத்த இருவரில், சந்திரசூடனையே காவல் துறைத் தலைவராக நிமித்து விடுங்கள்" என்றார் அரசர்.

"சரி, அரசே! ஆனால், தாங்கள் அவர்கள் இருவரையும் நேரில் பார்கவில்லையே?" என்றார் அமைச்சர்.

"அவசியமில்லை. நீங்கள் பார்த்து விசாரித்திருப்பீர்களே! நீங்கள் தேர்ந்தெடுத்த இருவருமே இந்தப் பதவிக்குத் தகுதி உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை!"

"தாங்கள் எந்த அடிப்படையில் இந்த இரண்டு பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா?"

"நீங்கள் கொடுத்த விவரங்களை ஒற்றர்படைத் தலைவரிடம் கொடுத்து, இருவரின் குடும்பப் பின்னணி பற்றி விசாரிக்கச் சொன்னேன். சந்திரசூடன் நல்ல குடும்பத்தில் பிறந்தவர். மற்றொருவரின் தந்தை நேர்மையானவர் அல்ல என்று தெரிந்தது. அதனால்தான் சந்திரசூடனைத் தேர்ந்தெடுத்தேன்."

"மன்னிக்க வேண்டும் அரசே! நான் இருவரையும் தேர்வு செய்தது அவர்கள் கல்வி, அறிவு, அனுபவம், கடந்தகாலச் செயல்பாடு இவற்றை வைத்துத்தான். அவர்கள் எந்தக் குடியில் பிறந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டுமா?" என்றார் அமைச்சர்.

"நிச்சயமாக அமைச்சரே! காவல் துறைத் தலைவராக இருப்பவர் நேர்மையானவராக, நடுநிலையுடன் செயல்படுபவராக இருக்க வேண்டும். இந்த குணம் பலரிடமும் இருக்கும். ஆனால், இன்னொரு முக்கியமான குணமும் அவருக்கு வேண்டும். அது தவறு செய்தால் அதற்காக வெட்கப்படுதல். இந்த குணம் இருப்பவர்கள்தான் தவறு செய்யாமல் இருப்பார்கள். ஒருவேளை தவறு செய்தாலும், அதற்காக வெட்கப்பட்டு, மீண்டும் அத்தகைய தவறைச் செய்யாமல் இருப்பார்கள். இந்த குணம் நல்ல குடியில் பிறந்தவர்களிடம் மட்டுமே இருக்கும் என்பது என் கருத்து. ஏன், நீங்களே அத்தகைய குடிப்பெருமை உள்ளவராக இருப்பதால்தான் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள்!" என்றார் அரசர், சிரித்துக் கொண்டே.

குறள் 951:
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.

பொருள்: 
நடுவு நிலைமையும், நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

952. பத்தாயிரம் ரூபாய்!

ரமேஷ் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்கள்தான் ஆகி இருந்தன. 

அந்த நிறுவனத்துக்கான ஒரு பணிக்காக ஒப்பந்தக்காரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 

வரும் விண்ணப்பங்களை ஒரு பதிவேட்டில் குறித்துக் கொண்டு, அவற்றை ஒரு பெட்டியில் போட்டு வைக்க வேண்டியது அவன் வேலை. 

விண்ணப்பங்களுக்கான கடைசி நாள் முடிந்ததும், அதிகாரிகள் அவற்றைப் பிரித்துப் பார்த்து, எந்த நிறுவனம் குறைவான தொகையைக் குறிப்பிட்டிருக்கிறதோ, அந்த நிறுவனத்துக்கு அந்தப் பணியைக் கொடுப்பார்கள்.

அது ஒரு தனியார் நிறுவனம் என்பதால், விண்ணப்பங்கள் வைக்கப்படும் கவர்களில் அரக்கு வைத்து சீல் செய்யும் வழக்கம் இல்லை. ஒட்டப்பட்ட கவர்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்.

அன்றுதான் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள். 

ஒரு நிறுவனத்திலிருந்து ஒரு விண்ணப்பம் அடங்கிய கவருடன் ஒருவர் வந்தார். அதை ரமேஷிடம் கொடுத்து விட்டு, "நீங்க இங்கே புதுசா வேலைக்கு வந்திருக்கீங்களா?" என்றார்.

"ஆமாம்" என்றான் ரமேஷ்.

"இதுக்கு முன்னால இங்கே இருந்த கார்த்திக்கை எனக்குத் தெரியும்."

"அவர் வேலையை விட்டுப் போயிட்டாரு."

"எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?" என்றார் அவர்.

"சொல்லுங்க!"

"நான் கொடுத்த கவரைக் கொஞ்சம் கொடுக்கிறீங்களா?"

ரமேஷ் தயக்கத்துடன் அவர் கொடுத்த கவரை அவரிடம் கொடுத்தான்.

தன் பையிலிருந்த ஒரு டியூபை எடுத்து அதை கவர் ஒட்டப்பட்டிருந்த இடத்தில் பிதுக்கினார் அவர்.

டியூபிலிருந்து மெலிதாக ஒரு திரவம் வெளி வந்து ஒட்டிய கவரைத் திறந்து கொள்ள வைத்தது. உடனே அந்த திரவம் ஆவியாகிச் சுவடில்லாமல் மறைந்து விட்டது.

"பாத்தீங்களா? பிரிச்சதே தெரியல" என்றார் அவர்.

ரமேஷ் மௌனமாகத் தலையசைத்தான்.

"சஞ்சய் என்டர்பிரைசஸ்தான் குறைவா கோட் பண்ணி இருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். நான் மத்தியானம் லஞ்ச் டைம்ல இங்கே வரேன். அப்ப ஆஃபீஸ்ல யாரும் இருக்க மாட்டாங்க. அப்ப நீங்க சஞ்சய் என்டர்பிரைசஸ் கவரை எடுத்துக் கொடுத்தீங்கன்னா, அதை இதே மாதிரி பிரிச்சு, அவங்க எவ்வளவு கோட் பண்ணி இருக்காங்கன்னு பாத்துட்டு, திரும்பவும் சரியா ஒட்டிக் கொடுத்துடுவேன். அப்புறம், அதை விடக் குறைச்சலா கோட் பண்ணிக் கொண்டு வந்து விண்ணப்பம் கொடுப்பேன். இப்ப நான் கொண்டு வந்தது உங்களுக்கு இதை செஞ்சு காட்டத்தான்" என்றார் அவர்.

"அப்படியெல்லாம் செய்ய முடியாது சார்!" என்றான் ரமேஷ்.

"உங்ளுக்குப் பத்தாயிரம் ரூபா கொடுத்துடுறேன். இதில எந்த ரிஸ்க்கும் இல்லை. உங்களுக்கு முன்னால இந்த சீட்ல இருந்த கார்த்திக் எனக்கு இது மாதிரி நிறைய தடவை செஞ்சு கொடுத்திருக்கார்!"

ரமேஷ் சற்று யோசிப்பது போல் தோன்றவே, "நான் சரியா ஒண்ணு இருபதுக்கு வரேன். அப்பதான் ஆஃபீஸ் காலியா இருக்கும்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் அவர்.

'அவர் சொன்னபடி செய்தால் என்ன? இதில் எந்த ரிஸ்க்கும் இல்லையே! குறைவான ஒப்பந்தத் தொகையை விட இன்னும் குறைவாக இவர் கோட் செய்தால், அது  நிறுவனத்துக்கு லாபம்தானே! பத்தாயிரம் ரூபாய் சுளையாகக் கிடைத்தால் குடும்பத்துக்கு உதவுமே!' என்ற சிந்தனை ரமேஷின் மனிதில் ஒரு கணம் தோன்றியது.

உடனே அவன் அப்பாவின் முகம் மனதில் வந்தது. அவர் இப்போது உயிருடன் இல்லை. அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய நேர்மைக்காக மதிக்கப்பட்டவர். நேர்மைதான் நம் குடும்பச் சொத்து என்று அவர் அடிக்கடி சொல்வாரே!

'அவருக்கு மகனாகப் பிறந்து விட்டு, இப்படி ஒரு செயலைச் செய்யலாமா? இந்தச் சபலம் எனக்கு ஏன் தோன்றியது? ஒருவேளை மாட்டிக் கொண்டால், நம் குடும்பத்துக்கு எத்தகைய அவமானம்! மாட்டிக் கொள்ள மாட்டேன் என்றாலும் இப்படிச் செய்வது தவறுதானே?'

அவன் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.

மேஷ் தான் சொன்னபடி செய்யத் தயாராக இருப்பான் என்ற நம்பிக்கையுடன் உணவு இடைவேளையின்போது வந்த அந்த மனிதர், ரமேஷின் பிடிவாதமான மனப்போக்கைக் கண்டு ஏமாற்றம் அடைந்தார்.

குறள் 952:
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

பொருள்: 
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலக மாட்டார்.

953. மணமகன் தேவை!

சண்முகநாதன் தன் மகளுக்கு ஒரு நல்ல கணவனைத் தேடிக் கொண்டிருந்தார். எத்தனையோ வரன்கள் வந்தன. ஆனால் எதுவுமே அவருக்குத் திருப்தியாக அமையவில்லை.

சண்முகநாதனைப் பார்க்க அவருடைய அலுவலகத்துக்கு வந்த அவருடைய நண்பர் வேலாயுதம், "என்ன சண்முகநாதா, உன் மாப்பிள்ளை மன்மதன் மாதிரி அழகா இருக்கணும்னு பாக்கறியா?" என்றார் கேலியாக.

"நான் பாக்கறது குணத்தைத்தான்!" என்றார் சண்முகநாதன்.

"ஒத்தரோட குணம் எப்படி இருக்கும்னு எப்படி மதிப்பீடு செய்யறது?" என்றார் வேலாயுதம்.

"அதுதான் கஷ்டமா இருக்கு. நல்ல குடும்பத்தில பொறந்தவனா இருக்கானான்னுதான் பாக்கறேன்" என்றார் சண்முகநாதன்.

அப்போது ஒரு இளைஞன் தயங்கிக் கொண்டே, சண்முகநாதனின் அறைக்குள் வந்தான்.

"வா முரளி!" என்றார் சண்முகநாதன்.

அலுவலக விஷயமாக ஒரு சந்தேகத்தை சண்முகநாதனிடம் கேட்டுத் தெளிந்து கொண்டு விட்டு ,அறையை விட்டு வெளியேறினான் முரளி.

"இந்தப் பையன் உன் கம்பெனியில வேலை செய்யறானா?" என்றார் வேலாயுதம்.

"ஆமாம். ஏன் இவனை உனக்குத் தெரியுமா?"

"ஒரு அனாதை இல்லத்தில நடந்த ஒரு நிகழ்ச்சியில இவனைப் பார்த்தேன். இவன் வாலன்ட்டியரா இருந்தான் போல இருக்கு. அந்த நிகழ்ச்சிக்கு வந்த முக்கியமானவங்களை வரவேற்கறது, பார்வையாளர்களுக்கு வழிகாட்டி சரியா உட்கார வைக்கறதுன்னு ரொம்ப சுறுசுறுப்பா இருந்தான். அங்கே நாலைஞ்சு வாலன்ட்டியர்கள் இருந்தாங்க. இவனை நான் கவனிச்சதுக்குக் காரணம் இவன் சிரிச்ச முகத்தோட, கோபப்படமா பொறுமையா இருந்தான். குழந்தைகள்கிட்டேயும் அப்பப்ப சிரிச்சுப் பேசி அவங்களை உற்சாகப்படுத்திக்கிட்டிருந்தான். மற்ற வாலன்ட்டியர்கள் சில சமயம் கோபமா, சிடுமூஞ்சியா, எரிஞ்சு விழுந்தாங்க. இவன் வித்தியாசமா இருந்ததாலதான் இவனை கவனிச்சேன்!"

"ஓ, அப்படியா? ஏதோ ஒரு அனாதை இல்லத்துக்குத் தொடர்ந்து நன்கொடை கொடுத்துக்கிட்டிருக்கானு தெரியும். ஆனா, வாலன்ட்டியரா இருந்ததெல்லாம் தெரியாது" என்ற சண்முகநாதன், யோசனை செய்வது போல் தோற்றமளித்தார்.

"என்ன யோசனை?" என்றார் வேலாயுதம்.

"என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்துக்கிட்டிருக்கேன் இல்ல? கையில வெண்ணெயை வச்சுக்கிட்டு நெய்க்கு அலையற மாதிரின்னு சொல்லுவாங்க. எங்கிட்ட வேலை செய்யறாங்கறதால இவனைப் பத்தி நான் யோசிக்கல. நான் எதிர்பாக்கற நல்ல குணங்கள் எல்லாம் இவன்கிட்ட இருக்கே!"

"பையனோட குடும்பப் பின்னணியையெல்லாம் பாப்பியே?"

"சிரிச்ச முகம், இனிமையாப் பேசறது, கொடை குணம், மத்தவங்களை இகழ்ந்து பேசாத குணம் இதெல்லாம் இருக்குன்னா, அவன் நல்ல குடும்பத்திலதான் பிறந்திருக்கணும். அவன்கிட்ட பேசிப் பாக்கறேன். அவனுக்கும் என் பெண்ணுக்கும் ஒத்தரை ஒத்தர் புடிச்சிருந்தா, கல்யாணத்தை முடிச்சுட வேண்டியதுதான்!" என்றார் சண்முகநாதன், உற்சாகத்துடன்.

குறள் 953:
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

பொருள்: 
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பர்.

954. நாங்கள் அப்படித்தான்!

"இந்த வேலை ரொம்ப சுலபம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகணும், அவ்வளவுதான்" என்றான் சக ஊழியன் குமார்.

"அட்ஜஸ்ட் பண்றதுன்னா?" என்றான் முருகேசன். சில நாட்கள் முன்புதான், அவன் அந்த அரசுத் துறையில் வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

"இங்கே பல ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிப்பாங்க. விதிமுறைப்படிப் பார்த்தா, ஒரு குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்குத்தான் வேலை கொடுக்கும்படியா இருக்கும். ஆனா, மேலதிகாரிகள் வேற ஒரு ஒப்பந்ததாரருக்கு வேலை கொடுக்கணும்னு விரும்புவாங்க."

"அவங்க ஏன் அப்படி விரும்பணும்?"

"அப்பாவியா இருக்கியே!" என்று சிரித்த குமார், பணத்தை எண்ணுவது போல் விரல்களைக் கசக்கிக் காட்டி விட்டு, "விதிமுறைகளைப் பத்திக் கவலைப்படாம,  மேலதிகாரிகளோட விருப்பப்படி நாம பேப்பர் தயார் பண்ணணும்!" என்றான்.

பிறகு முருகேசனிடம் குனிந்து, "எப்படியும் சராசரியா, ஒரு மாசத்தில நம்ம சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு கூடுதல் வருமானம் நமக்குக் கிடைக்கும்!" என்றான்.

முருகேசன் மௌனமாக இருந்தான். அவன் தந்தை அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் அவனுக்கு நினைவு வந்தது.

"திருமாலடியார்னு ஒரு புலவர் இருந்தாரு. அவரு திருமால் மேல நிறைய பாடல்களை எழுதி இருக்காரு. அவரோட பாடல்களைக் கேட்டுட்டு, அந்த நாட்டு அரசர் அவரைத் தன்னோட அவைப் புலவரா நியமிக்கறதா சொன்னார். அவைப் புலவர்னா, அரசரைப் புகழ்ந்து பாடல்கள் எழுதணும். நிறைய பொற்காசுகள் கிடைக்கும். ஆனா, அவர் மாட்டேன்னுட்டாரு. 'திருமாலை மட்டும்தான் பாடறதுன்னு விரதம் எடுத்துக்கிட்டிருக்கேன், அதனால மனுஷங்ளைப் பாட முடியாது'ன்னு சொல்லிட்டாரு. உண்மையில, அவர் பணத்துக்காக மன்னரைப் புகழ்ந்து பாட விரும்பல. அவரோட பரம்பரையில வந்தவங்க நாம்."

தன் பரம்பரைப் பெருமையை நிலைநாட்டும் விதத்தில், குமாரின் தந்தையும் ஒரு நேர்மையான மனிதராகத்தான் வாழ்ந்து வந்தார்.

"என்னப்பா, நான் அவ்வளவு தூரம் சொன்னேன்! அப்படியும் விதிப்படிதான் நடப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறியாமே! நம்ம அதிகாரி எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாரு. உனக்கு புத்தி சொல்லச் சொன்னாரு. உனக்கு இதில எந்த பிரச்னையும் இல்லை. அதிகமா சம்பாதிக்க சுலபமான வழி இருந்தும், ஏன் அதைப் பயன்படுத்திக்க மாட்டேங்கற?" என்றான் குமார்.

'நாங்க அப்படித்தான்!' என்று சொல்ல நினைத்த குமார், "நான் அப்படித்தான்!" என்றான் சுருக்கமாக.

குறள் 954:
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.

பொருள்: 
கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற முடியும் என்றாலும், நல்ல குடும்பத்தில் பிறந்தவர், தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்ய மாட்டார்.

955. பற்றாக்குறை பட்ஜெட்!

"இந்த மாச பட்ஜெட்ல ஆயிரம் ரூபா துண்டு விழுதே, என்ன செய்யப் போறீங்க?" என்றாள் மீனா.

"ஒவ்வொரு மாசமும் நடக்கறதுதானே இது? சமாளிச்சுக்கலாம்!" என்றான் ஶ்ரீகாந்த், சிரித்துக் கொண்டே.

"நீ சிரிக்கற! எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு. எப்படிப்பட்ட பரம்பரை நம்மோடது! உங்க தாத்தா காலத்தில, வெளியூர்க்காரங்க, உள்ளூர்காரங்கன்னு தினமும் பத்து பேர் நம்ம வீட்டில வந்து சாப்பிட்டுட்டுப் போவாங்க. கல்யாணமாகி வந்த புதுசில, நானே பாத்திருக்கேன். உங்க தாத்தா காலத்திலேயே சொத்தெல்லாம் கரைய ஆரம்பிச்சு, உங்க அப்பா காலத்திலேயே ஒண்ணுமில்லாம ஆயிடுச்சு. அப்படியும், உங்கப்பாகிட்ட யாராவது உதவி கேட்டா, சட்டைப் பையில இருக்கற காசை எடுத்துக் கொடுத்துடுவாரு. அப்ப, நாலணா எட்டணாவுக்கெல்லாம் கூட நிறைய மதிப்பு இருந்ததே! இப்ப, நீ சம்பாதிக்கற பணம் போதாம, மாசாமாசம் பற்றாக்குறை பட்ஜெட் போடற நிலைமைக்கு வந்துடுச்சு!" என்றாள் ஶ்ரீகாந்த்தின் தாய் கல்யாணி.

"பழசைப் பேசி, இப்ப என்னம்மா பிரயோசனம்?" என்றான் ஶ்ரீகாந்த்.

அப்போது அழைப்பு மணி அடிக்கவே, கதவைத் திறந்து பார்த்தான் ஶ்ரீகாந்த். அங்கே ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். 

கல்யாணியும், மீனாவும் உள்ளே சென்று விட்டனர்.

சற்று நேரம் கழித்து, முன்னறைக்கு வந்த மீனா, "வந்தது யாருங்க?" என்றாள் ஶ்ரீகாந்த்திடம்.

"காலேஜில படிக்கற பையன். வசதி இல்லாதவன் போல இருக்கு. காலேஜ் ஃபீஸ் கட்டப் பணம் இல்லை, உதவி செய்யுங்கன்னு கேட்டான். அவனோட ஐ டி, காலேஜிலேந்து வந்திருந்த ஃபீஸ் டிமாண்ட் நோட்டீஸ் எல்லாம் வச்சிருந்தான். ஜெனுவைன் கேஸ்தான்!" என்றான் ஶ்ரீகாந்த்.

"என்ன செஞ்சீங்க?" என்றாள் மீனா.

"ஐநூறு ரூபா கொடுத்தேன். நம்மால முடிஞ்சது அவ்வளவுதானே?"

"நாமே கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கோம். இப்பதான், பட்ஜெட்ல ஆயிரம் ரூபாய் துண்டு விழுதுன்னு பேசிக்கிட்டிருந்தோம். இது அவசியம்தானா?" என்றாள் மீனா, சற்றுக் கோபத்துடன்.

"ஆயிரத்தைந்நூறு ரூபாய் துண்டு விழுதுன்னு வச்சுக்க வேண்டியதுதான்!" என்றான் ஶ்ரீகாந்த், சிரித்துக் கொண்டே.

"உதவி செய்யணும்னு நினைச்சா, ஒரு நூறு ரூபாய் கொடுத்து அனுப்பி இருக்கலாமே?" என்றாள் மீனா, கோபம் குறையாமல்.

"அவன் கட்ட வேண்டிய ஃபீஸ்ல, நாம கொடுத்த ஐநூறு ரூபாயே ஒரு சின்னப் பகுதிதான். மீதிப் பணம் அவனுக்குக் கிடைக்கணுமேன்னு, நான் கவலைப்பட்டுக்கிட்டிருக்கேன்!"

"என்னவோ போங்க!" என்றபடியே, உள்ளே போகத் திரும்பினாள் மீனா.

அப்போது, உள்ளிருந்து முன்னறைக்கு வந்த கல்யாணி, "அவனால கொடுக்காம இருக்க முடியாது. அவன் உடம்பில ஓடற ரத்தம் அப்படி!" என்றாள் பெருமையும், வருத்தமும் கலந்த குரலில்.

குறள் 955:
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.

பொருள்: 
பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள், வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.

956. அழகிரியின் நம்பிக்கை

"நம்ம கம்பெனியைப் பத்தின சில முக்கியமான தகவல்கள். நம்ம போட்டி கம்பெனியான கணேஷ் என்டர்பிரைசஸுக்குப் போகுதுன்னு நான் சந்தேகப்படறேன்!" என்றார் நிர்வாக அதிகாரி அழகிரி.
"எப்படி சார் சொல்றீங்க?" என்றார் கண்காணிப்பு அதிகாரி கிருபாகரன்.

"நாம செய்யப் போற சில விஷயங்கள் அவங்களுக்கு முன்னாலேயே தெரிஞ்சு, அவங்க நமக்கு முன்னாலேயே அதைச் செஞ்சுடறாங்க. இது மாதிரி ரெண்டு மூணு தடவை நடந்திருக்கு. அதனால, இது தற்செயலானதா இருக்க முடியாது."

"சரி சார். நான் பாக்கறேன்" 

"சார்! நீங்க சந்தேகப்பட்டது சரிதான். நம்ம ஊழியர்கள்ள ஒத்தன்தான் சில முக்கியமான விவரங்களை ஈமெயில் மூலமா நம்ம போட்டி நிறுவனத்துக்கு அனுப்பறான். அது யாருன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன்" என்றார் கிருபாகரன்.

"யாரு?" என்றார் அழகிரி.

"நடேசன்தான்!"

"நடேசனா? அவன் ரொம்ப நல்ல பையனாச்சே! அவன் குடும்பத்தைப் பத்தி எனக்குத் தெரியுமே!" என்றார் அழகிரி, வியப்புடன்.

"யாரையுமே நம்ப முடியாது சார். ஒத்தர் தப்பு செய்வார், செய்ய மாட்டார்னெல்லாம் சொல்லவே முடியாது. ஒரு விஜிலன்ஸ் ஆஃபீசரா என்னோட அனுபவம் இது."

"அவன்தான் செஞ்சான்கறதுக்கு ஆதாரம் இருக்கா?"

"இருக்கு சார். அவனோட பர்சனல் ஈமெயில் ஐடியிலேந்துதான் தகவல்கள் போயிருக்கு."

அழகிரி கண்ணை மூடிக் கொண்டு யோசனை செய்தார்.

"என்ன சார் யோசிக்கிறீங்க? போலீஸ்ல புகார் கொடுக்கலாமா, நாமே டீல் பண்ணிடலாமான்னா?" என்றார் கிருபாரன்.

"அதுக்கு முன்னால ஒரு வேலை இருக்கு. ரெண்டு மூணு நாள் வெயிட் பண்ணுங்க. இது விஷயமா எதுவும் செய்யாதீங்க. யார்கிட்டேயும் பேசாதீங்க!" என்றார் அழகிரி.

நான்கைந்து நாட்கள் கழித்து. கிருபாகரனைத் தன் அறைக்கு அழைத்த அழகிரி, "கிருபாகரன்! கணேஷ் என்டர்பிரைசஸுக்குத் தகவல் அனுப்பினது நடேசன் இல்ல, தனராஜ்" என்றார்.

"எப்படி சார்? நடேசனோட ஈமெயில் ஐடியிலேந்துதானே தகவல் போயிருக்கு? நான் செக் பண்ணினேனே!" என்றார் கிருபாகரன்.

"நீங்க செக் பண்ணினது சரிதான். ஆனா நடசனோட ஈமெயிலை தனராஜ் ஹேக் பண்ணி, அதுலேந்து தகவல்களை அனுப்பி இருக்கான்."

"எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?"

"நான் கண்டுபிடிக்கல. சைபர் கிரைம்ஸை இன்வெஸ்டிகேட் பண்ற என்னோட நண்பன் ஒத்தன்கிட்ட சொல்லி, இதை செக் பண்ணச் சொன்னேன். அவன் கண்டுபிடிச்சுச் சொன்னதுதான் இது. உங்க மேல தப்பு இல்ல. சைபர் கிரைம்ஸைக் கண்டுபிடிக்கத் தனி நிபுணத்துவம் வேணும் இல்லையா?"

"நடேசன் செஞ்சிருக்க மாட்டான்னு அன்னிக்கே சொன்னீங்களே? அது எப்படி சார்? வெறும் நம்பிக்கையா, இல்லை, இன்டியூஷனா?"

அழகிரி பெரிதாகச் சிரித்து விட்டு, "எனக்கு இன்டியூஷன் எல்லாம் கிடையாது. கிருபாகன். மனித இயல்புகளைப் பத்தின சில நம்பிக்கைகள் மட்டும் உண்டு. நடேசனோட குடும்பத்தைப் பத்தி எனக்குத் தெரியும். அவன் அப்பா, தாத்தா எல்லாருமே ரொம்ப நேர்மையானவங்க. பணத்துக்காகத் தப்பான காரியங்களைச் செய்ய மாட்டாங்க. நடேசனும் அதே கொள்கையோடதான் வாழ்ந்துக்கிட்டிருக்கற மாதிரி எனக்குத் தோணிச்சு. பணம் கொடுத்தா அரசாங்க வேலை கிடைக்கும்ங்கற வாய்ப்பு அவனுக்கு வந்தப்ப, அதை வேண்டாம்னு ஒதுக்கிட்டான் அவன். தன் குடும்பப் பண்புப்படி நேர்மையா வாழணும்னு நினைக்கிறவன், இப்படிப்பட்ட காரியங்கள்ள ஈடுபட மாட்டான்னு நினைச்சுதான், நீங்க சொன்னதை உறுதிப்படுத்திக்கறதுக்காக, என் நண்பன்கிட்ட சொல்லி இதை செக் பண்ணச் சொன்னேன். என்னோட நம்பிக்கை தப்பாகல!" என்றார் பெருமையுடன்.

குறள் 956:
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.

பொருள்: 
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனை கொண்டு, தகுதியில்லாதவற்றைச் செய்ய மாட்டார்.

957. கருணாகரனுக்கு வந்த சோதனை!

கருணாகரன் தன் தூரத்து உறவினர் ஒருவரை சமீபத்தில் சந்தித்தபோது. "கேள்விப்பட்டேனே, உண்மையா?" என்றார் அவர், கருணாகரனிடம்.

கருணாகரன் பதில் கூறவில்லை.

கடந்த சில நாட்களாகவே, அவனுக்குத் தெரிந்தவர்கள் பலரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர், அல்லது, இது போன்ற கேள்விகளைக் கேட்டனர்.

அதற்குக் காரணம், சில நாட்கள் முன்பு நடந்த ஒரு சம்பவம்.

ஒருநாள் கருணாகரன் காரில் சென்று கொண்டிருந்தபோது, வழியில் காவல் துறையினர் அவன் காரை நிறுத்தி ஆவணங்களைச் சோதித்தனர். அப்போது அவனிடம் மது அருந்தி இருந்ததற்கான சோதனையைச் செய்தபோது, அவன் மது அருந்தி இருப்பதாகக் கண்டறிந்தனர்.

அப்போது, கருணாகரன் காவல்துறையினரிடம் வாதத்தில் ஈடுபட்டதுடன், ஒரு அதிகாரியை அடிக்கக் கையை ஓங்கி விட்டான்.

அதனால், மதுபோதையில் காரோட்டியது, காவலரைத் தாக்கியது ஆகிய குற்றங்களுக்காகக் காவலர்கள் கருணாகரனைக் கைது செய்து விட்டனர்.

அடுத்த நாள், கருணாகரனின் வக்கீல் வந்து, காவல் அதிகாரிகளிடம் பேசி, அவர்களைச் சமாதானப்படுத்திய பிறகு, அவர்கள்  அவன் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், அவனை எச்சரித்து வெளியே விட்டு விட்டனர்.

ஆயினும், கருணாகரன் ஒரு இரவு சிறையில் இருந்த செய்தி வெளியே பரவி விட்டது.

"ஊர்ல எத்தனையோ பேர் குடிச்சுட்டுக் கார் ஓட்டறாங்க. ஏதோ நான் ஒத்தன்தான் இப்படி செஞ்சுட்ட மாதிரி எல்லாரும் பேசறாங்களே!" என்றான் கருணாகரன், தன் நண்பன் அசோகனிடம்.

'உங்கப்பா மதுவிலக்குப் போராட்டம் நடத்தி சிறைக்குப் போனாரு. அவரோட பையனான நீ, மது அருந்திட்டுக் கார் ஓட்டினதுக்காக சிறைக்குப் போயிருக்கேங்கறது பெரிசா, தனியாத் தெரியும்தான்' என்று நினைத்துக் கொண்ட அசோகன், "இனிமே இது மாதிரி பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காம கவனமா நடந்துக்க!" என்றான்.

குறள் 957:
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

பொருள்: 
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால், அது நிலவில் தெரியும் களங்கம் போல், பெரிதாகத் தெரியும்.

958. மார்க்கபந்துவின் சந்தேகம்

சிவகுமார் இண்டஸ்டிரீஸில் ஒரு முக்கியப் பதவியிலிருந்த கங்காதரன், வேறு வேலே தேடி ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்தை அணுகியபோது, "சிவகுமார் இண்டஸ்டிரீஸ் நல்லாப் போய்க்கிட்டிருக்கே! ஏன் அங்கேந்து விலக விரும்பறீங்க?" என்று கேட்டார், வேலை வாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மார்க்கபந்து.

"கம்பெனி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. ஆனா, அங்கே சூழ்நிலை சரியில்லை" என்றார் கங்காதரன், சுருக்கமாக.

"நான் கேள்விப்பட்டேன். உறுதிப்படுத்திக்கத்தான், உங்களைக் கேட்டேன். சிவகுமார் ரொம்பக் கடுமையா நடந்துக்கறாரு, மனிதாபிமானம் இல்லாம இருக்காருன்னு சில பேர் சொல்லக் கேட்டிருக்கேன்"

கங்காதரன் மௌனமாக இருந்தார்.

"சரி. நான் பாக்கறேன். உங்ளை மாதிரி உயர் பதவியில இருக்கறவங்களுக்கு வேற வேலை கிடைச்சுடும். கீழ்நிலையில இருக்கறவங்களுக்குத்தான் கஷ்டம். வெளியில போகவும் முடியாது, அங்கே வேலை செய்யவும் முடியாது" என்றார் மார்க்கபந்து.

"நீங்க சொல்றது சரிதான் சார். கீழ்நிலை ஊழியர்கள் சில பேர் வேற வேலை தேடிக்காமயே,  வெறுத்துப் போய், வேலையை விட்டுட்டுப் போயிட்டாங்க!" என்றார் கங்காதரன்.

கங்காதரன் சென்றதும், மார்க்கபந்துவின் உதவியாளன் முத்து, "சார் சிவகுமாரோட பையன் என் நண்பன்தான். தன் மனைவி, பிள்ளைகள்கிட்டக் கூட அவர் அன்போ, கருணையோ இல்லாம நடந்துக்கறாருன்னு அவன் எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கான். 'என் மேலேயோ, என் அம்மா, தங்கை மேலேயோ கொஞ்சம் கூடப் பாசம் கிடையாது அவருக்கு. தனக்கு என்ன வேணுங்கறதைமட்டும்தான் பார்ப்பாரு.  எங்களையெல்லாம் விரோதிகள் மாதிரிதான் நடத்தறாரு. அவர் கம்பெனியில வேலை செய்யறவங்க, அவர்கிட்ட வேலை செய்யப் பிடிக்காம வேலையை விட்டுப் போயிடறாங்க. நாங்க எங்கே போறது?'ன்னு எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கான் சார்!" என்றான்.

"அடப்பாவமே! அவ்வளவு மோசமான ஆளா அவரு?"

"ஆமாம் சார். இதில என்ன ஆச்சரியம்னா, சிவகுமாரோட பரம்பரை ஊருக்கே உதவின பரம்பரைன்னு இன்னிக்கும் சொல்றாங்க. எல்லார்கிட்டேயும் அன்பு காட்டி உதவி செஞ்சவங்க பரம்பரையில வந்த ஒருத்தர் எப்படி சார் இப்படி இருக்க முடியும்?"

"நீ சொல்றதைப் பார்த்தா. அவர அந்தப் பரம்பரையில பிறந்தவரான்னே சந்தேகப்பட வேண்டி இருக்கு!" என்றார் மார்க்கபந்து.

குறள் 958:
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

பொருள்: 
நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால், அவன் அந்தக் குடியில் பிறந்தவன்தானா என்று இந்த உலகம் சந்தேகப்படும்.

959. குடும்பப் பின்னணி

"ஒத்தரை வேலைக்கு எடுக்கறதுக்கு முன்னால, அவரோட குடும்பப் பின்னணியைத் தெரிஞ்சுக்கறது அவசியம். அதனால, ஒத்தரை இன்டர்வியூவுக்குக் கூப்பிடறதுக்கு முன்னால, அவரோட குடும்பப் பின்னணி பத்தி விசாரிச்சுட்டுத்தான் கூப்பிடணும்" என்றார் நிர்வாக இயக்குனர் வேலாயுதம்.

"குடும்பப் பின்னணி பத்தி அவங்களோட ரெஸ்யூமேவிலேய இருக்குமே சார்?" என்றார் பொது மேலாளர் நந்தகோபால்.

"அது போதாது. அவரோட பெற்றோர்கள் யாரு, எப்படிப்பட்டவங்கன்னு விசாரிக்கணும். முடிஞ்சா, அவங்க பரம்பரை பத்தியும் விசாரிக்கணும்."

"அது எதுக்கு சார்? அதுவும் இந்தக் காலத்தில, பரம்பரை பத்தி எல்லாம் விசாரிக்கறது சரியா இருக்குமா சார்?" என்றார் நந்தகோபால். தயக்கத்துடன்.

"ஒத்தரோட அப்பா, தாத்தா எப்படிப்பட்டவங்க, என்ன செஞ்சாங்க, அவங்களைப் பத்தி மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கறது கஷ்டம் இல்லையே? நம்மால முடியலேன்னா, யாராவது ஏஜன்சி மூலமா இதைச் செய்யலாம்" என்றார் வேலாயுதம்.

அதற்குப் பிறகும், நந்தகோபாலிடம் தயக்கம் இருப்பதை கவனித்த வேலாயுதம், "உங்களை வேலைக்கு எடுக்கறதுக்கு முன்னால, உங்க குடும்பப் பின்னணி பத்தி விசாரிச்சிருக்கேன்!" என்றார், சிரித்தபடி.

"நாம இன்டர்வியூவுக்குக் கூப்பிடறவங்களோட குடும்பப் பின்னணியை விசாரிக்கணும்னு முன்னே எல்லாம் சொல்லுவீங்க. இப்ப ஏன் சார் அதை வேண்டாம்னு சொல்றீங்க?" என்றார் நந்தகோபால். 

"அது அவசியம் இல்லைங்கறதாலதான்!" என்றார் வேலாயுதம்.

"குடும்பப் பின்னணி முக்கியம்ங்கற உங்க கருத்தை மாத்திக்கிட்டீங்களா சார்?"

"மாத்திக்கலை. இன்டர்வியூவில ஒத்தர் பேசறதிலிருந்தே, அவரோட குடும்பப் பின்னணியைத் தெரிஞ்சுக்கலாம்னு புரிஞ்சுக்கிட்டேன். அதனாலதான்!"

"எப்படி சார்?"

"ஒத்தரை இன்டர்வியூ பண்ணும்போது, அவர் எப்படிப் பேசறார்ங்கறதை கவனிப்பேன். சில பேர் ரொம்பப் பணிவா, கண்ணியமா, நேர்மையா, பொருத்தமாப் பேசுவாங்க. அவங்களோட குடும்பப் பின்னணி ரிப்போர்ட்டைப் பார்த்தா, அவங்க குடும்பப் பின்னணி சிறப்பானதா இருக்கும். பொருத்தமில்லாமலோ, போலியாவோ, பண்பாடு இல்லாமலோ பேசறவங்களோட குடும்பப் பின்னணி ரிப்போர்ட்டைப் பார்த்தா, அது அவ்வளவு நல்லா இருக்காது. ஒத்தர் பேசறதை வச்சே அவர் நல்ல குடியில் பிறந்தவரா இல்லையாங்கறதை சுலபமாக் கண்டறிய முடியும்போது, எதுக்கு குடும்பப் பின்னணியை விசாரிக்கணும்? அதுதான் தேவையில்லைன்னு சொன்னேன்!" என்றார் வேலாயுதம்.

குறள் 959:
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

பொருள்: 
விளைந்த பயிரைப் பார்த்தாலே, அது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல், ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே, அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

960. ஸ்டாஃப் மீட்டிங்

"ஸ்டாஃப் மீட்டிங்கில நீ பேசினதை யாரும் ரசிக்கல!" என்றான் பாலு, தன் சக ஊழியன் ரமேஷிடம்.

"ஏன், தப்பா ஏதாவது பேசினேனா என்ன?" என்றான் ரமேஷ்.

"ஸ்டாஃப் மீட்டிங்ல நமக்கு ஏதாவது பிரச்னைகள் இருந்தாலோ, ஆலோசனைகள் இருந்தாலோ, அதையெல்லாம் சொல்லச் சொன்னாங்க. மத்தவங்க அப்படித்தான் செஞ்சாங்க. நீ மட்டும்தான் உன்னோட பெருமைகளைப் பத்திப் பேசின." 

"எனக்கு சொல்றதுக்கு பிரச்னைகள், ஆலோசனைகள் எதுவும் இல்லை. அதனால, என்னோட சாதனைகளைப் பத்திப் பேசினேன். அட்மினிஸ்டிரேஷன் டிபார்ட்மென்ட்ல இருந்தப்ப, நல்ல நடைமுறைகளைக் கொண்டு வந்தேன். இப்ப, சேல்ஸ் எக்சிக்யூடிவா இருக்கறப்ப, அதிகமா விற்பனை செய்யறேன். பல மாசங்கள்ள, நான்தான் டாப்ல இருக்கேன். இதைச் சொல்லிக்கறதில என்ன தப்பு இருக்கு?" என்றான் ரமேஷ்.

"அதை மட்டுமா சொன்ன? ஆஃபீசுக்கு வெளியில நீ செய்யற காரியங்களைப் பத்தியும்தான் பேசின! ஒரு கிளப்புக்கு செகரட்டரியா இருக்கறது, விடுமுறை நாள்ள சமூக சேவை செய்யறது, இது மாதிரி பல விஷயங்களைப் பத்திப் பேசினியே!"

"நான் சொன்னதெல்லாம் உண்மைதானே?"

"உண்மையா இருக்கலாம். ஆனா, உன்னோடபெருமைகளைப் பத்தி நீயே பேசிக்கிட்டா, மத்தவங்க எப்படி அதை ரசிப்பாங்க? கம்பெனி விஷத்திலேயே, நீ செஞ்சதை மத்தவங்க சொல்லிப் பாராட்டணும். அதையெல்லாம் நீயே சொல்லிக்கிட்டதும் இல்லாம, உன் தனிப்பட்ட வாழ்க்கையில செஞ்ச விஷயங்ளைப் பத்தியும் பெருமையாப் பேசின. நீ பேசினதைக் கேட்டுட்டு, சில பேர் என்ன சொன்னாங்க தெரியுமா"

"என்ன சொன்னாங்க?"

"என்ன, இவ்வளவு அல்பத்தனமா இருக்கான்? இவன் பேசறதைக் கேட்டா, கௌரவமான குடும்பத்தில பொறந்தவன் மாதிரி தெரியலியேன்னு பேசிக்கிட்டாங்க!" என்றான் பாலு, சற்றுத் தயக்கத்துடன்.

"யார் அப்படிப் பேசினது? என் குடும்பத்தைப் பத்தி அவங்களுக்கு என்ன தெரியும்?" என்றான் ரமேஷ், கோபத்துடன்.

"ரமேஷ்! நான் சொல்றதைப் புரிஞ்சுக்க. மத்தவங்க நம்மகிட்ட சிலவற்றை எதிர்பாக்கறாங்க. நமக்கு நல்லது நடக்கணும்னா, கொஞ்சம் பணிவா, அடக்கமா இருக்கணும். நம்மோட பெருமையைப் பத்திப் பேசக் கூச்சப்படணும். ஒத்தன் பணிவா, அடக்கமா இருந்தா, அவன் நல்ல குடும்பத்தில பொறந்திருக்கான், அதான் பண்போட இருக்கான்னு சொல்லுவாங்க. அப்படி இல்லேன்னா, நல்ல குடும்பத்தில பொறந்திருக்க மாட்டான்னுதான் பேசுவாங்க. இது உலகத்தோட இயல்பு. உன்னோட குறையை நான் எடுத்துச் சொல்றது உனக்குப் பிடிக்காதுன்னாலும், இதை நீ புரிஞ்சுக்கணும்னுதான், உங்கிட்ட இதைச் சொல்றேன்" என்றான் பாலு. 

குறள் 960:
நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.

பொருள்: 
ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால், அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நல்ல குடியில் பிறந்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், அவனிடம் பணிவு இருக்க வேண்டும்.
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...