அதிகாரம் 101 - நன்றியில் செல்வம் (நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம்
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

1001. சேர்த்து வைத்த பணம்! 

"சுந்தரம் இறந்துட்டாராமே!"

"ஆமாம். சொன்னாங்க. நம்ம ஊரிலேயே பெரிய பணக்காரராச்சே!"

"ஆமாம். விவசாயம், வியாபாரம், வட்டித் தொழில்னு பல வகையிலும் பணம் சம்பாதிச்சாரு."

"அவருக்கு யாரு கொள்ளி போடப் போறாங்க?"

"அவர் பையன் அமெரிக்காவில இருக்கான். அவனால உடனே வர முடியாது. அவரோட அண்ணன் பையனுக்குத் தகவல் சொல்லி இருக்காங்களாம். அவன் வந்துதான் கொள்ளி போடுவான்."

"அவர் பையன் அமெரிக்காவில படிச்சு, அங்கேயே வேலை தேடிக்கிட்டு, அங்கேயே கல்யாணமும் செஞ்சுக்கிட்டானாமே! அவன் ஏன் அப்பாவைப் பார்க்க இங்கே வரதே இல்லை?"

"எப்படி வருவான்? அவன் அமெரிக்கா போய்ப் படிக்கப் பணம் கேட்டப்ப, இவர் கொடுக்க மாட்டேன்னுட்டாரு இல்ல?"

"ஏன் கொடுக்க மாட்டேன்னுட்டாரு?"

"பணம் செலவழிஞ்சுடுமேன்னுட்டுதான்! அவன் அப்புறம் பாங்க்ல, தெரிஞ்சவங்ககிட்டல்லாம் கடன் வாங்கிட்டுப் போய்ப் படிச்சான். அதுதான் அப்பாவைப் பாக்க இங்க வரதே இல்லை. அம்மாகிட்ட மட்டும் ஃபோன்ல பேசுவான். அவங்களும் போய்ச் சேர்ந்துட்டாங்க."

"அடப்பாவமே! இவ்வளவு பணம் இருந்தும், பையன் படிப்புக்கே கொடுக்க மாட்டேன்னா, எப்படி?" 

"அவர் அப்படித்தான். மனுஷனுக்குப் பணம் வந்துக்கிட்டே இருக்கணும், ஆனா, வெளியில போகக் கூடாது! அதனலதான் ஒரு வசதியும் செஞ்சுக்காம, சாப்பாட்டுக்குக் கூட அதிகம் செலவழிக்கக் கூடாதுன்னு அவரோட சம்சாரத்தை கெடுபிடி பண்ணிக்கிட்டு வாழ்ந்தாரு. சொந்தக்காரங்களை அண்ட விட மாட்டாரு. ஆனா, இன்னிக்குக் கொள்ளி போட அண்ணன் மகன்தான் வர வேண்டி இருக்கு. அவன் கடனுக்குக் கொள்ளி போட்டுட்டுப் போவான்!"

"அது சரி. அவருக்கு ஈமச் சடங்கெல்லாம் செய்யப் பணம் வேணுமே!"

"அவர் வீட்டிலேயே ஏகப்பட்ட பணம் பெட்டியில இருக்கும். அதையெல்லாம் அவர் பையன் வந்துதானே திறந்து பார்க்க முடியும்? பையனை ஃபோன் பண்ணிக் கேட்டதுக்கு, 'என் பெரியப்பா பையனைக் கொள்ளி போட வரச் சொல்றேன். ஆனா, அவங்கிட்ட பணம் காசு கிடையாது. ஊர்ல யாராவது பணம் போட்டு காரியங்களைச் செய்யுங்க. நான் வந்ததும் கொடுத்துடறேன்'னு சொன்னானாம்!"

"அடப்பாவி! இவ்வளவு பணத்தைச் சேர்த்து வச்சாரு. தானும் அனுபவிக்கல. மத்தவங்களுக்கும் கொடுக்கல. அவருக்குக் கொள்ளி போடக் கூட வேற யாராவதுதான் பணம் போட வேண்டி இருக்கு. இவ்வளவு காலமா அவரு இவ்வளவு பணம் சம்பாதிச்சு என்ன பயன்?"

குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

பொருள்: 
ஒருவன் தன் வீடு நிறையப் பெரும் பொருளைச் சேர்த்து வைத்து. அதை அனுபவிக்காமல் இறந்து போனால், அந்தப் பொருளால் அவன் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

1002. அருணாசலத்தின் 'கொள்கை'

"என் தம்பி பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு" என்றாள் விசாலாட்சி.

"சந்தோஷம்!" என்றான் அருணாசலம்.

"கல்யாணச் செலவுக்கு நாமதான் கொஞ்சம் பணம் கொடுத்து உதவணும்!"

"நான்தான் யாருக்கும் எந்த உதவியும் செய்யறதில்லைன்னு தெரியுமே!"

"ஏங்க, நம்மகிட்டதான் நிறையப் பணம் இருக்கே! எப்பவாவது, யாருக்காவது உதவி செஞ்சா, குறைஞ்சா போயிடும்?"

"பணம் நம்மகிட்ட இருந்தாதான், அது நமக்கு உதவியா இருக்கும். கேக்கறவங்களுக்கெல்லாம் தூக்கிக் கொடுத்துக்கிட்டிருந்தா, நமக்குத் தேவைப்படும்போது அது நம்மகிட்ட இருக்காது!

"என் தம்பி கடனாத்தான் கேக்கறான்."

"சொந்தக்காரங்களுக்குக் கடன் கொடுத்தா, பாங்க்ல எல்லாம் வாராக் கடன்கள்னு சொல்லுவாங்களே, அது மாதிரிதான் ஆகும்!"

"உங்க தங்கை தன்னோட பொண்ணு கல்யாணத்துக்குக் கடன் கேட்டப்பவே நீங்க முடியாதுன்னுட்டீங்க. என் தம்பிக்கா கொடுக்கப் போறீங்க?"

"தெரியுது இல்ல? அப்புறம் ஏன் கேக்கறே?" என்று கூறி அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் அருணாசலம்.

ருணாசலத்துக்கு ஆன்மீகச் சொற்பொழிவுகள் கேட்பதில் ஆர்வம் உண்டு. அங்கே சொல்லப்படும் புராணக் கதைகளை அவன் மிகவும் விரும்பிக் கேட்பான். ஆனால், தானம் செய்ய வேண்டும், நல்ல காரியங்களுக்குப் பணம் கொடுத்து உதவ வேண்டும் என்றெல்லாம் ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் உபதேசிப்பது அவனுக்குப் பிடிக்காது.

'என்ன செய்வது? சுவாரசியமான கதைகள் கேட்க வேண்டுமென்றால், இது போன்ற உபதேசங்களைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்!' என்று நினைத்துக் கொள்வான் அருணாசலம்.

அன்று மகாபாரதக் கதை கேட்பதற்காகச் சற்றுத் தொலைவிலிருந்த ஒரு அரங்குக்குப் போயிருந்தான் அருணாசலம். சொற்பொழிவாளர் தன் இரண்டு மணி நேரச் சொற்பொழிவில் இருபது நிமிடம்தான் கதை சொல்லி இருப்பார். மற்ற நேரமெல்லாம் உபதேசம்தான்!

குறிப்பாக, அவர் சொன்ன ஒரு விஷயம் அருணாசலத்துக்கு வேடிக்கையாக இருந்தது. பிறருக்கு உதவாமல் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பவர்கள், அடுத்த பிறவியில் ஒரு கீழான பிராணியாகப் பிறந்து கஷ்டப்படுவார்களாம்! அதைக் கேட்டதும், அருணாசலதுக்குச் சிரிப்புதான் வந்தது.

சொற்பொழிவு நடைபெற்ற அரங்கிலிருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான் அருணாசலம். 

இருட்டான ஒரு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ குரைத்துக் கொண்டே ஓடி வந்த ஒரு நாய், சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தவர் மேல் இடிப்பது போல் அருகில் வர, அவர் ஒரு கல்லை எடுத்து அதன் மீது வீசினார்.

கல் நாயின் மீது பட்டு விட, அந்த நாய் வலி தாங்காமல் ஓலமிட்டபடியே ஓடியது.

அந்தக் காட்சியைப் பார்த்தபோது, அருணாசலத்துக்கு அவனை அறியாமலேயே மனதில் ஒரு எண்ணம் வந்து போயிற்று.

'ஒருவேளை நான் அடுத்த பிறவியில் ஒரு நாயாகப் பிறந்து இப்படி அடிபடுவேனோ?'

அந்த நினைப்பே அவன் உடலில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

குறள் 1002:
பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளானா மாணாப் பிறப்பு.

பொருள்: 
பொருளால் எல்லாம் ஆகும் என்று நம்பி, பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் பொருளை இறுகப் பற்றியபடி மயக்கத்தால் ஆழ்ந்திருப்பவருக்கு சிறப்பில்லாத பிறவி உண்டாகும்.

1003. நின்று போன ஸ்காலர்ஷிப்

நீண்ட நேரம் காத்திருந்த பின், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தொழிலதிபர் குமணனின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

"எங்க பள்ளிக்கூடத்தில படிக்கிற மாணவர்கள்ள அதிக மார்க் வாங்கற அஞ்சு பேருக்கு, அவங்க மேற்படிப்புக்காக, சதாசிவம் நினைவு ஸ்காலர்ஷிப் கொடுத்துக்கிட்டு வந்தீங்க" என்றார் நிர்வாகக் குழுவின் தலைவர் சபேசன்.

"கொடுத்துக்கிட்டு வந்தாங்கன்னு சொல்லுங்க. நான் கொடுக்கலையே!" என்றான் குமணன், சிரித்தபடி.

"உங்கப்பாதான் அவரோட அப்பா பேர்ல இந்த ஸ்காலர்ஷிப் கொடுத்துக்கிட்டு வந்தாரு."

"அவரு போன வருஷம் இறந்துட்டாரு. அதுக்கப்புறம், ஸ்காலர்ஷிப்பும் நின்னு போச்சு!" என்று சொல்லிச் சிரித்தான் குமணன்.

"அதை நீங்க தொடரணும்னு கேட்டுக்கத்தான் நாங்க வந்திருக்கோம்."

"என்னோட அப்பாவுக்கு, அவரோட அப்பா நினைவா இப்படி ஏதாவது செய்யணும்னு தோணி இருக்கு. எனக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லையே!" என்றான் குமணன்.

"இருபது வருஷமா இந்த ஸ்காலர்ஷிப்பை உங்க அப்பா கொடுத்துட்டு வந்திருக்காரு. நூறு ஏழை மாணவர்கள் இதனல பயன் அடைஞ்சிருக்காங்க. அவங்கள்ள பல பேரு உயர்ந்த பதவிகள்ள இருக்காங்க. அவங்க இப்பவும் தாங்க சதாசிவம் நினைவு ஸ்காலர்ஷிப்ல படிச்சதைப் பத்திரிகை பேட்டிகளிலும், தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் பெருமையாச் சொல்றாங்க. இதனால, உங்க குடும்பத்துக்கு எப்படிப்பட்ட புகழ் கிடைச்சிருக்குன்னு பாருங்க."

"எனக்குப் புகழ் எல்லாம் வேண்டாம். உங்களால முடிஞ்சா, என் பிசினஸ்ல,  எனக்குப் புதுசா சில வாடிக்கையாளர்கள் புடிச்சுக் கொடுங்க. அதுக்கு நான் உங்களுக்கு கமிஷன் கொடுத்துடறேன். ஸ்காலர்ஷிப் மாதிரி விஷயங்களுக்கெல்லாம் நான் பணத்தை வீண்டிக்க விரும்பல!" என்றான் குமணன்.

"சரி சார். நாங்க வரோம்!" என்று எழுந்தார் நிர்வாகக் குழுத் தலைவர்.

அலுவலகத்துக்கு வெளியே வந்ததும், "இவரோட அப்பா எப்படிப்பட்ட மனுஷர்! இவர் இப்படிப் பேசறாரு. இவரைப் பார்க்க வந்தது நமக்கு டைம் வேஸ்ட்" என்றார் ஒரு உறுப்பினர்.

"இவரே இந்த உலகத்துக்க் ஒரு வேஸ்ட்தான்!" என்றார் நிர்வாகக் குழுத் தலைவர்.

குறள் 1003:
ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

பொருள்: 
புகழை விரும்பாமல், பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.

1004. அழைப்பு வரவில்லை!

"உங்க அத்தை பையன் மாதவனோட பொண்ணுக்குக் கல்யாணமாமே!" என்றாள் மீனாட்சி.

"யார் சொன்னாங்க?" என்றான் சுந்தரேசன்.

"நேத்து உங்க தங்கச்சிகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அவதான் சொன்னா."

"பரவாயில்லை. என் தங்கச்சி எங்கிட்ட பேசாட்டாலும், உங்கிட்டயாவது பேசறாளே!"

"அவ எனக்கு ஃபோன் பண்ணல, நான்தான் பண்ணினேன். உங்க தங்கச்சின்னு இல்ல, உங்களோட எந்த உறவுக்காரங்களுமே உங்ககிட்ட பேசறதில்லயே! நான்தான் உறவு விட்டுடக் கூடாதேங்கறதுக்காக, அப்பப்ப எல்லார்கிட்டேயும் பேசிக்கிட்டிருக்கேன்."

"அது சரி. மாதவனோட பொண்ணுக்குக் கல்யாணம்னு அவளுக்கு எப்படித் தெரியும்?"

"மாதவன்தான் அவளுக்கு ஃபோன்பண்ணிச் சொன்னாராம். பத்திரிகை அனுப்பறேன், வந்துடுன்னு சொன்னாராம்!"

"மரியாதை தெரியாத பய. எனக்கு இல்ல முதல்ல சொல்லணும்? என் தங்கைக்கு முதல்ல சொல்லிட்டு, அப்புறம் எனக்குச் சொல்றது என்ன மரியாதை?" என்றான், சுந்தரேசன், கோபத்துடன்.

"அவர் இன்னும் உங்ககிட்ட சொல்லவே இல்லையே!"

"அதைத்தானே நானும் சொல்றேன்?"

"உங்ககிட்ட முதல்ல சொல்லி இருக்கணும்னு நீங்க சொல்றீங்க. அவர் உங்ககிட்ட சொல்றதாவே இல்லையோ என்னவோ!"

"நீ என்ன சொல்ற?"

"உங்ககிட்ட ஃபோன்ல சொல்லாம, பத்திரிகை மட்டும் அனுப்பலாம். அல்லது, பத்திரிகை கூட அனுப்பாம இருக்கலாம்!"

"அது எப்படி? என் தங்கையைக் கூப்பிட்டுட்டு, என்னைக் கூப்பிடாம இருப்பானா?"

"இது மாதிரி முன்னாலேயே நடந்திருக்கே! உங்க தங்கை கூட, தான் வீடு கட்டறதைப் பத்தி, உங்க தம்பி, தூரத்து சொந்தக்காரங்க எல்லார்கிட்டேயும் சொல்லி இருக்கா. உங்ககிட்ட கிரகப்பிரவேசத்துக்கு ஒரு வாரம் முன்னாலதானே சொன்னா! நீங்க கூட அதுக்காக அவளோட சண்டை போட்டீங்களே!"

"ஆமாம்!" என்றார் சுந்தரேசன், சற்று சோர்வுடன்.

"உங்க ஆ்பீஸ் நண்பர்கள் அடிக்கடி கூடிப் பேசிக்கறாங்க, சேர்ந்து டூர் போறாங்க. ஆனா, உங்களை யாரும் கூப்பிடறதில்ல, உங்களுக்குத் தகவல் கூடச் சொல்றதில்லைன்னு, நீங்கதானே எங்கிட்ட சொல்லிக் குறைப்பட்டுக்கிட்டீங்க?"

சுந்தரேசன் பதில் சொல்லவில்லை.

தனக்கு வசதி இருந்தும், நண்பர்களோ, உறவினர்களோ உதவி கேட்டபோது, தான் நிர்த்தாட்சண்யமாக அவர்களுக்கு உதவி செய்ய மறுத்து விட்டதால், தன் நண்பர்களும், உறவினர்களும், தன்னிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போவதையும், தன்னை விலக்கி வைப்பதையும் அவர் உணர்ந்து கொண்டுதான் இருந்தார்.

நெருங்கிய உறவினர்கள் கூடத் தன்னைப் புறக்கணித்துத் தனிமைப்படுத்தி வந்தது அவருக்கு வேதனையை அளித்தது.

'நான் உயிருடன் இருக்கும்போதே, எனக்கு நெருக்கமானவர்கள் கூட, என்னை ஒரு பொருட்டாக மதிக்காமல், என்னிடமிருந்து விலகிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். நான் இறந்த பிறகு, என்னைப் பற்றிய நினைவு கூட யாரிடமும் இருக்காது போலிருக்கிறதே!' என்ற எண்ணம் தோன்றியபோது, எதையோ இழந்து விட்ட உணர்வு அவருக்கு ஏற்பட்டது.

குறள் 1004:
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

பொருள்: 
பிறர்க்கு உதவியாக வாழாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவான்?

1005. குணாளன் குவித்த செல்வம்

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த குணாளன், தான் பார்த்துக் கொண்டிருந்த சிறிய வேலையை விட்டு விட்டு, சொந்தத் தொழில் ஆரம்பித்தபோது, அவன் விரைவிலேயே ஒரு பெரிய செல்வந்தனாகி விடுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

தன்னிடம் பொருள் சேர ஆரம்பித்ததும், குணாளன் செய்த முதல் வேலை, தன் சகோதரர்கள் மூவர், சகோதரிகள் இருவர், தன் மனைவியின் சகோதரர்கள் மூன்று பேர் உள்ளிட்ட தன் உறவினர்களிடமிருந்து விலகி நிற்க ஆரம்பித்ததுதான்.

"எங்க வீட்டில நான் ஒரே பொண்ணு. அதுவும் கடைசியாப் பொறந்தவ. என் அண்ணன்கள் மூணு பேரும் என் மேல உயிரா இருக்காங்க. அவங்களை நம்ம வீட்டுக்கு வர விடாம பண்ணிட்டீங்க, என்னையும் அவங்களைப் பார்க்கப் போகக் கூடாதுன்னுட்டீங்க. ஏன் இப்படிப் பண்றீங்க?" என்றாள் அவன் மனைவி தேவயானி.

"நான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன். உறவுக்காரங்கன்னு சொல்லிக்கிட்டு வந்து, யாரும் நான் சம்பாதிக்கிற பணத்தைப் பிடுங்கிட்டுப் போக நான் விரும்பல" என்றான் குணாளன்.

"யாராவது பணம் கேட்டா, இல்லைன்னு சொல்லுங்க. உறவுக்காரங்களோட சகவாசமே கூடாதுன்னு ஏன் நினைக்கறீங்க?"

"கிட்ட வர விட்டா, அப்புறம் உதவி கேட்டாங்கன்னா, முடியாதுன்னு சொல்றது கஷ்டமா இருக்கும். கூடப் பொறந்தவங்க உறவெல்லாம் சின்ன வயசிலதான். கல்யாணத்துக்கப்புறம், ஒவ்வொத்தரும் தனித் தனிக் குடும்பமாப் போயிடறோம் இல்ல? அப்புறம் எதுக்கு அண்ணன் தம்பி, அக்கா தங்கைன்னெல்லாம் உறவாடிக்கிட்டு!" என்றான் குணாளன்.

"நான் அப்பவே சொன்னேன், நாங்க யாரும் அவன் வீட்டுக்கு வரதைக் கூட என் அண்ணன் விரும்பலை, அப்படி இருக்கறவன்கிட்ட போய் உதவி கேட்டா எப்படிச் செய்வான்னு. நீ சொன்னியேன்னுதான் அவனைப் போய்ப் பார்த்தேன். மூஞ்சியில அடிச்ச மாதிரி முடியாதுன்னு சொல்லிட்டான்!" என்றான் குணாளனின் தம்பி தனசேகரன், தன் மனைவி லட்சுமியிடம்.

"நம்ம பையனுக்கு நல்ல காலேஜில சீட் கிடைச்சிருக்கு. ஆனா, ஃபீஸ் கட்ட நம்மகிட்ட பணம் இல்லை. ஒரு நல்ல காரியத்துக்காகப் பணம் கேட்டா கொடுப்பார்னுதான் உங்களைக் கேட்கச் சொன்னேன். அதுவும் கடனாத்தானே கேட்டோம்?" என்றாள் லட்சுமி.

"அவன் குணம் தெரிஞ்சும், உன் பேச்சைக் கேட்டு அவனைப் போய்ப் பார்த்தது என் தப்புதான். நான் போனப்ப, அவன் வீட்டில இல்லை. கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் வந்தான். அதனால, அண்ணி காப்பியாவது கொடுத்தாங்க. நான் போன நேரத்தில குணாளன் இருந்திருந்தான்னா, காப்பி கூடக் கிடைச்சிருக்காது! என்ன மனுஷனோ தெரியலை!"

"உங்க அண்ணி எப்படி இருக்காங்க?"

"இருக்காங்க. பாவம், அவங்களோட அண்ணன்களையும்தான் குணாளன் அண்ட விடறதில்லையே! அதோட இல்லை. அவன்கிட்ட இவ்வளவு பணம் இருந்தும், அவனுக்கு அதை அனுபவிக்கவும் தெரியலை. அவன் வீடு ரொம்பப் பழசு. அடிக்கடி ஏதாவது ரிப்பேர் வந்துடுதாம். புதுசா வேற வீடு வாங்கலாம்னு அண்ணி சொன்னா, அதெல்லாம் வேண்டாம், இந்த வீடே நல்லாத்தானே இருக்குன்னு சொல்றானாம் குணாளன். நம்ம வீட்டில கூட ஏசி இருக்கு. ஆனா, அவன் வீட்டில இல்லை. வீட்டில ஒரே புழுக்கம். 'ஏசி எல்லாம் எதுக்கு? ஜன்னலைத் தொறந்து வச்சா காத்து வருது, பணம் கொடுத்து ஏசி வாங்கி, அதுக்கு மாசா மாசம் மின்சாரக் கட்டணம் வேற கட்டணுமா?'ன்னு கேக்கறானாம். இந்தக் காலத்தில, எல்லார் வீட்டிலேயும் ஸ்மார்ட் டிவி இருக்கு. அவன் இன்னும் பழைய காலத்து டிவியைத்தான் வச்சிருக்கான். அதுவும் அடிக்கடி ரிப்பேர் ஆயிடுதுன்னு, அண்ணி டிவி பாக்கறதையே விட்டுட்டாங்களாம். இதையெல்லாம் அவன் வரதுக்கு முன்னே அண்ணி எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க!" என்றான் தனசேகரன்.

இதைக் கூறியபோது, அண்ணன் தனக்குப் பணம் கொடுக்கவில்லையே என்ற கோபத்தையும், வருத்தத்தையும் மீறி, தனசேகரனுக்குச் சிரிப்பு வந்தது.

"தானும் அனுபவிக்காம, மத்தவங்களுக்கும் உதவி செய்யாம, கோடிக் கோடியாப் பணத்தை சம்பாதிச்சு என்ன செய்யப் போறாரு உங்க அண்ணன்?" என்றாள் லட்சுமி, விரக்தியுடன்.

குறள் 1005:
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.

பொருள்: 
பிறர்க்குக் கொடுத்து உதவுவதும், தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு, மேன்மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

1006. சிரித்தது ஏன்?

அருள்நிதிக்குத் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், அவர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

பல மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து பார்த்தபின். அவருக்கு வைரல் காய்ச்சல் என்று கூறி, மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.

அருள்நிதியின் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த சில ஊழியர்கள் அவரை வந்து பார்த்து விட்டுச் சென்றனர்.

மருத்துவமனையிலிருந்து திரும்பும் வழியில், ஊழியர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு வந்தனர்.

"சாரைப் பார்க்க மருத்துவமனைக்கு நிறைய பேர் வந்திருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா, நம்மைத் தவிர வேறு யாருமே வரலியே!" என்றான் பார்த்திபன்.

"வேற நேரத்தில வந்துட்டுப் போயிருப்பாங்க" என்றான் கணேசன்.

"நேத்து நான் வந்திருந்தேனே! நேத்து கூட யாரையும் காணோம். மேடம் மட்டும்தான் இருந்தாங்க" என்றான் செல்வம்.

"ஒருவேளை, வைரல் ஃபீவர்ங்கறதால யாரும் வரலியோ என்னவோ?"

"வைரல் ஃபீவர்னா கொரோனா மாதிரி இல்லை. அதனால, வைரல் ஃபீவரால் பாதிக்கப்பட்டவங்களை யாரும் வந்து பார்க்கக் கூடாதுன்னு கட்டுப்பாடு எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தா, நம்மையே அனுமதிச்சிருக்க மாட்டாங்களே!"

"உண்மையைச் சொன்னா, சாருக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது."

"ஏன் அப்படி?"

"சாரைப் பத்திதான் நமக்குத் தெரியுமே. நன்கொடைன்னு கேட்டு யாராவது வந்தா, உள்ளேயே விடாதேன்னு வாட்ச்மேன்கிட்டயே சொல்லி இருக்காரே! வீட்டிலேயும் அப்படித்தான். நண்பர்கள், உறவினர்கள் யாருக்குமே எந்த உதவியும் செய்ய மாட்டாரு. அதோட இல்ல. பணத்தைத் தானும் அனுபவிக்க மாட்டாரு. மேடம் ஏதாவது வாங்கணும்னு ஆசைப்பட்டா, அதுக்கு சார்கிட்டப் பணம் கேட்டு வாங்கறது ரொம்ப கஷ்டமாம்!"

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?"

"நான்தான் சார் வீட்டுக்கு அடிக்கடி போவேனே. அங்கே பார்த்தது, கேட்டதை எல்லாம் வச்சுத்தான் சொல்றேன்.

"சாருக்கு பிசினஸ்ல நிறையப் பணம் வருதுல்ல?"

"வருதே! நாமதான் பாக்கறமே!"

"தானும் அனுபவிக்காம, மத்தவங்களுக்கும் உதவி செய்யாம, அத்தனை பணத்தையும் வச்சுக்கிட்டு என்ன செய்யறாரு?"

பார்த்திபன் திடீரென்று சிரித்தான்.

"ஏண்டா சிரிக்கற?" என்றான் கணேசன்.

"ஒண்ணுமில்லை. வைரல் ஃபீவர்னா, கொரோனா மாதிரி இல்லைன்னு சொன்னே இல்ல? கொரோனா சமயத்தில இருந்த கெடுபிடிகளை நினைச்சேன். சிரிப்பு வந்தது" என்றான் பார்த்திபன்.

'பின்னே, தான் சேர்த்து வைத்த பணத்துக்கே ஒரு வைரஸ் மாதிரி இருந்து கொண்டு, பணத்துக்கு அருகில் யாரையும் வர விடாமல் செய்து வைத்திருக்கிறாரே அருள்நிதி என்று நினைத்துப் பார்த்துச் சிரித்ததை, சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்ன?'

குறள் 1006:
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

பொருள்: 
தானும் நுகராமல், தக்கவர்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

1007. பரமசிவத்தின் பாலிசி!

"சார் குளிச்சுக்கிட்டிருக்காரு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்றான் வேலைக்காரன்.

திவாகரும் அவனுடன் வந்த சோமு, கண்ணன் ஆகியோரும் அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்தனர்.

புழுக்கமாக இருந்தது. வேலைக்காரன் மின்விசிறியைப் போடவில்லை. சுவிட்ச் போர்டு அருகில்தான் இருந்தது. தாங்களே போய் ஃபேன் சுவிட்ச்சை ஆன் செய்தால் நன்றாக இருக்காது என்பதால், வேலைக்காரன் மீண்டும் வந்தால், அவனிடம் சொல்லி ஃபேன் போடச் சொல்லலாம் என்று நினைத்து மூவரும் காத்திருந்தனர்.

பத்து நிமிடங்கள் ஆகி விட்டன, வேலைக்காரன் திரும்ப வரவில்லை. அவர்கள் சந்திக்க வேண்டிய பரமசிவமும் அங்கே வரவில்லை. இன்னும் குளித்து முடிக்கவில்லை போலிருக்கிறது.

அப்போது, உள்ளிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அங்கே வந்தாள்.

"ஒரே புழுக்கமா இருக்கே! ஃபேன் வேண்டாமா உங்களுக்கு?" என்றாள், சோஃபாவில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து.

எங்கே அவளும் ஃபேன் போடாமல் உள்ளே போய் விடப் போகிறாளோ என்று பயந்து, "ஃபேன் சுவிட்ச் எங்கே இருக்குன்னு தெரியல. அதான்..." என்றான் கண்ணன், அவசரமாக.

"உங்களுக்குப் பக்கத்திலேயேதானே இருக்கு! உங்க கண்ணுக்குத் தெரியலையா?" என்று சிரித்துக் கொண்டே கூறிய அவள், ஃபேன் சுவிட்ச்சை ஆன் செய்தாள்.

"அண்ணனைப் பார்க்க வந்தீங்களா?" என்றாள் தொடர்ந்து.

"பரமசிவம் சாரைப் பார்க்க வந்தோம்" என்றான் திவாகர், 'உங்கள் அண்ணன் யார் என்பது எங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று மனதில் நினைத்தபடி.

"அண்ணன் இப்பதான் குளிச்சு முடிச்சாரு. அவரு பூஜையெல்லாம் பண்ணிட்டு வெளியில வர முக்கால் மணி நேரம் ஆகுமே! நீங்க வேணும்னா எங்கேயாவது போயிட்டு அப்புறம் வரீங்களா?" என்றாள் அவள்.

"பரவாயில்லை. வெயிட் பண்றோம்" என்றான் சோமு.

"என்ன விஷயமா வந்திருக்கீங்க?"

"நாங்க ஒரு அனாதை ஆசிரமம் நடத்தறோம். அது விஷயமா..." என்று இழுத்தான் திவாகர்.

"நன்கொடையா?" என்றவள், அவர்களைப் பரிதாபமாகப் பார்ப்பது போல் பார்த்து விட்டு, உள்ளே சென்றாள்.

"நாம அனாதை ஆசரமம் நடத்தறோம். ஏதோ நாமே அனாதைகள்ங்கற மாதிரி, நம்மைப் பார்த்துட்டுப் போறாங்களே!' என்று சோமு முணுமுணுத்தான். திவாகர் வாயில் விரலை வைத்து அவனை அடக்கினான்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்துத்தான் பரமசிவம் வெளியே வந்தார்.

திவாகர் தாங்கள் வந்த விஷயத்தைச் சொன்னதும், "நான் நன்கொடை எதுவும் கொடுக்கறதில்லை!" என்றார் பரமசிவம்.

"சார்! எங்க ஆசிரமத்தில முந்நூறு குழந்தைங்க இருக்காங்க. உங்களை மாதிரி பெரிய மனுஷங்க உதவினாதான், அவங்களுக்கு சாப்பாடு கிடைக்கும்" என்றான் திவாகர்.

"நன்கொடை எதுவும் கொடுக்கக் கூடாதுங்கறது என்னோட பாலிசி. எனக்கு வேற வேலை இருக்கு, கிளம்பறீங்களா?" என்று எழுந்தார் பரமசிவம்.

வெளியே வந்து சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, "ஒரு மணி நேரத்துக்கு மேல காத்திருந்தது வீணப் போச்சே! வந்திருக்காங்களே, ஒரு நூறு, இருநூறாவது கொடுக்கலாமேன்னு தோணலியே இந்தப் பெரிய மனுஷனுக்கு!" என்றான் கண்ணன், கோபத்துடன்.

"அவரோட தங்கை, முன்னாடியே நமக்குக் கோடி காட்டிட்டாங்க. நம்மைப் பரிதாபமாப் பார்த்தாங்களே! நாமதான் புரிஞ்சுக்கல" என்றான் திவாகர்.

"அவங்களுக்கு நாற்பது வயசுக்கு மேல இருக்குமே, ஏனோ தெரியலை, கல்யாணம் செஞ்சுக்காம அண்ணன் வீட்டிலேயே இருக்காங்க!" என்றான் சோமு.

"அவங்களுக்குக் கல்யாணம் ஆகலேன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்றான் திவாகர்.

"இங்கே வரதுக்கு முன்னே பரமசிவத்தைப் பத்தி, சில பேர் கிட்ட விசாரிச்சேன். வீட்டில அவரும் அவர் தங்கையும் மட்டும்தான் இருக்கறதா சொன்னாங்க."

"நீ விசாரிச்சப்ப, அவர் யாருக்கும் ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டாருன்னு சொல்லி இருப்பாங்களே! அதை நீ ஏன் முன்னாடியே எங்ககிட்ட சொல்லல? இங்கே வந்து நம்ம நேரத்தை வீணாக்கி இருக்க வேண்டாம் இல்ல?" என்றான் திவாகர், கோபத்துடன்.

"அவரோட மனைவி, குடும்பம் எல்லாம்?" என்றான் கண்ணன்.

"அவர் மனைவி அவரோட இருக்கப் பிடிக்காம, குழந்தையை அழைச்சுக்கிட்டுத் தனியாப் போயிட்டாங்களாம்!"

"அவரோட தங்கை நல்ல அழகா இருந்தாங்க, இல்ல? ஏன் கல்யாணம் செஞ்சுக்கலையாம்?" என்றான் கண்ணன்.

"இது ரொம்ப முக்கியம்டா நமக்கு!" என்றான் திவாகர்.

"இல்லை. எனக்கு ஒண்ணு தோணிச்சு!" என்றான் கண்ணன்.

"என்ன தோணிச்சு?" என்றான் சோமு.

"அண்ணன் பணத்தை யாருக்கும் கொடுக்காம வீணாக்கிக்கிட்டிருக்காரு. தங்கை கல்யாணம் செஞ்சுக்காம தன்னோட அழகை வீணாக்கிக்கிட்டிருக்காங்க!"

"டேய்! நாம சமூக சேவை செய்யணுங்கறதுக்காகக் கல்யாணம் செஞ்சுக்காம இருக்கோம். இப்படிப்பட்ட பேச்செல்லாம் பேசாதே! இப்ப அடுத்தாப்பல யார்கிட்ட போய் நன்கொடை கேக்கறதுன்னு நாம யோசிக்கணும்" என்றான் திவாகர்.

குறள் 1007:
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

பொருள்: 
பொருள் இல்லாத வறியவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவனின் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.

1008. ஊரை வலம் வந்தபோது...

அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்வதற்காக வந்திருந்தார், பள்ளிகளுக்கான ஆய்வாளர் சோமசுந்தரம்

ஆய்வு விரைவிலேயே முடிந்து விட்டது. ஊரிலிருந்து திரும்பிப் போக மாலையில்தான் பஸ்.

"என் வீட்டுக்கு வாங்க சார்! நீங்க அங்கேயே ஓய்வு எடுத்துக்கலாம்" என்று அழைத்தார் தலைமை ஆசிரியர் முகுந்தன்.

"வேண்டாம் சார்! வெய்யில் இல்லை. கிளைமேட் நல்லா இருக்கு. கொஞ்ச நேரம் ஊருக்குள்ள நடந்துட்டு வரேன்" என்று கிளம்பினார் சோமசுந்தரம்.

"நானும் உங்களோட வரேன்!" என்றார் முகுந்தன்.

ஊரில் இருந்த இரண்டு சிறிய கோவில்கள், பஞ்சாயத்து போர்டு அலுவலகம், பாசனக் கால்வாய் இவற்றையெல்லாம் பார்த்த பிறகு, ஒரு தெருவுக்குள் நுழைந்தனர்.

தெருவில் நுழைந்ததுமே, அந்தப் பெரிய வீடு சோமசுந்தரத்தின் கவனத்தைக் கவர்ந்தது.

"இந்த வீட்டில இருக்கறவர்தான் இந்த ஊரிலேயே பெரிய பணக்காரரா இருப்பாரோ?" என்றார் சோமசுந்தரம்.

"ஆமாம். அவர் பேரு விநாயகம். வீட்டுத் திண்ணையில உக்காந்திருக்காரு பாருங்க அவர்தான்" என்றார் முகுந்தன்.

அந்த வீட்டுக்கு அருகில் வந்ததும், தெருவில் நின்றபடியே விநாயகத்துக்கு வணக்கம் தெரிவித்த முகுந்தன், "ஸ்கூல் இன்ஸ்பெக்டர்" என்று சோமசுந்தரத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

சோமசுந்தரம் விநாயகத்துக்கு வணக்கம் தெரிவித்தார். விநாயகம் பதிலுக்கு வணக்கம் கூடத் தெரிவிக்கவில்லை. தலையை மட்டும் ஆட்டினார்.

அவர் வீட்டைத் தாண்டி சற்றுத் தொலைவு வந்ததும், "ரொம்ப அமைதியானவரா இருப்பாரு போல இருக்கு" என்றார் சோமசுந்தரம்.

"ஊர்ல யாரும் அவர்கிட்ட பேச்சு வச்சுக்க மாட்டாங்க. அமைதியாத்தானே இருக்கணும்?"

"ஏன் அப்படி? ஊர்க்காரங்களோட சண்டையா?"

"அதெல்லாம் எதுவுமில்லை. அவர் யாருக்கும் ஒரு சின்ன உதவி கூடச் செய்ய மாட்டாரு. ஊரோட பொதுக் காரியங்களுக்கும் உதவி செய்ய மாட்டாரு. அதனால, ஊர்ல யாரும் அவர்கிட்ட அதிகமா பேச்சு வச்சுக்கறதில்லை."

"ஊர்லேயே பெரிய பணக்காரரா இருந்துக்கிட்டு யாருக்கும் உதவாம இருந்தா எப்படி?"

"அவர் அப்படித்தான். இப்ப கூட பாருங்க. நீங்க வெளியூர்லேந்து வந்திருக்கீங்க. உங்களை அறிமுகப்படுத்தி வச்சேன். வேற ஒத்தரா இருந்தா, ஒரு மரியாதைக்காகவாவது வீட்டுக்குள்ள வாங்கன்னு கூப்பிட்டிருப்பாங்க. ஆனா, அவர் உங்களுக்கு பதில் வணக்கம் கூடச் சொல்லலியே!"

"வீட்டுக்குள்ள கூப்பிட்டா, தண்ணியாவது கொடுக்க வேண்டி இருக்குமேன்னு யோசிச்சிருப்பாரு!" என்றார் சோமசுந்தரம், சிரித்தபடி.

"சரியாச் சொன்னீங்க!" என்றார் முகுந்தன்.

பள்ளிக்குத் திரும்பும் வழியில், ஒரு பெரிய மரம் இருந்தது. 

"இது என்ன மரம்? பெரிசா இருக்கே! காய்ச்சிருக்கே! என்ன காய் இது?" என்றார் சோமசுந்தரம்.

"இது ஒரு நச்சு மரம் சார்! இது காய்ச்சு என்ன பயன்? இதால, ஊர்ல யாருக்கும் எந்தப் பயனும் இல்லை!" என்றார் முகுந்தன்.

குறள் 1008:
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

பொருள்: 
பிறர்க்கு உதவாத காரணத்தால், ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.

1009. தினகரனின் சொத்துக்கள்

தினகரன் வறுமை நிலையிலிருந்து முன்னேறி வந்து வாழ்க்கையில் உயர்ந்தவர்.

மிகச் சிறிய முதலீட்டில் பழைய பொருட்களை வாங்கி விற்பதில் தொடங்கித் தன் தொழில் முயற்சியில் வெற்றி பெற்றுப் படிப்படியாக உயர்ந்து, சில ஆண்டுகளில், ஒரு பெரிய வியாபாரியாக வளர்ந்து விட்டார் அவர்.

வியாபாரம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருந்த நிலையில்தான், அவருடைய திடீர் மரணம் நிகழ்ந்தது.

 தினகரன் மறைந்து விட்டார் என்ற செய்தி அவர் குடும்பத்தினரையும், அவர் நிறுவனத்தின் ஊழியர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

"நாப்பத்தஞ்சு வயசுதான் ஆகுது. திடீர்னு போயிட்டாரு. மாரடைப்புன்னு சொல்றாங்க" என்றார் அவருடைய நிறுவனத்தின் மேலாளர் சாம்பசிவம்.

"கம்பெனி தொடர்ந்து நடக்குமா சார்?  அவர் பையனும் பொண்ணும் இன்னும் படிப்பையே முடிக்கலியே!" என்றான் செல்வராஜ் என்ற ஊழியன்.

"தெரியல. அவங்க கம்பெனியைத் தொடர்ந்து நடத்தறது சந்தேகம்தான். வேற வேலைக்கு இப்பவே முயற்சி பண்ணுங்க. இங்கே சம்பளம் ரொம்ப கம்மியாத்தானே கொடுக்கறாங்க? நான் கூட வேற வேலைக்கு முயற்சி செய்யப் போறேன்!" என்றார் சாம்பசிவம்.

தினகரன் மறைந்து சில நாட்களுக்குப் பிறகு, அவருடைய ஆடிட்டர் கண்ணப்பன் தினகரனின் வீட்டுக்கு வந்து, தினகரனின் மனைவி கலாவதியைச் சந்தித்துப் பேசினார்.

"உங்க கணவரைப் பத்தின சில உண்மைகளை உங்ககிட்ட சொல்லணும். அவர் என்னோட நண்பர்தான். ஆனா, என் ஆலோசனைகளைக் கேக்காம, அவர் சில காரியங்களை செஞ்சாரு. அதனால, இப்ப உங்களுக்குத்தான் பிரச்னை!" என்று ஆரம்பித்தார் கண்ணப்பன்.

"என்ன செஞ்சாரு? என்ன பிரச்னை?" என்றாள் கலாவதி.

"தினகரன் கடுமையான உழைப்பாளி. ராத்திரி பகல்னு பாக்காம உழைச்சு வியாபாரத்தைப் பெருக்கினாரு."

"அது எனக்குத் தெரியுமே! குடும்பத்தை எங்கே அவர் கவனிச்சாரு? குழந்தைகள்கிட்ட அன்பா ரெண்டு வார்த்தை கூடப் பேசினதில்ல. இவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சதுக்கு, நிறைய சொத்து சேர்த்திருக்கணுமே! அப்படி ஒண்ணும் தெரியலியே!" என்றாள் கலாவதி, விரக்தியுடன்.

"அதைத்தான் சொல்ல வந்தேன். அவர் நிறைய சம்பாதிச்சாரு. ஆனா, வருமான வரி கட்டணுமேங்கறதுக்காக, பாதி பிசினசை பிளாக்கில பண்ணினாரு. பணத்தைக் கையில வச்சுக்காம, சில பேருக்கு வட்டிக்கு விட்டாரு. யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்திருக்காருன்னு அவருக்குத்தான் தெரியும். இப்ப அவர் போனப்புறம், கடன் வாங்கினவங்க பணத்தைத் திருப்பிக் கொடுப்பாங்களா?"

"அடப்பாவி! இப்படியா செஞ்சு வச்சிருக்காரு? எங்கிட்டயாவது சொல்லி இருக்கலாம், இல்ல?"

"சொல்லி இருந்தா மட்டும்? கடன் வாங்கினவங்ககிட்ட நீங்க போய்க் கேட்டா, அவங்க கொடுத்துடுவாங்களா? அவர் புரோநோட்டு கூட எழுதி வாங்கலியே! அதோட இல்ல. மானேஜர் சாம்பசிவம் பேரில ஒரு கம்பெனி ஆரம்பிச்சு, பாதி பிசினசை அந்த கம்பெனியில செஞ்சாரு. இப்ப, சாம்பசிவத்துக்கிட்ட கேட்டா, அவன், 'அது என்னோட பிசினஸ்தான். தினகரன் சாரோட அனுமதியோட, நான்தான் அந்த பிசினஸை ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு வரேன்'னு சொல்றான்!"

"இப்படியா ஏமாத்துவான்? மற்ற ஊழியர்களுக்கு உண்மை தெரியும் இல்ல? அவங்க சொல்ல மாட்டாங்களா?"

"தப்பா நினைச்சுக்காதீங்கம்மா. தினகரன் சார், தன்கிட்ட வேலை செய்யறவங்களுக்கெல்லாம் ரொம்ப குறைச்சலாத்தான் சம்பளம் கொடுத்தாரு. 'நியாயமான சம்பளம் கொடுங்க சார், அப்பதான் வேலை செய்யறவங்க விசுவாசமா இருப்பாங்க' ன்னு நான் அவர்கிட்ட சொன்னேன். ஆனா, அவர் கேக்கல. நம்ம கம்பெனியில வேலை செய்யறவங்களைத் தன்னோட கம்பெனியில வேலைக்கு வச்சுக்கறதாகவும், சம்பளம் அதிகமாக் கொடுக்கறதாகவும் சாம்பசிவம் அவங்ககிட்ட சொல்லி இருக்கான். அதனால, அவங்க யாரும் சம்பசிவத்தைக் காட்டிக் கொடுக்க மாட்டாங்க. அப்படியே யாராவது உண்மையைச் சொன்னாலும், ரிகார்டுகள்படி அந்த கம்பெனி சாம்பசிவம் பேரில இருக்கறதால, நம்மால எதுவும் செய்ய முடியாது. வருமான வரி கட்டாம தப்பிக்கறதுக்காக தினகரன் செஞ்ச காரியம் இப்ப உங்களுக்கே இழப்பை ஏற்படுத்தி இருக்கு" என்றார் கண்ணப்பன்.

'இவ்வளவு சொல்றீங்களே, உங்க பேரிலேயே அவரு ஏதாவது பினாமி சொத்து வாங்கி இருக்கலாம், அல்லது பணம் கொடுத்து வச்சிருக்கலாம். அப்படி இருந்தா, நீங்க அதை எங்கிட்ட சொல்லவா போறீங்க?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கலாவதி, "சரி சார். எங்க விதி அப்படி! எங்களுக்குன்னு என்ன விட்டு வச்சிருக்காரோ, அதை மட்டும் வச்சுக்கிட்டு நாங்க திருப்திப்பட வேண்டியதுதான்" என்றாள், விரக்தியுடன்.

குறள் 1009:
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

பொருள்: 
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தை, மற்றவர்கள் அனுபவிப்பார்கள்.

1010. கார்மேகம் அன்று, வெண்மேகம் இன்று!

"வெண்மேகம் அன்று 
கார்மேகம் இன்று"

வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்ட சண்முகம், "வெண்மேகம் கார்மேகம் ஆகறதுன்னா என்ன அர்த்தம்?" என்றான்.

"ஆவியான நீர் வெண்மேகத்தில சேர்ந்தா, அது கார்மேகம் ஆகும். அதுதான் மழை தரும் மேகம். தெரியாத மாதிரி கேக்கற! நீ தமிழ் படிச்சவன்தானே?" என்றான் அவன் நண்பன் சசி.

"தெரியும். ஆனா, கார்மேகம் வெண்மேகமா ஆனா, எவ்வளவு கொடுமையா இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன்!"

"என்னடா சொல்ற?"

"எங்க ஊர்ல தேவராஜன்னு ஒத்தர் இருந்தாரு - இப்பவும் இருக்காரு. எங்க ஊர்ல அவர் உதவி செய்யாத மனுஷங்களே இல்லைன்னு சொல்லலாம். யாருக்கு என்ன கஷ்டம்னாலும், அவர்கிட்டதான் போவாங்க. பசியோட இருக்கற ஒருத்தர் அவர் வீட்டுக்குப் போனா, சாப்பாடு கிடைக்கும்.  ஒரு குடும்பம் கஷ்டப்பட்டா, அவங்களுக்கு அரிசி, பணம்னு கொடுப்பாரு. படிப்புக்குப் பணம் கொடுத்து உதவறது, உடம்பு சரியில்லாதவங்களை மருத்துவமனைக்கு எடுத்துக்கிட்டுப் போகத் தன்னோட காரைக் கொடுத்து உதவறது, மருத்துவச் செலவுக்குப் பணம் கொடுத்து உதவறதுன்னு எல்லாருக்கும் எல்லா விதத்திலேயும் உதவி செய்வாரு. அவரு ஒரு மழை மேகம் மாதிரிதான்" என்றான் சண்முகம்.

"சரி. இப்ப எப்படி இருக்காரு?"

"சமீபத்தில அவரைப் பார்த்தேன். சாலையில நடந்து போய்க்கிட்டிருந்தாரு. பார்த்துப் பேசினேன். கோர்ட் தீர்ப்பால, அவரோட சொத்தெல்லாம் அவரோட சித்தப்பா பையன்களுக்குப் போயிடுச்சாம். ஹைகோர்ட்ல அப்பீல் பண்ணி இருக்காரு. அதுக்காக சென்னைக்கு வந்திருக்காரு. யாரோ சொந்தக்காரங்க வீட்டில தங்கி இருக்காரு. அவர் எங்கிட்ட வெளிப்படையா சொல்லாட்டாக் கூட, சொத்தும் இல்லாம, வருமானமும் இல்லாம கஷ்டப்படறாருன்னு தெரிஞ்சது. ஹைகோர்ட்ல நடக்கற வழக்குக்கு வேற பணம் செலவழிக்கணும். ஊர்ல இருக்கிறவங்கள்ளாம் மருத்துவமனைக்குப் போகத் தன்னோட காரைக் கொடுத்து உதவினவரு, உடம்பு சரியில்லைன்னு அரசாங்க ஆஸ்பத்திரிக்கு நடந்து போய்க்கிட்டிருந்தாரு! நான் ஆட்டோல கொண்டு விட்டேன். அவரோட நிலையைப் பார்த்தா, கார்மேகம் வெண்மேகமா ஆயிட்ட மாதிரிதான் இருந்தது!"

"கவலைப்படாதே! அவர் வழக்கில ஜெயிச்சு, சொத்தெல்லாம் அவருக்குத் திரும்பக் கிடைச்சா, பழையபடி ஆயிடுவாரு!" என்றான் சசி.

"அவருக்கும் அந்த நம்பிக்கை இருக்கு. ஹைகோர்ட்ல அவருக்கு சாதகமாத்தான் தீர்ப்பு வரும்னு வக்கீல் உறுதியாச் சொல்றாராம், ஆனாலும், எல்லாருக்கும் உதவி செஞ்சுக்கிட்டு நல்ல பேரோட இருந்த ஒரு சிறந்த மனுஷர் கஷ்டப்படறது தற்காலிகமானதா இருந்தாலும். அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு" என்றான் சண்முகம். 

குறள் 1010:
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

பொருள்: 
பிறர்க்குக் கொடுத்துப் புகழ் மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரும் மேகமே வறுமைப்பட்டது போலாம்.
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...