அதிகாரம் 62 - ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

611. நடைப் பயிற்சி

"பிரபாகர்! நம்ம கம்பெனியில இருக்கிற டிபார்ட்மென்ட் மானேஜர்களிலேயே நீங்க ரொம்ப வித்தியாசமனவர்!" என்றார் பொது மேலாளர் சந்தரன்.

பிரபாகர் மௌனமாக இருந்தார்.

"நம் கம்பெனியில சில வேலைகள் ஒன்றுக்கு மேற்பட்ட டிபார்ட்மென்ட் சம்பந்தமா இருக்கு. அது மாதிரி வேலைகள்ள ஏதாவது பிரச்னை வரும்போது மத்த மானேஜர்கள்ளாம் வேற டிபார்ட்மென்ட்டைக் காட்டிட்டு ஒதுங்கிக்கறாங்க. 

"தனியார் நிறுவனத்தில இதெல்லாம் முடியாது. ஆனா இது ஒரு பொதுத்துறை நிறுவனங்கறாதால, அவங்களால பொறுப்பைத் தட்டிக் கழிச்சு ஒதுங்கிக்க முடியுது. ஆனா நீங்க மட்டும் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை உற்சாகமா ஏத்துக்கறீங்க.  

"சில சமயம் உங்க டிபார்ட்மென்ட்டுக்குத் தொடர்பில்லாத சில பிரச்னைகளைக் கூட உங்க கிட்ட கொடுத்திருக்கேன். 'இது என் டிபார்ட்மென்ட்டுக்கு சம்பந்தமில்லாதது'ன்னு நீங்க சொல்லிடுவீங்களோன்னு நினைச்சுக்கிட்டேதான் அந்த வேலைகளை உங்ககிட்ட கொடுத்தேன். ஆனா நீங்க எதுவுமே சொல்லாம அதையெல்லாம் எடுத்து செஞ்சிருக்கீங்க.."

"எந்த வேலையா இருந்தா என்ன சார், கம்பெனிக்குத் தொடர்பான வேலைதானே?" என்றார் பிரபாகர் சற்று சங்கடத்துடன்

"உங்களோட இந்த ஆட்டியூடைக் குறிப்பிட்டுப் பாராட்டணுங்கறதுக்காகத்தான் இதைச் சொல்றேன். இன்னொரு விஷயம் நான் கவனிச்சது, எந்த வேலையையுமே 'இது ரொம்ப கஷ்டம், இதைச் செய்ய முடியாது'ன்னு நீங்க ஒரு தடவை கூடச் சொன்னதில்ல! நான் கூட சில வேலைகள் வரும்போது, இதை நம்மால செய்ய முடியுமான்னு யோசிப்பேன்."

"அதுக்கு நான் கடவுளுக்குத்தான் சார் நன்றி சொல்லணும்!" என்றார் பிரபாகர் சிரித்தபடி.

"கடவுள் எங்கே வந்தார் இதில?"

"சின்ன வயசில நான் ரொம்ப பலவீனமா இருந்தேன். உள்ளூர்ல இருந்த ஆரம்பப் பாடசாலை என் வீட்டிலேந்து ரொம்பப் பக்கம்தான். அங்கே போயிட்டு வரதுக்குள்ளேயே ரொம்ப சோர்ந்து போயிடுவேன். பள்ளிக் கூடத்திலேந்து வந்ததும் ஒரு மணி நேரம் படுத்து ஓய்வு எடுத்தாத்தான் சோர்வு போகும்.

"ஆறாவது வகுப்பு படிக்க எங்க ஊர்லேந்து ரெண்டு மைல் தூரத்தில இருந்த உயர்நிலைப் பள்ளிக்குத்தான் போகணும். அப்ப பஸ் வசதி எல்லாம் கிடையாது. சைக்கிள் கத்துக்கிட்டு ஓட்ட கொஞ்சம் காலம் ஆகும். அதோட என்னால பாதுகாப்பா சைக்கிள் ஓட்ட முடியும்னு எங்கப்பாவுக்கு நம்பிக்கை இல்ல. எல்லாத்துக்கும் மேல சைக்கிள் வாங்கற அளவுக்கு எங்கப்பாவுக்கு வசதியும் இல்ல!

"அதனால அஞ்சாவதோட என் படிப்பை நிறுத்திடலாம்னு என் வீட்டில முடிவு பண்ணிட்டாங்க. ஆனா படிக்கணுங்கற ஆர்வம் எனக்கு அதிகமா இருந்தது. அதனால பிடிவாதம் பிடிச்சு, 2 மைல் தொலைவில இருந்த அந்த உயர்நிலைப் பள்ளியில சேர்ந்துட்டேன்.

" 'ரெண்டு நாள் போய்ப் பாத்தப்பறம் முடியலேன்னு சொல்லி நீயே படிப்பை நிறுத்திடப் போறே' ன்னு எங்கப்பா சொன்னாரு. ஆனா எப்படியாவது கஷ்டப்பட்டு நடந்து போய்ப் படிக்கணுங்கற உறுதி என் மனசில இருந்தது.

"முதல்ல கொஞ்ச நாளைக்குக் கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா என் மன உறுதியால என் சோர்வைத் தாங்கிக்கிட்டேன். அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா சோர்வு போயிடுச்சு. நாளடைவில என் உடல் பலவீனம் கூட சரியாப் போய் நான் நார்மலா ஆயிட்டேன்!

"அந்த அனுபவத்திலேந்து நான் கத்துக்கிட்ட பாடம், எந்த வேலையையுமே முடியாதுன்னு நினைக்காம முயற்சி செஞ்சா அந்த வேலையை செய்யக் கூடிய சக்தி நமக்குத் தன்னால வந்துடுங்கறதுதான்."

"உடல் பலவீனத்தின் அடிப்படையில உங்ளுக்கு ஏற்பட்ட அனுபவத்தையே ஒரு பலமா மாத்திக்கிட்டீங்க. கிரேட்!  உங்களோட ஃபிலாசபியை நானும் பின்பற்ற முயற்சி செய்யறேன்!" என்ற சந்திரன், "ஆமாம், கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்னு சொன்னீங்களே, அது ஏன்?" என்றார் தொடர்ந்து.

"கடவுள்தானே எனக்கு ஒரு பலவீனமான உடல் அமைப்பைக் கொடுத்து அதை எதிர்கொள்ள வேண்டிய சவாலையும் கொடுத்தார்?" என்றார் பிரபாகர்.

குறள் 611:
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

பொருள்:
இது செய்வதற்கு அரியது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்கான ஆற்றலை முயற்சி உண்டாக்கும்.

612. நிதி உதவி கிடைக்குமா?

வெஞ்சர் காபிடல் நிறுவனத்திலிருந்து பேட்டி முடிந்து வெளியே வந்தபோது சதீஷ் மிகவும் உற்சாகமாக இருந்தான்.

"நிச்சயமா என்னோட ப்ராஜக்டுக்கு ஃபைனான்ஸ் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். உனக்கு என்ன தோணுது?" என்றான் சதீஷ், உடன் வந்த தன் நண்பன் குமாரிடம்.

"உன்னோட ப்ராஜக்ட் ஐடியா அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னுதான் நினைக்கிறேன். பாக்கலாம். சீக்கிரமே நல்ல முடிவு வரும்னு நம்புவோம்!" என்றான் குமார்.

"உனக்குத்தான் நான் நன்றி சொல்லணும்."

"இவங்க கொஞ்சம் கன்ஸர்வேடிவ் டைப். ரெஃபரன்ஸ் இல்லாம எந்த அப்ளிகேஷனையும் எடுத்துக்க மாட்டாங்க. ஒரு டைரக்டர் எனக்குத் தெரிஞ்சதால நான் சிபாரிசு பண்ணினேன். உன்னை இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டாங்க. பொதுவா இது மாதிரி இன்டர்வியூவுக்குத் தொழில் செய்யப் போறவரை மட்டும்தான் கூப்பிடுவாங்க. என்னையும் ஏன் கூட இருக்கச் சொன்னாங்கன்னு தெரியல!" என்றான் குமார்.

ரண்டு வாரங்களுக்குப் பிறகு, சதீஷ் குமாருக்கு ஃபோன் செய்து விசாரித்தபோது, "எனக்குத் தகவல் எதுவும் வரல. கொஞ்சம் வெயிட் பண்ணு. எதுவா இருந்தாலும் உனக்குத்தான் நேரடியாத் தகவல் வரும்" என்றான் குமார்.

"உனக்குத் தெரிஞ்ச அந்த டைரக்டர் உங்கிட்ட எதுவும் சொல்லலியா?" என்றான் சதீஷ்.

"இல்ல. நான் அவரைக் கேட்டாலும் நல்லா இருக்காது!" என்றான் குமார்.

ரு மாதத்துக்குப் பிறகு சதீஷுக்கு அந்த வெஞ்சர் காபிடல் நிறுவனத்திலிருந்து , "உங்கள் தொழில் முயற்சிக்கு உதவ இயலாமல் இருப்பதற்கு வருந்துகிறோம்" என்று சுருக்கமாக ஒரு கடிதம் வந்தது.

குமாரை ஃபோனில் அழைத்த சதீஷ், "என்னடா இப்படிச் சொல்லிட்டாங்க? நான் ரொம்ப நம்பிக்கையோட இருந்தேனே!" என்றான் ஏமாற்றத்துடன்.

"இன்டர்வியூவில உன் வேலையில ரெண்டு வருஷம் பிரேக் இருந்ததைப் பத்திக் கேட்டாங்களே, நினைவிருக்கா?" என்றான் குமார்.

"ஆமாம், கேட்டாங்க. அப்ப ஒரு தொழில் முயற்சியில இறங்கினேன், அது வெற்றிகரமா அமையல, அதனால அதை மூடிட்டு மறுபடி வேலைக்குப் போயிட்டேன்னு உண்மையைச் சொன்னேனே!"

"அந்தத் தொழில் பற்றின விவரங்களைக் கேட்டாங்க இல்ல?"

"ஆமாம், கேட்டாங்க. அது என்ன தொழில், அதில என்ன பிரச்னை, அதை ஏன் கைவிட்டேன்னெல்லாம் விவரமா சொன்னேனே. நான் வெளிப்படையாப் பேசினது அவங்களுக்குப் பிடிச்ச மாதிரிதானே இருந்தது?"

"நீ வெளிப்படையாப் பேசினது அவங்களுக்குப் பிடிச்சிருக்கலாம். ஆனா நீ ஆரம்பிச்ச தொழில் நிறைய பொடென்ஷியல் இருந்த ஒரு தொழில். உனக்கு மார்க்கெடிங் பிரச்னைகள் இருந்தது உண்மைதான். ஆனா நீ இன்னும் ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ தாக்குப் பிடிச்சிருந்தா உன் தொழில் லாபம் கொடுக்க ஆரம்பிச்சிருக்கும். உங்கிட்டேந்து அதை வாங்கினவர் இன்னிக்கு சக்கை போடு போடறாரே!"

"நீ என்ன சொல்ல வரே?"

"நீ ஏற்கெனவே ஒரு தொழிலை ஆரம்பிச்சு அதைக் கைவிட்டது உனக்கு எதிரான நெகடிவ் பாயின்ட்டா ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். இதுக்கு மேல நஷ்டப்பட வேண்டாம்னு நினைச்சு நீ உன் தொழிலை விட்டுட்டு வந்திருக்கலாம். ஆனா வெஞ்சர் காபிடல் நிதி கொடுக்கறவங்க அதை ஒரு குறையாப் பாத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்!" என்றான் குமார் சற்றுத் தயக்கத்துடன்.

சற்று நேரம் மௌனமாக இருந்த சதீஷ், "இது உனக்கு முன்னாலேயே தெரியுமா? நீ ஏன் எங்கிட்ட  சொல்லலே?" என்றான்.

"இன்டர்வியூவில அவங்க இதைப் பத்திக் கேட்டப்பவே, இது உனக்கு எதிரான ஒரு நெகடிவ் பாயின்ட்டா இருக்குமோங்கற சந்தேகம் எனக்கு வந்தது. ஆனா, நீ நம்பிக்கையா இருந்தப்ப அவசரப்பட்டு உன் நம்பிக்கையைக் குலைக்க வேண்டாம்னுதான் நானும் நம்பிக்கையாப் பேசினேன். ஆனா ரெண்டு வாரத்துக்கு மேல ஆனப்பறம், உன் பழைய தொழிலைப் பத்தி அவங்க விசாரிக்கிறாங்களோங்கற சந்தேகம் எனக்கு வந்தது. அப்படித்தான் செஞ்சிருக்காங்கன்னு இப்ப தோணுது. எனக்கு எந்தத் தகவலும் இல்லாதப்ப முடிவு தெரியறதுக்கு முன்னால என்னோட கருத்தைச் சொல்ல வேண்டாம்னுதான் நான் என் சந்தேகத்தை உங்கிட்ட சொல்லல. சாரி. கவலைப்படாதே! வேற எங்கேயாவது முயற்சி செய்யலாம்" என்றான் குமார்.

குறள் 612:
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

பொருள்: 
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணி அதைச் செய்து முடிக்காமல்  விட்டு விடக் கூடாது. அவ்வாறு விட்டு விடுபவரை இந்த உலகமும் விட்டு விடும்.

613. சீட் கிடைக்குமா?

"என் பையன் வாங்கின மார்க்குக்கு அவனுக்கு ஏ கே காலேஜில மானேஜ்மென்ட் கோட்டால சீட் கிடைக்கும். ஆனா அங்கே டொனேஷன் நிறையக் கேப்பாங்க. என்னால அவ்வளவு கொடுக்க முடியாது. அதனால வேற காலேஜிலதான் முயற்சி பண்ணணும் " என்றான் சாந்தமூர்த்தி.

"வேற நல்ல காலேஜில கிடைக்கும் இல்ல?" என்றான் புஷ்பவனம்.

"கிடைக்கும். ஆனா ஏ கே காலேஜ் எல்லாருக்கும் ஒரு கனவுக் கல்லூரி. ரொம்ப நல்லா சொல்லிக் கொடுப்பாங்க. நிறைய மார்க் வாங்கினா அங்கே ஸ்காலர்ஷிப் கிடைக்கும். அதோட படிப்பு முடிஞ்சதும் வேலை உத்தரவாதம். காம்பஸ் இன்டர்வியூவுக்கு பெரிய பெரிய கம்பெனியிலேந்தெல்லாம் வந்து அள்ளிக்கிட்டுப் போயிடுவாங்க. இன்னும் ஒண்ணு ரெண்டு பர்சன்ட் அதிகம் வாங்கி இருந்தா அரசாங்க கோட்டாவிலேயே அந்தக் கல்லூரியில கிடைச்சிருக்கும். என்ன செய்யறது, நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்!" என்றார் சாந்தமூர்த்தி பெருமூச்சுடன்.

"வேற காலேஜில சேக்கறதுன்னா எப்ப சேக்கணும்?" என்றான் சாந்தமூர்த்தி.

"எந்த காலேஜில சேக்கறதா இருந்தாலும் கவுன்ஸலிங்குக்கு அப்புறம்தான். அதுக்கு இன்னும் தேதியே வரலியே! நான் கட் ஆஃப் மார்க்கை வச்சு சொல்றேன். எதுக்குக் கேக்கற? உனக்கு ஏதாவது யோசனை இருக்கா என்ன?"

"எனக்கு இதைப் பத்தி எல்லாம் எதுவுமே தெரியாதே! என் பொண்ணு இப்பதான் எட்ம் வகுப்புக்கு வந்திருக்கா. இதையெல்லாம் பத்தி நான் கவலைப்பட இன்னும் நாலு வருஷம் இருக்கு!" என்றான் புஷ்பவனம் சிரித்தபடி.

ரு வாரம் கழித்து சாந்தமூர்த்திக்கு புஷ்பவனத்திடமிருந்து தொபேசி அழைப்பு வந்தது.

"டேய் சாந்தமூர்த்தி! உன் பையனுக்கு ஏ கே காலேஜில சீட் கிடைச்சுடுச்சு. நீ ஒரு பைசா டொனேஷன் கொடுக்க வேண்டாம்!" என்றான் புஷ்பவனம்.

"என்ன சொல்றே? ஒண்ணுமே புரியலியே!" என்றான் சாந்தமூர்த்தி.

"விவரமா சொல்றேன். ஏ கே கல்லூரியில உன் பையனை சேக்கணுங்கற உன்னோட ஆசையை நீ சொன்னப்பறம் அந்தக் கல்லுரியைப் பத்தி விசாரிச்சேன். அந்தக் கல்லூரியோட தலைவருக்கு ஒரு எம்.பி நெருக்கமானவர்னும், ஒவ்வொரு வருஷமும் அந்த எம்.பி அவரோட சிபாரிசில நாலஞ்சு பேருக்கு அந்தக் கல்லூரியில சீட் வாங்கிக் கொடுக்கிறார்னும் கேள்விப்பட்டேன். 

"அந்த எம்.பியைப் பத்தி விசாரிச்சப்ப அவரோட சொந்த ஊர் எதுன்னு தெரிஞ்சது. அந்த ஊரைச் சேர்ந்த ஒத்தன் என்னோட கல்லூரியில படிச்சது நினைவு வந்தது. கல்லூரிப் படிப்பு முடிஞ்சப்பறம் அவனோட எனக்குத் தொடர்பு இல்ல. கல்லூரியில நாங்க நெருங்கின நண்பர்கள் இல்ல. சேர்ந்து படிச்சோம், அவ்வளவுதான். 

"என்னோட நெருங்கின நண்பன் ஒத்தன் கிட்ட சொல்லி அவனோட நண்பர்கள் சில பேர் மூலமா அந்த நண்பனோட ஃபோன் நம்பரை வாங்கி அவன்கிட்ட பேசினேன். 

"இவ்வளவு வருஷம் கழிச்சு நான் அவனைத் தொடர்பு கொண்டதில அவனுக்கு ஆச்சரியம். ஆனா ஒரு உதவிக்காகத்தான் அவனைத் தொடர்பு கொள்றதா வெளிப்படையாச் சொல்லி அவன்கிட்ட உதவி கேட்டேன். தனக்கு அந்த எம்.பியை நல்லாத் தெரியும்னு அவன் சொன்னான். 

"ஆனா அவரு இப்ப டெல்லியில இருக்காரு, இது விஷயமா ஃபோன்ல பேச முடியாது, டெல்லிக்குப் போய் நேரில பாத்துத்தான் பேசணும்னு சொன்னான். பிளேன்ல போனா செலவு அதிகம் ஆகும்னு தத்கல்ல டிக்கட் வாங்கி ரெண்டு பேரும் ரயில்ல டெல்லிக்குப் போய் எம்.பியைப் பாத்தோம். 

"அவரு உன் பையனுக்கு சீட் வாங்கிக் கொடுக்கறேன்னு சொல்லிட்டாரு. பொதுவா பணம் வாங்கிக்கிட்டுத்தான் செய்வாருன்னு நினைக்கிறேன். ஆனா தன்னோட நண்பனுக்கு வேண்டியவங்க என்பதால அவரு பணம் எதுவும் வாங்கல. நான் சொன்னதுக்காகத் தன் வேலையை விட்டுட்டு என்னோட டெல்லிக்கு வந்த என் நண்பனுக்குத்தான் நன்றி சொல்லணும். நான் இப்ப டெல்லிலேந்துதான் பேசறேன்."

சாந்தமூர்த்தி பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

"என்னடா பதிலையே காணோம்?" என்றான் புஷ்பவனம்.

"என்ன சொல்றதுன்னு தெரியல. எங்கிட்ட கூட சொல்லாமே, ஏதோ உன் பையனுக்கு சீ வாங்கற மாதிரி முயற்சி செஞ்சு கல்லூரியில கூடப் படிச்சவரைத் தேடிப் பிடிச்சு அவரோட டெல்லிக்குப் போய் எம்.பி யைப் பாத்து சீட் வாங்கி இருக்கே. ஆனா, இதில ஒண்ணும் ஆச்சரியம் இல்ல. ஏன்னா, எவ்வளவு கஷ்டமான வேலையா இருந்தாலும், அதைச் செய்ய முடியும்னு நினைச்சு முயற்சி செய்யறவன் நீ. நமக்காக முயற்சி செய்யறமா, மத்தவங்களுக்காகச் செய்யறமாங்கற வேறுபாடு கூடப் பாக்காம செயல்படற உனக்கு மத்தவங்களுக்கு உதவி செய்யறதுங்கறது ரொம்ப இயல்பான விஷயமாத்தானே இருக்கும்?" என்றான் சாந்தமூர்த்தி நெகிழ்ச்சியான குரலில்.

"இங்கே பாரு, மத்தவங்களுக்கு உதவி செய்யறது என்னோட இயல்புன்னெல்லாம் சொல்லி  நீ தப்பிக்க முடியாது. நாங்க ரெண்டு பேரு டெல்லிக்குப் போய்த் தங்கிட்டு வந்த செலவு, ரெண்டு பேருக்கும் டெய்லி பேட்டா எல்லாம் நீதான் கொடுக்கணும்!" என்றான் புஷ்பவனம் விளையாட்டாக.

குறள் 613:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.

பொருள்:
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை நிலைபெற்றிருக்கிறது.

614. முருகன் துணை!

"எங்க ரெண்டு பேரையும் தவிக்க விட்டுட்டு அவரு திடீர்னு போயிட்டாரு. இந்தப் பொண்ணை நான் எப்படிக் காப்பாத்துவேன். அவளுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்?" என்று புலம்பினாள் பார்வதி.

"கவலைப்படாதே, பார்வதி! கடவுள் ஏதாவது வழி காட்டுவாரு. உங்க சொந்தக்காரங்க யாராவது உதவுவாங்க" என்றாள் அவள் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவி. 

பார்வதியின் கணவர் மறைந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டன. பார்வதி எப்படியோ கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

அப்போது ஒருநாள் பார்வதியைப் பார்க்க அவளுடைய ஒன்று விட்ட சகோதரியின் மகன் முருகன் வந்தான்.

"எனக்கு இப்பதான் விஷயம் தெரிஞ்சது பெரியம்மா. அதான் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்!" என்றான் முருகன்.

"நெருங்கின சொந்தக்காரங்களே நாங்க இருக்கமா, போயிட்டமான்னு தெரிஞ்சுக்கற அக்கறை கூட இல்லாம இருக்காங்க. நீ எங்க மேல அக்கறை எடுத்துக்கிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கியேப்பா, ரொம்ப ஆறுதலா இருக்கு!" என்றாள் பார்வதி.

பார்வதியின் நிலைமையைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு, "கவலைப்படாதீங்க பெரியம்மா! உங்க பொண்ணைப் பத்தின கவலையை விடுங்க. அவ என்னோட தங்கச்சி! அவளுக்கு ஒரு நல்ல வேலை வாங்கித் தர வேண்டியது என்னோட பொறுப்பு. கொஞ்சநாள் வேலைக்குப் போகட்டும். ரெண்டு மூணு வருஷத்தில ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பாத்துக் கல்யாணத்தையும் நடத்தி வச்சுடறேன்!" என்றான் முருகன்.

"நீ மவராசனா இருப்ப!" என்று மகிழ்ச்சியுடன் வாழ்த்தினாள் பார்வதி.

முருகன் வந்து போனது பற்றியும், தன் மகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியது பற்றியும் தேவியிடம் கூறினாள் பார்வதி.

"இந்தக் காலத்தில இப்படி ஒரு பிள்ளையா!" என்று வியந்தாள் தேவி

முருகன் வந்து போய்ப் பல மாதங்கள் ஆகி விட்டன. அதற்குப் பிறகு அவன் மீண்டும் வரவில்லை, வேறு எந்தத் தகவலும் இல்லை.

"அவ்வளவு நம்பிக்கையாப் பேசினான், அப்புறம்  ஆளையே காணுமே?" என்றாள் பார்வதி, தேவியிடம்.

"வேலை அதிகமா இருந்திருக்கும். அதனால நேரம் கிடைக்கலையோ என்னவோ! வீட்டு விலாசமோ, வேலை செய்யற இடத்தோட விலாசமோ, ஃபோன் நம்பரோ கொடுத்தானா? என் வீட்டுக்காரரை விட்டு விசாரிக்கச் சொல்றேன்" என்றாள் தேவி.

"அதெல்லாம் எதுவும் கொடுக்கல. ஏதாவது அவசரம்னா கூப்பிடறதுக்காக ஒரு ஃபோன் நம்பர் கொடுத்தான். அது அவன் ஃபிரண்டோட ஃபோன் நம்பர்னு நினைக்கிறேன்."

"சரி. அந்த நம்பரைக் கொடு. அவரை ஃபோன் பண்ணி விசாரிக்கச் சொல்றேன்"

தேவியின் கணவர் பார்வதி கொடுத்த தொலைபேசி எண்ணை அழைத்து, "உங்க நண்பர் முருகன் இந்த நம்பரைக் கொடுத்தாரு" என்று ஆரம்பித்தார்.

"முருகன் கொடுத்தானா? உங்ககிட்ட கடன் ஏதாவது வாங்கி இருக்கானா?" என்றான் அவன் நண்பன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவரோட பெரியம்மா பார்வதிங்கறவங்களோட பொண்ணுக்கு ஏதோ வேலை வாங்கித் தரதா சொல்லி இருந்தாராம். நான் பார்வதியம்மாவோட பக்கத்து வீட்டில இருக்கறவன். அவங்க அது பத்தி கேக்கச் சொன்னாங்க."

முருகனின் நண்பன் பெரிதாகச் சிரித்து விட்டு, "வேலை வாங்கிக் கொடுக்கப் போறானா? அவனே வேலை வெட்டி இல்லாம சுத்திக்கிட்டிருக்கான். நான் எவ்வளவோசொல்லிட்டேன். வேலை தேடிக்க முயற்சி கூட பண்ண மாட்டேங்கறான். அவன் எங்க இன்னொத்தருக்கு வேலை வாங்கித் தரது? தன்னைப் பெரிய பரோபகாரின்னு காட்டிக்கறத்துக்காக எதையோ சொல்லிட்டு வந்திருக்கான்னு நினைக்கிறேன்!" என்றான்.

குறள் 614:
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

பொருள்:
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.

615. கற்பகத்தின் மதிப்பீடு

"என்ன இன்னிக்காவது வேலை முடிஞ்சுதா?" என்றாள் கற்பகம், வீட்டுக்குள் நுழைந்த  தாமோதரனைப் பார்த்து.

"முடிஞ்சுது. ஒரு வழியா ஒரு நல்ல காலேஜில சீட் கிடைச்சது. வள்ளி வீட்டுக்காருக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப நன்றி மச்சான்னு அவர் திரும்பத் திரும்பச் சொன்னப்ப எனக்கு ஒரு மாதிரி சங்கடமா ஆயிடுச்சு."

"நீங்க ஆஃபீசுக்கு லீவ் போட்டுட்டு அஞ்சாறு நாள் அலைஞ்சு திரிஞ்சு எத்தனையோ காலேஜ் படியேறி ஒரு நல்ல காலேஜில சீட் வாங்கிக் கொடுத்திருக்கீங்க. அந்த நன்றி அவருக்கு இருக்காதா?"

"என்ன செய்யறது. குணா மார்க் சுமாராத்தான் வாங்கி இருக்கான். அவனுக்கு நல்ல காலேஜ்ல அட்மிஷன் வாங்கணும், அதுவும் டொனேஷன் கேக்காம, ஃபீஸ் அதிகம் வாங்காத காலேஜா இருக்கணும். அப்படிப்பட்ட காலேஜை தேடிப் பிடிக்கணும். அவங்க நமக்கு சீட் கொடுக்கணும். வள்ளி புருஷன் வெளியுலகப் பழக்கம் அதிகம் இல்லாதவரு. நீதான் அண்ணே குணாவுக்கு ஒரு நல்ல காலேஜ்ல சீட் வாங்கிக் கொடுக்கணும்னு வள்ளி எங்கிட்ட கேட்டப்ப நான் எப்படி அவளுக்கு உதவி செய்யாம இருக்க முடியும்?"

"ஆனா உங்களை மாதிரி ஆஃபிசுக்கு லீவ் போட்டுட்டு, வேளைக்கு சோறு கூடத் திங்காம அலைஞ்சு திரிஞ்சு மத்தவங்களுக்கு உதவி செய்யறவங்க எத்தனை பேரு இருப்பாங்க?" என்றாள் கற்பகம்.

"நீ என்னைப் பாராட்டறியா, குத்தம் சொல்றியான்னே தெரியலையே!" என்றான் தாமோதரன் குழப்பத்துடன்.

"நான் ஏன்உங்களைக் குத்தம் சொல்லப் போறேன்? உங்களுக்காக எந்த அளவுக்கு முயற்சி செய்வீங்களோ, அதே அளவு மத்தவகளுக்காகவும் செய்யறீங்கன்னுதான் சொல்ல வரேன். என்னோட குடும்பத்துக்கும்தானே நீங்க உதவி செஞ்சிருக்கீங்க? என் தம்பிக்கு  வேலை போனப்ப அவன் கம்பெனி யூனியன் கூட அவனுக்கு உதவி செய்யல. நீங்கதானே ஒரு வக்கீலைத் தேடிப் பிடிச்சு அவர் மூலமா லேபர் கமிஷனருக்கு பெடிஷன் கொடுத்து அவனுக்கு மறுபடி வேலை கிடைக்க வழி செஞ்சீங்க? வக்கீலுக்கு நீங்க கொடுத்த ஃபீஸைக் கூட அவன்கிட்டேந்து வாங்கிக்கல. வக்கீலுக்கு நீங்க எவ்வளவு ஃபீஸ் கொடுத்தீங்கன்னு எங்கிட்ட கூட சொல்லல. உங்க மேல நான் குத்தம் சொன்னா என் பிறந்த வீட்டிலேயே எல்லாரும் என்னை ஒதுக்கி வச்சுடுவாங்க!" என்றாள் கற்பகம், கணவனைப் பெருமையுடன் பார்த்து.

குறள் 615:
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

பொருள்:
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

616. ஓட்டல் வாசலில் ஒரு சந்திப்பு!

அந்த ஓட்டலுக்குள் நான் நுழைய முற்பட்டபோது, ஓட்டலிலிருந்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்து கொண்டிருந்த அந்த மனிதர் என்னை உற்றுப் பார்த்து விட்டு, "நீங்க சிவராமன் சாரோட பையன்தானே?" என்றார்.

"ஆமாம்" என்ற நான், "நீங்க யாருன்னு தெரியலியே!" என்றேன்.

"என்ன சந்திரா! என்னைத் தெரியலியா? நான் உங்க வீட்டில குடி இருந்தேனே? ஜம்பு!" என்றார் அவர்.

"ஓ, நீங்களா? அது எத்தனையோ வருஷம் முன்னால இல்ல? அதான் டக்னு நினைவுக்கு வரல. சௌக்கியம்தானே? வரேன்" என்றபடி ஓட்டலுக்குள் செல்ல முயன்றேன் நான்.

"இருப்பா! என்ன அவசரம்?" என்று என் கையைப் பிடித்துத் தடுத்த ஜம்பு, "அப்ப நீ சின்னப் பையன். ஸ்கூல்ல படிச்சுக்கிட்டிருந்த. உங்க வீட்டில உங்களுக்கு பக்கத்து போர்ஷன்ல குடியிருந்த எங்களோட நீ அதிகம் பழகினதில்ல. ஆனா, உங்கப்பா எப்படிப்பட்ட மனுஷர்! அவரை என்னால  எப்படி மறக்க முடியும்? எப்படி இருக்காரு?"

"அப்பா காலமாகிப் பல வருஷங்கள் ஆயிடுச்சு!" 

"கடவுளே! அவருக்கு வயசு ஆகியிருக்கும். ஆனாலும் வருத்தமாத்தான் இருக்கு. அவரை மாதிரி ஆத்மாக்கள் இந்த உலகத்துக்குத் தேவை. நீ அப்ப சின்னப் பையன்கறதால உனக்குத் தெரிஞ்சிருக்காது. நான் ஒரு கம்பெனியில சேல்ஸ்மேனா இருந்தேன். குறைஞ்ச சம்பளம். ரொம்ப கஷ்டமான வேலை. டார்கெட்டை ரீச் பண்ணலேன்னா சம்பளமே கொடுக்க மாட்டாங்க.  

"குடும்பத்தைக் காப்பாத்த ரொம்ப கஷ்டப்பட்டேன். சில மாசம் வாடகை கொடுக்க ரொம்ப லேட் ஆயிடும். ஆனா உங்க அப்பா அதுக்காக கோவிச்சுக்க மாட்டாரு. 'சம்பளம் வரலேன்னா நீங்க என்ன செய்வீங்க? சம்பளம் வந்ததும் கொடுங்க'ம்பாரு. நான் விரக்தியா இருக்கறப்பல்லாம், 'நீங்க கடுமையாத்தான் உழைக்கறீங்க. மனசைத் தளர விடாம முயற்சி செஞ்சுக்கிட்டே இருங்க தம்பி! முயற்சிகளுக்கு நிச்சயமாப் பலன் கிடைக்கும்!'னு அவர் சொல்றப்பல்லாம் சும்மா ஆறுதலுக்காக சொல்றாருன்னு நினைச்சுப்பேன்.

"ஆனா, தொடர்ந்து முயற்சி செஞ்சுக்கிட்டே இருந்ததால, அவர் சொன்னபடி பலன் கிடைச்சது. நானே சொந்தத்தில ஒரு சின்ன ஏஜன்சி எடுத்து இப்ப அது பெரிசா வளர்ந்து நல்ல வசதியா இருக்கேன். உங்கப்பாவை வந்து பாக்கணும்னு நினைச்சுப்பேன். ஆனா வர முடியாமலே போயிடுச்ச! இப்ப அவரே இல்லேங்கற. அதே வீட்டிலதானே இருக்கீங்க?" என்றார் ஜம்பு.

"இல்லை."

"ஓ, வீட்டை இடிச்சு ஃபிளாட் கட்டிட்டீங்களா? இப்ப எல்லாரும் அப்படித்தானே செய்யறாங்க? அப்பாவோட வியபாரத்தை நீதானே பாத்துக்கற?"

இதற்கு என்ன பதில் சொல்வதென்று நான் யோசிப்பதற்கள், அவர்  தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, "நான் வரேன். ஒரு இடத்துக்குப் போகணும்!" என்று சொல்லி விடைபெற்றார்.

நான் ஓட்டலுக்குள் காலடி எடுத்து வைத்ததுமே, கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளி, "ஏம்ப்பா! வேலைக்கு வந்தா நேரே உள்ள வரணும். வாசல்ல நின்னு யார்கிட்டேயோ மணிக்கணக்காப் கேசிக்கிட்டிருக்க?" என்றார் கடுமையான குரலில்.

அவருக்கு முன் மாட்டப்பட்டிருந்த சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தேன். என் வேலை துவங்குவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. ஆனால் நான் ஓட்டல் வாசலில் யாரிடமோ நீண்ட நேரம் பேசி விட்டு தாமதமாக வேலைக்கு வந்ததைப் போல் பேசுகிறார்!

என்ன செய்வது? அவர் ஓட்டல் முதலாளி. நான் சர்வர்தானே!  அவர் கூறியது தவறு என்று நான் சுட்டிக் காட்ட முடியுமா என்ன?

என் வீட்டில் குடியிருந்த ஜம்பு என் அப்பாவின் பேச்சால் உந்தப்பட்டு முயற்சி செய்து வாழ்க்கையில் முன்னேறி விட்டார்.

'நல்ல நிலையில இருக்கறவங்க கூட  இன்னும் முன்னேறுவதற்கு முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும். முயற்சி இல்லாம இருந்தா அவங்க இருந்த நிலையிலேந்து கீழே போயிடுவாங்க' என்று என் அப்பா என்னிடமும் பலமுறை கூறி இருக்கிறார்.

ஆனல் அவர் அறிவுரையைக் கேட்டுச் செயல்படாத நான், மெத்தனமாக இருந்ததால், அவர் நடத்தி வந்த வியாபாரத்தைத் தொடர்ந்து லாபகரமாக நடத்த முடியாமல் வியாபாரத்தை இழுத்து மூடி விட்டு, வீட்டையும் இழந்து விட்டு, வருமானத்துக்கு இந்த ஓட்டலில் சர்வராகப் பணியாற்ற வேண்டி நிலைக்கு வந்திருக்கிறேன்!

முதலாளியின் பேச்சுக்கு பதில் கூறாமல் என் வேலையைத் தொடங்க ஓட்டலுக்குள் நுழைந்தேன். 

குறள் 616:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

பொருள்:
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

617. லக்ஷ்மியின் அக்கா!

"ஏன் தாத்தா, ஶ்ரீதேவி, மூதேவின்னு சொல்றாங்களே, அவங்க யாரு?" என்றான் சிறுவன் நிதிஷ்.

"ஶ்ரீதேவின்னா லக்ஷ்மி, மூதேவிங்கறது அவங்க அக்கா!" என்றார் ஏகாம்பரம்.

சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஏகாம்பரத்தின் மகன் குமார் - நிதிஷின் அப்பா - தொலைக்காட்சி நிகழ்ச்சியை விட இந்த உரையாடல் சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்தவன் போல் தொலைக்காட்சியின் ஒலியை அடக்கி விட்டுத் தன் தந்தையும், தன் மகனும் பேசுவதை கவனித்தான்.

"மூதேவி கெட்டவங்களா?"

"கெட்டவங்கன்னு இல்ல. கடவுள்னா நமக்கு நல்லது செய்யணும் இல்ல? லக்ஷ்மி நமக்கு எல்லாம் கொடுப்பாங்கன்னு நம்பி லக்ஷ்மியை வணங்கறோம். மூதேவி நமக்கு நல்லது செய்ய மாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கை."

"அதனாலதான் மூதேவியை யாரும் கும்படறதில்லையா?"

"ஆமாம்."

"உண்மையிலேயே ஶ்ரீதேவி, மூதேவி எல்லாம் இருக்காங்களா?"

"கோவிலுக்குப் போய்க் கடவுளைக் கும்பிடறோம். கடவுள் இருக்கார்னு நினைச்சுதானே? அது மாதிரி இதெல்லாம் ஒரு நம்பிக்கைதான்."

"எங்க பள்ளிக்கூடத்தில ஒரு சார் சரியாப் படிக்காதவங்களை மூதேவின்னு திட்டுவாரு. மூதேவிங்கறது ஒரு பொண்ணுதானே? ஆனா அவரு பையங்களைக் கூட மூதேவின்னு திட்டுவாரு!"

"உங்க வாத்தியார் மட்டுமில்ல, பல பேரு ஆம்பிளைங்களைக் கூட மூதேவின்னு திட்டுவாங்க. மூதேவிங்கறது ஒரு ஆள் இல்ல. மூதேவியை லக்ஷ்மியோட அக்கான்னு சொன்னாக் கூட அவங்களை ஒரு பெண்ணா நினைக்க வேண்டியது இல்ல. அழுக்கு, சுத்தம் இல்லாம இருக்கறது, சோம்பேறித்தனம், முயற்சி செய்யாம முடங்கிக் கிடக்கறது இதுக்கெல்லாம் சேர்த்துத்தான் மூதேவின்னு ஒரு பேரு வச்சிருக்கோம்."

"நமக்கு லக்ஷ்மிதான் வேணும், மூதேவி கூடாது, இல்ல?"

"ஆமாம். லக்ஷ்மிதானே  மங்களமானவங்க. நமக்கு நல்லது செய்யறவங்க. நமக்கு எல்லா வளங்களையும் கொடுக்கறவங்க? சரி. நமக்கு எப்படி நல்லது நடக்கும். சும்மா உக்காந்துக்கிட்டிருந்தா நடக்குமா?"

நடக்காது என்று கூறுவது போல் தலையைப் பக்கவாட்டில் ஆட்டிய நிதிஷ், "ஆமாம். நான்தானே உங்கிட்ட கேள்வி கேக்கறேன்!  நீ ஏன் அடிக்கடி அப்பாவைப் பாத்துப் பேசறே? அப்பாதான் டிவி பாத்துக்கிட்டிருக்காரு இல்ல?" என்றான்.

"இல்ல. உன் அப்பாவும் நம்ம பேச்சை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கான். அதனாலதான் அவனைப் பாத்தும் பேசறேன்!" என்றார் ஏகாம்பரம், மகன், பேரன் இருவரையும் பார்த்துச் சிரித்தபடியே.

"ஏம்ப்பா? உனக்கு இதெல்லாம் தெரியாதா? நீ சின்னப் பையனா இருக்கறப்ப தாத்தா இதையெல்லாம் உனக்குச் சொல்லலியா?" என்றான் நிதிஷ் தன் தந்தையைப் பார்த்து. 

இதற்கு குமார் பதில் சொல்வதற்குள், "நிறைய தடவை சொல்லி இருக்கேன். ஆனா உங்கப்பாவுக்கு அதெல்லாம் மறந்திருக்கும். அதான் திரும்பவும் கேக்கறான். கேட்டா நல்லதுதான்!" என்ற ஏகாம்பரம், "என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்? லக்ஷ்மின்னா நல்லது செய்வாங்க. ஆனா சும்மா உக்காந்துக்கிட்டிருந்தா நல்லது நடக்காது. நாம முயற்சி செய்யணும், உழைக்கணும். முயற்சி, உற்சாகம், சுத்தம்  உழைப்பு. நல்ல எண்ணங்கள் இதையெல்லாம்தான் லக்ஷ்மின்னு சொல்றோம். நம்மகிட்ட இதெல்லாம் இருந்தா நமக்கு நல்லது நடக்கும். அழுக்கு, குப்பை, சோம்பேறித்தனம், மெத்தனம், அதிகம் தூங்கறது, நம்பிக்கை இல்லாம இருக்கறது இதையெல்லாம்தான் மூதேவின்னு சொல்றோம். இதெல்லாம் இருந்தா நல்லது நடக்காது. அதனால லக்ஷ்மின்னு சொல்றதும், மூதேவின்னு சொல்றதும் உடம்பு அளவிலேயும், மனசு அளவிலேயும் நாம ஆரோக்கியமா, சுறுசுறுப்பா, உற்சாகமா இருக்கறதையும், இல்லாததையும்தான். என்ன, புரிஞ்சுதா?" என்றார்.

புரிந்தது என்பது போல் நிதிஷ் தலையை ஆட்டினான். ஏகாம்பரம் திரும்பி மகனைப் பார்த்துச் சிரித்தார்.

தந்தை தன் முயற்சியால் ஓரளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதால், எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் சோம்பேறித்தனமாகத் தான் இருப்பதைத் தான் தந்தை சுட்டிக் காட்டுகிறார் என்று புரிந்து கொண்ட குமார் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

'அதான் எத்தனையோ தடவை என் மூஞ்சிக்கு நேரா வெளிப்படையாவே சொல்லிட்டீங்களே! இப்ப பேரனுக்கு ஏதோ கதை சொல்ற மாதிரி வேற எனக்குச் சொல்லிக் காட்டணுமாக்கும்!' என்று நினைத்துக் கொண்டான் குமார்.

'எத்தனையோ தடவை நேரடியா சொல்லியே உனக்கு உறைக்கல. இப்படி மறைமுகமா சொன்னா மட்டும் உறைக்கவா போகுது?" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் ஏகாம்பரம்.

குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

பொருள்:
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கிறாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியில் திருமகள் வாழ்கிறாள்.

618. விதியின் பிழை!

"வாடா எப்படி இருக்கே?" என்று தன் நண்பன் கண்ணனை வரவேற்றான் பிரகாஷ்.

"எப்படி இருக்க முடியும்? படிப்பை முடிச்சு ரெண்டு வருஷம் ஆகப் போகுது. இன்னும் வேலை கிடைக்கல. ரொம்ப வெறுப்பா இருக்கு. உன்னைப் பார்த்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னுதான் வந்தேன். நீ ஃப்ரீதானே?" என்றான் கண்ணன்.

"உன்னை மாதிரி நண்பர்கள் விஷயத்தில நான் எப்பவும் ஃப்ரீதான்.  ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை என் பெரியப்பாவைப் பாத்துட்டு வருவேன். இன்னிக்குப் போகலாம்னு நினைச்சேன். பரவாயில்லே. அடுத்த வாரம் போய்க்கறேன்."

"சாரி. எனக்காக நீ உன் ப்ரொக்ராமை மாத்திக்க வேண்டாம். நான் வேணும்னா அடுத்த வாரம் வரேன்."

"ஒண்ணும் பிரச்னை இல்லை. பெரியப்பாவைப் பாக்கப் போறது ஒரு மரியாதைக்காகத்தான். அடுத்த வாரம் போயிக்கறேன். நாம எங்காவது வெளியில போகலாம்" என்றான் பிரகாஷ்.

நண்பர்கள் இருவரும் ஒரு நல்ல ஓட்டலுக்குச் சென்று உணவுருந்தி விட்டு ஒரு சினிமாவுக்குப் போய் விட்டு மாலை மீண்டும் பிரகாஷின் அறைக்கு வந்தனர்.

சற்று நேரம் பொதுவாகப் பேசிய பின், "எல்லா வேலைக்கும் அப்ளை பண்ற இல்ல?" என்றான்பிரகாஷ்.

"நான் பார்த்தவரையில பெரிய நிறுவனங்கள்ள போட்டி அதிகமா இருக்கு. அம்பது போஸ்டுக்கு ஆயிரம் பேரு இன்டர்வியூவுக்கு வராங்க. அதனால பெரிய நிறுவனங்களுக்கு அப்ளை பண்றதை நிறுத்திட்டேன். மத்த வேலைகளுக்கெல்லாம் அப்ளை பண்றேன்" என்றான் கண்ணன்.

"அது தப்புடா! தேர்ந்தெடுக்கப்படற அம்பது பேரில நீ ஒத்தனா இருக்கலாமே! சில பெரிய நிறுவனங்கள்ள உன்னைத் தேர்ந்தெடுக்கலேங்கறதுக்காக, பெரிய நிறுவனங்களுக்கே அப்ளை பண்ணாம இருந்தா உனக்கான வாய்ப்புகளை நீ குறைச்சுக்கற மாதிரி ஆகாதா?"

"நல்ல கம்பெனியில வேலை கிடைக்கற கொடுப்பினை எனக்கு இல்லேன்னு நினைக்கிறேன், விதி எனக்கு எதிரா இருக்கறப்ப அதை எதிர்த்துப் போராடறதில என்ன பயன் இருக்கும்?"

அதற்கு மேல் நண்பனிடம் அது பற்றிப் பேச விரும்பாமல் பேச்சின்  திசையை மாற்றினான் பிரகாஷ்.

"ஆமாம், நம்ம குருமூர்த்தி எப்படி இருக்கான்? மறுபடி புது பிசினஸ் ஏதாவது ஆரம்பிச்சிருக்கானா?" என்றான் கண்ணன், சிரிப்புடன்.

"அவனும் உன்னை மாதிரி தன்னோட தலையெழுத்து சரியில்லைன்னுதான் நினைக்கிறான். ஆனா ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கான்" என்றான் பிரகாஷ்.

"எனக்குத் தெரிஞ்சு இன்ஷ்யூரன்ஸ் ஏஜன்சி எடுத்தான். அது சரியா வரலேன்னதும் நெட்வொர்க் மார்க்கெடிங்ல இறங்கினான். அதிலேயும் தோல்விதான். இப்ப என்ன பிசினஸ் செய்யறான்?" என்றான் கண்ணன் கேலியாக.

"கண்ணா! நீ அவனைக் கிண்டல் பண்றது சரியில்ல. உன்னை மாதிரி அவனுக்கும் வேலை கிடைக்கல. அதனால வேலை தேடிக்கிட்டே வேற என்ன செய்யலாம்னு யோசிச்சான். அதிக முதல் போடாம செய்யக் கூடியது என்னன்னு பாத்து இன்ஷ்யூரன்ஸ், நெட்வொர்க்கிங் மார்க்கெடிங்னு இறங்கினான். அதில எல்லாம் அவனுக்குத் தோல்விதான். ஆனா அவன் சும்மா இருக்க மாட்டான். வேற ஏதாவது முயற்சி செஞ்சுக்கிட்டிருப்பான்" என்றான் கண்ணன்.

'விதி மேல பழி போட்டுட்டு சரியான முயற்சி கூட செய்யாத நீ, தன் முயற்சிகள்ள தோல்வி அடைஞ்சாலும் புதுசா ஏதாவது முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கற குருமூர்த்தியைக் குற்றம் சொல்லலாமா?' என்ற கேள்வி நண்பனின் பதிலில் பொதிந்திருந்தது கண்ணனுக்குத் தெரிந்தது.

"சரி, வரேன்.நீ சொன்ன மாதிரி இனிமே பெரிய நிறுவனங்களுக்கும் அப்ளை பண்றேன்!" என்று சொல்லி நண்பனிடம் விடைபெற்றான் கண்ணன்.

குறள் 618:
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

பொருள்:
நன்மை விளைவிக்கும் விதிப்பயன் இல்லாமல் இருப்பது யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழியாகும்.

619. தானாக வந்த வாய்ப்பு

ஐந்து வருடங்களுக்கு முன் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து 'இசைபட வாழ்தல்' என்ற இசைக்குழுவை பூபதி துவங்கினான்.

இசைக்குழுவைத் தொடங்கிய புதிதில் மிகவும் உற்சாகத்துடன் பல இசை நிறுவனங்களுக்கும், இசையை வளர்ப்பதற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொண்ட சங்கீத சபாக்களுக்கும் சென்று அவர்கள் வாய்ப்புக் கேட்டனர். ஆனால் யாரும் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க முன்வரவில்லை.

பிறகு அவர்கள் தாங்களே செலவு செய்து இசை அரங்குகளை வாடகைக்கு எடுத்து இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தனர். அந்த நிகழ்ச்சிகளுக்கு சங்கீத சபாக்கள், இசை வல்லுனர்கள், ஊடகத்துறையினர், திரை இசைக்கலைஞர்கள் என்று பலருக்கும் அழைப்பு விடுத்தனர்.

ஆனால் அவர்கள் அழைப்பை ஏற்று யாரும் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்ததாகத் தெரியவில்லை.

இலவச நிகழ்ச்சி என்றாலும், அவர்களால் அதிகம் செலவு செய்து விளம்பரம் செய்ய முடியாததால் அவர்கள் நிகழ்ச்சிகளுக்குப் பார்வையாளர்கள் மிகவும் குறைவாகவே வந்தனர்.

இசை நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்கள் நிகழ்ச்சியை ரசித்துக் கைதட்டிப் பாராட்டியும், சிலர் நிகழ்ச்சி முடிந்ததும் மேடைக்கு வந்து அவர்களைப் பாராட்டியும் அவர்களை ஊக்குவித்தாலும் அவற்றால் பலன் ஏதும் ஏற்படவில்லை.

ஒருமுறை ஒரு சிறு பத்திரிகையில் அவர்கள் இசைக்குழுவைப் பாராட்டி ஒரு கட்டுரை வந்தது. அதை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. கட்டுரையை எழுதியவர் ஃபோன் செய்து இவர்களுக்குத் தெரிவித்த பிறகுதான் இவர்களே தேடிப் பிடித்து அந்தப் பத்திரிகையை வாங்கிப் படித்தனர்!

அதனால் அதிகம் பேர் படிக்காத அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இசைக்குழுவை ஆரம்பித்தபோது அவர்களுக்கு இருந்த உற்சாகமும், ஆர்வமும், இந்த ஐந்து ஆண்டுகளில் சிறிது சிறிதாகக் கரைந்து தங்கள் இசைக்குழுவைக் கலைத்து விட்டு வேறு எதிலாவது ஆர்வம் செலுத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராத அந்த வாய்ப்பு வந்தது.

நகரின் புகழ் பெற்ற சங்கீத சபாக்களில் ஒன்றான, 'தேவகான சபா'வின் செயலாளரிடமிருந்து அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 

சமீபத்தில் நடந்த அவர்கள் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர் அவர்களுடைய திறமையை நேரில் பார்த்து அறிந்து கொண்டு, அவர்களுக்குத் தங்கள் சபையில் வாய்ப்புக் கொடுக்க முன் வந்தார்.

அவர் தொலைபேசியில் பேசிய அடுத்த நாளே, நிகழ்ச்சியை உறுதி செய்து அந்த சபாவிலிருந்து ஒரு மின்னஞ்சல் செய்தி வந்தது. அந்தச் செய்தியில் நிகழ்ச்சி நடக்கும் தேதி, பிற விவரங்களுடன் இசை நிகழ்ச்சிக்காக அவர்களுக்கு அளிக்கப்படும் சன்மானமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சன்மானமாகக் குறிப்பிடப்பட்டிருந்த தொகையைப் பார்த்ததும் பூபதிக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. மூன்று மணி நேர இசை நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

"இவ்வளவு வருஷம் கழிச்சு இப்படி ஒரு அருமையான வாய்ப்பு வந்திருக்கு! இதை நாம்  சிறப்பா பயன்படுத்திக்கணும். இதை நாம சிறப்பா செஞ்சுட்டா நமக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்" என்றான் பூபதி.

"தேவகான சபாவில நம்ம நிகழ்ச்சி நடக்கிறதே நமக்கு நல்ல பப்ளிசிடிதான். எல்லோருக்கும் நம்மைப் பத்தித் தெரிஞ்சுடும்" என்றான் அவன் நண்பன் பாஸ்கர்.

"ரெண்டு மாசம் அவகாசம் இருக்கு. நல்லா ரிகர்சல் பண்ணி இதுவரைக்கும் நாம பண்ணாத அளவுக்குப் பிரமாதமா நம்ம நிகழ்ச்சியை நாம செய்யணும்" என்றான் பூபதி.

அடுத்த நாளே அவர்கள் ரிகர்சலைத் தொடங்கி விட்டார்கள்.

நிகழ்ச்சி நடக்க வேண்டிய  நாளுக்கு ஒரு வாரம் முன்பு தேவகான சபாவிலிருந்து அவர்களுக்கு மின்னஞ்சலில் ஒரு செய்தி வந்தது. "எதிர்பாராத காரணங்களால்" அவர்கள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக அந்தச் செய்தி அறிவித்தது. 

பாஸ்கரை அழைத்துக் கொண்டு பூபதி தேவகான சபா அலுவலகத்துக்குச் சென்றான். அங்கே சபாவின் தலைவரைப் பார்க்கப் பலர் காத்திருந்தனர். செயலாளர் அவர் அறையில் இல்லை. ஒருவேளை தலைவரின் அறையில் இருப்பார் என்று அவர்கள் நினைத்தனர்.

வரிசையாக ஒவ்வொருவராகத் தலைவர் அறைக்குச் சென்று திரும்பினர். அனைவருமே ஓரிரு நிமிடங்கள்தான் உள்ளே இருந்தனர். வெளியே வந்தவர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லை.

பூபதியின் முறை வந்தபோது இருவரும் தலைவரின் அறைக்குச் சென்றனர்.

"இங்கே செயலாளரா இருந்தவரு சில நிதிமுறைகேடுகள்ள ஈடுபட்டிருக்காரு. அதனால அவரை சஸ்பெண்ட் பண்ணி இருக்கோம். அதோட அவர் ஏற்பாடு செஞ்ச எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து பண்ணிட்டோம். போலீஸ்ல புகார் கொடுத்திருக்கோம். போலீஸ் விசாரணை முடிஞ்சப்பறம்தான் மறுபடி எங்க செயல்பாடுகளைத் தொடங்குவோம். அதுக்கு எத்தனை மாசம் ஆகும்னு தெரியாது. ஐ ஆம் சாரி!" என்றார் தலைவர்.

"சார்! நீங்க எங்களுக்கு ஈமெயில் மூலமா நிகழ்ச்சியை உறுதிப்படுத்தி இருக்கீங்க. இதுக்காக நாங்க ரெண்டு மாசமா ரொம்பவும் கஷ்டப்பட்டு ரிகர்சல் பண்ணி இருக்கோம். ஒவ்வொரு ரிகர்சலுக்கும் ஆர்ட்டிஸ்டுகளுக்குப் பணம் கொடுக்கணும். அவங்க தங்களோட இசைக்கருவிகளை எடுத்துக்கிட்டு வரதுக்காக டாக்சிக் கட்டணம் கொடுக்கணும். இதுக்காக எங்க பணமும், நேரமும் செலவாகி இருக்கு. இப்ப நீங்க எப்படி கான்சல் பண்ண முடியும்?" என்றன் பூபதி கோபத்துடன்.

தலைவர் சிரித்தபடியே, "எந்தக் காரணமும் குறிப்பிடாம, நிகழ்ச்சி எப்ப வேணும்னா ரத்து செய்யப்படலாம், அதற்கு இழப்பீடு எதுவும் கிடையாதுன்னு ஒரு நிபந்தனை அந்த ஈமெயில்லே இருந்ததே, அதை நீங்க கவனிக்கலியா? சாரி! உங்க இழப்பு எங்களுக்குப் புரியுது. ஆனா எங்களால எதுவும் செய்ய முடியாது. எங்க வக்கீல்  யோசனைப்படிதான் இதை செஞ்சிருக்கோம்!" என்றார் தலைவர்.

"என்னடா இப்படி ஆயிடுச்சு? எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நாம இவ்வளவு கஷடப்பட்டு ரிகர்சல் பண்ணினதில்ல. அத்தனை முயற்சியும் பலன் இல்லாம போயிடுச்சே!" என்றான் பாஸ்கர் ஆற்றாமையுடன்.

"என்ன செய்யறது? நம்ம அதிர்ஷ்டம் அப்படி இருக்கு! இதைத்தான் விதின்னு சொல்றாங்க போலருக்கு. நம்ம குழுவில யாருக்குமே தலையெழுத்து சரியில்ல போலருக்கு!" என்றான் பூபதி.

பூபதியின் கைபேசி ஒலித்தது.

"ஆமாம்.... சொல்லுங்க...ம்..ம்..அப்படியா? என்னிக்கு? நிச்சயமா! அது ஒரு பிரச்னை இல்லை சார். ரொம்ப நன்றி!"

"என்ன? தேவகான சபால வேற தேதியில நிகழ்ச்சியை வச்சுக்கலாங்கறாங்களா?" என்றான் பாஸ்கர் விளையாட்டாக.

"அது இல்ல. ஆனா அது மாதிரிதான்! இளைஞர் இலக்கிய மன்றத்தோட செயலாளர்தான் பேசினார். நாம தேவகான சபாவில இருந்தபோது அவரும் அங்கே இருந்திருக்காரு. அவங்க நிகழ்ச்சிக்காக தேவகான சபாவில ஹால் புக் பண்ணி கான்சல் ஆகி இருக்கு. அதுக்காக அவர் வந்திருக்காரு. இப்ப வேற ஹால் புக் பண்ணி இருக்காராம். அவங்க நிகழ்ச்சியோட முடிவில ஒரு மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்த முடியுமான்னு கேக்கறாரு. அவங்களால ஒரு சின்னத் தொகைதான் கொடுக்க முடியுமாம். இதுவரைக்கும் நாம ரிகர்சலுக்கு செலவழிச்ச பணம் வந்துடும்னு நினைக்கிறேன். ஆனா அவங்க நிகழ்ச்சிக்கு நிறைய கூட்டம் வரும். அதனால நமக்கு நல்ல பப்ளிசிடி கிடைக்கும்னு சொல்றாரு. சரின்னு சொல்லிட்டேன்!" என்றான் பூபதி.

"பரவாயில்ல. பணம் கிடைக்காட்டாலும், நாம பண்ணின ரிகர்சல் வீண் போகல. அவரு சொல்றபடி நமக்கு பப்ளிசிடி கிடைச்சு எதிர்காலத்தில நமக்கு உதவலாம்!" என்றான் பாஸ்கர்.

குறள் 619:
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

பொருள்:
விதியின் காரணத்தால் ஒரு செயலில் நமக்கு வெற்றி கிட்டாவிட்டாலும்,  உடலை வருத்திச் செயல்பட்டதற்கான கூலியை முயற்சி கிடைக்கச் செய்யும்.

620. விரைவில் விலகிய சனி!

"வேலை போயிடுச்சு, வேற வேலை கிடைக்கல. அதுக்காக சும்மா இருக்க முடியுமா? ஏதாவது முயற்சி செஞ்சுதானே ஆகணும்?" என்றான் வேலு.

"முயற்சி செய்யறேன்னுட்டு புதுசு புதுசா ஏதோ தொழில் செய்யறேன்னு இருக்கற பணத்தையும் செலவழிச்சீங்கன்னா அப்புறம் நாம எல்லாரும் நடுத்தெருவுக்கு வர வேண்டியதுதான்!" என்றாள் அவன் மனைவி செல்வி கோபத்துடன்.

"இங்கே பாருடா! இப்ப உனக்கு ஏழரை நாட்டு சனி  நடக்குது. அதனாலதான் உனக்கு வேலை போச்சு. இப்ப நீ எந்த முயற்சி செஞ்சாலும் அது நஷ்டத்திலதான் முடியும். நேரம் சரியாகிற வரைக்கும் புது முயற்சி எதிலேயும் ஈடுபட வேண்டாம்னு ஜோசியர் சொல்லி இருக்காரு!" என்றாள் வேலுவின் தாய் கிருஷ்ணவேணி.

பெரியவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று புரியாமல் அவர்கள் முகங்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வேலுவின் மூன்று வயதுப் பெண் ராஜஶ்ரீ.

"ஏழரை நாட்டு சனி போகட்டும்னு அஞ்சாறு வருஷம் நான் சும்மா உக்காந்துக்கிட்டிருந்தா, அது முடிஞ்சு நல்ல காலம் வரப்ப நானே இருக்க மாட்டேம்மா!" என்றான் வேலு சிரித்துக் கொண்டே.

பிறகு, மனைவியைப் பார்த்து, "செல்வி! உன்னோட கவலை எனக்குப் புரியுது. நான் உன்னோட நகைகளையோ, அம்மாவோட நகைகளையோ அடகு வைக்கவோ, விக்கவோ இல்ல. என்னோட சேமிப்பிலேந்து கொஞ்சம் எடுத்து முதலீடு செய்யறேன். ஆரம்பத்தில முதலீடு இல்லாத சில ஏஜன்சி எல்லாம் எடுத்துப் பாத்தேன். அதுல எல்லாம் அதிகம் வருமானம் வரலை. நல்ல கம்பெனயில ஏஜன்சி எடுத்தாத்தான் பிசினஸ் நல்லா வரும், வருமானமும் நிறைய வரும். அதுக்குக் கொஞ்சம் முதலீடு செஞ்சுத்தான் ஆகணும். அதைத்தான் நான் செய்யறேன்" என்றான் வேலு.

பிறகு, தன் தாயைப் பார்த்து, "அம்மா! நான் ஜோசியத்தைத் தப்புன்னு சொல்லல. ஜோசியர் சொல்றது சரின்னு வச்சுக்கிட்டாக் கூட, நமக்கு நேரம் சரியில்லாதபோது நாம எல்லாவிதத்திலேயும் முயற்சி செஞ்சு இன்னும் கடுமையா உழைக்கணும்னுதானேஅர்த்தம்? ஜோசியருக்கு ஏழரை நாட்டு சனி வந்தா, அப்ப தனக்கு வருமானம் வராதுன்னு நினைச்சு ஏழரை வருஷம் அவர் ஜோசியம் சொல்றதையே நிறுத்திடுவாரா என்ன?" என்றான் வேலு.

பிறகு ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்த பிறகு, "ஒரு ஆறு மாசத்துக்கு நீங்க ரெண்டு பேரும் என்னை எந்தக் கேள்வியும் கேக்காம என் இஷ்டத்துக்குச் செயல்பட விடுங்க. குடும்பத்துக்குத் தேவையானதை நான் செஞ்சுடறேன். ஒருவேளை என் முயற்சி வெற்றி அடையலேன்னா மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு நாம மூணு பேரும் சேர்ந்து முடிவு செய்யலாம்" என்றான் வேலு.

ழெட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் செல்வி வேலுவிடம் கேட்டாள்.

"கொஞ்ச நாளா கவனிச்சுக்கிட்டு வரேன். நீங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க. லேட்டா வீட்டுக்கு வரீங்க. சரியா சாப்பிடறதில்ல, தூங்கறதில்ல. ஏதாவது யோசிச்சுக்கிட்டே இருக்கீங்க.  ரெண்டு நாள் முன்னாடி ஒரு லட்ச ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட்டை கேன்ஸல் பண்ணி எடுத்திருக்கீங்க. எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு. என்ன நடக்குது? சொல்லுங்க. பெரிய அளவில நஷ்டம் வந்துடுச்சா? நீங்க சொன்ன ஆறு மாசம் தாண்டிடுச்சே?" 

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த வேலு, பிறகு "ரெண்டு மூணு நாள் கழிச்சு சொல்லலாம்னு பாத்தேன். நீ கேட்டதால இப்பவே சொல்றேன். முதல்ல ரெண்டு மூணு மாசம் கஷ்டமா இருந்தாலும் அதுக்கப்புறம் பிசினஸ் நல்லாப் போக ஆரம்பிச்சுடுச்சு. முதல்ல கமிஷன் அடிப்படையிலதான் செயல்பட்டுக்கிட்டு வந்தேன். நான் நல்லா செயல்படறதால, இப்ப கம்பெனியில டெபாசிட் எதுவும் இல்லாம ஒரு மாசம் கடன்ல எனக்கு சரக்கு கொடுக்கறேன்னு சொல்றாங்க. சரக்குகளை வித்தப்பறம் பணம் கொடுத்தா போதும். லாபமும் அதிகம் வரும். ஆனா சரக்குகளை வைக்க கோடவுன் வேணுமே! அதுக்குத்தான் இடம் தேடிக்கிட்டிருந்தேன். வாடகை, அட்வான்ஸ் எல்லாமே அதிகமாக் கேக்கறாங்க. அதனாலதான் அலைஞ்சு திரிஞ்சு குறைஞ்ச வாடகையில ஒரு இடத்தைப் பிடிச்சேன். அட்வான்ஸ் ரெண்டு லட்சம் ரூபாய். இத்தனை நாளா கிடைச்ச லாபத்தில குடும்பச் செலவுக்குக் கொடுத்தது போக ஒரு லட்சம் ரூபா சேர்த்து வச்சிருந்தேன். மீதி ஒரு லட்ச ரூபாயுக்காகத்தான் ஃபிக்சட் டெபாசிட்டை கேன்ஸல் பண்ணி எடுத்தேன். இன்னும் ரெண்டு நாள்ள கோடவுனுக்கு சரக்கு வந்துடும். அதுக்கப்பறம் வியாபாரம் நல்லாப் போகும். வருமானமும் சீரா வரும்!" என்றான் வேலு பெருமிதத்துடன்.

"நம்பவே முடியலியே! நான் ஏதோ மோசமா நடந்திருக்கும்னு நினைச்சு பயந்துக்ககிட்டிருந்தப்ப, இப்படி எதிர்பாராத சந்தோஷமான சேதியைச் சொல்றீங்க!" என்றாள் செல்வி ஆனந்தத்துடன். 

"உங்க அம்மாகிட்ட இதைச் சொல்லணும். ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டிருந்தாங்க" என்றாள் தொடர்ந்து.

"ஆமாம். அவங்க ஜோசியர்கிட்ட போய்க் கேப்பாங்க. அவரு என் ஜாதகத்தைப் பாத்துட்டு சனிக்கு ஏதோ அவசர வேலை வந்ததால ஏழரை வருஷம் இருக்கறதுக்கு பதிலா ரெண்டரை வருஷத்திலேயே கிளம்பிப் போயிட்டாருன்னு சொன்னாலும் சொல்லுவாரு!" என்று சொல்லிச் சிரித்தான் வேலு.

குறள் 620:
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

பொருள்:
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவரால், விதியைக் கூட வெற்றி கொள்ள முடியும்.

                                                                                                                                            அறத்துப்பால்                                               காமத்துப்பால்   

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...