அதிகாரம் 98 - பெருமை

திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

971. தந்தையும் மகனும்

"அரசு நிறுவனத்தில நல்ல வேலை. சம்பளம், இன்க்ரிமென்ட், விலைவாசிப்படி உயர்வுன்னு எல்லா வசதியும் இருக்கு. நீ வேலையே செய்யாட்டாலும், புரொமோஷன் எல்லாம் ஆடோமாடிக்கா வந்துடும். அப்படி இருக்கறப்ப, எதுக்குப் புதுசா ஒரு கோர்ஸ் படிச்சுக்கிட்டிருக்கே!" என்றார் சம்பந்தம், தன் மகன் மகேஷிடம்.

"இல்லப்பா! டேட்டா அனாலிசிஸ்னு ஒரு சப்ஜெக்ட். அதில நிறைய வாய்ப்புகள் இருக்கறதா சொல்றாங்க. சாயந்திரம் ஆஃபீஸ்லேந்து வந்ததும் சும்மாதானே இருக்கேன். அதுதான் ரெண்டு மணி நேரம் கிளாஸ் போயிட்டு வரேன்" என்றான் மகேஷ்.

"அதுதான் எதுக்குங்கறேன்? இந்தப் படிப்பு உன் வேலையில முன்னேற உதவுமா?"

"நான் பாக்கற வேலைக்கும் இதுக்கும் தொடர்பு இல்லைப்பா. ஒரு ஆர்வத்திலதான் படிக்கறேன். இப்போதைக்குப் புதுசா ஒரு விஷயத்தைக் கத்துக்கறது உற்சாகமா இருக்கு. எதிர்காலத்தில ஏதாவது பயன் இருக்கலாம். இல்லாட்டாலும் பரவாயில்ல. ஆர்வத்தோட ஏதாவது ஒரு செயல்ல ஈடுபட்டுக்கிட்டிருக்கறது மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குது."

சில மாதங்கள் கழித்து, மகேஷ், சம்பந்தத்திடம், "என்னப்பா, இப்பல்லாம் நீங்க சாயந்திரம் எங்கேயோ போயிட்டு வரீங்க போல இருக்கே!" என்றான்.

"ஆமாம். அன்னிக்கு நீ டேட்டா அனாலிசிஸ் படிக்கறது உனக்கு உற்சாகமா இருக்குன்னு சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன். பென்ஷன் வாங்கிக்கிட்டு வீட்டில சும்மா உக்காந்திருக்கறது எனக்கு போரடிக்குது. அதனால சில சமயம் விரக்தி கூட வர மாதிரி இருக்கு. அதனாலதான் நானும் ஏதாவது செய்யலாம்னு யோசிச்சு, பக்கத்தில இருக்கற ஒரு சேவை நிறுவனத்துக்குப் போய்க் கொஞ்ச நேரம் வேலை செஞ்சுட்டு வரேன். இப்ப எனக்கு அது நிறைய உற்சாகத்தைக் கொடுக்குது!" என்றார் சம்பந்தம்.

"கிரேட் அப்பா!" என்றான் மகேஷ்.

குறள் 971:
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

பொருள்: 
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளி தருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர் வாழ்வது இழிவு தருவதாகும்.

972. புது மானேஜர்

புதிய மானேஜர் சங்கரராமனின் அறைக்குள் தயங்கிக் கொண்டே நுழைந்தான் சூபர்வைசர் கணபதி.

"வாங்க கணபதி! உக்காருங்க!" என்றார் சங்கரராமன்.

கணபதி சற்றே தயக்கத்துடன் அமர்ந்தான். 

பழைய மானேஜராக இருந்தால், அவர் அறைக்குள் அவன் நுழைந்ததுமே, அவனைப் பார்த்துப் புருவத்தை உயர்த்துவார். சொல்ல வேண்டியதைக் கதவுக்கருகில் நின்றபடியே சொல்லி விட்டுப் போக வேண்டியதுதான். அவர் முன் உட்காருவது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

மானேஜருடன் பேசி விட்டுத் திரும்பியபோது, 'இவர் சற்று வித்தியாசமானவர்' என்ற எண்ணம் கணபதியின் மனிதில் ஏற்பட்டது.

அடுத்த சில மாதங்களில், கணபதிக்கு சங்கரராமனுடன் ஒருவித நெருக்கமே ஏற்பட்டு விட்டது என்று சொல்லலாம். இருவரும் தொழிற்சாலை விஷயங்களைப் பற்றித்தான் பேசினார்கள் என்றாலும், அவருடன் பேசி விட்டு வந்தபோது, ஒரு நெருங்கிய நண்பனிடம் பேசியது போன்ற ஒரு உணர்வு கணபதிக்கு ஏற்பட்டது.

ருநாள், தொழிற்சாலை நிர்வாகம் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த சங்கரரராமன், "எனக்கு டயாபடீஸ் இருக்கு. அதனால நான் நேரத்துக்கு சாப்பிடணும். உங்க லஞ்ச் பாக்சை இங்கே எடுத்துக்கிட்டு வந்துடுங்களேன். ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்" என்றார்.

கணபதி சற்று அதிர்ச்சியுடன், "நீங்க சாப்பிடுங்க சார். நான் அப்புறம் வரேன்" என்று எழுந்தான்.

"உக்காருங்க. ஏன், லஞ்ச் கொண்டு வரிலியா? அப்படின்னா, என்னோட லஞ்சசைக் கொஞ்சம் ஷேர் பண்ணிக்கங்க. வேணும்னா, அப்புறம் நீங்க வெளியில போய் சாப்பிட்டுக்கலாம்! ஏன்னா, என் லஞ்ச் பாக்ஸ்ல என் மனைவி ரொம்பக் கொஞ்சமாதான் சாப்பாடு வச்சிருப்பாங்க!" என்றார சங்கரராமன் .

"அதுக்கில்லை சார்! நீங்க உயர்ந்த ஜாதின்னு நினைக்கறேன். நான் தாழ்ந்த ஜாதி! உங்களோட சேர்ந்து சாப்பிடறது சரியா இருக்காது!" என்றான் கணபதி, தயக்கத்துடன்.

"கடவுளே!" என்ற சங்கரராமன், ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டார்.

பிறகு, "அப்படியெல்லாம் எதுவும் இல்லை, கணபதி. கடவுள் எல்லாரையும் சமமாத்தான் படைச்சிருக்காரு!" என்றார்.

"ஜாதிகளை நான்தான் படைச்சேன்னு கடவுளே சொல்லி இருக்கறதா சொல்றாங்களே சார்!"

"கடவுளே! உனக்கு இப்படி ஒரு கெட்ட பேரா?" என்று சொல்லிச் சிரித்தார் சங்கரராமன். 

"நீங்க தொழிலாளர்களுக்கு ஒரு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுக்கணும்னு நினைக்கிறீங்க. நீங்க சொன்னா அவங்க கேப்பாங்களோ மாட்டாங்களோன்னு நினைச்சுக்கிட்டு, மானேஜர்தான் இப்படிச் சொன்னார்னு சொல்றீங்க. தொழிலாளர்கள் எங்கிட்ட வந்து, 'நீங்க இப்படிச் சொன்னீங்களா?'ன்னு கேக்கவா போறாங்க? அது மாதிரிதான், யாரோ செஞ்சு வச்ச விஷயத்துக்குக் கடவுள் மேல பழியைப் போட்டுட்டாங்க!" என்றார், தொடர்ந்து.

"பிறப்பால எல்லாரும் சமம்னு சொல்றீங்க. அப்படின்னா, மனுஷங்களுக்குள்ள உயர்வு தாழ்வு இருக்கே, அது எப்படி சார்?"

"ரெண்டு விஷயம். ஒவ்வொத்தருக்கும் சூழ்நிலை வேறுபடலாம். வசதியான குடும்பத்தில பொறந்த ஒத்தருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம். ரெண்டாவது, உயர்வு தாழ்வுங்கறது நாம செயல்படற விதத்தால வருது. ரெண்டாவதுதான் ரொம்ப முக்கியம்னு நினைக்கறேன். ஏன்னா, ஒரே சூழ்நிலையில பொறந்து வளர்ந்த ரெண்டு பேர் வாழ்க்கையில ஒரே மாதிரி முன்னேறுவது இல்லையே!"

"நான் ஏழைக் குடும்பத்தில பொறந்தேன். அதனால, அதிகமாப் படிக்க முடியல. வசதியான குடும்பத்தில பொறந்திருந்தா, அதிகம் படிக்க வாய்ப்பு இருந்திருக்கும். அதனால, சூழ்நிலை கூட நாம எங்கே பொறக்கறோங்கறதை ஒட்டித்தானே சார் அமையுது?" என்றான் கணபதி

"சூழ்நிலை நிச்சயம் ஒரு முக்கியமான விஷயம்தான். ஆனா, சூழ்நிலை சரியாக இல்லாட்டாலும், அதையும் மீறி வெற்றி அடைஞ்சவங்க உண்டு. சூழ்நிலை நல்லா இருந்தும், அதைப் பயன்படுத்திக்காம போனவங்களும் உண்டு. அதனால செயல்கள்தான் நம்மை வேறுபடுத்துதுன்னு சொல்லுவேன்."

கணபதி அவர் சொன்னதை முழுவதும் ஏற்றுக் கொள்ளாதது போல், மௌனமாக இருந்தான்.

"என்னைப் பார்க்க ஒத்தர் இங்கே அப்பப்ப வருவாரே, கவனிச்சிருக்கீங்களா?" என்றார் சங்கரராமன்

"ஆமாம், பாத்திருக்கேன், எப்பவும் ஏதோ பிரச்னையில இருக்கற மாதிரி சோகமா இருப்பாரு" என்ற கணபதி, தான் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாதோ என்று நினைத்து, உடனே "சாரி!" என்றான்.

"பரவாயில்ல. நீங்க அப்படி நினைச்சது சரிதான். அவன் என் தம்பிதான். எனக்கு இருந்த எல்லா வாய்ப்புகளும் அவனுக்கு இருந்தது. ஆனா, அவன் அவற்றைப் பயன்படுத்திக்கல. சரியாப் படிக்காம, அலட்சியமா விளையாட்டுத்தனமா இருந்தான். இப்ப அவனுக்குச் சரியான வேலை இல்லை. ரொம்ப கஷ்டப்படறான். எங்கிட்ட உதவி கேட்டு வருவான். நானும் என்னால முடிஞ்ச உதவியைச் செய்வேன்... என்ன எழுந்திட்டீங்க? போரடிக்கிறேனா?"

"இல்லை சார். நீங்க டயத்துக்கு சாப்பிடணும் இல்ல? நான் போய் என் லஞ்ச் பாக்சை எடுத்துக்கிட்டு வரேன்" என்றான் கணபதி, சிரித்துக் கொண்டே. 

குறள் 972:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பொருள்: 
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரே தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால், சிறப்புத்தன்மை ஒத்திருப்பதில்லை.

973. சிறு விபத்து

சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தப்பட்ட கார், ஒரு அதிர்வுடன் நின்றது.

"டிரைவர்! என்ன ஆச்சு? ஏதோ இடிச்ச மாதிரி இருந்ததே!" என்றாள் காரில் அமர்ந்திருந்த அபிராமி.

"ஆமாம் மேடம். ஒரு சைக்கிள் வந்து மோதிடுச்சு. இருங்க பாக்கறேன்" என்றபடியே காரிலிருந்து இறங்கினான் டிரைவர் சுதாகர்.

அந்தச் சாலையில் போக்குவரத்து எதுவும் இல்லை. சாலையில் அப்போது மனிதர்கள் யாரும் கூட இல்லை.

சுதாகர் காரிலிருந்து இறங்கி, சைக்கிளுடன் சேர்ந்து கீழே விழுந்திருந்த மனிதனைத் தூக்கி நிறுத்தினான்.

அந்த மனிதனின் எளிய உடையும், பயந்த முகமும் அவன் சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் ஒரு மனிதன் என்பதை உணர்த்தின.

"ஏம்ப்பா குறுக்கே வந்தே? பார்த்து வரக் கூடாது?" என்று சுதாகர் அவனைக் கேட்டுக் கொண்டிருந்தபோதே, காரிலிருந்து இறங்கி வந்த அபிராமி, பளாரென்று அந்த மனிதனின் கன்னத்தில் அறைந்தாள்.

"ஏண்டா, ரோடில எங்களையெல்லாம் நிம்மதியா கார் ஓட்ட விட மாட்டீங்களா? நீ பாட்டுக்குக் குறுக்கே வந்து மோதற! புது கார் டேமேஜ் ஆயிடுச்சு பார்!" என்றாள் அபிராமி.

காரில் ஒரு பெயின்ட் உதிரல் கூட ஏற்படவில்லை என்பதை கவனித்த சுதாகர், "அடிக்காதீங்க மேடம்! பிரச்னை ஆயிடும். காருக்கு ஒண்ணும் ஆகல" என்றான்.

அதற்குள் எங்கிருந்தோ வந்த சிலர் அங்கே கூடி விட்டனர்.

"என்ன ஆச்சு?" என்றான், முரட்டுத் தோற்றத்துடன் இருந்த ஒரு ஆள்.

"இந்த ஆளு பாவம், ஓரமா சைக்கிள்ள வந்துக்கிட்டிருந்தாரு. இந்த அம்மா வந்து காரை அவன் மேல மோதிட்டு, அவனைக் கன்னத்தில வேற அறையறாங்க!" என்றான், சற்றுத் தொலைவிலிருந்து நடந்தவற்றைப் பார்த்த மற்றொருவன்.

"நான் காரை ஓட்டல!" என்றாள் அபிராமி, எச்சரிக்கை உணர்வுடன்.

"நான்தாங்க கார் ஓட்டினேன். இவரு திடீர்னு குறுக்க வந்ததால, கார் மோதிடுச்சு. அவருக்கு ஒண்ணும் ஆகல" என்றான் சுதாகர், சமாதானமாக.

சுதாகரின் பேச்சைப் பொருட்படுத்தாத அந்த முரட்டு ஆள், "ஏம்மா, எவ்வளவு தெனாவெட்டு இருந்தா, இவர் சைக்கிள் மேல காரை மோதிட்டு, அவரைக் கன்னத்தில வேற அறைஞ்சிருப்பீங்க? சைக்கிள் ரிப்பேர் செலவு, அவரோட ஆஸ்பத்திரிச் செலவு, அவரை அறைஞ்சது எல்லாத்துக்கும் சேர்த்து பத்தாயிரம் ரூபா எடுத்து வையுங்க. இல்லேன்னா, காரைப் போக விட மாட்டோம்!" என்றான், அபிராமியைப் பார்த்து.

"இல்லை, நான் அவரை அடிக்கல" என்றாள் அபிராமி, பலவீனமான குரலில்.

"அடிச்சதைப் பார்த்ததுக்கு சாட்சி இருக்கு. கையில பணம் இருக்கா? இல்லேன்னா, ஜிபே கூடப் பண்ணலாம். நம்பர் சொல்லட்டுமா?"

அபிராமி பரிதாபமாக சுதாகரைப் பார்த்தாள்.

அதற்குள் கீழே விழுந்து கிடந்த சைக்கிளைத் தூக்கி நிறுத்திய அந்த மனிதன், "தப்பு என் மேலதான். நான்தான் குறுக்கே வந்துட்டேன். எனக்கு அடி எதுவும் படல. அவங்க என்னை அடிக்கவும் இல்ல. சைக்கிளுக்கு ஒண்ணும் ஆகல. கொஞ்சம் பெண்ட் ஆகி இருக்கு. பக்கத்தில இருக்கற சைக்கிள் கடையில பெண்டை நிமித்திக்கறேன்" என்று கூறி விட்டுத் தன்னால் முடிந்த அளவுக்கு சைக்கிளை நேராக்கி விட்டு, அதைக் கஷ்டப்பட்டுத் தள்ளிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

முரட்டு ஆளும், மற்றவர்களும் முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்ப, அபிராமி காரில் ஏறி அமர்ந்து கொள்ள, சுதாகர் காரைக் கிளப்பினான்.

கார் கிளம்பியதும், "லோ கிளாஸ் பீப்பிள்!" என்றாள் அபிராமி.

"யாரைச் சொல்றீங்க?" என்றான் சுதாகர், தனக்குள் சிரித்தபடியே.

குறள் 973:
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

பொருள்: 
மேல்நிலையில் இருந்தாலும், மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ்நிலையில் இருந்தாலும், இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

974. தீயா இருக்கணும் குமாரு!

"துரைக்கண்ணு இத்தனை வருஷமா அரசியல்ல இருக்காரு. ஆனா, அவர் மேல ஒரு கரும்புள்ளி கூட இல்ல. ரொம்ப ஆச்சரியமா இருக்கு!"

"இத்தனைக்கும், அவர் மூணு தடவை அமைச்சரா இருந்திருக்காரு. நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறைன்னு லஞ்சம் அதிகம் நடமாடற துறைக்கு எல்லாம் அமைச்சரா இருந்திருக்காரு. அப்படி இருந்தும், அவர் மேல ஒரு புகார் கூட இல்ல."

"ஒரு அரசியல்வாதி தப்புப் பண்ணாம இருந்தா கூட, எதிர்க்கட்சிகள் அவர் மேல ஏதாவது குற்றம் சாட்டுவாங்க. ஆனா, இவர் விஷயத்தில, அவங்களால ஒண்ணும் சொல்ல முடியல!"

"ஒண்ணு ரெண்டு பேரு முயற்சி செஞ்சாங்க. ஆனா, துரைக்கண்ணு அவங்க சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யின்னு ஆதாரபூர்வமா நிரூபிச்சப்பறம், அவங்க மன்னிப்புக் கேட்டுக்கிட்டாங்க."

அரசியல்வாதி துரைக்கண்ணுவைப் பற்றி இரண்டு பத்திரிகை நிருபர்கள் பேசிக் கொண்டது இது.

"ஏம்ப்பா, எல்லாரும் சொல்ற மாதிரி, நீ அத்தனை சுத்தமானவனா?" என்றார் துரைக்கண்ணுவின் நண்பர் குலசேகரன்.

"ஏன், அதில உனக்கென்ன சந்தேகம்?" என்றார் துரைக்கண்ணு.

"எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான்தான் உன்னை சின்ன வயசிலேந்து பார்த்துக்கிட்டிருக்கேனே! உன் அரசியல் எதிரிகள் கூட உன்னை சுத்தமானவன்னு ஏத்துக்கறாங்களே, அதுதான் எனக்கு ஆச்சரியம்!"

"நாம எப்படி இருக்கோங்கறதைப் பத்தி நமக்கு ஒரு தெளிவு இருந்தா, நாம தப்பு செய்யாம இருக்கலாம். மத்தவங்களுக்கும் நம்மைக் குற்றம் சொல்ல வாய்ப்பு இருக்காது."

"நீ சொல்றது எனக்குப் புரியலியே!"

"இந்த உதாரணம் பழசுன்னாலும், இதைச் சொல்லி விளக்கறதுதான் பொருத்தமா இருக்கும். ஒரு பொண்ணு கற்புள்ளவள்னா, அவளைப் பத்தி என்ன சொல்லுவாங்க?"

"அவ நெருப்பு மாதிரி. அவளை யாரும் நெருங்கக் கூட முடியாதுன்னு சொல்லுவாங்க" என்றார் குலசேகரன்.

"அதேதான். நானும் அப்படித்தான் தவறான எண்ணங்கள், ஆசைகள் இதையெல்லாம் என் பக்கத்தில நெருங்க விடாம, கடுமையா நடந்துக்கறேன். அதனால, தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லாமல் போகுது" என்றார் துரைக்கண்ணு.

குறள் 974:
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

பொருள்: 
ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால், ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல் பெருமைப் பண்பும் அவனுக்கு உளதாகும்.

975. வேலை மாற்றல் உத்தரவு

"'பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்'ங்கறதுதான் எல்லா நிறுவனங்களோட அடிப்படை மந்திரம். நீ அதை மீறினா, சும்மா விடுவாங்களா?" என்றான் சிவராமன்

"அப்படின்னா?" என்றான் நவனீத்.

"உனக்கு இங்கிலீஷ் தெரியாதா? பாஸ் ஏதாவது சொன்னா, அது தப்பா இருந்தாலும், மறுப்பு சொல்லாம ஏத்துக்கணும்."

"நான் அதைக் கேக்கல. சும்மா விடுவாங்களான்னு சொன்னியே, என்ன செய்வாங்கன்னு கேட்டேன்."

"என்ன செய்வாங்க? உன்னை எங்கேயாவது தண்ணி இல்லாத காட்டுக்குத் தூக்கி அடிப்பாங்க. பரவாயில்லையா?" என்றான் சிவராமன், இகழ்ச்சியாக.

"ஜெனரல் மானேஜர் ஒரு டெவலப்மென்ட் பிளான் சொன்னாரு. அதைப் பத்திக் கருத்துக் கேட்டாரு. நான் என் கருத்தைச் சொன்னேன். அவ்வளவுதானே?"

"உனக்குப் புரியலைடா. தன்னோட திட்டத்தைப் பத்தி அவர் நம்ம கருத்தைக் கேட்டதே  நாம எல்லாரும் அதை ரொம்பப் பிரமாதமான திட்டம்னு சொல்லணுங்கறதுக்காகத்தான். இங்கே, ஆமாம் சாமி போடறவங்கதான் பிழைக்க முடியும். நீ அவர் திட்டத்தில குறைகள் சொன்னதோட, அதில என்ன மாற்றங்கள் செய்யலாம்னு யோசனைகளும் சொன்ன. என்ன ஆகுதோ பார்க்கலாம்."

சிவராமன் கணித்தபடியே, நவனீத் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு கிளைக்கு மாற்றப்பட்டான்.

"நான் நினைச்சதை விட மோசமா நடந்திருக்கு. தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்தி இருந்தாக் கூடப் பரவாயில்லை. பிசினஸ் இல்லாத பிராஞ்ச்சுக்கு மாத்தி இருக்காங்க!" என்றான் சிவராமன்.

"என்னை அந்த பிராஞ்ச்சுக்கு மானேஜராதானே போட்டிருக்காங்க?" என்றான் நவனீத். 

"முட்டாள் மாதிரி பேசாதேடா. இப்ப, நீயும் நானும் ஹெட் ஆபீஸ்ல டிபார்ட்மென்ட் மானேஜரா இருக்கோம். பிராஞ்ச் மானேஜர் பதவியும் அதே ராங்க்தான். ஆனா, நமக்குத்தான் அதிகாரம் அதிகம். பிராஞ்ச் மானேஜரை நாம கேள்வி கேக்கலாம். கேள்வி கேக்கற இடத்திலேந்து, பதில் சொல்ற இடத்துக்குப் போகப் போற. இது முன்னேற்றமா?" என்றான் சிவராமன், சற்றே கோபத்துடன்.

"ஜி எம் எங்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? 'நீங்க சில யோசனைகளை எல்லாம் சொன்னீங்களே, அதையெல்லாம் உங்க பிராஞ்ச்ல செயல்படுத்தி, பிராஞ்ச்சை முன்னுக்குக் கொண்டு வாங்க'ன்னாரு."

"அவரு உன்னைக் கிண்டல் பண்ணி இருக்காருடா. அவரை எதிர்த்துப் பேசினதுக்காக உன்னைப் பழி வாங்கினதோட இல்லாம, நீ பேசினதை எல்லாம் அங்கே செஞ்சு பாருன்னு உன்னை நக்கல் அடிச்சிருக்காரு. இதைத்தான் குதிரை கீழே தள்ளி விட்டுக் குழியையும் பறிச்ச மாதிரின்னு சொல்லுவாங்க. இதுக்கு முன்னால அங்கே பிராஞ்ச் மானேஜரா போனவங்க ஒத்தர் கூட வெற்றிகரமா செயல்பட்டதில்ல. கெஞ்சிக் கூத்தாடி, வேற எங்கேயாவது மாற்றல் வாங்கிட்டுப் போவாங்க, இல்ல, வெறுத்துப் போய் வேலையை விட்டுட்டுப் போயிடுவாங்க. "

"சரி, போய்த்தானே ஆகணும்? அங்கே போய் என்ன செய்ய முடியும்னு பாக்கறேன்."

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நவனீத் சீனியர் மானேஜராகப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுத் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டான்.

"சாதிச்சுட்டடா! சவாலைச் சாதனையா மாத்தறதுன்னு சொல்லுவாங்க. அதை செஞ்சு காட்டிட்ட. உனக்குக் கொடுத்த பனிஷ்மென்ட்டை, ரிவார்டா மாத்திக்கிட்டே. எப்படிடா?" என்றான் சிவராமன், நவனீத்தின் கைகளைக் குலுக்கியபடி.

"நம்ம ஜி எம் சொன்ன மாதிரியே, நான் சொன்ன யோசனைகளைச் செயல்படுத்திப் பார்த்தா என்னன்னு நினைச்சு முயற்சி செஞ்சேன். பலன் கிடைச்சது. இதுவரை இல்லாத அளவுக்கு பிராஞ்ச் வளர்ந்தது. அதனால, அசிஸ்டன்ட் மானேஜரா இருந்தவரை, பிராஞ்ச் மானேஜரா புரொமோட் பண்ணிட்டு எனக்கு புரொமோஷன் கொடுத்து, இங்கே கொண்டு வந்துட்டாங்க!" என்றான் நவனீத், பெருமை ததும்பும் குலில்.

குறள் 975:
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

பொருள்: 
பெருமைப் பண்பு உடையவர், செய்வதற்கு அருமையானச் செயலை, செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

976. தந்தை விட்டுச் சென்ற 'சுமை'

தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவருடைய தொழிலை வினோத் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தபோது, அவன் பிரச்னையாகக் கருதியது, அவன் தந்தை அவனுக்கு விட்டுச் சென்ற சுமை என்று அவன் கருதிய சுப்பையாவை.

நோய்வாய்ப்பட்டிருந்த அவன் தந்தை, தான் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பிருந்தே, அவனிடம் கூறி வந்த ஒரு விஷயம்: "சுப்பையா நம்ம கம்பெனிக்கு இருக்கிற ஒரு மதிப்புள்ள சொத்து. எந்தக் காரணத்தைக் கொண்டும், அவரை வேலையை விட்டு அனுப்பிடாதே! அவரா விரும்பி ரிடயர் ஆகிற வரையில, அவரை வேலையில வச்சுக்க."

தந்தையின் விருப்பப்படி, வினோத் சுப்பையாவைத் தொடர்ந்து வேலையில் வைத்திருந்தான். 

ஆனால், அவரால் நிறுவனத்துக்கு எந்தப் பயனும் இருந்ததாகத் தெரியவில்லை. அலுவலகத்தில் அவர் தன் விருப்பப்படி ஏதோ செய்து கொண்டிருந்தார்.

ஒருமுறை, வினோத் தன் நிறுவன மனேஜரை அழைத்து, "சுப்பையா வேலை எதுவும் செய்யாம சுத்திக்கிட்டிருக்காரு. அவருக்குன்னு குறிப்பிட்ட வேலைகளை அலாட் பண்ணுங்க" என்றான்.

"கஷ்டம் சார்! அவரு என்ன வேலை செய்யறாருன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, ஒரு நிமிஷம் கூட சும்மா இல்லாம, ஏதாவது செஞ்சுக்கிட்டுத்தான் இருப்பாரு. உங்கப்பா காலத்திலிருந்தே அப்படித்தான். உங்கப்பா அவர் மேல ரொம்ப மதிப்பு வச்சிருந்தாரு. அதனால, அவர்கிட்ட அவரோட வேலையைப் பத்தி நான் எதுவும் கேட்டதில்லை. அவருக்குக் குறிப்பா இந்த வேலைன்னு கொடுத்தா, சரியா வராது" என்றார் மானேஜர்.

"ஆகக் கூடி, அவர் தண்டச் சம்பளம் வாங்கிக்கிட்டுத்தான் இருப்பாரு, அவர்கிட்ட எந்த வேலையும் வாங்க முடியாதுன்னு சொல்றீங்க. எப்படியோ போங்க!" என்றான் வினோத், எரிச்சலுடன்.

சில மாதங்களில் சுப்பையா இறந்து விட்டார்.

வினோத் வெளிப்பார்வைக்கு அவர் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தாலும், மனதுக்குள், 'நல்லவேளை! மனுஷன் போய்ச் சேர்ந்தாரு. இல்லைன்னா, தொடர்ந்து அவருக்கு தண்டச் சம்பளம் கொடுத்துக்கிட்டே இருக்க வேண்டி இருந்திருக்கும்!' என்று நினைத்துக் கொண்டான்.

"மானேஜர்! என்ன நடக்குது? திடீர்னு, ஏன் இவ்வளவு குழப்பம், தப்புக்கள் எல்லாம் நடக்குது?" என்றான் வினோத், கோபத்துடன்.

"செக் பண்ணிக்கிட்டிருக்கேன் சார்! கோ-ஆர்டினேஷன் சரியா இல்ல. பார்த்து சரி பண்ணிடறேன்" என்றார் மானேஜர்.

"இத்தனை வருஷமா நீங்கதானே மானேஜரா இருக்கீங்க? என்னவோ இப்பதான் வேலைக்கு சேர்ந்த மாதிரி. செக் பண்ணிக்கிட்டிருக்கேங்கறீங்க!"

"மன்னிச்சுக்கங்க சார்! நம்ம கம்பெனியில அஞ்சாறு டிபார்ட்மென்ட் இருக்கு. அதையெல்லாம் கோ-ஆர்டினேட் பண்ண வேண்டியது முக்கியம். சுப்பையா சார்தான் இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்தார்னு இப்பதான் தெரியுது. உங்கப்பாவோட நண்பர்ங்கறதால, அவர் என்ன செய்யறார்ங்கறதை அவர்கிட்ட கேட்க எனக்குத் தயக்கமா இருந்தது. ஏதோ வேலை செய்யற மாதிரி, சும்மா இங்கேயும் இங்கேயும் போய்க்கிட்டிருந்தார்னுதான் நான் நினைச்சேன். அவர் எவ்வளவு முக்கயமான ரோல் ப்ளே பண்ணி இருக்கார்னு இப்பதான் தெரியுது. அவர் என்னென்ன வேலைகளைச் செஞ்சுக்கிட்டிருந்தார்ங்கறதை முழுசாப் புரிஞ்சுக்கிட்டு, அந்த வேலையை முறையா மத்தவங்களுக்குப் பிரிச்சுக் கொடுக்க எனக்குக் கொஞ்சம் டயம் வேணும்."

சுப்பையாவை அழைத்துப் பேசி அவர் என்ன வேலை செய்து வந்தார் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்திருந்தால், அவர் செய்து வந்த வேலையின் முக்கியத்துவத்தை அறிந்து, அவருடைய மதிப்பையும் அறிந்து கொண்டிருக்கலாமே என்று நினைத்தான் வினோத்.

குறள் 976:
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.

பொருள்: 
பெரியாரை விரும்பிப் போற்றுவோம் என்னும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.

977. புதிய பொது மேலாளர்

அந்த நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த தீனதயாளன் ஓய்வு பெற்றதும், அந்தப் பதவி தங்களில் யாருக்குக் கிடைக்கும் என்று அவருக்கு அடுத்த நிலையிலிருந்த ஆறு மூத்த நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராமல், வெளியிலிருந்து திவாகர் என்ற ஒருவர் பொது மேலாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது.

"யார் இந்த திவாகர்?"

"நான் விசாரிச்சதில, அவர் நம்ம கம்பெனி டைரக்டர் ஒத்தரோட அண்ணன் மகன்னு தெரியுது."

"இதுக்கு முன்னால அவர் எங்கே வேலை செஞ்சாரு? அனுபவம் உள்ளவரா?"

"சொன்னா வெட்கக் கேடு. அவருக்கு 30 வயசுதான் ஆகுது. ஏதோ ஒரு பட்டப்படிப்பை முடிச்சுட்டு, ஒரு கம்பெனியில வேலை செஞ்சுக்கிட்டே ஏதோ ஒரு யூனிவர்சிடியில கரெஸ்பாண்டன்ஸ்ல எம் பி ஏ படிச்சிருக்காரு. அந்த எம் பி ஏ பட்டம், நாலைஞ்சு வருஷ அனுபவம் இதையெல்லாம் வச்சு, அவரை ஜெனரல் மானேஜரா நியமிச்சிருக்காங்க!"

"நாமெல்லாம் நிறையப் படிச்சிருக்கோம். நமக்கு நிறைய அனுபவம் இருக்கு. இந்த கம்பெனிக்காக இவ்வளவு வருஷம் உழைச்சிருக்கோம். அதுக்கெல்லாம் மதிப்பு இல்லையா?"

"நாம யாரும் எந்த டைரக்டருக்கும் உறவு இல்லையே!"

மூத்த நிர்வாகிகள் ஆறு பேரும் தங்களுக்குள் பேசிக் கொண்டது இது.

புதிய பொது மேலாளர் திவாகரை ஆறு மூத்த நிர்வாகிகளும் சந்தித்தனர்.

தன் அறைக்கு வந்தவர்களை உட்காரக் கூடச் சொல்லாமல், நிற்க வைத்தே பேசினான் திவாகர்.

"உங்க ஒவ்வொத்தரோட டிபார்ட்மென்ட்டைப் பத்தி ஒரு நோட் போட்டு எனக்கு அனுப்புங்க" என்றான் திவாகர்.

"சார்! இப்ப நம்ம நிதி நிலைமை கொஞ்சம் டைட்டா இருக்கு. அதனால, நாம சில சிக்கன நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கு. பழைய ஜி எம் இருந்தப்பவே, இதைப் பத்தி ஒரு புரொபோசல் அனுப்பி இருக்கேன். ரிடயர் ஆகிற சமயத்தில, அவர் முடிவு எடுக்க விரும்பல. அந்த ஃபைலை நீங்க சீக்கிரம் கிளியர் பண்ணணும்" என்றார் நிதி மேலாளர் சிவப்பிரசாத்.

"அதை அப்புறம் பாக்கலாம். முதல்ல, எனக்கு இந்த ரூம்ல உள்ள ஃபர்னிச்சர், இன்டீரியர் டெகொரேஷன் இதைல்லாம் மாத்தணும். அதுக்கு ஒரு ஆளை அனுப்புங்க!" என்றான் திவாகர்.

திவாகர் மூத்த நிர்வாகிகளை மதிக்காமலே நடந்து வந்ததால், ஆறு மூத்த நிர்வாகிகளில் மூன்று பேர், வேலையை விட்டு விலகி விட்டனர்.

நிதி மேலாளர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகிளின் பேச்சை மதிக்காமல் திவாகர் செயல்பட்டதால், நிறுவனத்தின் நிதி நிலைமை இன்னும் மோசமாயிற்று. ஒரு கட்டத்தில், ஊழியர்களுக்கு சம்பளம் கூடக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆறு மாதங்கள் கழித்து நடந்த போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங்கில், திவாகரைப் பதவி நீக்கம் செய்வதென்றும், நிறுவனத்தின் மூன்று மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ரவிகுமாரைப் பொது மேலாளாக நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

குறள் 977:
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

பொருள்: 
சிறப்பு நிலை அதற்குப் பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், அது வரம்பு மீறிய செயலை உடையதாக இருக்கும்.

978. தொலைபேசியில் வந்த பாராட்டு

"வணக்கம். நான் ராமகிருஷ்ணன் பேசறேன்" என்றார் தொலைபேசியில் பேசியவர்.

"எந்த ராமகிருஷ்ணன்?" என்றார் இசை அமைப்பாளர் வினீத்.

"நானும் இசை அமைப்பாளரா இருந்திருக்கேன், அஞ்சு வருஷம் முன்னால வரைக்கும்!"

"ஓ, நீங்களா? எப்படி இருக்கீங்க? இப்ப, உங்களுக்குப் படம் எதுவும் இல்லை போலிருக்கே!"

"இல்லை. அதனாலதான், அஞ்ச வருஷம் முன்னால வரைக்கும் இசை அமைப்பாளரா இருந்தேன்னு சொன்னேன்!"

"ஓ, சரி. சொல்லுங்க. என்ன விஷயம்?"

"சமீபத்தில வந்த ஒரு படத்தில நீங்க இசை அமைச்ச ஒரு பாட்டைக் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது."

"என்னோட பாட்டு எல்லாமே ஹிட்தான். நீங்க எந்தப் பாட்டைச் சொல்றீங்க?"

"'மல்லிகை மணம் வீசும்'ங்கற பாட்டு."

"ஓ, அதுவா? அது ஒரு சூப்பர்ஹிட் பாட்டு. இளைஞர்கள் மத்தியில அது ஒரு கிரேஸாகவே இருந்துக்கிட்டிருக்கு!"

"புதுப் பாடல்கள் எல்லாம் நான் அதிகம் கேட்கறதில்ல. ஆனா, தற்செயலா இந்தப் பாட்டைக் கேட்டேன். நல்லா போட்டிருக்கீங்க. அதுக்குப் பாராட்டுத் தெரிவிக்கத்தான் கூப்பிட்டேன். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. வாழ்த்துக்கள்!" என்றார் ராமகிருஷ்ணன்.

"நிகழ்காலமே சூப்பராத்தான் இருக்கு. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் ரொம்ப பிஸின்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே! ஃபோனை வச்சுடட்டுமா?" என்று கூறி ஃபோனை வைத்தார் வினீத்.

வினீத் அங்கிருந்து அகன்றதும், வினீத்தின் தொலைபேசி உரையாடலை அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த அவருடைய உதவியாளன் சந்திரன், அங்கே இருந்த டெக்னீஷியன் குணாவிடம், "யார் ஃபோன் பண்ணினாங்க தெரியுமா?" என்றான்.

"யாரு?"

"ராமகிருஷ்ணன் சார்!"

"எந்த ராமகிருஷ்.. அவரா?" என்றான் குணா, வியப்புடன்.

"அவரேதான். திரை இசை வேந்தர் ராமகிருஷ்ணனேதான்!" 

"உனக்கு எப்படித் தெரியும்?"

"அவர் தன் பெயரைச் சொன்னதும், நம்ம ஆளு 'எந்த ராமகிருஷ்ணன்?'னு கேட்டாரே! அப்பவே அவராதான் இருக்கும்னு நினைச்சேன். அதோட, அவர் இவரைப் புகழ்ந்து பேச ஆரம்பிச்சதும், நான் அதைக் கேக்கணுங்கறதுக்காக, இவர் ஃபோனை ஸ்பீக்கர்ல போட்டுட்டாரு. என்ன ஒரு அல்ப புத்தி பாரேன்!"

"ராமகிருஷ்ணன் சார் அவர் காலத்தில கொடி கட்டிப் பறந்தவராச்சே!அவரை மாதிரி எல்லாம் மியூசிக் போட இனிமே யாராவது பொறந்துதான் வரணும்" என்றான் குணா.

"அப்படிப்பட்ட ஒரு பெரிய ஆளு இவரோட 'மல்லிகை மணம் வீசும்' பாட்டைக் கேட்டுட்டு, அது நல்லா இருக்குன்னு ஃபோன் பண்ணிப் பாராட்டறாரு. எவ்வளவு பெருந்தன்மை பாரு!"

"அவர் எப்பவுமே அப்படித்தான். அவர் டாப்ல இருந்த காலத்திலேயும், அடக்கமாத்தான் இருப்பாரு. தன்னைப் பற்றி உயர்வாப் பேசிக்க மாட்டாரு!"

"ஆனா, நம்ம ஆள் அதுக்கு நேர்மாறானவரு. 'என்னைப் போல உண்டா?'ன்னு பேசிக்கிட்டுத் திரியவரு. அவ்வளவு பெரிய மியூசிக் டைரக்டர் இவரோட பாட்டைப் புகழ்ந்து பேசறாரு. இவர் அதுக்கு நன்றி கூடச் சொல்லல. 'உங்களுக்கு இப்ப படம் எதுவும் இல்லை போலருக்கே!'ன்னு அவரைக் குத்திக் காட்டிப் பேசறாரு. 'என் பாட்டு எல்லாமே ஹிட்டுதான்'னு அவர்கிட்டப் பெருமை அடிச்சுக்கறாரு. கடைசியில, நான் ரொம்ப பிசின்னு சொல்லி, ஃபோனை கட் பண்ணிட்டாரு!"

"ஒண்ணு தெரியுமா உனக்கு? இவர் போட்ட அந்த 'மல்லிகை மணம் வீசும்' பாட்டே ராமகிருஷ்ணன் சார் போட்ட 'கனவில் வந்த கன்னியே'ங்ற பாட்டிலேந்து சுட்டதுதான். ஆனா, அவர் பெருந்தன்மையா, அதைக் கூடப் பொருட்படுத்தாம, இவரைப் பாராட்டி இருக்காரு. இவர் வழக்கம் போல சுய தம்பட்டம் அடிச்சுக்கிட்டாரு போல இருக்கு!" என்றான் குணா.

குறள் 978:
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பொருள்: 
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ, தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

979. நானே அறிவாளி!

"இந்தக் கல்லூரியிலேயே என் அளவுக்கு அறிவாளிகள் யாரும் இல்லை" என்று கணிதப் பேராசிரியர் மணவாளன், தன் வகுப்பு மாணவர்களிடம் அடிக்கடி சொல்லிக் கொள்வார்.

கல்லூரியில் வகுப்பு முடிந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்புகையில், சில மாணவர்கள் பல்வேறு விஷயங்கள் பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தபோது, மணவாளன் பற்றிய பேச்சு வந்தது. 

"இவரு மாத்ஸ் புரொஃபசர். ஆனா, கல்லூரியிலேயே நான்தான் பெரிய அறிவாளின்னு சொல்லிக்கறாரே, அது எப்படி? ஃபிசிக்ஸ், கெமிஸ்டிரி டிபார்ட்மென்ட்ல கூட இவரை விட அறிவாளி யாரும் இல்லேன்னு எப்படிச் சொல்றாரு?" என்றான் ஒரு மாணவன்.

"அவர் முப்பதுக்கு மேலே ரிசர்ச் பேப்பர்ஸ் சப்மிட் பண்ணி இருக்காராம். அதனால, தன் அளவுக்கு யாரும் இல்லைன்னு நினைச்சுக்கிட்டிருக்கார் போலருக்கு. தன்னைத்தானே உயர்த்திப் பேசறவங்க அப்படிதான் பேசுவாங்க. உலகத்திலேயே நான்தான் பெரிய அறிவாளின்னுக் கூடச் சொல்லிப்பாங்க!" என்றான் மற்றொரு மாணவன்.

"மாத்ஸ் டிபார்ட்மென்ட்டை மட்டும் எடுத்துக்கிட்டா கூட, ஆதிகேசவன் சார் இவரை விடப் பெரிய அறிவாளின்னுதான் நான் சொல்லுவேன்!"

"எப்படி? அவர் பி எச் டி கூடப் பண்ணலியே!"

"பி எச் டி பண்ணாட்டா என்ன? எப்படி வகுப்பு எடுக்கறாரு! எவ்வளவு தெளிவா சொல்லிக் கொடுக்கறாரு! என்ன சந்தேகம் கேட்டாலும் விளக்கமா பதில் சொல்றாரு. எவ்வளவு கஷ்டமான கணக்கைக் கொடுத்தாலும், உடனே சால்வ் பண்ணிடுவாரு. ஆனா, மணவாளன் சார்கிட்ட ஏதாவது சந்தேகம் கேட்டா 'பார்த்துட்டு அப்புறம் சொல்றேன்'பாரு. ஆனா பல சமயங்கள்ள, அதைப் பத்தி அப்புறம் பேசவே மாட்டாரு. அவரால அதை சால்வ் பண்ண முடிஞ்சிருக்காதுன்னு நினைக்கறேன்!"

"எப்படி இருந்தா என்ன? அவர் பி எச் டி. அது அவருக்குப் பெருமைதானே? ஆதிகேசவன் சாருக்கு நல்ல நாலட்ஜ் இருக்கு, நல்லா சொல்லிக் கொடுக்கறாருன்னாலும், அவர் பி எச் டி இல்லையே! அது அவருக்கு மதிப்புக் குறைவுதானே?"

"மணவாளன் சார் தனக்குத்தானே தம்பட்டம் அடிச்சுக்கறாரு. ஆனா, நாம அவரைக் கேலி செஞ்சுதானே பேசறோம்! ஆதிகேசவன் சார் அடக்கமா இருக்காரு. நாம அவரைப் புகழ்ந்து பேசறோம். ரெண்டு பேர்ல யாருக்கு உண்மையாகவே பெருமை இருக்குன்னு இதிலேந்தே தெரிஞ்சுக்கலாமே!"   

குறள் 979:
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

பொருள்: 
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.

980. இரண்டு கருத்துக்கள்

"என்ன மிஸ்டர் மனோகரன், அக்கவுன்டன்ட் போஸ்டுக்கான இன்டர்வியூ முடிஞ்சு போச்சா?" என்றார் நிர்வாக இயக்குனர் நாகப்பன்.

"முடிஞ்சு போச்சு சார். ஒத்தரை செலக்ட் பண்ணி வச்சிருக்கேன். ஆனா முடிவு செய்யறதுக்கு முன்னால, உங்களோட ஆலோசனையைக் கேக்கணும்னு நினைச்சேன்" என்றார் பொது மேலாளர் மனோகரன்.

"என்னோட ஆலோசனை எதுக்கு? அவர் உங்ககிட்டதானே ரிப்போர்ட் பண்ணப் போறாரு? நீங்களே முடிவு செய்யலாமே!"

"நான் இன்டர்வியு பண்ணின வகையில, அவர் திறமையானவர்னுதான் சொல்லுவேன். படிப்பு, அனுபவம் எல்லாம் இருக்கு. உற்சாகமும், உத்வேகமும் உள்ளவராத்தான் இருக்காரு. நமக்குப் பொருத்தமானவராத்தான் இருப்பாருன்னு நினைக்கறேன்."

"அப்புறம் என்ன?"

"அவர் இதுக்கு முன்னே வேலை செஞ்ச இரண்டு நிறுவனங்கள்ள, அவரைப் பத்திக் கேட்டேன். இரண்டு பேரும் அவரைப் பத்தி எதிர்விதமா சொன்னாங்க."

"என்ன சொன்னாங்க?"

"ஒத்தர் அவரைப் பத்தி ரொம்ப நல்லபடியா சொன்னாரு. அவர் ரொம்பத் திறமையானவர். விஷயங்களைத் தெளிவாப் புரிஞ்சுக்கிட்டு செயல்படறவர், வேலையில ரொம்ப கவனமா இருப்பாரு, நாம ஏதாவது யோசனை சொன்னா, அது அவருக்கு சரின்னு தோணினா எடுத்துப்பாரு, இல்லாட்டா 'சாரி சார் அது சரியா வராது'ன்னு சொல்லிடுவாரு... இப்படியெல்லாம் ரொம்ப பாசிடிவா சொன்னாரு."

"சரி. இன்னொத்தர்?"

"வேகமா செயல்பட மாட்டாரு, நாம ஏதாவது சொன்னா கேக்க மாட்டாரு, அவரு இஷ்டத்துக்குத்தான் நடந்துப்பாரு. கொஞ்சம் கூட டைனமிஸம் கிடையாது, சோம்பேறி அப்படின்னெல்லாம் நெகடிவா சொன்னாரு. அதனாலதான், எனக்குக் கொஞ்சம் குழப்பமா இருக்கு."

"இதில எந்தக் குழப்பமும் இல்லை மனோகரன்! கருத்துச் சொன்ன இரண்டு பேரும், தங்களைப் பத்தித்தான் சொல்லி இருக்காங்க, கேண்டிடேட்டைப் பத்தி இல்ல!" என்றார் நாகப்பன், சிரித்துக் கொண்டே.

"என்ன சார் சொல்றீங்க?"என்றார் மனோகரன்.

"நீங்க அவரை இன்டர்வியூ பண்ணினீங்களே, அதோட அடிப்படையில அவரைப் பத்தி என்ன நினைக்கறீங்க?"

"திறமையானவர்னுதான்."

"அவரைப் பத்தி நல்லவிதமா கருத்து சொன்னவர் அதைத்தானே சொல்லி இருக்காரு? அதனால, அது உண்மைதானே! அதோட. அவர் கவனமானவரு, தப்பான விஷயங்களுக்கு இடம் கொடுக்க மாட்டாரு, எதையுமே தனக்கு சரின்னு பட்டாதான் ஏத்துப்பாருன்னு சொல்லி இருக்காரு. இப்படிச் சொன்னவர் பண்பு உள்ளவர். அதனாலதான், அவர்கிட்ட இருந்த நல்ல விஷயங்களை மட்டும் பாத்திருக்காரு. இன்னொருத்தருக்கு அந்தப் பண்பு இல்லாததால, அவர் குறைகளை மட்டுமே சொல்லி இருக்காரு."

"ஒத்தரோட குறைகளைச் சொல்றதே தப்புன்னு சொல்ல முடியுமா?"

"நான் அப்படிச் சொல்லல. குறைகளைச் சொன்னவர், அவரோட திறமையைப் பத்தியும் சொல்லி இருக்கணும் இல்ல? நீங்களே உங்க இன்டர்வியூவில அவரோட திறமையைக் கண்டறிஞ்சிருக்கீங்க இல்ல? அவர் திறமையானவர்தான், ஆனா அவர்கிட்ட சில குறைகள் இருக்குன்னு சொல்லி இருந்தா, அது சரி. திறமையைப்பத்திச் சொல்லாம, குறைகளை மட்டும் சொன்னது, சொன்னவரோட சிறுமையைத்தான் காட்டுது."

"அப்படிப் பார்த்தா, அவரோட நிறைகளைச் சொன்னவர் குறைகளைச் சொல்லாததும் தப்புதானே!"

"குறைகள் பெரிசா இருந்தா, சொல்லி இருக்கணும்தான். அவர் நேர்மை இல்லாதவர், பொறுப்பு இல்லாதவர் என்கிற மாதிரி பெரிய குறைகள் இருந்து, அதையெல்லாம் சொல்லாம இருந்தா, அது தப்புதான். ஆனா, இவர்கிட்ட அந்த மாதிரிக் குறைகள் இல்லையே! கூர்ந்து பார்த்தா, இவர்கிட்ட குறைகள்னு இன்னொருத்தர் சொன்னதே, இவரோட நிறைகளைத்தானோன்னு நான் நினைக்கிறேன்!"

"எப்படி சார் சொல்றீங்க?"

"விஷயங்களைப் புரிஞ்சுக்கிட்டு கவனமா செயல்படறவருன்னு ஒத்தர் சொன்னாரு. அதையே இன்னொருத்தர், வேகமா செயல்படாதவர்னு சொல்றாரு. தனக்கு சரின்னு பட்டாலொழிய, நாம சொன்னதை ஏத்துக்க மாட்டார்னு ஒத்தர் சொல்றாரு. அதையே இன்னொருத்தர், டைனமிஸம் இல்லைன்னு சொல்றாரு. குறை கண்டுபிடிக்கிற இயல்பு இருக்கறதாலதான், அவர் இப்படிச் சொன்னார்னு இதிலேந்து தெளிவாகுதே" என்றார் நாகப்பன்.

"உங்ககிட்ட பேசினதில, கேண்டிடேட்டைப் பத்தி என்னால சரியா புரிஞ்சுக்க முடிஞ்சதோட, கேண்டிடேட்டைப் பத்திக் கருத்துச் சொன்னவங்களையும் புரிஞ்சுக்க முடிஞ்சது. நன்றி சார்" என்றார் மனோகரன்.

குறள் 980:
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

பொருள்: 
பெருமைப் பண்பு பிறருடைய குறைகளை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றங்களையே எடுத்துக் காட்டும்.
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...