அதிகாரம் 104 - உழவு

திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

1031. சென்னையில் ஒரு வேலை

"என்னப்பா, உங்கப்பாவை வயல்ல தனியாப் பாடுபட விட்டுட்டு, நீ சென்னைக்குப் போய் வேலை தேடப் போறியாமே!" என்றார் சக்திவேல்.

"மாமா! நாங்க சின்ன விவசாயிங்க. எங்களுக்கு விவசாயம் கட்டுப்படியாகல. நானும் நாலைஞ்சு வருஷமா எங்கப்பாவோட சேர்ந்து வயல்ல வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். விளைச்சல் நல்லா இருந்தாலே, கையில ஒண்ணும் நிக்கறதில்ல. விளைச்சல் சரியா இல்லேன்னா, கடன்காரங்களாத்தான் ஆக வேண்டி இருக்கு. அப்புறம் அந்தக் கடனைத் தீர்க்கவே, ரெண்டு மூணு வருஷம் பாடுபட வேண்டி இருக்கு. அதுக்குள்ள மறுபடி விளைச்சல் பாதிக்கப்பட்டா, கடன் அதிகமாகிக்கிட்டே போகுது. இதுக்கு ஒரு விடிவு வேண்டாமா?" என்றான் பழனி.

"இது எல்லா விவசாயிகளுக்கும் இருக்கிற பிரச்னைதாம்ப்பா."

"இருக்கலாம் மாமா. நான் சென்னைக்குப் போய் ஏதாவது வேலை செஞ்சு சம்பாதிச்சா, குடும்பத்துக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்."

"சரி, செய். நான் உன் அப்பாவோட நண்பன்கறதால, உன் அப்பா தனியே கஷ்டப்படுவானேங்கற கவலையில, உங்கிட்ட பேசினேன். சென்னையில உனக்கு நல்ல வேலை கிடைச்சு, நீ நிறைய சம்பாதிக்கணும்னு வாழ்த்தறேன்" என்றார் சக்திவேல்.

சென்னையில் பழனிக்கு ஒரு தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. சுமாரான சம்பளம்தான். ஆயினும் எட்டு மணி நேர வேலைக்குப் பிறகு தங்கும் அறைக்கு வந்து நிம்மதியாகப் பொழுதைக் கழிக்கும் வாழ்க்கை, பழனிக்குப் பிடித்திருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு, தொழிற்சாலையில் பணிகள் குறைய ஆரம்பித்தன. வியாபாரம் சரியாக இல்லாததால், தொழிற்சாலை விரைவிலேயே மூடப்படும் என்று தொழிலாளர்களிடையே பேச்சு எழுந்தது. சில தொழிலாளர்கள் வேறு வேலை தேடிக் கொண்டு போய் விட்டனர்.

வேலை போய் விட்டால் என்ன செய்வது என்ற கவலையில் பழனி இருந்தபோது, ஒருநாள், அவன் முதலாளி அவனைத் தன் அறைக்கு அழைத்தார்.

"இன்னும் கொஞ்ச நாள்ள இந்தத் தொழிற்சாலையை மூடிடுவோம். அதுக்கப்புறம், உங்களுக்கெல்லாம் இங்கே வேலை இருக்காது. வேலை போனவங்களுக்கு சட்டப்படி நஷ்ட ஈடு கொடுப்போம். ஆனா நீ சமீபத்திலதான் வேலைக்கு சேர்ந்ததால, உனக்கு நஷ்ட ஈடா எதுவும் கிடைக்காது. நீ நல்லா வேலை செய்யறதா மானேஜர் எங்கிட்ட சொல்லி இருக்காரு. நீ கிராமத்திலேந்து வந்தவன், விவசாயத்தில அனுபவம் இருக்கு. செங்கல்பட்டுக்குப் பக்கத்தில எனக்குப் பண்ணை நிலம் இருக்கு. அங்கே உனக்கு வேலை கொடுக்கறேன். நீ ஊர்ல பார்த்த மாதிரி விவசாய வேலை. இதே சம்பளம். என்ன சொல்ற?" என்றார் முதலாளி.

"என்னடா அதுக்குள்ள திரும்பி வந்துட்ட?" என்றார் பழனியின் தந்தை, வியப்புடன்.

"இந்த உலகம் விவசாயத்தை நம்பித்தான் இயங்குது. டவுனுக்குப் போனாலும், விவசாயத்தை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்டேம்ப்பா. இனிமே, உன்னோடயே சேர்ந்து நம்ம நிலத்தைப் பார்த்துக்கறேன்" என்றான் பழனி.

குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

பொருள்: 
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும், ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும், உழவுத் தொழிலே சிறந்தது.

1032. சந்தனுவின் தேர்வு

"இந்தக் கூட்டணியில நாமதான் ரெண்டாவது பெரிய கட்சி. நாம நல்ல இலாகாக்களைக் கேட்டு வாங்கிடணும்" என்றார் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் குமார்.

"ஆமாம், தலைவரே! நம்ம கட்சிக்கு எவ்வளவு அமைச்சர் பதவி கொடுக்கப் போறாங்கன்னு தெரியல. ஆனா, உங்களுக்குத் துணை முதல்வர் பதவியையும், நிதி, உள்துறை, பொதுப்பணித் துறை மாதிரி ஒரு முக்கியமான துறையையும் நாம கேட்டு வாங்கிடணும்" என்றார் கட்சியின் துணைத் தலைவர் தாமோதர்.

"பார்க்கலாம்" என்றார் கட்சித் தலைவர் சந்தனு.

ந்தனு துணை முதல்வராக ஆக்கப்பட்டார். அவர் கட்சிக்கு, நிதி, பொதுப்பணித் துறை, போக்குவரத்து, விவசாயம் ஆகிய துறைகள் வழங்கப்பட்டன. சந்தனு விவசாயத் துறையைத் தான் வைத்துக் கொண்டு, மற்ற துறைகளை தன் கட்சியைச் சேர்ந்த பிற அமைச்சர்களுக்கு வழங்கினார்.

"என்ன தலைவரே இது? முக்கியமான துறைகளை மத்தவங்களுக்குக் கொடுத்துட்டு, நீங்க விவசாயத் துறையை எடுத்துக்கிட்டிருக்கீங்க! துணை முதல்வர்னா, ஒரு சக்தி வாய்ந்த துறை உங்ககிட்ட இருக்க வேண்டாமா?" என்றார் தாமோதர். 

"இல்லையே! ரொம்ப முக்கியமான துறையைத்தானே நான் எடுத்துக்கிட்டிருக்கேன்!" என்றார் சந்தனு.

"என்ன சொல்றீங்க? விவசயத்துறை அமைச்சரா, உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கும்?"

"ஒரு வண்டி ஓட, சக்கரங்கள் மற்ற பாகங்கள் எல்லாம் வேணும். ஆனா, வண்டியில ரொம்ப முக்கியமான பாகம் அதோட அச்சாணிதான். அச்சாணி இல்லேன்னா, வண்டி ஓடாது. பல தொழில்கள் செய்யற மக்கள் இருக்காங்க. அவங்க எல்லாரையும் தாங்கிப் பிடிக்கறது விவசாயிகள்தான். அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு வேணுங்கறதை செஞ்சு கொடுத்து, விவசாயத்தை வளம் பெற வச்சு, அதன் மூலமா எல்லா மக்களுக்குமே நன்மை செய்யக் கூடிய வாய்ப்பு, இந்தத் துறையிலதானே இருக்கு? அதனாலதான், விவசாயத் துறையை நான் தேர்ந்தெடுத்தேன்" என்றார் சந்தனு.

குறள் 1032:
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

பொருள்: 
உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல், பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லோரையும் உழவர்களே தாங்குவதால், அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.

1033. தொழிலதிபரின் செயல்!

"நம்ம கம்பெனியோட இருபத்தைந்தாவது ஆண்டு விழாவை எப்படிக் கொண்டாடலாம்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்" என்றார் தாமோ இண்டஸ்டிரீஸின் நிர்வாக இயக்குனர் தாமோதரன்.

"பிரமாதமாக் கொண்டாடிடலாம் சார். யாராவது ஒரு வி.ஐ.பி.யை சிறப்பு விருந்தினரா அழைக்கலாம்" என்றார் பொது மேலாளர் ராஜேந்திரன்.

"வி.ஐ.பி.யைத்தான் கூப்பிடணும். ஆனா, வேறு வகை வி.ஐ.பி.!" என்றார் தாமோதரன், சிரித்துக் கொண்டே.

தாமோ இண்டஸ்டிரீஸின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

தாமோதரன் மைக் முன் வந்தார்.

"நான் படிச்சுட்டு ஒரு தொழிலை ஆரம்பிச்சு நடத்திக்கிட்டிருக்கேன். ஆனா, பள்ளிக்கூடத்தில என்னோட படிச்ச கேசவன், விவசாயத்தில ஈடுபட்டிருக்கார். என்னோட வேண்டுகோளுக்கு இணங்க, அவர் இந்த விழாவுக்கு வந்திருக்கார். அவரை மேடைக்கு அழைக்கிறேன். எங்கள் பொது மேலாளர் ராஜேந்திரன் அவரை மேடைக்கு அழைத்து வருவார்."

தாமோதரன் சைகை காட்ட, ராஜேந்திரன் கீழே இறங்கிச் சென்று, முதல் வரிசையில் அமர்ந்திருந்த கேசவனை, மேடைக்கு அழைத்து வந்து அமரச் செய்தார்.

கேசவன் இருக்கையில் அமர்ந்ததும், அவர் அருகில் சென்ற தாமோதரன், யாரும் எதிர்பாராத விதத்தில், அவர் காலில் விழுந்து வணங்கினார்.

பதறிப் போய் இருக்கையிலிருந்து எழுந்த கேசவன், "தாமோதரா, என்னடா இது?" என்றார், தாமோதரனைத் தூக்கி நிறுத்தியபடி.

மீண்டும் மைக் முன் வந்த தாமோதரன், "உலகில், மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், உழவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டும்தான் தங்களுக்கான உணவைத் தாங்களே உற்பத்தி செய்வதுடன். மற்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் உணவை உற்பத்தி செய்து வழங்குகிறார்கள். மற்ற துறைகளில் இருப்பவர்கள், மற்றவர்களுக்குச் சேவை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில், உணவுப் பொருட்களை விலைக்கு வாங்கித்தான் உண்ண வேண்டும். ஒரு தொழிலகத்தை நடத்தி வரும் நான் கூட, என் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்துதான் உணவு உண்ண முடியும். அதனால் உணவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், எல்லோராலும் வணங்கப்பட வேண்டியவர்கள். இதை எடுத்துக் காட்டத்தான், என் நண்பனாக இருந்தாலும், உழவுத் தொழில் செய்து, அதன் மூலம் மற்றவர்களுக்கும் உணவளிப்பவன் என்பதால், கேசவனின் காலில் விழுந்து வணங்கினேன்!" என்றார்.

குறள் 1033:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

பொருள்: 
உழவு செய்து, அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும், பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

1034. பஞ்ச காலத்தில் ஒரு அன்னதானம்!

அரசன் வீரவர்மனும், அமைச்சர் பூபதியும் மாறுவேடம் பூண்டு, நகர்வலம் கிளம்பினர்.

இருவரும் நெடுந்தூரம் நடந்து, ஒரு கிராமப் பகுதிக்கு வந்தனர். 

அந்த ஊரில் இருந்த ஒரு கோயிலின் வாசலில் இருவரும் அமர்ந்தனர்.

கோயில் பூட்டப்பட்டிருந்தது.

"ஏன் அதற்குள் கோயிலைப் பூட்டி விட்டார்கள்? இன்னும் நண்பகல் நேரம் வரவில்லையே!" என்றான் வீரவர்மன்.

"அரசே! இந்தப் பகுதியில் கடும் பஞ்சம் நிலவுகிறது. அதனால் கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். அதனால், அர்ச்சகர் கோயிலைச் சீக்கிரமே பூட்டி விட்டு, வீட்டுக்குப் போய் விட்டாரோ என்னவோ!" என்றார் அமைச்சர்.

"பல நாடுகளை வென்று ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருப்பவன் என்ற பெருமை எனக்கு இருந்து என்ன பயன்? பஞ்சத்தில் வாடும் மக்களின் துயரை என்னால் தீர்க்க முடியவில்லையே!" என்றான் வீரவர்மன், வருத்தத்துடன்

"அரசே! தங்களால் இயன்ற உதவிகளைத் தாங்கள் செய்துதான் வருகிறீர்கள். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வரியை ரத்து செய்து விட்டீர்கள். அரண்மனை தானியக் கிடங்கிலிருந்து தானியங்களை வழங்கி வருகிறீர்கள். இயற்கையின் விளைவுகளுக்கு, ஓரளவுக்குத்தான் நிவாரணம் செய்ய முடியும்!"

அப்போது அங்கே கோயில் அர்ச்சகர் வர, அவரைத் தொடர்ந்து, கையில் பெரிய பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு, சிலர் வந்தனர். இன்னும் பலர் கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அரசரும் அமைச்சரும் எழுந்து நின்றனர்.

அவர்களைப் பார்த்த அர்ச்சகர், "வாருங்கள்? வெளியூர்க்காரர்களா? அன்னதானம் நடக்கப் போகிறது. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!" என்றார், கோயிலின் பூட்டைத் திறந்தபடியே.

"அன்னதானமா? இந்தப் பஞ்ச காலத்தில் யார் அன்னதானம் செய்கிறார்கள்?" என்றார் அமைச்சர், வியப்புடன்.

"இந்த ஊரில் உள்ள விவசாயிகள்தான். தினமும் ஒருவர் என்று முறை வைத்துக் கொண்டு, ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள்" என்றார் அர்ச்சகர்.

"மழை பெய்யாததால், விளைச்சலே இல்லை என்றார்களே!"

"விளைச்சல் இல்லைதான். ஆயினும் தங்களிடம் இருப்பில் உள்ள தானியங்களைக் கொண்டுதான் அவர்கள் இவ்வாறு அன்னதானம் செய்கிறார்கள். அத்துடன், மழை இல்லாதபோதும் உலர்நிலத்தில் விளையக் கூடிய தானியங்களைப் பயிர் செய்து, அவர்கள் விவசாயம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்!" என்றார் அர்ச்சகர்.

"நன்றி ஐயா! நாங்கள் ஏற்கெனவே உணவு உண்டு விட்டோம். வருகிறோம்" என்று கூறி விட்டு, அமைச்சருடன் அங்கிருந்து கிளம்பினான் வீரவர்மன்.

சிறிது தூரம் வந்ததும், "அமைச்சரே! பல குடைகளின் கீழ் உள்ள நாடுகளை ஒரு குடைக்கீழ் ஆளும் என்னைப் போன்ற பல அரசர்களும், இந்த ஊரில் உள்ள ஒரு விவசாயியின் குடையின் கீழ்தான் வர வேண்டும்" என்றான் வீரவர்மன்.

குறள் 1034:
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

பொருள்: 
உழுவதால் தானிய வளமும், அதனால் அருளும் உடைய உழவர்கள், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காண வல்லவர் ஆவர்.
"எதுக்கு சும்மா வயலுக்குப் போயிட்டு வரீங்க? அதான் மழை பெய்யாம பயிர்கள் காஞ்சு கிடக்கே, அதை தினமும் போய்ப் பார்த்துட்டு வரணுமா என்ன?" என்றாள் விசாலாட்சி.

1035. வாடிய பயிர்

"நம்ம பிள்ளைங்க யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா, மனசு இருப்புக் கொள்ளாது இல்ல? அது மாதிரிதான் இருக்கு எனக்கு. அதான் தினம் போய்ப் பயிர்களைப் பார்த்துட்டு, மழை வராதான்னு மானத்தையும் பார்த்துட்டு வரேன்!" என்றார் அழகிரி.

"நாம இப்ப ரொம்ப கஷ்டமான நிலைமையில இருக்கோம். உங்க தம்பிதான் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறாரே, அவர்கிட்ட உதவி கேட்டா, செய்ய மாட்டாரு?"

"செய்வான். ஆனா, நான் கேக்கப் போறதில்ல!"

"ஏன்? கடன்தானே கேக்கப் போறீங்க? அடுத்த வருஷம் மழை பேஞ்சு, விளைச்சல் நல்லா வந்தப்புறம், கடனைத் திருப்பிக் கொடுத்துடப் போறீங்க!"

"பாங்க்ல கடன் வாங்கினா, அது கடையில போய்ப் பொருள் வாங்கற மாதிரி. ஆனா, சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்ககிட்ட கடன் கேட்டா, அது உதவி கேட்டு யாசிக்கிற மாதிரிதான். உழவுத் தொழில் செய்யறவங்க உலகத்துக்கே உணவு கொடுக்கறவங்க. அவங்க மத்தவங்ககிட்ட போய் யாசகம் கேக்கக் கூடாது!"

"என்னவோ நீங்களும் உங்க நியாயமும். சரி. கடைக்குப் போய்க் கொஞ்சம் எண்ணெய் வாங்கிட்டு வாங்க. தாளிக்கக் கூட எண்ணெய் இல்லை" 

"ஒரு நிமிஷம்" என்று அழகிரி ஏதோ சொல்ல ஆரம்பித்ததைக் காதில் வங்கிக் கொள்ளாமல் உள்ளே சென்ற விசாலாட்சி, சில நிமிடங்களில் திரும்பி வந்து, "மாடத்தில ஒரு இருநூறு ரூபா நோட்டு இருந்ததே, காணோம்! ஏதாவது செலவுக்கு எடுத்துக்கிட்டீங்களா?" என்றாள்.

"நம்ம வரதன் சாப்பாட்டுக்கு அரிசி கூட இல்லைன்னு கேட்டான். அவனுக்குக் கொடுத்துட்டேன். நம்ம வயல்ல வேலை செய்யறவன்தானே! அவனுக்கு ஒரு கஷ்டம்னா, நாம்தானே உதவணும்? இன்னிக்கு ஒரு நாளைக்குத் தாளிக்கலேன்னா, பரவாயில்லை. நாளைக்குப் பார்க்கலாம்!" என்றார் அழகிரி.

குறள் 1035:
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

பொருள்: 
தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவ,ர் பிறரிடம் பிச்சை கேட்க மாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

1036. மௌன விரதம் முறிந்தது!

காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது, அரசன் அந்தத் துறவியைப் பார்த்தான். ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த அந்தத் துறவியைச் சுற்றிச் சில சீடர்கள் அமர்ந்திருந்தனர்.

துறவியை வணங்கி விட்டுக் கிளம்பிய அரசன், சற்றுத் தொலைவு சென்றதும், சட்டென்று நின்றான்.

ஏதோ ஒரு முடிவுடன் துறவி இருந்த இடத்துக்குத் திரும்பச் சென்ற அரசன், துறவியின் அருகில் சென்று, "முனிவரே! தாங்கள் இந்த மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து, என் மனம் வேதனைப்படுகிறது. அருகிலேயே, உங்களுக்கு ஒரு ஆசிரமம் கட்டித் தர விரும்புகிறேன். அதற்குத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்" என்றான்.

முனிவர் சைகையினால் தன் அருகிலிருந்த சீடரிடம் ஏதோ சொல்ல, அந்தச் சீடர் அரசனிடம் வந்து, "அரசே! முனிவர் ஒரு மண்டலம் மௌன விரதம் அனுஷ்டித்து வருகிறார். அதனால் அவர் சைகையில் என்னிடம் தெரிவித்ததைத் தங்களிடம் சொல்கிறேன். இந்தக் காட்டுக்குள் ஆசிரமம் கட்டுவது இயலாது. அத்துடன் அவருக்கு ஆசிரமம் தேவையில்லை. ஆயினும். அவருடைய சீடர்களின் வசதிக்காக ஆசிரமம் அமைப்பது நல்லதுதான். அதை இந்தக் காட்டுக்கு அருகில் உள்ள ஒரு நிலப்பகுதியில் அமைத்துக் கொடுத்தால் நலம் என்று அவர் கருதுகிறார்" என்றார்.

சீடர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த முனிவர், அவர் சொன்னது சரிதான் எனபது போல் தலையசைத்தார்.

"அப்படியே செய்கிறேன் முனிவரே!" என்று முனிவரிடம் கூறிய அரசன், ஒரு வீரனை அருகில் அழைத்து, அவனிடம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தான்.

"அரசே! தங்கள் கட்டளைப்படி, நாங்கள் ஆசிரமம் அமைக்க இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அங்கே ஆசிரமம் அமைக்கும் பணிகளைத் துவக்குமுன், முனிவரின் சீடர்கள் அங்கே வந்து எங்களைத் தடுத்து விட்டனர். முனிவர் தங்களைக் காண வேண்டும் என்று விரும்புவதாவும், அவர்கள் எங்களிடம் கூறினர்" என்றான் படைவீரன்.

அரசன் முனிவர் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றான்.

அரசனைக் கண்டதும், முனிவர், "வாருங்கள் அரசே! எனக்காக நீங்கள் ஆசிரமம் அமைத்துக் கொடுக்க முயல்வது பாராட்டுக்குரியதுதான். ஆனால், அதற்காக ஒரு விவசாயியின் நிலத்தையா தேர்ந்தெடுப்பது?" என்றார். 

"முனிவரே! என் வீரர்கள் எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. அது விவசாய நிலமாக இருந்தால், அந்த நிலத்துக்கான மதிப்புக்கு அதிகமாகவே அந்த விவசாயிக்குப் பொற்காசுகளை வழங்கி விடுவோம்" என்றான் அரசன்.

"வேண்டாம் அரசே! விவசாயி தன் பணியைச் செய்யாவிட்டால், என் போன்ற முற்றும் துறந்த முனிவர்களால் கூட இயங்க முடியாது. எனவே, அந்த இடம் வேண்டாம். வேறு ஏதாவது தரிசு நிலம் இருந்தால் பாருங்கள். அப்படி இல்லாவிட்டால், எனக்கு ஆசிரமமே வேண்டாம். நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்."

"தங்கள் விருப்பப்படியே வேறு இடம் பார்க்கச் சொல்கிறேன்" என்ற அரசன், சற்றுத் தயங்கி விட்டு, "தங்கள் மௌன விரதம் முடிந்து விட்டதா?" என்றான்.

"முடியவில்லை ,அரசே! முறிந்து விட்டது. அதை முறித்தவன் நான்தான். உங்கள் வீரர்கள் ஆசிரமம் கட்டத் தேர்ந்தெடுத்த நிலத்தின் சொந்தக்காரரான விவசாயி என்னிடம் வந்து முறையிட்டபோது, அவருடைய நிலம் பறி போகாது என்று அவருக்கு உறுதி அளிப்பதற்காக, என் மௌன விரதத்தை முறித்துக் கொண்டு அவரிடம் பேசினேன்" என்றார் முனிவர்.

குறள் 1036:
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை

பொருள்: 
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டு விட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

1037. விவேகனின் விஞ்ஞான ஆர்வம்!

செல்வரத்தினத்தின் மகன் விவேகனுக்குச் சிறு  வயதிலிருந்தே விஞ்ஞான ஆர்வம் உண்டு. பள்ளிப் பாடங்களில் தான் படித்த விஞ்ஞான விஷயங்களைப் பற்றி அவன் தன் தந்தையிடம் பேசுவான்.

மகன் கூறுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொள்ளும் செல்வரத்தினம், "நீ சொல்றதைக் கேக்க எனக்குப் பெருமையா இருக்கு, ஆனா, எனக்கு இதெல்லாம் அதிகமாப் புரியல. நான் படிக்காதவன். எனக்குத் தெரிஞ்சது விவசாயம் மட்டும்தான்" என்பார்.

பள்ளி விடுமுறை நாட்களில், தந்தையுடன் வயலுக்குச் சென்று, அவர் செய்யும் வேலைகளை கவனிப்பான் விவேகன். 

கொஞ்சம் பெரியவன் ஆனதும், வயல் வேலைகளில் தந்தைக்கு உதவ விவேகன் முன்வந்தபோது, "நீ முதல்ல படிப்பை முடி. அதுக்கப்புறம், உனக்கு விவசாயத்தில ஆர்வம் இருந்தா, என்னோட வந்து வேலை செய். இப்ப வேண்டாம். இப்ப, படிப்பில மட்டும் கவனத்தைச் செலுத்து" என்று அவனைத் தடுத்து விட்டார் செல்வரத்தினம்.

விவேகன் பதினொன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒருநாள் வயலுக்கு வந்தான். செல்வரத்தினம் கலப்பையில் உழுது கொண்டிருந்ததை அருகில் வந்து பார்த்தான்.

"அப்பா! இந்தக் கலப்பை கோடு போடற மாதிரி போகுது. இப்படி உழுதா, வயல் முழுக்க உழுது முடிக்க ரொம்ப நாள் ஆகுமே. கலப்பை இன்னும் அகலமா இருந்தா, நல்லா இருக்குமே!" என்றான்.

"அகலமா இருந்தா, ஆழமா உழ முடியாது. ஆழமா உழுதாத்தான், நிலத்தைத் தோண்டி, அடியில இருக்கற மண்கட்டிகளை எல்லாம் உடைச்சுப் பொடியாக்க முடியும். அப்பதான் மண்ணு தண்ணியை நல்லா உறிஞ்சிக்கும். மண்கட்டிகளை உடைச்சுப் பொடியாக்கற அளவுக்கு உழுதா, உரம் போடாமயே நிலம் நல்லா விளையும்னு என் தாத்தா சொல்லி இருக்காரு" என்றார் செல்வரத்தினம்.

"எதுக்குப் பொடியாக்கணும்? கட்டியா இருந்தா என்ன? மண்கட்டிதானே? அதுக்குள்ள தண்ணி போகும் இல்ல?"

"அது எனக்குத் தெரியாது. என் முன்னோர்கள் சொன்னபடி நான் செஞ்சுக்கிட்டிருக்கேன்" என்றார் செல்வரத்தினம்.

சில நாட்கள் கழித்து மழை பெய்தது.

மழை பெய்த அடுத்த நாள், இருவரும் வயலுக்குச் சென்றனர்.

"அப்பா! இங்கே பாரு. நீ உழுத இடத்தில தண்ணியே தேங்கல. எல்லாம் நிலத்துக்குள்ள போயிடுச்சு. நீ பாதி உழுத இடங்களில, மண்கட்டிகளுக்கு இடையில தண்ணி தேங்கி இருக்கு பாரு. அதுதானே நல்லது?" என்றான் விவேகன்.

"அது எனக்குத் தெரியாது. ஆனா, நல்லா உழுத இடத்திலதான் நல்லா விளையுங்கறது மட்டும் எனக்குத் தெரியும்!" என்றார் செல்வரத்தினம்.

சில நாட்கள் கழித்து விவேகன், "அப்பா! இப்பதான் பாடத்தில படிச்சேன். ஒரு பொருளைப் பொடி பண்ணினா, அதோட சர்ஃபேஸ் ஏரியா, அதாவது பரப்பு அதிகமாகுமாம். அதிகப் பரப்பு இருந்தா, அதில தண்ணி உறிஞ்சிக்கிற அளவு அதிகமா இருக்கும் இல்ல? அதுதான் நல்லது. அன்னிக்கு நாம பார்த்தப்ப, நீ நல்லா உழுத இடங்களில மண்ணு பொடியா இருந்ததால, அது அதிகமா தண்ணியை உறிஞ்சிக்கிட்டிருக்கு. அதனாலதான், அங்கே தண்ணி தேங்கல. கட்டியா இருந்த மண்ணு தண்ணியை அதிகம் உறிஞ்சாததால, அங்கே தண்ணி தேங்கி இருந்தது. அந்தத் தண்ணி ஒண்ணு ஆவியாயிடும், இல்லை பூமிக்குள்ள போயிடும். பொடி மண்ணில உறிஞ்சப்பட்டிருக்கிற தண்ணி பயிர்களுக்குப் போய், அதை நல்லா வளர வைக்கும். மண்கட்டி எல்லாம் பொடியா ஆற மாதிரி உழுதா, உரம் இல்லாம கூட நல்ல விளைச்சல் கொடுக்கும்னு உன் தாத்தா சொன்னது சரின்னு இப்பதான் எனக்குப் புரியுது" என்றான்.

"நீ சொல்றது எனக்குப் புரியல. ஆனா, என் தாத்தா சொன்னது சரிங்கறதை நான் அனுபவத்தில பாத்திருக்கேன். நீ படிச்ச விஞ்ஞானத்திலேந்து இதைச் சரின்னு புரிஞ்சுக்கிட்டு சொல்றதைக் கேக்க எனக்கு சந்தோஷமா இருக்கு!" என்றார் செல்வரத்தினம். 

குறள் 1037:
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

பொருள்: 
ஒரு பலம் புழுதி, கால்பலம் ஆகும்படி உழுது, காய விட்டால், ஒரு பிடி எருவும் இட வேண்டாமல், அந்நிலத்தில் பயிர் செழித்து விளையும்.

1038. விளையும் பயிர்!

அன்று பள்ளி விடுமுறை என்பதால், தன் தந்தை ஐயப்பனுடன் வயலுக்குச் சென்றான் சுரேன்.

"என்னப்பா செய்யப் போற?" என்றான் சுரேன், தந்தை உர மூட்டையைப் பிரிப்பதைப் பார்த்து.

"வயலை உழுதாச்சு. இப்ப  உரம் போடணும்" என்றான் ஐயப்பன்.

"உரம் எதுக்குப்பா?"

"உரம் போட்டாதான், பயிர் நல்லா வளரும்."

"பள்ளிக்கூடம் இல்லாத நாள்ள எல்லாம் நான் வயலுக்கு வந்து பாக்கறேம்ப்பா!"

"பாரேன்!" என்றான் ஐயப்பன்.

ஆயினும், அதற்குப் பிறகு பரீட்சை நெருங்கி வந்ததால், சுரேனால் சில வாரங்களுக்குப் பிறகுதான் தந்தையுடன் வயலுக்குச் செல்ல முடிந்தது.

அப்போது பயிர்கள் வளர்ந்திருந்தன.

"அதுக்குள்ள இவ்வளவு உயரம் வளர்ந்துடுச்சே!" என்றான் சுரேன், வியப்புடன்.

"பயிர்கள் எல்லாம் வேகமாத்தான் வளரும்" என்றான் ஐயப்பன்.

வயலில் சில பெண்கள் களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

"ஏம்ப்பா, அவங்க செடிகளைப் பிடுங்கிப் போட்டுக்கிட்டிருக்காங்க?"

"அவங்க களை எடுக்கறாங்க."

"அப்படின்னா?"

"நாம விதைச்ச பயிர்களுக்கு நடுவில, சில வேண்டாத பயிர்கள் தானே முளைக்கும். அதைத்தான் களைன்னு சொல்லுவாங்க. அதையெல்லாம் பிடுங்கி எடுத்தாத்தான், பயிர் நல்லா வளரும். இல்லேன்னா, நாம பாய்ச்சற தண்ணி, போடற உரம் எல்லாத்தையும் களைகள் எடுத்துக்கிட்டு வளரும். பயிர்களுக்குத் தேவையான தண்ணி, உரம் இதெல்லாம் போதுமான அளவு கிடைக்காது. அதனாலதான், களை எடுக்கறோம்."

"பயிர் செய்யறதில இவ்வளவு விஷயம் இருக்கா? சரி. அடுத்தது என்ன?"

"அப்புறம், கொஞ்ச நாள் தண்ணி பாய்ச்சிக்கிட்டிருக்கணும். அதுக்கப்புறம், பயிர்கள் நல்லா வளர ஆரம்பிச்சுடும். அப்புறம், நமக்கு அதிக வேலை இருக்காது!"

"அப்படின்னா, அதுக்கப்புறம் நீ வயலுக்கு வர வேண்டாம் இல்ல? எனக்குப் பள்ளிக்கூடத்தில லீவு விடற மாதிரி, உனக்கும் லீவு. அப்படித்தானே?" என்றான் சுரேன்.

ஐயப்பன் சிரித்து விட்டு, "விவசாயிக்கு ஏது லீவு? பயிர்கள் வளற ஆரம்பிச்சப்புறம், அதைப் பாதுகாக்கணுமே! அது ரொம்ப முக்கியம்" என்றான்.

"பாதுகாக்கறதுன்னா?"

"ஆடு மாடுகள் வந்து பயிரை மேய்ஞ்சுடாம பாத்துக்கணும். பயிர்ல பூச்சி வராம இருக்கான்னு பாத்துக்கணும். பயிர்கள் முற்றி அறுவடை செய்யற வரையிலும், தினமும் வயல்ல வந்து பாத்துக்கிட்டுதான் இருக்கணும். இல்லேன்னா, இவ்வளவு நாள் செஞ்சதுக்கெல்லாம் பயன் இல்லாம போயிடும்!" என்றான் ஐயப்பன்.

குறள் 1038:
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

பொருள்: 
ஏர் உழுதலை விட, எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்து களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல் காத்தல் நல்லது.

1039. முருகனின் அலட்சியம்!

"என்னடா, நிலத்தைப் போய்ப் பாத்துட்டு வந்துக்கிட்டிருக்கியா?" என்றார் செல்லப்பா.

"போய்ப் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். நல்லாத்தான் இருக்கு" என்றான் அவர் மகன் முருகன், எரிச்சலுடன்.

"நான் கேட்டா உனக்கு எரிச்சலாத்தான் இருக்கும். நிலத்தில விதை விதைச்சுத் தண்ணி ஊத்திட்டு வந்துட்டா, பயிர் தானா வளராது. நிலத்தை அடிக்கடி போய்ப் பார்த்து, செய்ய வேண்டியதை செஞ்சுட்டு வரணும். எனக்கு உடம்பு முடியாம படுத்திருக்கறதால, உங்கிட்ட சொல்ல வேண்டி இருக்கு!" என்றார் செல்லப்பா.

"யார்கிட்ட சொல்லிக்கிட்டிருக்கீங்க? அவன் போய்ப் பத்து நிமிஷம் ஆச்சு!" என்றார் செல்லப்பாவின் மனைவி தையல்நாயகி.

"கட்டின பொண்டாட்டியைப் பாத்துக்கற மாதிரி நிலத்தைப் பாத்துக்கணும். இவன்தான் கட்டின பொண்டாட்டியை சரியா கவனிக்காம, அவ கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாளே, நிலத்தை எங்கே பாத்துக்கப் போறான்? சம்பந்திகிட்டேந்து தகவல் ஏதும் வந்ததா?"

"ஒண்ணும் வரலை. மருமவ கோவிச்சுக்கிட்டுப் போய், அவ அம்மா வீட்டில உக்காந்திருக்கா. அவளோட அப்பா அம்மாவும் அவளுக்கு புத்தி சொல்லி, இங்கே அனுப்பி வைக்கற மாதிரி தெரியல!" என்றாள் தையல்நாயகி, சலிப்புடன்.

"எனக்கு உடம்பு நல்லா இருந்தா, நானே போய் அவளைச் சமாதானப்படுத்தி அழைச்சுக்கிட்டு வந்திருப்பேன். அவ வீட்டுக்குப் போய், அவளை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லி முருகன்கிட்ட சொன்னியா?"

"சொல்லாமயா இருப்பேன்? எத்தனையோ தடவை சொல்லியாச்சு. அவன் காதில போட்டுக்கிட்டாத்தானே!" என்ற தையல்நாயகி, "இருங்க. யாரோ கூப்பிடறாங்க. போய்ப் பாத்துட்டு வரேன்" என்று கூறி விட்டு, வாயிற்புறம் சென்றாள்.

சில விநாடிகளில் அவள் உள்ளே வந்தபோது, அவளுடன் செல்லப்பாவின் நண்பர் அம்மையப்பனும் வந்தார்.

"என்ன செல்லப்பா, உடம்பு எப்படி இருக்கு?" என்றார் அம்மையப்பன்.

"இருக்கு. எழுந்து நடமாட முடியலியே!" 

"உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். உன்னோட வயல்ல பூச்சி வந்திருக்கு. உன் பையன் பாக்கல போலருக்கு. முன்னாலேயே பாத்திருந்தா, கட்டுப்படுத்தி இருக்கலாம். இன்னிக்கு உன் வயல் பக்கம் போறப்பதான் பாத்தேன். பயிர்ல பெரும்பகுதி பூச்சி அரிச்சிருக்கும் போலருக்கே!" என்றார் அம்மையப்பன்.

"என்னத்தைச் சொல்றது? அடிக்கடி வயலுக்குப் போய்ப் பாத்துட்டு வான்னு அவன்கிட்ட எவ்வளவோ தடவை சொல்லிட்டேன். பாத்துட்டுத்தான் வரேன்னு எங்கிட்ட பொய் சொல்லிட்டு, ஊரைச் சுத்திக்கிட்டிருக்கான் போல இருக்கு. கஷ்டப்பட்டு வளர்த்த பயிர் எல்லாம் பாழாயிடுச்சு. எல்லாம் என் தலை விதி" என்றார் செல்லப்பா, பொங்கி வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டு.

குறள் 1039:
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

பொருள்: 
நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று, செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல், நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய் விடும்.

1040. சும்மா கிடந்த நிலத்தை் கொத்தி...

"பேர்தான் பூமிநாதன். ஆனா, எனக்கு சொந்தமா ஒரு சென்ட் நிலம் கூட இல்ல" என்று அலுத்துக் கொண்டான் பூமிநாதன்.

"நிலம் இல்லாட்டா என்ன? கூலி வேலக்குப் போகலாம் இல்ல?" என்றான் அவன் நண்பன் சண்முகம்.

"நான் வேற ஒரு ஐடியா வச்சிருக்கேன்."

"என்ன ஐடியா?"

"டவுனுக்குப் போய் வேலை தேடிக்கலாம்னு பாக்கறேன். மாசம் பொறந்தா சம்பளம் கிடைக்கும். இது மாதிரி வயல்ல கிடந்து அல்லாட வேண்டியதில்ல."

"ஏம்பா, வயல்ல வேலை செய்யறவங்கள்ளாம் முட்டாள்களா? பட்டணத்துக்குப் போய் சொகுசா வேலை செஞ்சு சம்பாதிக்கறது அவ்வளவு சுலபம்னா, எல்லாரும் பட்டணத்துக்குப் போயிட மாட்டாங்களா? படிச்சிருந்தா, ஒருவேளை, பட்டணத்தில வேலை கிடைக்கலாம். அப்படியும் கூட, எத்தனையோ பேரு படிச்சுட்டு வேலை இல்லாம இருக்காங்க. நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?" என்றான் சண்முகம்.

"சொல்லு!" என்றான் பூமிநாதன்.

"நம்ம கதிர்வேலுகிட்ட அஞ்சு ஏக்கர் நிலம் தரிசாக் கிடக்கு. அதை நான் உனக்குக் குத்தகைக்கு வாங்கித் தரேன். ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு, அதைப் பண்படுத்தணும். பண்படுத்திட்டா, விளைச்சல் ரொம்ப நல்லா இருக்கும். அது மாதிரி தரிசாக் கிடந்த சில நிலங்களை, நம்ம ஊர்ல சில பேர் பண்படுத்தி, நல்லா விளைய வச்சிருக்காங்க. ரெண்டு வருஷம் பாடுபட்டா, அப்புறம் நல்ல வருமானம் வரும். அந்த வருமானத்தை வச்சு, அஞ்சாறு வருஷத்தில, நீயே சொந்த நிலம் கூட வாங்கலாம்."

"ரெண்டு வருஷம் நான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு, பணம் செலவழிச்சு எல்லாம் பண்ணினப்புறம், அது விளையும்னு என்ன நிச்சயம்? அந்த ரெண்டு வருஷத்தில நான் வேலைக்குப் போய் சம்பாதிச்சா, கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து, நீ சொல்ற மாதிரி நல்ல நிலமே வாங்கிடலாமே!" என்றான் பூமிநாதன்.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த சண்முகம், 'சரி. நான் இன்னொரு யோசனை சொல்றேன். குத்தகையை என் பேரில எடுத்துக்கறேன். நீ பைசா செலவு செய்ய வேண்டாம். நீ வேலை மட்டும் செய். அதுக்குக் கூட, நீ என் நிலத்தில வேலை செய்யறதா நினைச்சு நான் உனக்குக் கூலி கொடுத்துடறேன். நிலம் விளைச்சல் காண ஆரம்பிச்சப்புறம், கதிர்வேலுகிட்ட சொல்லிக் குத்தகையை உன் பேருக்கு மாத்திக் கொடுத்துடறேன். நான் செலவழிச்ச பணத்தை, நீ கொஞ்சம் கொஞ்சமாக் கொடுத்தாப் போதும். என்ன சொல்ற?" என்றான்.

நண்பனை வியப்புடன் பார்த்த பூமிநாதன், "நீ ஏன் எனக்கு இந்த அளவுக்கு உதவி செய்யறேன்னு எனக்குத் தெரியல. ஆனா, எனக்கு இது ஒத்து வராது. நான் டவுன்ல போய் வேலை தேடறதுன்னு முடிவு செஞ்சுட்டேன்" என்றான்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு வந்த பூமிநாதனை வரவேற்ற அவன் நண்பன் சண்முகம், "என்னடா, போனவன் திரும்பி வரவே இல்ல? அவ்வளவு வைராக்கியமா? நீ நினைச்சதைச் சாதிச்சுட்ட போலருக்கே!" என்றான்.

"இல்லடா! நான் நினைச்சபடி எதுவும் நடக்கல. நீ சொன்னது சரிதான். படிச்சவங்களுக்குத்தான் பட்டணம் லாயக்கு!" என்றான் பூமிநாதன், சோர்வுடன்.

"ஏன், என்ன ஆச்சு? மூணு வருஷமா நீ திரும்பி வராததால, நல்ல வேலையில செட்டில் ஆயிட்டேன்னு இல்ல நினைச்சேன்?" என்றான் சண்முகம், சற்று அதிர்ச்சியுடன்.

"சரியான வேலை எதுவும் கிடைக்கல. கிடைச்சதெல்லாம் கூலி வேலைதான். அது கூட நிரந்தரமா இல்லை. மாசத்தில பத்து நாள் வேலை கிடைச்சாலே அதிகம். அப்புறம், ஒரு தொழிற்சாலையில வேலை கிடைச்சது. கூலி வேலைதான். அங்கேயும் பர்மனன்ட் பண்ணக் கூடாதுங்கறதுக்காக, மாசத்தில 15, 20 நாள்தான் வேலை கொடுப்பாங்க. நீ சொன்னதை அப்பப்ப நினைச்சுப் பார்ப்பேன். இங்கேயே நிலத்தில கூலி வேலை செஞ்சிருந்தா கூட, ஒரு அளவுக்கு முன்னுக்கு வந்திருப்பேன். அது சரி. நீ முன்னே சொன்னியே! அந்தத் தரிசு நிலத்தைக் குத்தகை எடுக்கலாம்னு, அது இப்ப முடியுமா?" என்றான் பூமிநாதன்.

"இவ்வளவு லேட்டா வந்து கேக்கறியே! நான் உங்கிட்ட பேசினதை தற்செயலாக் கேட்டுக்கிட்டிருந்த தனபால், எங்கிட்ட வந்து, 'அண்ணே! பூமிநாதனுக்கு செய்யறதாச் சொன்ன உதவியை, எனக்கு செய்வீங்களா? எனக்கும் வேலை எதுவும் இல்ல. ஆனா, நான் உழைக்கத் தயாரா இருக்கேன்' னு சொன்னான். உன் மாதிரி அவன் எனக்கு நெருங்கின நண்பன் இல்லேன்னாலும், அவன் ஆர்வமாக் கேட்டதால, அவனுக்கு உதவி செய்யலாமனு நினைச்சேன். நீயும்தான் ஊரை விட்டுப் போயிட்டியே! அதனால, அந்த நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, அவனை வச்சு அதைப் பண்படுத்தினேன். இப்ப அந்த நிலம் நல்லா விளையுது. உங்கிட்ட சொன்ன அதே ஏற்பாடுதான். இப்ப குத்தகையை அவன் பேருக்கு மாத்திட்டேன். எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை, அவன் கொஞ்சம் கொஞ்சமாக் கொடுத்துக்கிட்டிருக்கான்" என்றான் சண்முகம், பூமிநாதனைப் பரிதாபத்துடன் பார்த்தபடி.

பூமிநாதன் ஏமாற்றத்துடன் தலையைக் குனிந்து கொண்டான். தரையில் முளைத்திருந்த புற்கள் காற்றில் இலேசாக அசைந்தது பூமி அவனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிப்பது போல் இருந்தது. 

குறள் 1040:
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

பொருள்: 
வாழ வழியில்லை என்று கூறிக் கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...