அதிகாரம் 100 - பண்புடைமை

திருக்குறள்
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

991. 'பிறந்த நாள்' செய்தி!

சிறு வயதில் நடந்த அந்தச் சம்பவம், கோபியின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

ஒருநாள் காலை, கோபியின் தந்தை நரசிம்மன், தன் மனைவி மல்லிகாவையும், ஏழு வயது மகன் கோபியையும், வீட்டு வேலைக்காரன் சண்முகத்தையும், முன்னறைக்கு அழைத்தார்.

"சண்முகம், ஹாப்பி பர்த்டே!" என்று சண்முகத்திடம் கூறி, அவன் கையைப் பற்றிக் குலுக்கினார் நரசிம்மன்.

"ஐயா, என்னங்க இது?" என்றான் சண்முகம், வியப்பு கலந்த மகிழ்ச்சியுடன்.

நரசிம்மன் தன் மனைவியையும் மகனையும் பார்க்க, அவர்களும், "ஹாப்பி பர்த்டே, சண்முகம்!" என்றனர்.

"ஹாப்பி பர்த்டே அங்க்கிள்னு சொல்லு!" என்றார் நரசிம்மன், கோபியிடம்.

"ஹாப்பி பர்த்டே, அங்க்கிள்!" என்றான் கோபி.

"நான் ஒரு சாதாரண ஆளு. உங்க வீட்டில வேலை செய்யறேன். எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி, என்னைப் பெருமைப்படுத்திட்டீங்களே! இன்னிக்கு என் பிறந்த நாள்னு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுதுன்னே எனக்குப் புரியல!" என்றான் சண்முகம்.

"ஒவ்வொத்தருக்கும் அவங்க பிறந்த நாள் விசேஷமானதுதான். இதில சாரணமானவங்க, விசேஷமானவங்கன்னு பிரிச்சுப் பார்க்க முடியாது. நீ வேலைக்குச் சேர்ந்தப்பவே, உங்கிட்ட உன்னைப் பற்றின விவரங்களைக் கேட்டுக் குறிச்சுக்கிட்டேன். அதில, உன் பிறந்த தேதியும் ஒண்ணு. அது உனக்கு மறந்து போயிருக்கலாம்! இன்னிக்கு உன்னோட பிறந்த நாள்ங்கறதால, உனக்கு லீவு. இதை நான் நேத்திக்கே சொல்லி இருக்கலாம். ஆனா, சர்ப்ரைஸா இருக்கட்டும்னுதான் இன்னிக்குக் காலையில சொல்றேன். அப்புறம், உன் வீட்டுக்கு ஒரு கேக் வரும். அதை வெட்டிக் குடும்பத்தோடப் பிறந்த நாளை மகிழ்ச்சியாக் கொண்டாடு!"

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை ஐயா!" என்றான் சண்முகம்.

சண்முகம் கிளம்பிச் சென்றதும், "என்னங்க இது, வேலைக்காரனோட பிறந்த நாளைக் கொண்டாடறீங்க. நம்ம பையன் அவனை அங்க்கிள்னு கூப்பிடணும்னு சொல்றீங்க! இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல?" என்றாள் மல்லிகா, சற்றே கோபத்துடன்.

"நான் வேலை செய்யற இடத்தில, என்னோட மேலதிகாரிகளுக்கும், என்னோட வேலை செய்யறவங்களுக்கும், எனக்குக் கீழே வேலை செய்யறவங்களுக்கும் கூடப் பிறந்த நாள் வாழ்த்து சொல்றேன். வீட்டில வேலை செய்யறவனுக்கு சொல்லக் கூடாதா? வேலைக்காரனா இருந்தாலும், வயசில பெரியவங்களை, சின்னவங்க மரியாதையா விளிக்கறதுதான் பண்பாடு. உத்தரவு போட்டாக் கூடப் பணிவோட போடலாமே!"

நரசிம்மன் சொன்னது மல்லிகாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவர் கூறியது, கோபியின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

ரு பெரிய நிறுவனத்தின் ஒரு கிளை அலுவலகத்தில் பணி செய்து வந்த கோபி,  வேறொரு கிளைக்கு மாற்றப்பட்டதும், பழைய கிளை அலுவலகத்தில் அவனுக்கு நடந்த விடைகொடுக்கும் நிகழ்ச்சியில், பலரும் அவன் திறமைகளையும், சிறப்புகளையும் பற்றிப் பேசினர். ஒவ்வொருவரும் வெவ்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசினாலும், எல்லோருமே குறிப்பிட்டது அவனுடைய  நற்பண்புகளைப் பற்றித்தான். 

எல்லோரிடமுமே எளிமையாகவும், பணிவுடனும் பழக வேண்டும் என்று சிறு வயதில் தன் தந்தை தனக்குக் கற்பித்தது, தன்னிடத்தில் எத்தனை சிறப்பான பண்புகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது என்று நினைத்து, மறைந்து விட்ட தன் தந்தைக்கு மனதுக்குள் அஞ்சலி செலுத்தினான் கோபி. 

குறள் 991:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள்: 
யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.

992. எம்.டி இல்லாத நேரத்தில்...

"சார், எம்.டி உங்களைக் கூப்பிடறாரு" என்று பியூன் ஒரு ஊழியரை வந்து அழைத்தாலே, அந்த ஊழியருக்கு ஒரு பெரிய மனச்சோர்வு ஏற்பட்டு விடும். 

மற்ற ஊழியர்களில் சிலருக்கு, 'பாவம்! இன்னிக்கு இவன் மாட்டிக்கிட்டானா!' என்ற பரிதாபமும், வேறு சிலருக்கு 'நல்லா மாட்டிக்கிட்டான், திரும்பி வரப்ப செத்துச் சுண்ணாம்பாத்தான் வருவான்' என்ற குரூரமான மகிழ்ச்சியும் ஏற்படும்.

நிர்வாக இயக்குனர் செல்வமூர்த்தி கோபத்துக்கும், கடுமையான சொற்களுக்கும் பெயர் போனவர். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்' என்ற பழமொழி அவருக்கு அடியோடு பொருந்தாது. தன் நிறுவனத்தில் வேலை செய்பவர்களிடம் மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், மற்றவர்கள் என்று எல்லோரிடமுமே பண்பாடற்ற முறையில் நடந்து கொள்ளும் இயல்பு கொண்டவர் அவர்.

செல்வமூர்த்தி அலுவலகத்தில் இல்லாதபோது, சில ஊழியர்கள் ஒன்று கூடி அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

"சார் ஏன்தான் இப்படி இருக்காரோ தெரியல. சின்ன விஷயங்களுக்கெல்லாம் தப்பு கண்டுபிடிச்சு, கண்டபடி திட்டறாரு. ஆனா ஒரு தடவை கூட, யாரையும் பாராட்டினதாத் தெரியல!"

"நீ வேற! வாடிக்கையாளர்கள்கிட்ட பேசறப்ப கூட, கனிவாப் பேச மாட்டாரு. 'நீ காசு கொடுக்கற, நான் பொருள் கொடுக்கறேன்'கற மாதிரிதான் பேசறாரு. இப்படி நடந்துக்கறவர்கிட்ட வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பொருள் வாங்கறதே ஆச்சரியம்தான்!"

"என்னை மாதிரி சேல்ஸ் ரெப்ரசனடேடிவ்கள் வாடிக்கையாளர்களைப் பார்க்கப் போகச்சே, 'என்னையா, உங்க எம்.டி கொஞ்சம் கூட பண்பாடு இல்லாம நடந்துக்கறாரு! உங்களை மாதிரி சேல்ஸ் ரெப்ரசன்டேடிவ்கள் எல்லாம் பணிவாப் பேசறீங்க. உங்களுக்காகத்தான் உங்க கம்பெனியில இன்னும் நாங்க இன்னும் சரக்கு வாங்கிக்கிட்டிருக்கோம்' னு அவங்க சொல்லுவாங்க!"

"வீட்டில எப்படி நடந்துப்பாரு?"

"ஒரு தடவை அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் மனைவி, குழந்தைகள் எல்லாரும் அவர்கிட்ட பயந்துக்கிட்டு இருக்கற மாதிரிதான் தெரியுது. வீட்டில ஒரு கலகலப்பான சூழ்நிலையே இல்லை!"

"எப்படி இருக்கும்? இவர்தான் யார்கிட்டேயும் அன்பு காட்ட மாட்டாரே! குற்றம் கண்டுபிடிக்கறதும், கோபமாக் கத்தறதும்தானே அவரோட  இயல்பு!"

"இவரோட அப்பாதானே இந்தத் தொழிலை ஆரம்பிச்சவரு? அவ தங்கமானவரு, எல்லார்கிட்டேயும் அன்பா நடந்துப்பாருன்னு நான் வேலைக்குச் சேர்ந்த புதுசில, அப்ப இருந்த சில சீனியர்கள் எங்கிட்ட சொல்லி இருக்காங்க."

"அவங்கள்ளாம் இப்ப எங்கே? ரிடயர் ஆயிட்டாங்களா?"

"ஒத்தர்தான் ரிடயர் ஆயிட்டாரு. மூணு பேர் வேலையை விட்டுட்டுப் போயிட்டாங்க. போகும்போது, 'ஒரு பண்பான மனுஷனுக்கு மகனாப் பொறந்துட்டு, இப்படிப் பண்பாடு இல்லாதவனா இருக்கானே! இவங்கிட்ட மனுஷன் வேலை பாப்பானா?' ன்னு எங்ககிட்டல்லாம் சொல்லிட்டுப் போனாங்க!"

"நல்ல குடும்பத்தில பொறந்தும், இவர் ஏன் இப்படிப் பண்பாடு இல்லாம இருக்காரு?"

"நல்ல குடும்பத்தில பொறந்திருந்தா போதுமா? அடுத்தவங்க மேல கொஞ்சம் கூட அன்பு இல்லாத மனுஷன்கிட்ட எப்படிப் பண்பாட்டை எதிர்பார்க்க முடியும்?"

"இவர் இப்படி நடந்துக்கிறதால, இங்கே மானேஜரா வரவங்க யாரும் நிலைச்சு நிக்க மாட்டேங்கறாங்க. நமக்கும் அவருக்கும் நடுப்பற மானேஜர்னு ஒத்தர் இருந்தார்னா, நமக்குக் கொஞ்சம் குஷன் மாதிரி இருக்கும்!"

"மானேஜர் இருந்திருந்தா, எம்.டி இல்லாத நேரத்தில நம்மால இப்படி சுதந்திரமாப் பேசிக்கிட்டிருக்க முடியாதே!"

அதற்குள் எம்.டியின் கார் வரும் சத்தம் கேட்கவே, அனைவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்து, தங்கள் வேலைகளில் கவனம் செலுத்த, அங்கே மயான அமைதி மீண்டும் திரும்பியது.

குறள் 992:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள்: 
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

993. அதே முகம், அதே குணம் யாரிடம்?

முதுநிலைப் படிப்புக்காகக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்குத் தங்கும் விடுதியில் அறைகள் ஒதுக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.

"ஒரு அறையில ரெண்டு பேர் இருக்கணும். நீங்களே ரெண்டு பேரா சேர்ந்து வந்தீங்கன்னா, ஒரே அறையை அலாட் பண்ணுவோம். இல்லேன்னா, நாங்களா யாராவது ரெண்டு பேருக்கு ஒரே அறையை அலாட் பண்ணுவோம்" என்றார், அறைகள் ஒதுக்கிக் கொடுத்துக் கொண்டிருந்த ஊழியர்.

பிரசாத் தன் அருகில் நின்றிருந்த ராஜேந்திரனிடம் திரும்பி, "என் பேர் பிரசாத். என்னோட ரூம்மேட்டா இருக்கீங்களா?" என்றான்.

ராஜேந்திரன் சற்றுத் தயங்கி விட்டு, "கொஞ்சம் இருங்க. சொல்றேன்!" என்று பிரசாத்திடம் கூறி விட்டு, அங்கிருந்து அகன்றான்.

சில நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்த ராஜேந்திரன், "சாரி. நானும் இன்னொருத்தரும் சேர்ந்து ஒரு அறையை எடுத்துக்கிட்டோம்!" என்றான்.

"பரவாயில்லை!" என்றான் பிரசாத் சிரித்தபடி.

வகுப்புகள் துவங்கிய சில வாரங்களில், பிரசாத்துக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாகி விட்டனர்.

ஒருநாள் ராஜேந்திரன் பிரசாத்திடம், "நமக்கு ஹாஸ்டல்ல அறை ஒதுக்கறப்ப, நாம ரெண்டு பேரும் ஒரு அறையை எடுத்துக்கலாமான்னு நீ கேட்டே! அப்ப நான் வேண்டாம்னுட்டேன். சாரி" என்றான்.

"அதனால என்ன? அப்ப, உனக்கு என்னை அறிமுகம் இல்லையே! நான் கேட்டதும் நீ ஒத்துக்கணும்னு அவசியம் இல்லையே! உனக்குத் தெரிஞ்ச ஒத்தனோட சேர்ந்து இருக்கலாம்னு நீ முடிவு செஞ்சிருக்கலாம்!" என்றான் பிரசாத்.

"இல்லை. என் ரூம்மேட்டா இருக்கற சேகரை எனக்கு முன்னால தெரியாது!"

"பின்னே எப்படி அவனைத் தேர்ந்தெடுத்தே?"

"பள்ளிக்கூடத்தில சந்திரன்னு எனக்கு ஒரு நெருங்கின நண்பன் இருந்தான். அவன் ரொம்ப கண்ணியமாவும், பண்போடயும் நடந்துப்பான். சேகருக்கு சந்திரனோட முக ஜாடை இருந்தது. அதனால, அவன் சந்திரன் மாதிரியே இருப்பான்னு நினைச்சுத்தான் அவனைத் தேர்ந்தெடுத்தேன்."

"நீ எதிர்பார்த்த மாதிரிதானே அவன் இருக்கான்?"

"இல்லை. அதுக்கு எதிர்மறையா இருக்கான். முக ஜாடைதான் சந்திரன் மாதிரி இருக்கு. குணங்கள் எல்லாம் நேர்மாறா இருக்கு. கொஞ்சம் கூட கண்ணியமோ, பண்பாடோ இல்லாம நடந்துக்கறான். சேகருக்கு சந்திரனோட முக ஜாடை இருந்ததால, குணத்திலேயும் சேகர் சந்திரனோட ஒத்திருப்பான்னு நான் நினைச்சது தப்புன்னு இப்பப் புரியுது!" என்றான் ராஜேந்திரன்.

"முக ஜாடையை வச்சு மனுஷங்களை ஒப்பிடறதே தப்பு!" என்றான் பிரசாத்.

"ஏன் அப்படிச் சொல்ற?"

"இந்த முக ஜாடை, சாயல் இதெல்லாம் ஒவ்வொத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி தோணும். இது சப்ஜெக்டிவ். உனக்கு மகாத்மா காந்தியோட முக ஜாடை இருக்கறதா எனக்குத் தோணுது! ஆனா மத்தவங்களுக்கு அப்படித் தோணாம இருக்கலாம். ஆனா, எல்லா மனுஷங்களுமே ஒரே மாதிரி உறுப்புகள் உள்ளவங்கதானே - கை, கால், கண், காது, மூக்குன்னு?"

"ஆமாம்."

"அந்த விதத்தில பார்த்தா, எல்லா மனுஷங்களும் தோற்றத்தில ஒத்தவங்கதான். இப்ப உன்னையும், என்னையும் எடுத்துக்கிட்டா, நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி உறுப்புகளைத்தான் கொண்டிருக்கோம். அதோட, நம்ம ரெண்டு பேரோட குணங்களிலேயும் நிறைய ஒற்றுமை இருக்கு. அதனால, நீயும் நானும் ஒத்த மனிதர்கள்னு சொல்லலாம். ஆனா, உன் நண்பன் சந்திரனுக்கும், உன் ரூம்மேட் சேகருக்கும் ஒரே மாதிரி தோற்றம் இருந்தாலும், குணங்களில் ஒற்றுமை இல்லையே! அதனால, அவங்க ரெண்டு பேரும் ஒத்த மனிதர்கள் இல்லை! சரியா?"

"சரிதான். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி குணங்கள் இருந்தால்தான் அவங்க ஒத்த மனிதர்கள்னு நீ சொல்றதை நான் ஏத்துக்கறேன். ஒத்த குணங்கள் இருக்கறவங்கதான் நண்பர்களாகவோ, நெருக்கமானவங்களாவோ இருக்காங்க. முக ஜாடையை வச்சு குணத்தைக் கணிக்க முயற்சி செஞ்சது என் தப்புதான்!" என்றான் ராஜேந்திரன்.

குறள் 993:
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

பொருள்: 
உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.

994. 'நோபிள்' பரிசு!

'நலம் நாடுவோர் சங்க'த்தின் ஆண்டுவிழாக் கூட்டம் துவங்கியது. 

செயலாளர் வரவேற்புரை ஆற்றியபின், சங்கத்தலைவர் குவளைக்கண்ணன் பேசத் தொடங்கினார்.

"பொதுவா, பிரபலமானவங்களுக்குத்தான் பாராட்டு விழாக்கள் நடத்துவாங்க. ஆனா, நம்ம சங்கத்தில, சாதாரண மனிதர்களுக்கும் பாராட்டு விழா நடத்தி, அவங்களுக்கு 'நோபிள் பர்ஸன்' அதாவது'உயர்ந்த மனிதர்'ங்கற விருது வழங்கற பழக்கத்தை வச்சிருக்கோம். இதை நாம சுருக்கமா நோபிள் பரிசுன்னு சொல்றோம்.

"பரிசுக்குரிய நபரைத் தேர்ந்தெடுக்க நாம அமைச்சிருக்கிற தேர்வுக்குழுவுக்கு, நம் உறுப்பினர்கள் தங்களுக்குத் தெரிஞ்ச சிறந்த மனிதர்களோட பெயர்களைப் பரிந்துரை செய்வாங்க. தேர்வுக்குழு பரிந்துரை செய்யப்பட்ட மனிதர்களைப் பத்தி ஆராய்ந்து, யாருக்குப் பரிசுன்னு முடிவு செய்யும். 

"தேர்ந்தெடுக்கப்பட்டவர் யாருன்னு, தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. இந்த சங்கத்தோட தலைவரான எனக்கோ, துணைத் தலைவருக்கோ, செயலாளருக்கோ கூடத் தெரியாது. 

"தேர்வுக்குழுத் தலைவர் வெங்கடேசன் அவர்கள் இப்போது இந்த ஆண்டு 'நோபிள்' பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் யார் என்பதை அறிவிப்பார்!" 

தேர்வுக்குழுத் தலைவர் வெங்கடேசன் ஒலிபெருக்கி முன் வந்து பேசத் தொடங்கினார்.

"இந்த முறை நாங்க தேர்ந்தெடுத்திருக்கிற நபரைப் பத்திப் பல பேர்கிட்ட நாங்க விசாரிச்சப்ப, எல்லாரும் ஒரே மாதிரிதான் சொன்னாங்க. 'அவர் ரொம்ப நேர்மையானவர், நியாயமா நடந்துப்பாரு, அதோட எப்பவுமே தன்னால மற்றவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமானு பார்த்துக்கிட்டிருப்பார்.'

"அவர் ஒரு அலுவலகத்தில அதிகாரியா இருந்து ஓய்வு பெற்றவர். அவர் தன்னோட வேலைகளைச் சரியாச் செஞ்சதோட, மத்தவங்களுக்கு உதவி செய்யறதையும் பழக்கமா வச்சுக்கிட்டிருந்தவர்னு அவரோட மேலதிகாரிகளா இருந்தவங்களும், அவரோட வேலை செஞ்சவங்களும் சொன்னாங்க.

"அவருக்குக் கீழே வேலை செஞ்சவங்க அவர் எப்பவுமே நியாயமா நடந்துப்பாரு, வேலை விஷயத்தில ஸ்டிரிக்டா இருந்தாலும், எல்லார்கிட்டேயும் அன்பாகவும், கனிவாகவும், கருணையோடயும் நடந்துப்பார்னு சொன்னாங்க.

"அவர் ஓய்வு பெற்ற பிறகு கூட, அவரோட நிறுவனத்திலேந்து சில பேர் அவரை அப்பப்ப சந்திச்சு ஆலோசனே கேக்கறாங்க. அவரும் கொஞ்சம் கூட சலிச்சுக்காம அவங்களுக்கு ஆலோசனைகளைச் சொல்றாரு. 

"அவர் குடி இருக்கிற பகுதியில, அவரைப் பத்தி விசாரிச்சோம். அவரோட குடியிருப்பு சங்கத்தில அவர் எந்த ஒரு பொறுப்பில இல்லாட்டாலும், ஏதாவது பிரச்னைன்னா, முதல் ஆளா வந்து, அதைத் தீர்க்க உதவி செய்யறாருன்னு சொன்னாங்க.

"ஆனா, அவர் மனைவி மட்டும் அவரைப் பத்திக் குறை சொன்னாங்க, 'ரிடயர் ஆயிட்டார்னுதான் பேரு. ஆனா, எங்கேயாவது யாருக்காவது உதவி செய்யறேன்னு வெளியிலதான் சுத்திக்கிட்டிருப்பாரு, வேளாவேளைக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போங்கன்னு சொல்றேன், அதைக் கூடச் செய்யறதில்லை' ன்னு!

"ரிடயர் ஆனப்புறம் அவர் ஒரு சங்கம் ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு வராரு. ஆரம்பத்தில, அதோட தலைவர் பதவியைக் கூட அவர் ஏத்துக்கல. சமீபத்திலதான், அவரை வற்புறுத்தி சம்மதிக்க வச்சு, அந்தச் சங்கத்தோட தலைவரா ஆக்கி இருக்காங்க - ஆக்கி இருக்கோம்."

வெங்கடேசன் பேச்சை நிறுத்தி விட்டு அவையில் இருந்தவர்களப் பார்க்க, அவையில் இருந்தவர்கள் அவரையும், தலைவரையும் மாறி மாறிப் பார்த்தனர்.

"இந்த ஆண்டு 'நோபிள் பர்ஸன்' அவார்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் நம் அன்புக்குரிய தலைவர், பண்பாளர் குவளைக்கண்ணன் அவர்கள்தான்!" என்று வெங்கடேசன் சொல்லி முடித்ததும், கரவொலி அரங்கை அதிர வைத்தது. 

குறள் 994:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

பொருள்: 
நீதியையும், நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்படும் வகையில் வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

995. நட்பும் பகையாகும்!

தொழில்துறைக் கூட்டமைப்பின் கூட்டத்துக்கு நிர்வாக இயக்குனர் மணிகண்டன் சென்றபோது, தன் சுருக்கெழுத்தாளன் சபாபதியையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

கூட்டம் முடிந்ததும், சிற்றுண்டி அருந்த, பக்கத்தில் இருந்த அறைக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். 

ஒவ்வொருவரும் சிற்றுண்டித் தட்டை  எடுத்துக் கொண்டு. அங்கே போடப்பட்டிருந்த மேசைகளை ஒட்டி இருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தனர்

மணிகண்டன் இன்னொரு தொழிலதிபருக்கு அருகே அமர்ந்து, அவருடன் பேசத் தொடங்கினார்.

சபாபதி சற்றுத் தள்ளிப் போய் ஒரு இருக்கையில் அமர்ந்தான். அப்போதுதான், சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த கலிவரதனை கவனித்தான். கலிவரதன் அவன் ஊர்க்காரன். இருவரும் சந்தித்துச் சில ஆண்டுகள் ஆகி இருக்கும். சபாபதி கலிவரதன் அருகில் போய் அமர்ந்து கொண்டு "ஹாய்!" என்றான்.

சிற்றுண்டிக்குப் பிறகு, மணிகண்டனும், சபாபதியும் காரில் அலுவலகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 

தான் நிர்வாக இயக்குனர், சபாபதி தனக்குக் கீழ் பணி புரியும் ஒரு சுருக்கெழுத்தாளன் என்ற உணர்வு இல்லாமல், சபாபதியிடம் ஒரு நண்பனைப் போல் பேசும் இயல்புடையவர் மணிகண்டன்.

"என்ன சபாபதி, ஏன் ஒரு மாதிரி இருக்கே?" என்றார் மணிகண்டன்.

"ஒண்ணுமில்லை சார்!" என்றான் சபாபதி.

"நீ உக்காந்திருந்த இடத்தை விட்டு, இன்னொத்தர் பக்கத்தில போய் உட்காருவதைப் பார்த்தேன். அவர் உனக்குத் தெரிஞ்சவரா?" 

"ஆமாம் சார். எங்க ஊர்க்காரன்."

"நீ ஏதோ சொன்னதும், அவர் ஏன் கோவிச்சுக்கிட்ட மாதிரி வேற இடத்தில போய் உக்காந்துக்கிட்டாரு?"

சபாபதி திடுக்கிட்டு, "நீங்க பார்த்தீங்களா சார்?" என்றான். பிறகு சற்றுத் தயங்கி விட்டு, "நான் அவன்கிட்ட பழையபடி பேசினது அவனுக்குப் பிடிக்கல போல இருக்கு!" என்றான்.

"பழையபடி பேசினதுன்னா?" என்றார் 

"அவன் பேரு கலிவரதன். ஊர்ல, நாங்க அவனை விளையாட்டா 'காலிப்பயலே'ன்னுதான் கூப்பிடுவோம். அவன் பக்கத்தில போய் உக்காந்துக்கிட்டு, 'என்னடா காலிப்பயலே, எப்படி இருக்கே?' ன்னு கேட்டேன். அது அவனுக்குப் பிடிக்கல போல இருக்கு. கோவிச்சுக்கிட்டுப் போயிட்டான். நான் சாரின்னு சொன்னேன். ஆனா, அதை அவன் காதில போட்டுக்கல!" என்றான் சபாபதி.

"சின்ன வயசில விளையாட்டாப் பேசறது வேற. இங்கே, பக்கத்தில இவ்வளவு பேர் இருக்கச்சே, அவரை நீ அப்படிக் கூப்பிட்டது அவருக்குப் பிடிக்காம இருந்திருக்கலாம். ரொம்ப நெருங்கின நண்பர்களா இருந்தாலொழிய, தனியே இருக்கும்போது கூட, விளையாட்டுக்குக் கூட யாரையும் கேலியாப் பேசக் கூடாது. அதை அவங்க தப்பா எடுத்துக்கலாம் இல்லையா?"

"ஆமாம் சார். எனக்கு அப்புறம்தான் புரிஞ்சுது. அவன் 'சந்திரா டெக்ஸ்டைல்ஸ்'னு பேட்ஜ் போட்டிருந்தான். அவனை அவன் ஆஃபீஸ்ல போய்ப் பார்த்து, அவன்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கலாம்னு இருக்கேன்" என்றான் சபாபதி.

"தட் இஸ் தி ஸ்பிரிட்!" என்றார் மணிகண்டன்.

"நீங்க யாரோடயோ பேசிக்கிட்டிருந்தீங்களே, அவர் யாரு சார்? உங்க நண்பரா?" என்றான் சபாபதி.

"நண்பர் இல்ல. எதிரி!" என்றார் மணிகண்டன், சிரித்தபடி.

"என்ன சார் சொல்றீங்க?"

"அவரு ரோகிணி இண்டஸ்டிரீஸோட எம் டி. நம்மோட முக்கியப் போட்டியாளர் அவங்கதானே?"

"அப்புறம் ஏன் சார் அவர்கிட்ட போய்ப் பேசினீங்க?"

"எதிரியா இருந்தாலும் சௌக்கியமான்னு கேக்கலாம் இல்ல? கேக்கணும். அதுதான் பண்பாடு. அதனாலதான், அவர்கிட்ட போய்ப் பேசினேன்."

"அவர் உங்ககிட்ட எப்படி சார் பேசினாரு?"

"அவர் ரொம்ப இறுக்கமாத்தான் இருந்தாரு. உங்கிட்ட எனக்கென்ன பேச்சுங்கற மாதிரி முறைப்பாத்தான் இருந்தாரு. அதைப் பத்தி எனக்கென்ன கவலை? நான் அவர்கிட்ட பேசினது ஒரு கர்டிஸிக்காக. அவர் எங்கிட்ட பதில் பேசினாலும், பேசாட்டாலும் எனக்கு எதுவும் இல்லை!" என்றார் மணிகண்டன், சிரித்தபடி.

'நான் ஒரு நண்பனிடம் தவறாகப் பேசி அவனைக் கோபமூட்டி விட்டேன், இவரோ, ஒரு எதிரியிடம் கூட நலம் விசாரித்து விட்டு, அவர் சரியாக பதில் பேசாததைக் கூடப் பொருட்படுத்தாமல் இருக்கிறாரே! இவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!' என்று நினைத்துக் கொண்டான் சபாபதி.

குறள் 995:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

பொருள்: 
விளையாட்டாகக் கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்பு கெடாமல் நடந்து கொள்வார்கள்.

996. கஜேந்திரனின் வாக்குறுதி!

"சார்! நீங்க அனுப்பின சரக்கு தரக்குறைவா இருக்குன்னு உங்க சேல்ஸ் எக்சிக்யூடிவ்கிட்ட சொன்னேன். அவர் அதைத் திருப்பி எடுத்துக்கிட்டு வேற சரக்கு அனுப்பறதா சொன்னாரு. ஆனா, ரெண்டு வாரம் ஆகியும் இன்னும் எதுவும் நடக்கல. அதனாலதான், உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு வந்தோம்!" என்றார் நித்யானந்தம்.

"சேல்ஸ் எக்சிக்யூடிவ் பேரு?" என்றார் நிர்வாக இயக்குனர் தெய்வசிகாமணி.

நித்யானந்தம் தன்னுடன் வந்திருந்த தன் சக ஊழியர் சிதம்பரத்தைப் பார்க்க, "தனபால்!" என்றார் சிதம்பரம்.

"தனபால் வேலையை விட்டுப் போயாச்சே!"

"அவர் வேலையை விட்டுப் போனா என்ன சார்? அவர் உங்க கம்பெனி ஊழியராத்தானே எங்ககிட்ட பேசினாரு? அவர் சொன்னதை நீங்க நிறைவேற்ற வேண்டாமா?" 

"இப்படியெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமா நடந்துக்கிட்டதாலதான், அவரை வேலையை விட்டு அனுப்பிச்சுட்டேன்!"

"சரி சார்! அவர் சொன்னதை விடுங்க. உங்க சரக்கு தரக்குறைவா இருந்ததுன்னு இப்ப நாங்க உங்ககிட்ட சொல்றோம், இல்ல? அதுக்கு என்ன சொல்றீங்க?" என்றார் நித்யானந்தம், சற்றுக் கோபத்துடன்.

"நான் இந்த கம்பெனியோட எம்.டி. நீங்க உங்க கம்பெனியில மானேஜராவோ என்னவாவோ இருக்கீங்க. உங்களுக்கு நான் எதுக்கு பதில் சொல்லணும்?" என்றார் தெய்வசிகாமணி.

"என்ன சார் நீங்க பேசறது? உங்க சேல்ஸ் எக்சிக்யூடிவ்கிட்ட சொன்னோம்னு சொன்னா, அவர் வேலையை விட்டுப் போயிட்டாருன்னு சொல்றீங்க. உங்ககிட்ட சொன்னா, நாங்க சொல்றதுக்கு பதில் சொல்ல மாட்டேங்கறீங்க. எங்க எம்.டியை விட்டே உங்களுக்கு ஃபோன் பண்ணச் சொல்லட்டுமா?"

"நான் இப்ப பிசியா இருக்கேன். நீங்க போயிட்டு அப்புறம் வாங்க!" என்ற தெய்வசிகாமணி, தொலைபேசியை எடுத்து யாரிடமோ பேசத் தொடங்கினார்.

நித்யானந்தமும், சிதம்பரமும் கோபத்துடன் வெளியே வந்தனர்.

அவர்கள் இருவரும் வெளியே வந்து அவர்கள் வந்த காரில் ஏற  முயன்றபோது, உள்ளிருந்து ஒருவர் வேகமாக ஓடி வந்து, "சார்! கொஞ்சம் நில்லுங்க!" என்றார்.

இருவரும் நின்றனர்.

"சார் பேசினதை மனசில வச்சுக்காதீங்க. நான் உங்களுக்கு வேற சரக்கு அனுப்ப ஏற்பாடு செய்யறேன். இதுக்காகக் கோவிச்சுக்கிட்டு இனிமே ஆர்டர் கொடுக்காம இருந்துடாதீங்க. நீங்க அப்படிப் பண்ணினா, எங்க பிழைப்பில மண் விழுந்துடும்! இங்கே இருபது பேர் வேலை செய்யறோம்!" என்றார் அவர்.

"உங்க எம்.டி எங்களை மதிச்சுப் பேசக் கூட மாட்டேங்கறாரு. நீங்க யாரு? நீங்க சொல்றதை நாங்க எப்படி ஏத்துக்க முடியும்?" என்றார் நித்யானந்தம்.

"சார்! நான் அவரோட அப்பா காலத்திலேந்து இங்கே வேலை செய்யறேன். நான் அவர்கிட்ட சொல்லிப் புரிய வைக்கிறேன். நான் சொன்னா அவர் கேப்பாரு. ரெண்டு நாள் வெயிட் பண்ணுங்க. உங்களுக்கு நல்ல சரக்கு வந்துடும். நல்ல சரக்கைக் கொடுத்துட்டு, முன்னே கொடுத்த சரக்கைத் திருப்பி எடுத்துக்கறோம். எதிர்காலத்தில ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் அதை சரி செஞ்சு கொடுக்கறேன். என் பேரு கஜேந்திரன்" என்றார் அவர்.

"சரி. நீங்க சொல்றதுக்காக, ரெண்டு நாள் வெயிட் பண்றோம்!" என்று சொல்லி விட்டுக் காரில் ஏறினார் நித்யானந்தம்.

காரில் போகும்போது, "இவரை மாதிரி ஒத்தர் இங்கே இருக்கறதாலதான் இந்த கம்பெனி இன்னும் ஓடிக்கிட்டிருக்கு. இல்லேன்னா, தெய்வசிகாமணி நடந்துக்கற லட்சணத்துக்கு இந்த கம்பெனி இருந்த இடமே தெரியாம அழிஞ்சு போயிருக்கும்!" என்றார் சிதம்பரம்.

"இந்த கம்பெனி மட்டும் இல்ல, சிதம்பரம்! இந்த உலகதில சில பேராவது பண்புள்ளவங்களா இருக்கறதாலதான், இந்த உலகமே இயங்கிக்கிட்டிருக்கு. இல்லேன்னா, இந்த உலகமே அழிஞ்சு போயிடும்!" என்றார் நித்யானந்தம்.

குறள் 996:
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்

பொருள்: 
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால்தான், உலகம் அது உள்ள நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு இல்லாமல் போனால், அது மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

997. அரவிந்த் பண்டிட்டின்
ஆன்மீகச் சொற்பொழிவு!

அரவிந்தன் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே, அவனுடைய வகுப்பாசிரியர் அவனைப் பற்றி வகுப்பில் இவ்வாறு கூறி இருந்தார்:

"இந்த வகுப்பிலேயே அதிக புத்திசாலி அரவிந்தன்தான். அவன் பரீட்சையில வாங்கற மார்க்கை மட்டும் வச்சு இதைச் சொல்லல. பொதுவாகவே விஷயங்களைப் புரிஞ்சுக்கறது, பிரச்னைகளை அலசிப் பாக்கறது இதுலெல்லாம் அவன் காட்டற அறிவுக் கூர்மையை வச்சுத்தான் சொல்றேன்!" 

அரவிந்தன் பட்டப்படிப்பை முடித்ததும், ஒரு ஆன்மீக குருவின் சார்பில் சிலர் அவனைப் பார்க்க வந்தனர். ஒரு வித்தியாசமான வேலை வாய்ப்பைப் பற்றி அவனிடம் பேசினர்.

"உனக்கு நிறைய வேலை வாய்ப்புகள் வரும். ஆனா, நாங்க உனக்குக் கொடுக்கற வாய்ப்பு வித்தியாசமானது. உன்னை ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளரா உருவாக்க, மும்பையில இருக்கிற எங்க கல்லூரியில, ஆறு மாசம் பயிற்சி கொடுப்போம். பயிற்சியின்போது, தங்கும் அறை, சாப்பாடு எல்லாம் இலவசமாக் கொடுக்கறதோட, ஒரு கணிசமான தொகையை ஸ்டைபெண்டாகவும் கொடுப்போம். 

"பயிற்சி முடிஞ்சப்புறம், நாடு முழுவதும் பல இடங்கள்ள நாங்க ஏற்பாடு செய்யற நிகழ்ச்சிகள்ள, நீ சொற்பொழிவு ஆற்றணும். மாசச் சம்பளமா உனக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும். நாடு முழுக்க சுற்றிப் பார்க்கற வாய்ப்புக் கிடைக்கும். வெளிநாடுகளுக்குப் போற வாய்ப்புக் கூடக் கிடைக்கும். 

"எங்க குரு ஒரு சந்நியாசிதான். எங்க அமைப்பில நிறைய சந்நியாசிகள் இருக்காங்க. ஆனா உன்னைப் போன்ற ஆன்மீகச் சொற்பொழிவாளர்களுக்கு இது ஒரு கேரியர்தான். உன்னை மாதிரி அறிவுக் கூர்மை உள்ளவங்களோட சேவை எங்க இயக்கத்துக்குத் தேவைன்னு எங்க குரு நினைக்கறதால, உன்னை மாதிரி அறிவுக் கூர்மை உள்ளவங்களை நாங்க நாடு முழுக்க சல்லடை போட்டுத் தேடிக் கண்டுபிடிக்கிறோம்.

"உன்னோட தனிப்பட்ட வாழ்க்கையில எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. நீ திருமணம் செஞ்சுக்கறதுக்கு எந்தத் தடையும் இல்ல. மூணு வருஷம் கட்டாயமா எங்க அமைப்பில வேலை செய்யணும். அதுக்கப்புறம், நீ வேற வேலைக்குப் போக விரும்பினா, போகலாம். என்ன சொல்ற?" 

அவர்கள் விவரித்த வாய்ப்பு அரவிந்தனுக்குப் பிடித்திருந்ததால், அவன் அதற்கு ஒப்புக் கொண்டான்.

று மாதப் பயிற்சிக்குப் பிறகு, அரவிந்தனைப் பற்றி, குரு மற்றவர்களிடம் கருத்துக் கேட்டபோது, அனைவருமே சொன்னது இதுதான்: 

"அரவிந்தன் மிகுந்த அறிவுக் கூர்மை உள்ளவன்தான், சந்தேகமில்லை. ஆனால், மற்றவர்களை மதிக்காமல் நடந்து கொள்வது, பண்பாடு இல்லாமல் நடந்து கொள்வது ஆகிய விரும்பத்தகாத குணங்கள் அவனிடம் இருக்கின்றன."

ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்த குரு, "அவன் நம்மோட தத்துவங்களைப் பேசி விளக்கப் போறான் அவ்வளவுதானே! அவனோட நடத்தையில பண்பாடு இல்லாட்டா நமக்கென்ன?" என்று கூறி, அரவிந்தன் சொற்பொழிவாளராகத் தேர்ந்தெடுக்கப்பட சம்மதம் அளித்தார்.

அரவிந்தன் 'அரவிந்த் பண்டிட்' என்று பட்டம் அளிக்கப்பட்டு, அந்த அமைப்பின் ஆன்மீகத் தத்துவங்களை மக்களிடையே பரப்பும் பணியில் ஈடுபடுத்தப்பட்டான்.

"ஒவ்வொரு வகை உயிரினத்துக்கும் உள்ள அறிவுநிலை வெவ்வேறானது. ஓரறிவிலிருந்து துவங்கி ஆறறிவு வரை அறிவுநிலை வேறுபடுகிறது. திரைப்படம் தயாரிப்பவர்கள் ஏழாம் அறிவு பற்றிக் கூடப் பேசுகிறார்கள்...."

இந்த இடத்தில் அரவிந்த் பண்டிட் நிறுத்தியதும், முன் வரிசையில் இருந்த சிலர் சிரித்தனர். அதே சமயம், பின் வரிசைகளிலிருந்து சிலர் கைகளை மேலே உயர்த்தி ஆட்டி, "மைக், மைக்!" என்று கூவி, ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை என்பதைத் தெரிவித்தனர்.

கையைச் சொடுக்கி நிகழ்ச்சி அமைப்பாளரை அருகே அழைத்த அரவிந்த் பண்டிட், அவரிடம் ஏதோ கோபமாகப் பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, மைக்கை ஏற்பாடு செய்தவர் ஓடி வந்து மைக்கைச் சரி செய்தார்.

மைக் சரியாகி, அரவிந்த் பண்டிட் கூட்டத்தை ஏற்பாடு செய்தவரைக் கடிந்து பேசியது ஒலிபெருக்கி வழியே அனைவரின் காதுகளிலும் விழுந்தது. மைக் சரியானது தெரியாமல், தொடர்ந்து அமைப்பாளரைக் கடிந்து பேசிக் கொண்டிருந்தார் அரவிந்த் பண்டிட். அவர் பேச்சில் வெளிவந்த சில வசைச் சொற்களைக் கேட்டுச் சிலர் காதுகளைப் பொத்திக் கொண்டனர்.

"என்ன இது? குடிச்சுட்டுத் தெருவில சண்டை போட்டுக்கறவங்க பேசற மாதிரி பேசறாரு? இவரெல்லாம் ஆன்மீகச் சொற்பொழிவாளரா?" என்றார் ஒருவர்  கோபத்துடன்.

"அறிவாளி, விஷயம் தெரிஞ்சவர். நல்லாப் பேசுவார்னு சொன்னாங்க. ஆனா இவர் நடந்துக்கறதைப் பார்த்தா, இவர் சொன்ன ஓரறிவு ஜீவராசிகளை விடக் கீழானவரா இருப்பார் போலிருக்கே!" என்றார் மற்றொருவர்.

குறள் 997:
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.

பொருள்: 
மனிதர்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவு உயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவார்.

998. பழி வாங்க ஒரு சந்தர்ப்பம்!

தனஞ்சயன் தன் நண்பர் முருகேசனின் பெண் சுகன்யாவை, தன் மகன் பாலுவுக்குத் திருமணம் செய்து கொடுக்கச் சொல்லிக் கேட்டபோது, முருகேசன் மறுத்து விட்டார்.

நண்பர்களுக்குள் சம்பந்தம் செய்து கொள்வது சரியாக இருக்காது என்று முருகேசன் காரணம் கூறினாலும், பொருளாதார நிலையில் தான் முருகேசனை விடத் தாழ்ந்தவன் என்பதுதான் உண்மையான காரணம் என்பது தனஞ்சயனுக்குப் புரிந்தது.

"காசுதான் பெரிசு! நண்பன்னு கூட பாக்காம, முடியாதுன்னு சொல்லிட்டானே!" என்று தன் மனைவியிடம் புலம்பினார் தனஞ்சயன்.

"பெண் கொடுக்கறது அவங்க விருப்பத்தைப் பொருத்தது. நண்பர்ங்கறதுக்காக, நீங்க கேட்டவுடனே அவர் தன் பெண்ணை நம்ம பிள்ளைக்குக் கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னு எதிர்பாக்கறது என்ன நியாயம்?" என்றாள் அவர் மனைவி.

ஆயினும், அன்று முதல், தனஞ்சயன் முருகேசனைத் தன் விரோதியாகவே பார்க்க ஆரம்பித்தார்.

முருகேசனின் பெண் சுகன்யாவுக்கு நிச்சயமான திருமணம் திடீரென்று நின்று போயிற்று.

பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தியதற்குச் சரியான காரணம் கூறவில்லை. வேறொரு ஜோதிடரிடம் ஜாதகப் பொருத்தம் பார்க்கச் சொன்னபோது, அவர் ஜாதகம் பொருந்தாது என்று சொல்லி விட்டதாகச் சொன்னார்கள்.

"திருமணம் நிச்சயம் செய்த பிறகு எதற்கு ஜாதகம் பார்த்தீர்கள்?" என்ற கேள்விக்கு அவர்களால் சரியான பதில் கூற முடியவில்லை.

சில நாட்களுக்குப் பிறகுதான் உண்மையான காரணம் தெரிந்தது.

சுகன்யா தனஞ்சயனின் மகன் பாலுவைக் காதலித்ததாகவும், பொருளாதார ஏற்றத் தாழ்வினால் முருகேசன் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஒரு செய்தி பிள்ளை வீட்டாருக்குத் தெரிவிக்கப்பட்டதுதான் அவர்கள் திருமணத்தை நிறுத்தியதற்குக் காரணம் என்று தெரிந்தது.

இந்த விஷயம் தெரிந்ததும், முருகேசனின் மகனும் சுகன்யாவின் அண்ணனுமான மூர்த்தி கொதித்துப் போய் விட்டான்.

"சுகன்யாவும், பாலுவம் சந்திச்சுக்கிட்டது கூட இல்லை. அப்படி இருக்கறப்ப, இப்படி ஒரு பொய்ச் செய்தியை தனஞ்சயன் மாமாதான் பரப்பி இருக்கணும். இத்தனை நாள் உங்களோட நட்பா இருந்துட்டு, அவர் பையனுக்கு சுகன்யாவைக் கல்யாணம் செஞ்சு வைக்க நீங்க ஒத்துக்கலைன்னதும், இப்படிப்பட்ட கீழ்த்தரமான காரியத்தில இறங்கி இருக்காரே!" என்றான் மூர்த்தி, கோபத்துடன்.

முருகேசன் எதுவும் பேசவில்லை.

அந்த ஊரில் இருந்தால் சுகன்யாவின் திருமணம் தடைப்படும் என்று நினைத்து, அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு நகரத்துக்குச் சென்று குடியேறினார்கள்.

"அப்பா! இன்னிக்கு ஒரு விஷயம் நடந்தது" என்றான் மூர்த்தி.

"என்ன?" என்றார் முருகேசன்.

"உங்க பழைய நண்பர் தனஞ்சயனோட முதியோர் பென்ஷன் விண்ணப்பம் என் மேஜைக்கு வந்தது."

"அவன் ஏன் முதியோர் பென்ஷனுக்கு விண்ணப்பிக்கணும்?அவனுக்கு வேற வருமானம் இல்லையா என்ன?"

"நாம அவரைப் பாத்து இருபது வருஷம் ஆச்சு. இந்த இருபது வருஷத்தில என்ன நடந்ததோ!"

"சரி. சாங்ஷன் பண்ணிட்ட இல்ல?"

"இல்லை. ரிஜக்ட் பண்ணப் போறேன். ஃபைல் இன்னும் என் மேஜை மேலதான் இருக்கு."

"ஏன்? அவனுக்கு எலிஜிபிலிடி இல்லையா?"

"இருக்கு. ஆனா, நான் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அவர் விண்ணப்பத்தை நிராகரிக்கப் போறேன். உங்ககிட்ட சொன்னா நீங்க சந்தோஷப்படுவீங்கன்னுதான்சொல்றேன்!"

"விண்ணப்பத்தை நிராகரிக்கறதுக்கு முன்னால எங்கிட்ட சொன்னதில சந்தோஷம்தான். ஆனா, நீ செய்ய நினைச்சது ரொம்ப இழிவான செயல்!"

"என்னப்பா இப்படிச் சொல்றீங்க? அவரு நம்ம சுகன்யா கல்யாணத்தையே நிறுத்தினவரு. அதனால, நாம அந்த ஊரை விட்டே வரும்படி ஆச்சு. அப்புறம் சுகன்யாவுக்கு நல்ல இடத்தில கல்யாணம் ஆயிடுச்சுன்னாலும், அவர் செஞ்ச துரோகத்துக்கு அவரைப் பழி வாங்கறதில என்ன தப்பு?"

"பழி வாங்கறதே தப்பு. அதிலேயும், நீ உன் அதிகாரத்தைத் தவறாப் பயன்படுத்தி, அவரைப் பழி வாங்க நினைக்கிறது ஒழுக்கம், பண்பாடு இதையெல்லாம் மீறின செயல். முறைப்படி அவனுக்குக் கிடைக்க வேண்டியதைத் தடுக்காதே!" என்றார் முருகேசன். 

குறள் 998:
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.

பொருள்: 
தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவரிடம் பண்பற்றவராய் நடந்து கொள்வது கூட இழிவானதே ஆகும்.

999. சொன்னதைக் கேட்டிருந்தால்...

"ஏங்க, நாளைக்கு உங்க சக ஊழியர் ராமனோட பையனுக்குக் கல்யாணம். நாம நாளைக்கு முகூர்த்தத்துக்குப் போகப் போறோமா, இன்னிக்கு சாயந்திரம் ரிசப்ஷனுக்குப் போகப் போறோமா?" என்றாள் மாலா.

"ரெண்டுக்குமே போகப் போறதில்ல!" என்றான் கீர்த்திவாசன்.

"ஏன்?"

"ராமன் எனக்கு நெருக்கமான நண்பர் இல்ல. அவர் ஒரு மரியாதைக்காக, ஆஃபீஸ்ல வேலை செய்யறவங்க எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்திருக்காரு. நாம போகணும்னு அவசியமில்லை."

ரண்டு நாட்கள் கழித்து, "உங்க ஆஃபீஸ் நண்பர் முரளியோட மனைவியைத் தற்செயலா மார்க்கெட்ல பார்த்தேன். ராமனோட பையன் கல்யாணத்துக்கு உங்க ஆஃபீஸ்லேந்து எல்லாருமே வந்திருந்தாங்களாமே! நாம மட்டும்தான் போகலை போல இருக்கு. நீங்க ஏன் வரலேன்னு எங்கிட்ட கேட்டாங்க. உங்களுக்கு ஏதோ வேலை இருந்ததுன்னு சொல்லிச் சமாளிச்சுட்டேன்!" என்றாள் மாலா.

"ஆமாம். ஆஃபீஸ்ல கூட சில பேர் என்னைக் கேட்டாங்க" என்றான் கீர்த்திவாசன், சுருக்கமாக.

"நீங்க பொதுவாகவே யார்கிட்டேயும் அதிகமாப் பழகறதில்ல. எங்க வீட்டில கூட இதைச் சொல்லிக் குறைப்பட்டுக்கறாங்க. ஏன், உங்க தங்கைகள் கூட 'அண்ணன் எங்க வீட்டுக்கெல்லாம் வரதில்ல, ஃபோன் பண்ணிப் பேசறது கூட இல்லைன்னு எங்கிட்ட சொல்லி  வருத்தப்பட்டிருக்காங்க. நீங்க மத்தவங்களோட இன்னும் கொஞ்சம் அதிகமாப் பழகணும்" என்றாள் மாலா.

"என்னால இப்படித்தான் இருக்க முடியும். என்னோட இயல்பு அதுதான்."

"ஆனா மத்தவங்க, நீங்க அவங்களை மதிக்கறதில்லேன்னு நினைக்கறாங்களே!"

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?"

"மத்தவங்களோட நாம பழகினாத்தான், நாம அவங்களை மதிக்கிறதா அவங்க நினைப்பாங்க. அதனால, உங்களுக்கு விருப்பம் இல்லாட்டாலும், ஒரு கர்ட்டிஸியா நினைச்சு நாம மத்தவங்களோட பழகணும்."

"அதுதான் நீ எல்லோரோடயும் நல்லாப் பழகறியே! அதனாலதானே என் தங்கைகள் கூட உங்கிட்ட வந்து என்னைப் பத்திப் புகார் செய்யறாங்க!"

"நான் சொன்னதை நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்" என்றாள் மாலா.

"விடு. நான் எப்படி இருக்கேனோ, அப்படியே இருக்கேன். நீ எப்படி இருக்கியோ, அப்படியே இருந்துக்கோ!" என்று சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் கீர்த்திவாசன்.

கீர்த்திவாசன் வீட்டின் முன்னறையில் அமர்ந்திருந்தான்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்றாகி விட்டது. ஒரே மகனுக்குத் திருமணமாகி அமெரிக்காவில் இருக்கிறான்.

மதியச் சாப்பாட்டை அருகிலிருந்த ஒரு மெஸ்ஸிலிருந்து கொண்டு வைத்து விடுவார்கள். அதைச் சாப்பிட்டாகி விட்டது.

வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. அலமாரியில் புத்தகங்கள் இருக்கின்றன. அவை ஓரளவுக்கு நேரம் போக உதவும்.

கையில் செல்ஃபோன் இருக்கிறது. ஆனால், யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. தங்கைகளிடம் பேசினால், எடுத்த உடனேயே, "என்ன அண்ணா, என்ன விஷயம்?" என்பார்கள். விஷயம் இல்லாமல் அண்ணன் ஃபோன் செய்ய மாட்டான் என்று அவ்வளவு நம்பிக்கை!

ஆஃபீஸ் நண்பர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களுடன் தொடர்பு இல்லை. அந்த ஓரிரு நண்பர்களுடன் எப்போதாவதுதான் பேச முடியும்.

நீண்ட நேரம் சோஃபாவில் உட்கார்ந்திருந்த கீர்த்திவாசன், திடீரென்று இப்போது நேரம் என்ன இருக்கும் என்று யோசித்தான். அருகிலிருந்த செல்ஃபோனை எடுத்துப் பார்த்தான். செல்போன் பெரும்பாலும் நேரம் பார்க்கத்தான் பயன்படுகிறது!

மணி மூன்று. 

'அவ்வளவுதானா? ஐந்து மணிக்கு மேல் ஆகி இருக்கும் என்று நினைத்தேனே!'.

வீட்டுக்குள் பார்த்தான். அங்கே இல்லாத மனைவியின் நினைவு வந்தது. மற்றவர்களிடம் பழக வேண்டும் என்று எத்தனையோ முறை கூறியவள். அவள் சொன்னபடி கேட்டிருந்தால், சிலரிடமாவது சற்று நெருக்கமான தொடர்பு இருந்திருக்கும்.

'நான் சொன்னதைக் கேட்டிருந்தால், இப்படித் தனியே உட்கார்ந்து கொண்டு, நேரம் என்ன இருக்கும் என்பதைக் கூட உணராமல், வெறுமையில் வாடிக் கொண்டிருக்க வேண்டாமே!' என்று எங்கேயோ இருந்து கொண்டு சொல்லிக் கொண்டிருக்கிறாளோ என்னவோ!  

குறள் 999:
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

பொருள்: 
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகல் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

1000. முதியவரின் கோபம்!

"ஒவ்வொருத்தரும் பணம் சம்பதிக்கறதுக்கு எவ்வளவோ கஷ்டப்படறாங்க. ஆனா, நம்ம எம்.டி தொட்டதெல்லாம் பொன்னா மாறுது!" என்றான் கரண்.

"புது ப்ராஜக்ட்டைப் பத்தித்தானே சொல்ற? ப்ராஜக்ட் கன்சல்டன்ட் கூட அவ்வளவு நம்பிக்கையா இல்ல. ஆனா, யாரும் எதிர்பார்க்காத அளவுக்குப் பிரமாதமான வெற்றி!" என்றான் அவன் சக ஊழியன் சக்தி. 

எம்.டி கோபாலின் கார் வரும் சத்தம் கேட்கவே, இருவரும் பேச்சை நிறுத்திக் கொண்டனர்.

கரண் பியூனை அழைத்து, "சார் வந்துட்டாரு. அவரைப் பார்க்க வந்த ஒரு பெரியவர் விசிட்டர்ஸ் அறையில உட்கார்ந்திருக்காரு. சார்கிட்ட சொல்லிட்டு, அவரை உள்ளே அனுப்பு!" என்றான்.

கோபாலின் அறைக்குள் போய் விட்டுச் சற்று நேரத்தில் வெளியே வந்த அந்தப் பெரியவர், அலுவலகத்தின் மையத்தில் நின்று, கோபத்துடன் உரத்த குலில் பேசத் தொடங்கினார்.

"இவனைப் படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்! என்னை விடுங்க. இவனை வளர்க்க இவன் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா! இப்ப, அவ உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில கிடக்கறா. பையனைப் பார்க்கணும்னு ஆசைப்படறா. ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டான்னுதான், ஆஃபீசுக்கு வந்து நேர்ல கூப்பிட்டேன். 'இப்ப பிசியா இருக்கேன், நேரம் கிடைக்கிறப்ப வந்து பாக்கறேன்'கறான். 

"எப்ப வந்து பாக்கறது? அவ உயிரை விட்ட அப்புறமா? பணம் வேணும்னா கொடுக்கறானாம். இவன் பணம் யாருக்கு வேணும்? அப்பா அம்மாவை மதிக்காத இவன் பணத்தில ஒரு பைசா கூட வேண்டாம்னுதானே நாங்க பத்து வருஷமா வைராக்கியமா இருக்கோம்? 

"இவ்வளவு பெரிய ஆஃபீஸ் இருக்கு. இவ்வளவு பேர் வேலை செய்யறீங்க. பிசினஸ்ல பணம் கொட்டுது. ஏகப்பட்ட சொத்து சேர்த்து வச்சிருக்கான். என்ன பிரயோசனம்? பாலைக் காய்ச்சித் துருப்பிடிச்ச பாத்திரத்தில கொட்டின மாதிரி அத்தனையும் வேஸ்ட்!"

பெரியவரின் உரத்த குரலைக் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த கோபால், "என்னையா எல்லாரும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கீங்க? செக்யூரிடியைக் கூப்பிட்டு, இந்தக் கிழவனை வெளியில பிடிச்சுத் தள்ளச் சொல்லுங்க!" என்று இரைந்து கத்தினான்.

குறள் 1000:
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.

பொருள்: 
நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...