அதிகாரம் 92 - வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)

திருக்குறள்
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர்

911. புதிய ஊரில் ஒரு புதிய அறிமுகம்!

வாசு ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து, தங்குவதற்கு நல்ல ஹோட்டல் ஏதும் அருகில்  இருக்கிறதா என்று பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவன் பின்புறமிருந்து "சார்! ஒரு நிமிஷம்!" என்று ஒரு குரல் கேட்டது.

வாசு திரும்பிப் பார்த்தான். இளமைத் தோற்றத்துடன் இருந்த ஒரு பெண் அவன் அருகில் வந்து, "என் பெயர் வந்தனா!" என்றபடியே, தன் கையை நீட்டினாள்.

தயக்கத்துடன் அவளுடன் கைகுலுக்கிய வாசு, "நீங்க யாருன்னு எனக்குத் தெரியலையே!" என்றான்.

"ஊருக்குப் புதுசா வந்து இறங்கறவங்களுக்கு உதவி செய்யறது என்னோட பழக்கம். நல்ல ஹோட்டல் எதுன்னுதானே தேடிக்கிட்டிருக்கீங்க? நல்ல ஹோட்டலை நான் காட்டறேன், வாங்க!" என்று அவன் கையைப் பற்றி இழுத்தாள்.

விருக்கென்று கையை உதறிக் கொண்ட வாசு, "அதெல்லாம் வேண்டாம். நான் பாத்துக்கறேன்!" என்று கூறி நடக்க ஆரம்பித்தான்.

அவனுடனே நடந்து வந்த வந்தனா என்ற அந்தப் பெண், "சார்! நான் நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு வசதியானவளாத் தெரிஞ்சாலும், நான் ஒரு ஏழை. எனக்கு யாரும் இல்லை. தங்கறதுக்கு இடமும் இல்லை. பகல்ல எல்லாம் எங்கேயாவது பார்க்லேயோ ஹோட்டல் லாபியிலோ உக்காந்துப்பேன். ஆனா, ராத்திரி என்ன செய்யறது? இன்னிக்கு ராத்திரி மட்டும் உங்க அறையில தங்கிக்கறேனே! காலையில போயிடுவேன்!" என்று கூறி விட்டு, அவன் காதருகில் வந்து "நூறு ரூபா கொடுத்தா போதும். ராத்திரி முழுக்க நான் உங்களுக்கு சொந்தம்!" என்று கூறிச் சிரித்து விட்டு, அவன் கையைப் பற்றி அழுத்தினாள்.

வாசுவுக்கு உடல் முழுவதும் சில்லிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

"நான் அப்படிப்பட்டவன் இல்லைம்மா" என்று கூறி விட்டு, வேகமாக நடக்க ஆரம்பித்தான் அவன்.

"யாருமே அப்படிப்பட்டவங்க இல்லை சார்! இதெல்லாம் ஒரு ஜாலிதானே! ஹோட்டல்ல எதுவும் கேக்க மாட்டாங்க. எல்லாமே சேஃபா இருக்கும்" என்ற வந்தனா, "ஹோட்டல் விஜயாவுக்குப் போங்க. அங்கே எல்லாமே நல்லா இருக்கும். நான் ஹோட்டல் வாசல்ல நின்னுக்கிட்டிருப்பேன். உங்களுக்கு விருப்பம்னா, என்னைக் கூப்பிடுங்க! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. நீங்க ஒத்துக்கிட்டா, என் அதிர்ஷ்டம்தான்" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே, அவன் கன்னத்தை செல்லமாகத் தட்டி விட்டு, வேகமாக நடந்து சென்று விட்டாள்.

வேறு ஏதாவது ஹோட்டலுக்குத்தான் செல்ல வேண்டும் என்று முதலில் நினைத்த வாசு, 'சரி. அந்த விஜயா ஹோட்டலுக்குத்தான் போய்ப் பார்ப்போமே! அது நல்லா இருந்தா, அங்கே தங்கிக்கலாம். ஆனா, அவள் வேண்டாம்!' என்று முடிவு செய்து, விஜயா ஹோட்டல் எங்கிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு போனான்.

ஹோட்டல் வாசலில் வந்தனா நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும், தன்னை அறியாமலேயே "வா!" என்றான் வாசு.

றுநாள் காலை, வாசு உறக்கத்திலிருந்து விழித்தபோது, பக்கத்தில் படுத்திருந்த வந்தனா இல்லை.

உள்ளணர்வின் உந்துதலில் மேஜை மீது வைத்திருந்த பெட்டியைப் பார்த்தான் வாசு. ஏதோ வித்தியாசமாகத் தோன்றியது.

அருகில் சென்று பார்த்தபோது, பெட்டியின் பூட்டு திறக்கப்பட்டிருப்பது தெரிந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தான். துணிகளுக்கடியில் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் கொண்ட கவரைக் காணவில்லை.

அலுவலக வேலையாக அந்த ஊருக்கு வந்ததால், செலவுக்காக அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட பணம்.

அந்தப் பெண் அவனை நன்கு ஏமாற்றி இருக்கிறாள். ஹோட்டல்காரர்களும் இதற்கு உடந்தையாக இருக்கலாம். 

என்ன செய்வது? போலீசில் புகார் கொடுக்க முடியாது. பத்து மணிக்கு மேல் அலுவலகத்துக்கு டிரங்க் கால் செய்து, பணம் தொலைந்து விட்டதாகக் கூறி செலவுக்குப் பணம் ஏற்பாடு செய்யுமாறு கேட்க வேண்டும். எப்படி ஏற்பாடு செய்வார்கள் என்று தெரியவில்லை. பாங்க்கில் டிராஃப்ட் எடுத்து அனுப்பினாலும், வந்து சேர ஒருநாளாவது ஆகும். பணம் எப்படித் தொலைந்தது, போலீசில் ஏன் புகார் செய்யவில்லை என்றெல்லாம் கேட்பார்கள். பதில் சொல்லிச் சமாளிப்பது கடினம்தான்.

ஹோட்டலுக்குச் செலுத்திய முன்பணத்தில், ஹோட்டல் அறை வாடகையைக் கழித்துக் கொள்ளச் சொல்லி விட்டு, பர்சில் இருகும் பணத்தில் டிக்கட் வாங்கிக் கொண்டு ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான்.

இதனால், நிறுவனத்தில் தான் நகைப்புக்குரிய ஒரு பொருளாக ஆவதுடன், தன் நற்பெயரும் நம்பகத்தன்மையும் கெடப் போவது நிச்சயம்.

ஒரு விலைமகள் தன்னை அழைத்தபோது, அதை நிராகரிக்காமல், சபலத்தில் செய்த செயல் எத்தகைய பிரச்னைகளை ஏற்படுத்தப் போகிறது என்று நினைத்துப் பார்த்தபோது, வாசுவுக்குத் தன்னை தண்டித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

குறள் 911:
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.

பொருள்: 
அன்பினால் விரும்பாமல், பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தையே கொடுக்கும்.

912. பஸ் நின்றபோது...

ஸ் அந்த நிறுத்தத்தில் சில நிமிடங்கள் நின்று விட்டுக் கிளம்பியபோது, சேதுவின் அருகில் காலியாக இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் அந்தப் பெண்.

சேதுவைப் பார்த்து அவள் சிரித்ததும், சேது பதிலுக்குச் சிரித்தான்.

"என் பேரு கிரிஜா. நான் ஆஃபீஸ் வேலையா திருச்சி போறேன். நீங்க?" என்றாள் அவள்.

"நானும் ஆஃபீஸ் வேலையாத்தான் திருச்சி போறேன்" என்றான் சேது.

"எத்தனை நாள் தங்குவீங்க? எங்கே தங்குவீங்க?"

"ரெண்டு நாள். ஹோட்டல்லதான் தங்குவேன். ஏன் கேக்கறீங்க?"

திடீரென்று, கிரிஜாவின் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் வழிந்து, அவள் கன்னங்களில் வழிந்தன.

கைக்குட்டையால் கண்ணீரை நாசூக்காகத் துடைத்துக் கொண்ட கிரிஜா, "ஐ ஆம் சாரி" என்றாள்.

"ஏதாவது பிரச்னையா?" என்றான் சேது, சற்றுப் பதட்டத்துடன்.

"தப்பா நினைக்காதீங்க. நான் ஒரு கால் கேர்ள். தன்னோட ரெண்டு நாள் திருச்சியில வந்து தங்கச் சொல்லி ஒத்தர் கூப்பிட்டாரு. அவரோடதான் பஸ்ஸில வந்தேன். இதுக்கு முந்தின ஸ்டாப்பில இறங்கினவர், பஸ்ஸில ஏறல. நான் கண்டக்டர்கிட்ட சொல்லிட்டுக் கீழே இறங்கிப் போய்ப் பார்த்தேன். அவரை எங்கேயும் காணோம். என்னை ஏமாத்திட்டுப் போயிட்டான், அயோக்கியன்!"

சொல்லி முடிக்கும்போது, கிரிஜாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது.

"அழாதீங்க. நீங்க சென்னைக்குத் திரும்பிப் போக பஸ் கட்டணத்துக்கு வேண்டிய பணத்தை நான் கொடுக்கறேன். அடுத்த ஸ்டாப்ல இறங்கித் திரும்பிப் போயிடுங்க" என்றான் சேது.

"எவ்வளவு நல்ல மனசு சார் உங்களுக்கு! என்னை ஏமாத்திட்டுப் போனவன் மாதிரி அயோக்கியங்க இருக்கற உலகத்தில உங்களை மாதிரி கருணை உள்ளவங்களும் இருக்காங்களே!" என்று கூறி, தன் நன்றியை வெளிப்படுத்துவது போல், அவன் கை மீது தன் கையை வைத்தாள் கிரிஜா.

சேது சங்கடத்துடன் தன் கையை விடுவித்துக் கொண்டான்.

சில நிமிடங்கள் கழித்து, "நான் ஒண்ணு கேட்டா, தப்பா நினைக்க மாட்டீங்களே!" என்றாள் கிரிஜா,.

"கேளுங்க!" 

"எப்படியும் பாதி தூரத்துக்கு மேல வந்துட்டேன். அதனால, திரும்பிப் போக வேண்டாம்னு பாக்கறேன்."

சேது மௌனமாக இருந்தான்.

மீண்டும் சேதுவின் மீது தன் கையை வைத்து அழுத்திய கிரிஜா, "இவ்வளவு நல்ல மனசு உள்ள உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது. உங்களோடயே நானும் ரெண்டு நாள் ஹோட்டல்ல தங்கிக்கறேனே! உங்க மனைவின்னு சொல்லி ஹோட்டல்ல ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம். நீங்க திரும்பி வரப்ப, உங்களோடயே வந்துடறேன். எனக்குன்னு ஒரு ரேட் இருக்கு. ஆனா, நீங்க விருப்பமானதைக் கொடுத்தா போதும்" என்றாள், மயக்கும் சிரிப்புடன்.

சேதுவுக்கு உடல் முழுவதும் சில்லென்று ஒரு உணர்வு பரவியது.

"இல்லை, வேண்டாம்" என்றான் சேது, அரை மனதுடன்.

"பிளீஸ்! எனக்கு இது தொழில்தான். ஆனா, உங்க விஷயத்தில எனக்கு இது ஒரு பிளெஷரா இருக்கும்!" என்றபடியே, அவன் கையை மீண்டும் அழுத்தினாள் கிரிஜா.

"எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லை" என்றான் சேது. சொல்லும்போதே, ஏன் இப்படிச் சொன்னோம் என்று நினைத்துக் கொண்டான்.

"பணம்தான் ஒரு பிரச்னை இல்லைன்னு சொன்னேனே!" என்று சொல்லிச் சிரித்தாள் கிரிஜா.

ஸ் அடுத்த நிறுத்தத்தில் நின்றதும், கிரிஜா கீழே இறங்கிச் சென்றாள்.

சில நிமிடங்கள் பஸ் அங்கே நின்றது.

பஸ்ஸின் கதவருகே கிரிஜா ஒரு இளைஞனுடன் பேசிக் கொண்டு நிற்பதை சேது கவனித்தான். பிறகு அவன் பஸ்ஸில் ஏறியபோது, அவளும் அவன் பின்னே ஏறினாள்.

சேதுவின் இருக்கைக்கு அருகில் அமராமல் அதைத் தாண்டிச் சென்ற கிரிஜா, அந்த இளைஞன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். சேதுவைக் கடந்து சென்றபோதோ, அந்த இளைஞன் அருகில் அமர்ந்து கொண்ட பிறகோ, அவள் சேதுவின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

'என்னை விட வசதியான ஒருவனைப் பிடித்து விட்டாள் போலிருக்கிறது!' என்று நினைத்த சேதுவுக்கு, அவள் தன்னை நடத்திய விதம் பற்றிக் கோபமும் அவமானமும் ஏற்பட்டாலும், இப்படிப்பட்ட ஒரு பெண்ணுடன் ஏற்படவிருந்த தொடர்பிலிருந்து தப்பித்து விட்டதை நினைத்து நிம்மதியாகவும் இருந்தது.

குறள் 912:
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.

பொருள்:
 
கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து, அதை நாடாமல் விட வேண்டும்.

913. துணிக்கடை பொம்மை!

"உனக்கு ஏண்டா இந்த விபரீத ஆசை?" என்றான் மூர்த்தி.

"விபரீத ஆசை என்ன? சாதாரணமா எல்லாருக்கும் வர ஆசைதானே?" என்றான் உமாநாத் 

"எல்லாருக்கும் வர ஆசைன்னு சொல்லாதே. சில பேருக்கு வரலாம். அவங்கள்ள கூட பல பேர் அந்த ஆசையை அடக்கிப்பாங்க."

"அந்த சில பேர்ல நானும் ஒருத்தன்னு வச்சுக்கயேன்!"

"சரி. அப்புறம் உன் இஷ்டம். எங்கே போகப் போற?" என்றான் மூர்த்தி.

"ஏன், எங்கேன்னு தெரிஞ்சா, நீயும் அங்கே போகலாம்னுட்டா?" என்றான் உமாநாத், சிரிப்புடன்.

"சேச்சே! எனக்கு அப்படிப்பட்ட எண்ணமெல்லாம் கிடையாது. எங்கேயாவது போய் மாட்டிக்கப் போறியேன்னு கேட்டேன்."

"கவலைப்படாதே! என் ஃபிரண்ட் ஒத்தனுக்கு இந்தப் பழக்கம் உண்டு. அவன் என்னை அங்கே அழைச்சுக்கிட்டுப் போறேன்னு சொல்லி இருக்கான்."

"ஆல் தி பெஸ்ட்!" என்றான் மூர்த்தி.

"எப்படிடா இருந்தது?" என்றான் மூர்த்தி, உமாநாத்தை அடுத்த நாள் சந்தித்தபோது.

"என்னத்தைச் சொல்ல? எதையோ எதிர்பார்த்துப் போனேன்!" என்றான் உமாநாத், ஏமாற்றத்துடன்.

"ஏன்? உனக்கு அவளைப் பிடிக்கலையா?"

"எனக்குப் பிடிச்சு என்ன பயன்? அவளுக்குப் பிடிக்க வேண்டாமா? இயந்திரத்தனமா நடந்துக்கிட்டா. எனக்கு இன்ட்ரஸ்டே போயிடுச்சு!"

"பின்னே, பணத்துக்காக உன்னோட  விருப்பத்தை நிறைவேத்தற ஒரு பொண்ணு காதலி மாதிரி நடந்துப்பான்னு எதிர்பார்க்க முடியுமா?" என்றான் மூர்த்தி, கேலியாக.

"அங்கே பாத்தியா?" என்று தெருவிலிருந்த ஒரு துணிக்கடையைச் சுட்டிக் காட்டினான் உமாநாத்.

"துணிக்கடை. அதுக்கு என்ன?"

"அதில ஒரு ஷோகேஸ் பொம்மை இருக்கு இல்ல? அந்த பொம்மையைத் தழுவிக்கிட்டா எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருந்தது!" என்றான் உமாநாத்.

குறள் 913:
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.

பொருள்: 
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யான தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவுவதைப் போன்றது.

"அந்த ஆக்டிவிஸ்ட் கோபாலைப் பத்தித் தகவல் சேகரிக்கச் சொன்னேனே, சேகரிச்சீங்களா?" என்றார் தொழிலதிபர் முருகவேல்.

914. ஆக்டிவிஸ்ட் கோபால்

"அந்த ஆக்டிவிஸ்ட் கோபாலைப் பத்தித் தகவல் சேகரிக்கச் சொன்னேனே, சேகரிச்சீங்களா?" என்றார் தொழிலதிபர் முருகவேல்.

"சேகரிச்சேன் சார். ரொம்ப எளிமையான மனுஷன். வக்கீல் தொழில் செய்யறாரு. மனைவியோட சின்னதா ஒரு வாடகை வீட்டில குடி இருக்காரு. பணவசதி இல்லாதவங்களுக்கு இலவச சட்ட உதவி செய்யறாரு. அதைத் தவிர, சுற்றுச் சூழல் மாசு படறதை எதிர்த்து வழக்குப் போடறது, போராட்டம் நடத்தறது, இன்னும் பல சமூக சேவைகள்ள ஈடுபட்டிருக்காரு. சுமாரான வருமானம்தான். ஆனா, ரொம்ப நேர்மையானவரு. பணத்தால விலைக்கு வாங்க முடியாது" என்றார் டிடெக்டிவ் ஏஜன்சி உரிமையாளர் சரண்ராஜ்.

"எங்க தொழிற்சாலைக்கு எதிரா நிறைய போராட்டம் பண்றான். அவனை எப்படியாவது வழிக்குக் கொண்டு வணும். பணத்தால முடியாதுன்னு சொல்றீங்களே!" என்றார் முருகவேல், ஏமாற்றத்துடன்.

"வேற ஏதாவது வழி இருக்கான்னு பாக்கறேன்" என்றார் சரண்ராஜ், யோசித்தபடியே.

ன்னுடன் போராட்டத்தில் ஈடுபட வந்திருந்த சரளாவை ஆரம்பத்தில் கோபால் பொருட்படுத்தாவிட்டாலும், அவளுடைய உற்சாகம், ஈடுபாடு இவற்றால் ஈர்க்கப்பட்டு அவளுடன் சற்று நெருக்கமாகப் பழகினான்.

அடுத்த நாள் நடக்க வேண்டிய போராட்டம் பற்றி ஒருநாள் இரவு இருவரும் கோபாலின் அலுவலகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, சரளா திடீரென்று எழுந்து கதவைச் சாத்தி விட்டு, கோபாலை அணைத்துக் கொண்டாள்.

"என்ன இது? விடுங்க!" என்று சரளாவிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான் கோபால்.

"ஒரு பக்கம் வேலை, மறுபக்கம் போராட்டம்னு கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க. உங்களுக்கு ஒரு ரிலாக்சேஷன் வேணாமா?" என்றாள் சரளா, அவன் கைகளைப் பற்றியபடி.

அவள் கையை விலக்கிய கோபால், "உங்க மேல எனக்கு ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. இப்ப நீங்க நடந்துக்கறது அதை உறுதிப்படுத்தற மாதிரி இருக்கு. நான் அப்படிப்பட்ட ஆளு இல்ல. நீங்க போகலாம்!" என்று கூறி அறைக் கதவைத் திறந்தான்.

"சாரி சார். நான் எத்தனையோ பேரை மயக்கி இருக்கேன். ஆனா, கோபால் விஷயத்தில நான் தோத்துட்டேன்!" என்றாள் சரளா, சரண்ராஜிடம்.

குறள் 914:
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.

பொருள்: 
அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.

915. பட்டியலைத் திருத்துக!

"அமைச்சரே! சில அறிஞர்களை கௌரவிக்க முடிவு செய்து, ஒரு பட்டியல் தயாரித்திருக்கிறோம் அல்லவா?" என்றார் அரசர்.

'தயாரித்தோமா? நீங்கள் தயாரித்த பட்டியல் அல்லவா அது?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட அமைச்சர், "ஆம் அரசே!" என்றார்.

"அவர்களை கௌரவித்துச் சிறப்பிக்க ஒரு நாள் குறித்து, அவர்களை அவைக்கு வரச் சொல்லி அழைப்பு அனுப்பி விடுங்கள்!"

ஏதோ சொல்ல வாயெடுத்த அமைச்சர், தன் மனதை மாற்றிக் கொண்டு, "அப்படியே ஆகட்டும் அரசே!" என்றார்.

"வாருங்கள் ராஜகுருவே!" என்று ராஜகுருவை வரவேற்றார் அரசர்.

"சில அறிஞர்களை கௌரவித்துப் பரிசளிக்கத் தீர்மானித்திருக்கிறாயாமே! பாராட்டுக்கள்!" என்றார் ராஜகுரு.

"ஆமாம். ராஜகுருவே! இது என் நீண்ட நாள் விருப்பம்."

"நல்ல நோக்கம்தான். இந்தச் செய்தி அறிந்ததும், கௌரவிக்கப்படப் போகும் அறிஞர்களின் பட்டியலை அமைச்சரிடமிருந்து வாங்கிப் பார்த்தேன்."

"மன்னிக்க வேண்டும் ராஜகுருவே! நிகழ்ச்சிக்குத் தங்களை நேரில் வந்து அழைக்கும்போது, பட்டியலைத் தங்களிடம் காட்டலாம் என்றிருந்தேன்" என்றார் அரசர், சங்கடத்துடன்.

"அதில் தவறில்லை. ஆனால் பட்டியலில்தான் ஒரு தவறு இருக்கிறது!"

"என்ன தவறு, ராஜகுருவே?" 

"கௌரவிக்கப்படுபவர்கள் பட்டியலில், இரும்புருக்கிக் கவிஞரும் இருக்கிறார்.

"ஆம் ராஜகுருவே! அவர் பெரும் புலவர் அல்லவா? அவர் பாடலைக் கேட்டால் இரும்பு கூட உருகும் என்பதால்தானே, அவர் இரும்புருக்கிக் கவிஞர் என்று அழைக்கப்பட்டு, அவருடைய இயற்பெயரே மறந்து விடும் அளவுக்கு அந்தப் பெயர் நிலைத்து விட்டது! அவர் ஒரு பெரிய அறிஞர் என்றும் அறியப்படுபவர் அல்லவா?"

"ஆனால், அவர் விலைமகளை நாடும் பழக்கம் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றல்லவா?"

"ராஜகுருவே! அது அவருடைய ஒழுக்கக் குறைவாக இருக்கலாம். ஆனால், நாம் அவரை கௌரவிப்பது அவருடைய புலமைக்காகத்தானே தவிர, அவருடைய ஒழுக்கத்துக்காக இல்லையே!" என்றார் அரசர்.

"அரசே! நல்லறிவு உடையவர், விலைமகள் மூலம் கிடைக்கும் தவறான இன்பத்தை நாட மாட்டார். அப்படி நாடுபவரை நல்லறிவு உள்ளவர் என்று கூற முடியாது. அவருடைய பெயரைப் பட்டியலிலிருந்து நீக்குவதுதான் உனக்கு கௌரவம்!" என்றார் ராஜகுரு.

அரசர் மௌனமாக இருந்தார்.

"அரசே! ஒழுக்கமற்ற ஒருவருக்கு உயர்ந்த பரிசு கொடுத்தால், அந்தப் பரிசே மதிப்பிழந்து போவதுடன், உன்னையும் நாட்டு மக்கள் தூற்றுவார்கள். அமைச்சரே இதை உன்னிடம் சொல்லி நிறுத்த விரும்பினார். ஆனால், நீ தயாரித்த பட்டியலிலிருந்து ஒரு பெயரை நீக்க வேண்டும் என்று உன்னிடம் சொல்லத் தயங்கி, அவர் என்னை அணுகினார். அமைச்சர் சொல்வது எப்போதும் சரியாக இருக்கும் என்பது நீ அறிந்ததுதானே?" என்றார் ராஜகுரு, சிரித்தபடி.

"ராஜகுருவே! அமைச்சர் சொல்வது மட்டுமல்ல, தாங்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கும் என்பது நான் அறியாததா? இப்படி ஒரு தவறை எப்படிச் செய்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தாங்கள் கூறியபடி, அவர் பெயரைப் பட்டியலிலிருந்து நீக்கி விடுகிறேன்" என்றார் அரசர்.

குறள் 915:
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

பொருள்: 
இயற்கையறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொதுமகளிர் மூலம் கிடைக்கும் புன்மையான நலத்தை (இன்பத்தை) நாட மாட்டார்.

916. அதிர்ஷ்டக்காரன்!

அழகான தோற்றம், அதை எடுத்துக் காட்டும் உடை, பிற ஒப்பனைகள் ஆகியவற்றால் அந்த பார்ட்டியில் அந்தப் பெண் சற்றுத் தனியாகத் தெரிந்தாள். 

அவள் கவனத்தைக் கவரவும், அவளுடன் பேசவும், வயது வித்தியாசமின்றிப் பல ஆண்களும் ஆரவம் காட்டினர். 

ஆனால், அவள் ஒரு சிலரை மட்டுமே மதித்துப் பேசினாள். அவளைப் பார்த்துச் சிரித்த, அவளிடம் பேச முயன்ற பலரை அவள் லட்சியம் செய்யவில்லை.

"யாருடா அந்தப் பொண்ணு? ஏன் எல்லாரும் அவளை மொய்க்கறாங்க?" என்றான் விஜய், தன் நண்பன் காமேஷிடம்.

"அவளை நிறைய பார்ட்டியில பார்க்கலாம். பார்ட்டி முடிஞ்சதும், அவளைத் தனியாப் பார்க்கப் பல பேர் விரும்புவாங்க. ஆனா, யாருக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கறதுன்னு அவதான் முடிவு செய்வா!" என்றான் காமேஷ், மெல்லிய குரலில்.

"கால் கேர்ளா?" என்றான் விஜய், அதிர்ச்சியுடன்.

"அவ தன்னை ஒரு ஈவன்ட் ஃபெசிலிடேடர்னு சொல்லிப்பா!"

"ஓ, நிகழ்ச்சிகளை அமைக்கிறவர்! புது மாதிரி பெயர்தான்!" என்றான் விஜய்.

றுநாள், விஜயைத் தொலைபேசியில் அழைத்தான் காமேஷ்.

"நேத்து ஒரு பொண்ணைப் பார்த்தோம் இல்ல?"

"ஆமாம். ஈவன்ட் ஃபெசிலிடேடர்!"

"தப்பா நினைக்காதே. அவகிட்ட எனக்கு ஒரு டேட் கிடைச்சது."

"கங்கிராசுலேஷன்ஸ்" என்றான் விஜய்.

"நல்ல வேளை! திட்டுவியோன்னு நினைச்சேன்...நேத்து அவ உன்னை கவனிச்சிருப்பா போலருக்கு. 'உங்களோட ஒத்தர் இருந்தாரே, அவர் யாரு?'ன்னு கேட்டா. அவளுக்கு உன் மேல ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கு போலருக்கு!" என்றான் காமேஷ், தயக்கத்துடன்.

"எப்படிப்பட்ட அதிர்ஷ்டக்காரன் நான்!" என்றான் விஜய்.

"இங்க பாரு விஜய். உன்னோட பிரின்சிபிள்ஸ் பத்தி எனக்குத் தெரியும். நாம பேச்சிலர்ஸ். இதெல்லாம் ஒரு இனிமையான அனுபவம்தானே? அவகிட்ட அப்ளிகேஷன் போட்டுட்டு எத்தனையோ பேரு காத்துக்கிட்டிருக்காங்க. ஆனா, அவளுக்கு உன் மேல இன்ட்ரஸ்ட் இருக்கு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கறதில என்ன தப்பு?"

"காமேஷ்! தேடி வந்த அதிர்ஷ்டத்தைப் புறம் தள்ற முட்டாள்னு வேணும்னா என்னை நினைச்சுக்க. பட் ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்டட்!" என்று கூறி, ஃபோனை வைத்தான் விஜய்.

குறள் 916:
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.

பொருள்: 
தன் அழகு மற்றும் முதலியவற்றால் செருக்குக் கொண்டு, தம் புன்மையான இன்பத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.

917 "அன்பின்" விலை

தன் கணவன் துரையைப் பற்றி ஒரு விஷயத்தைச் சிலர் பூடகமாகச் சொன்னபோது, மரகதம் துவக்கத்தில் அதை நம்பவில்லை.

ஒருநாள் துரையிடமே கேட்டு விட்டாள்.

"ராத்திரி சாப்பாட்டுக்கப்புறம் வெளியே எங்கேயோ போயிட்டு லேட்டா வரீங்க. இது மாதிரி அடிக்கடி நடக்குது. எங்கே போறீங்கன்னு கேட்டா, சொல்ல மாட்டேங்கறீங்க! ஊரில கண்டபடி பேசிக்கறாங்க."

"என்ன பேசிக்கறாங்க?" என்றான் துரை.

"அதை என் வாயால சொல்லணுமா?"

"மரகதம்! நான் சொல்றதைப் பொறுமையாக் கேளு. உன் மேல எனக்கு அன்பு இருக்கு. ஒருநாள், ஏதோ ஒரு ஆசையில அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போனேன். அவ தப்பான தொழில் பண்றவதான். ஆனா, எங்கிட்ட ரொம்ப அன்பா இருக்கா. அதனாலதான், அவளைப் பார்க்க சில சமயம் போறேன்" என்றான் துரை, சங்கடத்துடன்.

"இதைச் சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல?" என்றாள் மரகதம், கோபத்துடனும், அழுகையுடனும்.

"அதான் சொன்னேனே! முதல் தடவை போனது ஒரு சபலத்தினாலதான். ஆனா, இப்ப போறதுக்குக் காரணம் அவ என் மேல அன்பு வச்சிருக்கறதுதான்."

"நான் உங்க மேல அன்பு வைக்கலையா, இல்லை, என்னோட அன்பு உங்களுக்குப் பத்தலையா?"

"உன்னோடதானே குடித்தனம் நடத்தறேன்? இதெல்லாம் வீட்டுச் சாப்பாடு சாப்பிடறவங்க சில சமயம் ஓட்டல்ல சாப்பிடற மாதிரிதான்" என்று சொல்லி, விவாதத்தை முடித்தான் துரை.

"இப்ப எதுக்குடா உனக்கு ஒரு லட்ச ரூபாய்?" என்றான் துரையின் நண்பன் விமல்.

"அந்தப் பொண்ணு தொழிலை விட்டுட்டு என்னோட மட்டும் வாழறதாச் சொல்றா. ஆனா அவ தொழிலை விடணும்னா, அவளோட ஏஜன்ட்டுக்கு ஒரு லட்ச ரூபா பணம் கொடுக்கணுமாம். நான் அவளுக்கு உதவறது என் மனைவிக்குத் தெரியக் கூடாது. அதனால, ஆஃபீஸ்ல பி எஃப் லோன் போட்டிருக்கேன். அந்தப் பணம் வந்ததும், உன் பணத்தைக் கொடுத்துடறேன்" என்றான் துரை.

"பி எஃப் லோனை எப்படி அடைப்ப?"

"அதை அடைக்க வேண்டாம். நான் ரிடயர் ஆகறப்ப வர பணத்தில அதைக் கழிச்சுப்பாங்க. அதனால இது என் மனைவிக்கு எப்பவுமே தெரிய வராது."

"நல்லாத்தான் திட்டம் போடற. சரி. அவளை நீ எப்படிப் பராமரிப்ப? வீட்டு வாடகை, குடும்பச் செலவு எல்லாம் இருக்கே!"

"அவ இருக்கற குடிசை வீடு அவ சொந்த வீடுதான். அவ சாப்பாட்டுச் செலவுக்குத்தான் பணம் வேணும். அதைக் கூட 'ஏதாவது வேலைக்குப் போய் சம்பாதிச்சுக்கறேன், உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பல, உங்க அன்பு மட்டும்தான் வேணும்'னு சொல்றாடா அவ!" என்றான் துரை, பெருமையுடன்.

"எனக்கென்னவோ இது சரியாப் படல. நீ கேக்கறதால பணம் கொடுக்கறேன். ஆனா, நீ சொன்னபடி, லோன் கிடைச்சதும் பணத்தைத் திருப்பிக் கொடுத்துடணும்!" என்றான் விமல்.

"இந்தாடா, நீ கொடுத்த பணம்" என்று பணத்தை விமலிடம் கொடுத்தான் துரை.

"என்ன, புதுப் பொண்டாட்டியோட தனிக்குடித்தனம் ஆரமிச்சாச்சா? அவளை புதுப் பொண்டாட்டின்னு சொல்லலாம் இல்ல?" என்றான் விமல், சிரித்துக் கொண்டே.

சில விநாடிகள் மௌனமாக இருந்த துரை, "நான் ஏமாந்துட்டேண்டா. எங்கிட்ட ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக்கிட்டு, அவ வேற ஒத்தனோட இந்த ஊரை விட்டே ஓடிட்டா" என்றான் ஏமாற்றத்துடன்.

"அடிப்பாவி! சொந்த வீட்டில இருக்கான்னு சொன்னியே!"

"அது பொய். அது வாடகை வீடுதானாம். வேற ஒத்தனோட ஊரை விட்டு ஓடறதுக்காக, எங்கிட்ட பொய் சொல்லி, ஒரு லட்ச ரூபாய் வாங்கிட்டா. ஏஜன்ட்டுக்குக் கொடுக்கணும்னு சொன்னதெல்லாம் பொய். ஏஜன்ட்னெல்லாம் யாருமே இல்லையாம். அவ எங்கிட்ட அன்பாப் பேசினதைக் கேட்டு ஏமாந்துட்டேன்."

"சரி போ. இந்த அளவோட விட்டாளே! இனிமேயாவது  உன் மனைவிக்கு உண்மையா நடந்துக்க!" என்றான் விமல்.

குறள் 917:
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

பொருள்: 
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறு பொருளை விரும்பிக் கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.

918. ஒரே வழி!

"ஆறு மாசமா, அந்த மயக்கு மோகினி வீடே கதின்னு கிடக்கறாரு. எப்பவாவதுதான் வீட்டுக்கு வராரு. குடும்பச் செலவுக்கு ஒழுங்காப் பணம் கொடுக்கறதில்லை. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல" என்று மீனாட்சி தன் தந்தை  மாணிக்கத்திடம் புலம்பினாள்.

"யாரு அந்த மயக்கு மோகினி?" என்றார் மாணிக்கம்

"அவதாம்ப்பா, ஊர்ல நிறைய பேரை மயக்கி வச்சிருக்காளே, அந்த நீலாதான்!"

"நான் போய் உன் புருஷனைப் பார்த்துப் பேசி வழிக்குக் கொண்டு வரேன்" என்றார் மாணிக்கம்.

இரண்டு நாட்கள் கழித்து மீனாட்சியின் வீட்டுக்கு வந்த மாணிக்கம், "நான் மாப்பிள்ளைகிட்ட பேசிட்டேன். அவரு தன் தப்பை உணர்ந்துட்டாரு. இனிமே எல்லாம் சரியாயிடும்!!" என்று சொல்லி விட்டுப் போனார்.

அதற்குப் பிறகு, மீனாட்சியின் கணவன் கதிர் சில நாட்கள் வீட்டில் இருந்தான்.

'பரவாயில்லையே! மாமனார் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்துத் தன்னை மாத்திக்கிட்டாரே!' என்று நினைத்தாள் மீனாட்சி.

ஆனால், சில நாட்களுக்குப் பிறகு கதிர் மீண்டும் நீலாவின் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தான்.

மீனாட்சி மீண்டும் தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள்.

"நான் உன் புருஷன்கிட்ட பேசினப்ப அவரு எங்கிட்ட நல்லாத்தான் பேசினாரு. ஆனா, திரும்பவும் அதே மாதிரி செய்யறாருன்னா, அவர் அறிவு அவர் வசம் இல்லேன்னு அர்த்தம். அவர் பெண் மயக்கத்தில இருக்காரு. அவரா மனசு மாற மாட்டாரு. அதனால, அந்த நீலாவே அவரை விரட்டி விட்டாதான் அவர் திரும்பி வருவாரு. நான் யார் மூலமாவது அந்த நீலாகிட்ட பேசிப் பாக்கறேன். பணம் கொடுத்தோ, மிரட்டியோ அவளை வழிக்குக் கொண்டு வரணும். அது ஒண்ணுதான் வழி!" என்றார் மாணிக்கம்.

குறள் 918:
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.

பொருள்: 
வஞ்சக எண்ணம் கொண்ட பொதுமகள் ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட மோகினி மயக்கம் என்று கூறுவார்கள்.

919. நரகத்துக்குப் போவேனா?

தன்னைப் பார்க்க வந்த அந்த மனிதரைத் தன் அறைக்குள் அழைத்தார் சுவாமிஜி.

"சாமி, உங்ககிட்ட தனியாப் பேசணும்" என்றார் வந்தவர்.

சுவாமிஜி தன் அறையிலிருந்த உதவியாளரை வெளியே போகச் சொல்லி சைகை காட்டினார்.

"இப்ப சொல்லுங்க!" என்றார் சுவாமிஜி.

"சாமி! என் பெயர் புருஷோத்தமன். நேத்து உங்க பேச்சைக் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது."

"இதைச் சொல்லத்தான் எங்கிட்ட தனியாப் பேசணும்னீங்களா?" என்றார் சுவாமிஜி, சிரித்துக் கொண்டே.

"உங்க பேச்சில நீங்க சொர்க்கம், நரகம் பற்றிப் பேசினீங்க. நரகம்னு ஒண்ணு உண்மையாவே இருக்கா?" என்றார் புருஷோத்தமன்.

"சொர்க்கம்னு ஒண்ணு உண்மையாவே இருக்கான்னு கேக்காம, நரகத்தைப் பத்தி மட்டும் கேக்கறீங்களே!"

"சொர்க்கத்துக்குப் போகிற மாதிரி நல்ல காரியங்கள் செஞ்சிருந்தாதானே சாமி, சொர்க்கம்னு ஒண்ணு இருக்கான்னு கவலைப்படணும்?" என்றார் புருஷோத்தமன், பெருமூச்சுடன்.

"அப்படின்னா, நரகத்துக்குப் போகிற மாதிரியான காரியங்ளை செஞ்சிருக்கறதா நினைக்கறீங்க போல இருக்கு!"

புருஷோத்தமன் மௌனமாக இருந்தார்.

"நீங்க எங்கிட்ட எதையோ கேக்க வந்தீங்க. அதைக் கேக்க விரும்பினா, கேக்கலாம்!" என்றார் சுவாமிஜி.

"சாமி! எனக்குக் கல்யாணம் ஆகிக் குடும்பம் இருக்கு. அப்படி இருந்தும், ஒரு விலைமகள் மேல ஆசைப்பட்டுக் கொஞ்ச காலம் அவ மயக்கத்திலேயே இருந்தேன்."

சுவாமிஜி கண்களை மூடிக் கொண்டார்.

"இதை நான் செஞ்சதுக்கு, நான் நிச்சயம் நரகத்துக்குப் போவேன் இல்ல?"

"போக மாட்டீங்க!" என்றார் சுவாமிஜி.

"என்ன சாமி சொல்றீங்க? எப்படி இது? நான் என் தப்பை உணர்ந்ததால எனக்குப் பாவத்திலேந்து விடுதலை கொடுத்திட்டீங்களா?" என்றார் புருஷோத்தமன், வியப்புடன்.

"பாவத்திலேந்து உங்களை விடுவிக்க நான் யார்? நீங்க நரகத்துக்குப் போக மாட்டீங்கன்னு ஏன் சொல்றேன்னா, நீங்க ஏற்கெனவே நரகத்தில இருந்துட்டு வந்துட்டீங்க!"

"எனக்குப் புரியலையே சாமி!"

"நீங்க விலைமகளோட இருந்தீங்களே, அதுவே நரகம்தான். நீங்க அதை சொர்க்கம்னு நினைச்சுப் போயிருந்தாலும், உண்மையில அது நரகம்தான். அப்புறம் இன்னொரு நரகம் எதுக்கு உங்களுக்கு?" என்றார் சுவாமிஜி, கண்களைத் திறக்காமலே.

குறள் 919:
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

பொருள்: 
ஒழுக்க வரையரை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.

920. செல்வரத்தினத்தின் கவலை

"என்னோட ரெண்டு பையன்களுக்கும் சொத்துக்களைப் பிரிச்சுக் கொடுத்துட்டேன். என் சின்னப் பையன் வேலைக்குப் போய் சம்பாதிக்கறான். ஆனா, பெரிய பையன் சொந்தமாத் தொழில் பண்றேன்னு இறங்கி இருக்கான். தொழில்ல நஷ்டம் வந்தா, அவனோட சொத்துக்கள் அழிஞ்சுடுமோன்னு கவலையா இருக்கு" என்றார் செல்வரத்தினம்.

"நஷ்டம் வரும்னு ஏன் நினைக்கறே? அவன் தொழில் நல்லா நடக்கும். கவலைப்படாதே!" என்றார் அவருடைய நண்பர் காந்திராமன்.

"நான் பயந்தபடியே நடந்துடுச்சு. என் பெரிய பையன் சொத்துக்களை அடமானம் வச்சு, தொழில் செய்யக் கடன் வாங்கி இருக்கான்" என்றார் செல்வரத்தினம், கவலையுடன்.

"தொழில் செய்யறவங்க கடன் வாங்கறது நடக்கறதுதானே! சொத்துக்களை அடமானம் வச்சதுக்காக, நீ கவலைப்பட வேண்டியதில்லை. அது சரி. உன் ரெண்டாவது பையன் எப்படி இருக்கான்?"என்றார் காந்திராமன்.

"இருக்கான்" என்ற காந்திராமன், "அவன்தான் வேலைக்குப் போறானே! சமாளிச்சுப்பான்" என்றார் செல்வரத்தினம்.

தன் இரண்டாவது மகனைப் பற்றிப் பேசும்போதும், செல்வரத்தினம் ஏன் சுரத்தில்லாமல் பேசுகிறார் என்ற வியப்பு காந்திராமனுக்கு ஏற்பட்டது.

"போச்சு. எல்லாமே போச்சு. எவ்வளவு கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்து! இப்படி அழிச்சுட்டானே!" என்றார் செல்வரத்தினம்.

"என்ன ஆச்சு? உன் பெரிய பையனுக்குத் தொழில்ல நஷ்டமா? அடமானம் வச்ச சொத்து போயிடும் போல இருக்கா?" என்றார் காந்திராமன்.

"அவன் தொழில் நல்லாத்தான் நடந்துக்கிட்டிருக்கு. சொத்து அடமானத்திலதான் இருக்கு. ஆனா அதுக்கு ஒண்ணும் ஆபத்து இல்ல. ரெண்டாவது மகனுக்கு நான் கொடுத்த சொத்துக்கள்தான் போயிடுச்சு."

"ஏன்? அவன் வேலைக்குத்தானே போய்க்கிட்டிருக்கான்?"

"வேலைக்குத்தான் போய்க்கிட்டிருந்தான். ஆனா, அவன்கிட்ட குடிப்பழக்கமும், சூதாடற பழக்கமும் இருந்தது. அப்பவே கவலைப்பட்டேன். போதாததுக்கு ஒரு விலைமாதுவோட சகவாசம் வேற ஏற்பட்டுடுச்சு. அதுக்கப்பறம்தான் நிலைமை மோசமாப் போச்சு. அவளுக்குக் கொடுத்த பணம், சூதாட்டத்தில இழந்த பணம், குடிக்கான செலவுன்னு பல வழிகள்ள பணம் போய், வருமானம் போதாம, கடன் வாங்கி, கடனை அடைக்க சொத்தையெல்லாம் வித்து, இந்தப் பழக்கங்களினால வேலையும் போயி, இப்ப குடிக்கவோ, சூதாடவோ காசு இல்லை, காசு இல்லேன்னதும், அவளும் இவனை விரட்டி விட்டுட்டா. இப்ப பைத்தியம் பிடிச்சவன் மாதிரி வீட்டில உட்காந்திருக்கான், அவனோட சாப்பாட்டுச் செலவுக்கே நான்தான் பணம் கொடுக்கணும் போல இருக்கு. மூதேவியைத் தேடிப் போனான். மூதேவி இருக்கற இடத்தில, லட்சுமி எப்படி இருப்பா? அதான் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டா!"

குலுங்கக் குலுங்க அழ ஆரம்பித்தார் செல்வரத்தினம்.

ஆதரவுடன், அவர் தோளை அணைத்துக் கொண்டார் காந்திராமன். 

குறள் 920:
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

பொருள்: 
உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பொது மகளிர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.
             அறத்துப்பால்                                               காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில், இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்...