Saturday, October 14, 2023

997. அரவிந்த் பண்டிட்டின் ஆன்மீகச் சொற்பொழிவு!

அரவிந்தன் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அவனுடைய வகுப்பாசிரியர் அவனைப் பற்றி வகுப்பில் இவ்வாறு கூறி இருந்தார்:

"இந்த வகுப்பிலேயே அதிக புத்திசாலி அரவிந்தன்தான். அவன் பரீட்சையில வாங்கற மார்க்கை மட்டும் வச்சு இதைச் சொல்லல. பொதுவாகவே விஷயங்களைப் புரிஞ்சுக்கறது, பிரச்னைகளை அலசிப் பாக்கறது இதுலெல்லாம் அவன் காட்டற அறிவுக் கூர்மையை வச்சுத்தான் சொல்றேன்!" 

அரவிந்தன் பட்டப்படிப்பை முடித்ததும் ஒரு ஆன்மீக குருவின் சார்பில் சிலர் அவனைப் பார்க்க வந்தனர். ஒரு வித்தியாசமான வேலை வாய்ப்பைப் பற்றி அவனிடம் பேசினர்.

"உனக்கு நிறைய வேலை வாய்ப்புகள் வரும். ஆனா நாங்க உனக்குக் கொடுக்கற வாய்ப்பு வித்தியாசமானது. ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளரா உருவாக மும்பையில இருக்கிற எங்க கல்லூரியில ஆறு மாசம் பயிற்சி கொடுப்போம். பயிற்சியின்போது தங்கும் அறை, சாப்பாடு எல்லாம் இலவசமாக் கொடுக்கறதோட ஒரு கணிசமான தொகையை ஸ்டைபெண்டாகவும் கொடுப்போம். 

"பயிற்சி முடிஞ்சப்புறம் நாடு முழுவதும் பல இடங்கள்ள நாங்க ஏற்பாடு செய்யற நிகழ்ச்சிகள்ள நீ சொற்பொழிவு ஆற்றணும். மாசச் சம்பளமா உனக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும். நாடு முழுக்க சுற்றிப் பார்க்கற வாய்ப்புக் கிடைக்கும். வெளிநாடுகளுக்குப் போற வாய்ப்புக் கூடக் கிடைக்கும். 

"எங்க குரு சந்நியாசிதான். எங்க அமைப்பில நிறைய சந்நியாசிகள் இருக்காங்க. ஆனா உன்னைப் போன்ற ஆன்மீகச் சொற்பொழிவாளர்களுக்கு இது ஒரு கேரியர்தான். உன்னை மாதிரி அறிவுக் கூர்மை உள்ளவங்களோட சேவை எங்க இயக்கத்துக்குத் தேவைன்னு எங்க குரு நினைக்கறதால, உன்னை மாதிரி அறிவுக் கூர்மை உள்ளவங்களை நாங்க நாடு முழுக்க சல்லடை போட்டுத் தேடிக் கண்டுபிடிக்கிறோம்.

"உன்னோடதனிப்பட்ட வாழ்க்கையில எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. நீ திருமணம் செஞ்சுக்கறதுக்கு எந்தத் தடையும் இல்ல. மூணு வருஷம் கட்டாயமா எங்க அமைப்பில வேலை செய்யணும். அதுக்கப்புறம் நீ வேற வேலைக்குப் போக விரும்பினா போகலாம். என்ன சொல்ற?" 

அவர்கள் விவரித்த வாய்ப்பு அரவிந்தனுக்குப் பிடித்திருந்ததால் அவன் அதற்கு ஒப்புக் கொண்டான்.

று மாதப் பயிற்சிக்குப் பிறகு அரவிந்தனைப் பற்றி குரு மற்றவர்களிடம் கருத்துக் கேட்டபோது, அனைவருமே சொன்னது இதுதான்: 

"அரவிந்தன் மிகுந்த அறிவுக் கூர்மை உள்ளவன்தான், சந்தேகமில்லை. ஆனால் மற்றவர்களை மதிக்காமல் நடந்து கொள்வது, பண்பாடு இல்லாமல் நடந்து கொள்வது ஆகிய விரும்பத்தகாத குணங்கள் அவனிடம் இருக்கின்றன."

ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்த குரு, "அவன் நம்மோட தத்துவங்களைப் பேசி விளக்கப் போறான் அவ்வளவுதானே! அவனோட நடத்தையில பண்பாடு இல்லாட்டா நமக்கென்ன?" என்று கூறி அரவிந்தன் சொற்பொழிவாளராகத் தேர்ந்தெடுக்கப்பட சம்மதம் அளித்தார்.

அரவிந்தன் அரவிந்த் பண்டிட் என்று பட்டம் அளிக்கப்பட்டு அந்த அமைப்பின் ஆன்மீகத் தத்துவங்களை மக்களிடையே பரப்பும் பணியில் ஈடுபடுத்தப்பட்டான்.

"ஒவ்வொரு வகை உயிரினத்துக்கும் உள்ள அறிவுநிலை வெவ்வேறானது. ஓரறிவிலிருந்து துவங்கி ஆறறிவு வரை அறிவுநிலை வேறுபடுகிறது. திரைப்படம் தயாரிப்பவர்கள் ஏழாம் அறிவு பற்றிக் கூடப் பேசுகிறார்கள்...."

இந்த இடத்தில் அரவிந்த் பண்டிட் நிறுத்தியதும், முன் வரிசையில் இருந்த சிலர் சிரித்தனர். அதே சமயம், பின் வரிசைகளிலிருந்து சிலர் கைகளை மேலே உயர்த்தி ஆட்டி, "மைக், மைக்!" என்று கூவி, ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை என்பதைத் தெரிவித்தனர்.

கையைச் சொடுக்கி நிகழ்ச்சி அமைப்பாளரை அருகே அழைத்த அரவிந்த் பண்டிட் அவரிடம் ஏதோ கோபமாகப் பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோதே மைக்கை ஏற்பாடு செய்தவர் ஓடி வந்து மைக்கைச் சரி செய்தார்.

மைக் சரியாகி அரவிந்த் பண்டிட் கூட்டத்தை ஏற்பாடு செய்தவரைக் கடிந்து பேசியது ஒலிபெருக்கி வழியே அனைவரின் காதுகளிலும் விழுந்தது. மைக் சரியானது தெரியாமல் தொடர்ந்து அமைப்பாளரைக் கடிந்து பேசிக் கொண்டிருந்தார் அரவிந்த் பண்டிட். அவர் பேச்சில் வெளிவந்த சில வசைச் சொற்களைக் கேட்டுச் சிலர் காதுகளைப் பொத்திக் கொண்டனர்.

"என்ன இது? குடிச்சுட்டுத் தெருவில சண்டை போட்டுக்கறவங்க பேசற மாதிரி பேசறாரு? இவரெல்லாம் ஆன்மீகச் சொற்பொழிவாளரா?" என்றார் ஒருவர்  கோபத்துடன்.

"அறிவாளி, விஷயம் தெரிஞ்சவர். நல்லாப் பேசுவார்னு சொன்னாங்க. ஆனா இவர் நடந்துக்கறதைப் பார்த்தா இவர் சொன்ன ஓரறிவு ஜீவராசிகளை விடக் கீழானவரா இருப்பார் போலிருக்கே!" என்றார் மற்றொருவர்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

குறள் 997:
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.

பொருள்: 
மனிதர்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...