Wednesday, July 19, 2023

951. அரசரின் தேர்வு

"அரசே! காவல் துறைத் தலைவராக நியமிக்க இரண்டு பேரை நான் தேர்வு செய்திருக்கிறேன். இருவரில் ஒருவரைத் தாங்கள் நியமிக வேண்டும்" என்றார் அமைச்சர்.

"இருவர் பற்றிய விவரங்களை என்னிடம் கொடுங்கள். நான் பார்த்து விட்டுச் சொல்கிறேன்" என்றார் அரசர்.

"அவர்களைத் தாங்கள் நேரில் பார்த்து விசாரிக்க வேண்டாமா?"

"தேவைப்பட்டால் பார்க்கிறேன்" என்றார் அரசர்.

ரு வாரம் கழித்து, அரசர் அமைச்சரிடம், "நீங்கள் தேர்ந்தெடுத்த இருவரில் சந்திரசூடனையே காவல் துறைத் தலைவராக நிமித்து விடுங்கள்" என்றார் அரசர்.

"சரி, அரசே! ஆனால் தாங்கள் அவர்கள் இருவரையும் நேரில் பார்கவில்லையே?" என்றார் அமைச்சர்.

"அவசியமில்லை. நீங்கள் பார்த்து விசாரித்திருப்பீர்களே! நீங்கள் தேர்ந்தெடுத்த இருவருமே இந்தப் பதவிக்குத் தகுதி உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை!"

"தாங்கள் எந்த அடிப்படையில் இந்த ஒருண்டு பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா?"

"நீங்கள் கொடுத்த விவரங்களை ஒற்றர்படைத் தலைவரிடம் கொடுத்து இருவரின் குடும்பப் பின்னணி பற்றி விசாரிக்கச் சொன்னேன். சந்திரசூடன் நல்ல குடும்பத்தில் பிறந்தவர். மற்றொருவரின் தந்தை நேர்மையானவர் அல்ல என்று தெரிந்தது. அதனால்தான் சந்திரசூடனைத் தேர்ந்தெடுத்தேன்."

"மன்னிக்க வேண்டும் அரசே! நான் இருவரையும் தேர்வு செய்தது அவர்கள் கல்வி, அறிவு, அனுபவம், கடந்தகாலச் செயல்பாடு இவற்றை வைத்துத்தான். அவர்கள் எந்தக் குடியில் பிறந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டுமா?" என்றார் அமைச்சர்.

"நிச்சயமாக அமைச்சரே! காவல் துறைத் தலைவராக இருப்பவர் நேர்மையானவராக, நடுநிலையுடன் செயல்படுபவராக இருக்க வேண்டும். இந்த குணம் பலரிடமும் இருக்கும். ஆனால் இன்னொரு முக்கியமான குணமும் அவருக்கு வேண்டும். அது தவறு செய்தால் அதற்காக வெட்கப்படுதல். இந்த குணம் இருப்பவர்கள்தான் தவறு செய்யாமல் இருப்பார்கள். ஒருவேளை தவறு செய்தாலும் அதற்காக வெட்கப்பட்டு மீண்டும் அத்தகைய தவறைச் செய்யாமல் இருப்பார்கள். இந்த குணம் நல்ல குடியில் பிறந்தவர்களிடம் மட்டுமே இருக்கும் என்பது என் கருத்து. ஏன் நீங்களே அத்தகைய குடிப்பெருமை உள்ளவராக இருப்பதால்தான் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள்!" என்றார் அரசர் சிரித்துக் கொண்டே.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை

குறள் 951:
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.

பொருள்: 
நடுவு நிலைமையும், நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...