Saturday, June 12, 2021

490. பாலியல் புகார்!

சீனியர் மானேஜர் சிவசங்கர் மீது அவனுடைய அந்தரங்க உதவியாளர் கல்பனா கொடுத்திருந்த பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க அந்த நிறுவனத்தின் விசாகா கமிட்டியின் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

"அது என்னடா விசாகா கமிட்டி?" என்றான் சிவசங்கர், அந்த நிறுவனத்தில் அவன் நெருக்கமான நண்பனாக இருந்த சங்கமேஸ்வரனிடம். 

"இப்பல்லாம் எல்லா நிறுவனங்களிலேயும் பாலியல் புகார்களை விசாரிக்க அப்படி ஒரு கமிட்டியை அமைக்கணுங்கறது சுப்ரீம் கோர்ட் உத்தரவு. ஆமாம், உன் மேலதான் புகார். ஆனா நீ கொஞ்சம் கூடக் கவலையில்லாம இருக்க! தப்பு பண்ணலேங்கறதால இந்த தைரியமா, இல்லை...?" என்றான் சங்கமேஸ்வரன்.

"நான் எந்தத் தப்பும் பண்ணல. கல்பனாவோட வேலை எனக்குத் திருப்திகரமா இல்லைன்னு நான் ரிபோர்ட் எழுதிட்டேன். அதனால அவளுக்கு ப்ரமோஷன் கிடைக்கல. அவளோட ஜூனியருக்குக் கொடுத்துட்டாங்க. அந்தக் கோபத்தில என் மேல அவ புகார் பண்ணி இருக்கா!"

"நான் நம்பறேன். ஆனா கமிட்டியில இருக்கறவங்க அவ சொல்றதை நம்பினா...? நீ ஜாக்கிரதையா இருந்துக்க."

"முதல்ல அவகிட்ட எந்த ஆதாரமும் இல்ல!" என்று ஆரம்பித்த சிவசங்கர், "அதாவது நான் தப்பு பண்ணி இருந்தாத்தானே ஆதாரம் இருக்கும்? அதோட இந்த கமிட்டியோட தலைவரா இருக்கற மஞ்சுளா இங்கே வேலைக்கு சேர்ந்திலேந்து, பத்து வருஷமா எனக்குக் கீழதான் வேலை செய்யறா. இப்ப ப்ரமோஷன் வாங்கி என்னை மாதிரி சீனியர் மானேஜரா ஆயிட்டாலும் அவளுக்கு வேலை கத்துக் கொடுத்தது நான்தான். அவ எங்கிட்ட ரொம்ப விசுவாசமா இருக்கறவ. அதனால கமிட்டியில எனக்கு எதிரா எதுவும் நடக்காது" என்றான் சிவசங்கர் உறுதியுடன்.

னால் கமிட்டி, சிவசங்கர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக முடிவு செய்து அவனை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

கமிட்டியின் முடிவு தெரிந்ததும், சிவசங்கர் மஞ்சுளாவைச் சந்தித்தான்.

"என்ன மஞ்சுளா இப்படிப் பண்ணிட்ட? என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா?" என்றான் சிவசங்கர்.

"உன்னைப் பத்தி எனக்குத் தெரியும்கறது உனக்கும் தெரியுமே!" என்றாள் மஞ்சுளா சிரித்துக்கொண்டு.

பத்து வருடங்களாகத் தன்னை மரியாதையுடன் விளித்து வந்தவள் இப்போது தன்னை ஒருமையில் விளிப்பதை சிவசங்கர் கவனித்தான்.

"நீ வேலைக்குச் சேர்ந்த புதுசில ஒரு தடவை உங்கிட்ட தப்பா நடந்துக்கிட்டது உண்மைதான். அதுக்கப்பறம் அதை மறந்துட்டு இத்தனை வருஷமா நீ எங்கிட்ட சகஜமாத்தானே நடந்துக்கிட்டிருக்க?"

"மறக்கலடா! மனசுக்குள்ள கருவிக்கிட்டுத்தான் இருந்தேன். அப்பவே உன் மேல நான் புகார் பண்ணலாம்னு நினைச்சப்ப, பழைய ஜி எம் உனக்கு உறவுக்காரர்ங்கறதால, எதுவும் நடக்காது, புகார் கொடுக்கறவங்களுக்குத்தான் பிரச்னை வரும்னு ஒரு தோழி எங்கிட்ட சொன்னா. அதுக்கு முன்னால உன் மேல புகார் கொடுத்தவங்க சில பேர் வேலையில தொடர முடியாம வேலையை விட்டுப் போயிட்டதாகவும் அவ சொன்னா. அதனால பொறுமையா இருந்தேன். 

"உனக்குக் கீழே நான் வேலை செய்ய வேண்டி இருந்ததால, உங்கிட்ட சுமுகமா இருந்து தொலைச்சேன். ஆனா நீ மறுபடி எங்கிட்ட வாலாட்ட முடியாத மாதிரி எச்சரிக்கையா இருந்தேன். ரெண்டு மூணு மாசம் முன்னாலதான் பழைய ஜி எம் ரிடயர் ஆனாரு. இப்ப இருக்கற ஜி எம்  நேர்மையானவர். 

"கல்பனாவுக்கு நீ தொந்தரவு கொடுக்கறதைப் பத்தி அவ எங்கிட்ட சொல்லி அழுதப்ப நான்தான் அவளுக்கு தைரியம் சொன்னேன். நீ அவகிட்ட மட்டமா பேசறப்ப அதை அவ மொபைல்ல ரகசியமா ரிகார்ட் பண்ணிட்டு அப்புறம் புகார் கொடுக்கச் சொன்னேன். அவ அது மாதிரியே செஞ்சா. 

"வலுவான ஆதாரம் இருந்ததால கமிட்டியில எல்லாருமே நீ குற்றம் செஞ்சவன்னு முடிவு பண்ணிட்டாங்க. அன்னிக்கு எங்கிட்ட நீ தப்பா நடந்துக்கிட்டபோது, நான் அடங்கிப் போக வேண்டி இருந்தது. பத்து வருஷமா நான் காத்துக்கிட்டிருந்தது வீண் போகல!" என்றாள் மஞ்சுளா 

சிவசங்கர் தயக்கத்துடன் மஞ்சுளாவின் முகத்தைப் பார்த்தபோது, பத்து வருடங்கள் முன்பு அவள் பட்ட காயத்தின் வலி அவள் கண்களில் தெரிந்ததை உணர்ந்தான்.

அரசியல் இயல்
அதிகாரம் 49 
 காலமறிதல்  
குறள் 490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து..

பொருள்:
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கைப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்தைப் போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

No comments:

Post a Comment

1062. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்!

செல்வகுமார் தன் மனைவி கோமதியுடன் காரில் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது வழக்கம் போல் காரில் பழைய திரைப்படப் பாடல்களைப் போட்டுக் கேட்டுக்...